நான் கண்ட சிஷெல்ஸ் – 13. சிஷெல்சில் பெண்கள் வாழ்க்கை

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

வே.சபாநாயகம் –


சிஷெல்ஸ் பெண்களுக்கு அதிக சுதந்திரம் தரும் நாடு. அங்கு எல்லா இடங்களிலும் – அரசு அலுவலகங்கள்ிலாகட்டும், தனியார் அலுவகங்களிலாகட்டும்,

மற்றும் கடைகள் என்று எல்லாப் பணிகளிலும் பெண்களே அதிகம் தென்படுகிறார்கள்.

இதற்கு – அவர்களது பணி விவேகமாகவும், சிறப்பாகவும் இருப்பதுதான் காரணம் என்றார்கள்.

திருமணம் அங்கு ஒரு பிரச்சினையே இல்லை. பெண்கள் திருமணம் செய்து கொண்டும் வாழ்கிறார்கள் – திருமணம் செய்துகொள்ளாமலே ‘பாய் ஃபிரண்ட் ‘ உடன் வாழ்நாள் முழுதும் சேர்ந்தும் வாழ்கிறார்கள். இடையில் மனம் வேறு பட்டால் வேறு

ஆணோடு சேர்ந்தும் கொள்வார்கள். திருமணமாகாமலே குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள். அப்படிப் பெற்றுக் கொண்ட பிறகு இருவருக்கும் பிரிவு வந்து விட்டால் குழந்தை யார் பக்கம் செல்வது என்பது அங்கு பெரிய பிரச்சினை இல்லை. பெண்கள் குழந்தைகளைத் தங்களுடன் வைத்துக் கொள்கிறார்கள். ஆண்கள் பொதுவாகப் பிள்ளைகளைக் கோருவதில்லை. அதற்காகப் பெண்கள் நம் நாடு போல ‘ஐயோ என் பிள்ளைகளுக்கு என்ன வழி ? இனி நான் எப்படி வாழ்வேன் ? ‘ என்றெல்லாம் மல்லுக்கு நிற்பதில்லை. பெற்ற தகப்பன் பிள்ளைகளூக்காக மாதா மாதம் செலவுக்குத்

தொகை கொடுத்தால் போதும். ஆண்களும் இயல்பாக அதை ஏற்றுக் கொண்டு அதன்படி ஒழுங்காகக் கொடுத்து வருகிறார்கள். இதில் பிரச்சினை எழுந்தால் இறுதி முடிவெடுப்பது தேவாலயங்கள் தாம். அங்கு மக்களின் பல்வேறு வாழ்க்கை முறைகளுக்கு

‘பெல் ‘, பிரேக் ‘ என்கிற இரு ‘சர்ச் ‘கள் தாம் தீர்வு காண்கின்றன. அவற்றின் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப் படுகிறார்கள். நம் நாட்டைப் போல பிரிவு அங்கு வலிமிக்கதன்று. சேருவதும் இயல்பானது; பிரிவதும் இயல்பானது. பிரிந்த பிறகு குரோதத்துடன் செயல்பட மாட்டார்கள். நண்பர்களாகவே பழகுவார்கள்.

வெளிநாட்டினரை விரும்பி அப் பெண்கள் ஏற்கிறார்கள். ஆனால் முன்பே திருமணமாகி அங்கே சம்பாதிக்கச் செல்லும் பலர், அங்கு குடும்பத்தை அழைத்துச் செல்ல முடியாத நிலையில், அங்குள்ள பெண்கைளை சேர்த்துக் கொண்டு வாழ்கிறார்கள். பிடிக்காமல் விலகினால் அவர்களுக்கு அந்நாட்டு ஆண்கள் போல மாதாமாதம் செலவுக்குக் கொடுத்து விட்டால் பிரச்சினை இல்லை. இல்லாவிடில் நாட்டில் எங்கே போனாலும் விடமாட்டார்கள். அதற்காக நாட்டை விட்டே சொல்லாமல் போய் விடுகிறவர்களும் உண்டு.

தகப்பனை விட்டுப் பிரிந்து தாயுடன் வாழும் குழந்தைகள் தாயின் இனிஷியலோடு

அங்கீகாரம் பெறுகிறார்கள். வெவ்வேறு கணவர்களுக்கு – சீனர், இந்தியர் என வேறு வேறு இனக் கணவர்களுக்குப் பிறந்த குழந்தைகளாக இருந்தாலும் – மூன்று தேசத்துப் பாரம்பரியம் என்றாலும் வேறுபாடின்றி, அண்ணன் தம்பி பாசத்துடன் சேர்ந்தே வளர்கிறார்கள். இந்த மாதிரி அபூர்வத்தை சிஷெல்ஸில் மட்டுமே காண முடியுமாம். அனேகமாக இக் குழந்தைகள் தாத்தா பாட்டி பராமரிப்பிலே வாழ்வதுண்டு.

சிஷெல்ஸ் பெண்களின் வாழ்க்கை திறந்த வாழ்க்கை. நமது பெண்களைப் போல மனதுக்கும் நடைமுறைக்கும் பிடிக்கா விட்டாலும் ஊருக்காகவும் உறவினர்க்காகவும் ஒன்றாக வாழ்வதாக நடிக்கும் போலி வாழ்க்கையை அவர்கள் வாழ்வதில்லை. எல்லாம் வெளிப்படையான வாழ்க்கை. பிடித்தால் ஒன்றாக இருக்கலாம்; பிடிக்கா விட்டால் பிரிந்து போய்விடலாம். மற்றவர்களுக்காக வாழ்வதில்லை என்பதோடு மற்றவர்களும் அதைப் பொருட்படுத்துவதில்லை.

பெண்களின் வாழ்க்கை – திருமணம் செய்து கொண்டாலும், திருமணம் செய்துகொள்ளா விட்டாலும் – 18 வயதிலேயே தொடங்கி விடுகிறது. வாழ்க்கையைத் தொடங்க ஆசைப்படும் போது காலம் தாழ்த்தாமல் தொடங்கி விடுகிறார்கள். ஜோடியைப் பிடித்து விட்டால், முதலில் நட்பு, பிறகு காதல் , அடுத்து திருமணம். திருமணம் என்றால் அங்கே காதல் திருமணம்தான்.

அவர்களது திருமண நிகழ்ச்சியும், திருமண விருந்தும் வித்யாசமானவை. திருமணத்தை விட அதிக நேரம் பிடிப்பது விருந்துதான். திருமணம் சிறிய சடங்குதான். அதற்குச் செலவிடும் நேரம் குறைவுதான். மணமக்கள் தங்களது பாரம்பரிய கலாச்சார உடையில் தேவாலயத்துக்கு வருவார்கள். திருமண விழாவில் கலந்து கொள்கிற ஆண்கள் எல்லோரும் கோட்சூட் அணிந்திருப்பார்கள். பெண்களும் ஒரே மாதிரியான மேனாட்டுக் கலாச்சார உடையுடன் வருவார்கள்.

திருமணச் சடங்கு முடிந்ததும் நடக்கும் விருந்தில் பலவையான மது, பலவித அசைவ உணவுகள் இருக்கும். மதுவகைகளின் தரமும் அளவும், திருமணம் செய்யும் குடும்பத்தினரின் அந்தஸ்துக்கு அளவு கோல்களாக இருக்கும். மாலையில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ‘டிஸ்கோ ‘ நடனத்துடன் தொடங்கும். மணமக்களுடன் மற்ற விருந்தினர்களும் ஆடுவார்கள். நடுநிசிவரைக்கும் நடக்கும். அதற்குமேல் மற்றவர்களை ஆட விட்டுவிட்டு மணமக்கள் முதலிரவைக் கொண்டாடப் போய்விடுவார்கள்.

முன்பெல்லாம் பெண்கள் மக்கள் தொகைப் பெருக்கத்திற்காக 12, 14 குழந்தைகள் கூடப் பெற்றெடுத்தார்களாம். இப்போது விழிப்புணர்வு வந்து விட்டது. அளவோடு 2,3 குழந்தைகளோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சிஷெல்ஸ் பெண்கள் உடல்

ஆரோக்கியத்தைக் கவனமாகப் பேணுகிறார்கள். முன்பெல்லாம் வீட்டிலேயே பச்சிலை களை வளர்த்துத் தாமே வைத்தியம் பார்த்துக் கொண்டார்கள். இப்போது சின்ன அசெளகரியம் என்றாலும் மருத்துவ மனைக்குப் போய்விடுகிறார்கள். சிஷெல்ஸ்வாசி களுக்கு மரணம் என்பது மருத்துவ மனையில்தான். அங்கு எல்லா இறப்பையும் அதிகார

பூர்வமாக்க வேண்டுமாம். மாரடைப்பு நோயாளி மருத்துவ மனைக்குக் கொண்டு செல்கையில் வழியில் இறந்தால் கூட மருத்துவரைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்ற பிறகே அடக்கம் செய்ய முடியுமாம். பிறப்பிலும் பதிவு செய்வதில் கட்டாயம் உண்டு. பிறந்து 16 நாட்களுக்குள் பெயருடன் பதிவு செய்துவிட

வேண்டும். இல்லாவிடில் அபராத்தில் இருந்து தப்ப முடியாதாம்.

அந்நாட்டில், பெண்களுக்கு நம் நாட்டில் இருக்கும் வரதட்சினைக் கொடுமைகள் இல்லை. காதலர்களே தாங்கள் குடித்தனம் நடத்தத் தேவையானவற்றைப் பட்டியலிட்டு இருவரும் சேர்ந்தே தம் உழைப்பிலிருந்து வாங்கிக் கொள்கிறார்கள் எல்லாவற்றிலும் அங்கு ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமே. எல்லவற்றையும் வாங்கித் தயார் செய்து விட்டு திருமணம் முடிந்த மறுநாளே தனிக் குடித்தனம் போய்விடுகிறார்கள். இதனால் அங்கு மையார் மருமகள் பிரச்சினை எழுவதில்லை.

அங்கு பெண்தான் அதிகம் சம்பாதிப்பவள். பெண்கள் தம் சொந்தக் காலில் நிற்கும் அளவுக்குக் உழைப்பால் உயர்ந்து நிற்கிறார்கள். சேமிப்பிலும் கவனம் செலுத்துகிறார்கள். அதனால் அவர்கள் சுதந்திரமாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். இப்போதெல்லாம் திருமண வாழ்க்கையில் பிடிப்பு வந்து விட்டதாம். அதனால் அதற்கேற்ப மாற்றங்கள் சிஷெல்ஸில் உருவாகிக் கொண்டிருக்கின்றனவாம்.

தொடரும்.

v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்