விளக்கு விருது – ஒரு கொண்டாட்டத்தின் அடையாளம்

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

வெளி ரெங்கராஜன்


ஞானக்கூத்தனுக்கு விளக்கு விருது வழங்கும் இந்தச் சந்தர்ப்பம் ஒரு மகத்தான சந்தர்ப்பம் என்று நினைக்கிறேன். நம் காலத்தின் ஒரு சிறப்பான படைப்பாளிக்கு இந்த விருது போய்ச்சேர்வதில் நான் உண்மையிலேயே அதிக மகிழ்ச்சி அடைக்கிறேன். முதன் முதலாக 1972-இல் – கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு முன்பு – நானும் என் நண்பர் கோ.ராஜாராமும் ‘கசடதபற ‘வில் வந்த ஞானக்கூத்தன் கவிதைகளைப் படித்தோம். நாங்கள் அப்போது M.Sc. படித்துக்கொண்டிருந்தோம். அப்போது ஆல்பர்ட் ஆங்கில இலக்கியப் பேராசிரியராக இருந்தார். நாங்கள் மூவரும் இன்னும் சில நண்பர்களும்தான் அப்போது திருச்சியில் சிறுபத்திரிகைகளில் தீவிர வாசகர்களாக இருந்தோம். அரசியல் தீவிரவாதமும் தமிழ் நவினத்துவம் சார்ந்த உணர்வுகளும் பொங்கிக்கொண்டிருந்த ஒரு கால கட்டம் அது. ‘கசடதபற ‘ ஏதோ ஒருவிதத்தில் எங்களுடைய உணர்வுகளுக்கெல்லாம் வடிகாலாக இருந்தது. சிறுபத்திரிகை உணர்வுகளும் புதுக்கவிதையும் பெரிய எழுச்சியை உருவாக்கிக்கொண்டிருந்தன. தமிழ்நாடு முழுவதும் சிறு சிறு ஊர்களில் இருந்தெல்லாம் சிறு பத்திரிகைகள் படிக்கும் நண்பர்கள் கிடைத்தார்கள். எந்த ஊருக்குப் போனாலும் அங்கே ஏதாவது ஒரு விதத்தில் ‘கசடதபற ‘, ‘ஞானரதம் ‘ போன்ற சிறுபத்திரிகைகள் படிக்கும் நண்பர்கள் இருந்தார்கள். அப்போதிருந்த இலக்கிய உணர்வுகளுக்கெல்லாம் ஞானக்கூத்தன் கவிதைகள் ஏதோ ஒரு விதத்தில் விவாதப்பொருள்களாக இருந்தன. புதுக்கவிதையை ஒருவர் ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பதைப் பொருத்தே எங்களுக்கு நண்பர்களும் எதிரிகளும் உருவார்கள். 1973-இல் திருச்சியில் நாங்கள் புதுக்கவிதைக்கென ஒரு மாநாடு நடத்தினோம். தமிழில் புதுக்கவிதைக்கென அப்படி ஒரு மாநாடு அதற்கு முன்னால் நடந்ததில்லை. மரபான திருச்சி தமிழ்ச்சங்கத்தில் புதுக்கவிதை விவாதங்களை இடம்பெறச் செய்தோம். அப்போது ஞானக்கூத்தனும் வைதீஸ்வரனும் அங்கே வந்தார்கள். ‘கசடதபற ‘வில் வெளிவந்த ஞானக்கூத்தனின் 8 கவிதைகளை முன்வைத்து அங்கு ஒரு கலவரமான சூழ்நிலை நிலவியது. கைகலப்பு வரை போனது. இப்போது எதெதெற்கெல்லாமோ கைகலப்பு நடக்கிறது. அப்போது நாங்கள் கவிதைக்காகக் கைகலப்பில் ஈடுபட்டோம். ‘தூக்கத்துக்கப்புறம் என்னான்னு கேளு, தூக்கிக் காட்றேன் தெரியுதா பாரு ‘ என்ற கவிதை வரிகளுக்கு ஆபாசம் என்ற கூச்சல் எழுந்த போது எங்களுக்குக் கடும் கோபம் உருவானது. அதேபோல், ‘ரத்தக் களங்கள் இல்லாமல் தேய்ங்காய் கிடக்கு ‘ என்ற கவிதையில் இறந்தவனை விட்டுவிட்டுத் தேங்காயைக் கவனப்படுத்தியதால் மனிதாபிமானமற்ற கவிதை என்றார்கள். புதுக்கவிதை யாப்பை உடைக்கிறது என்பதினால் எழுந்த கூச்சல் மட்டுமல்ல அது. புதுக்கவிதை கவிதையின் கவனத்தை இடம்பெயர்க்கிறது என்பதினால் வந்த ஒரு பதட்டம். ஆனால் ஞானக்கூத்தன் கவிதைகளில் தென்பட்ட அங்கதமும் அபத்த உணர்வுகளும் எங்களுக்கு மிகவும் உவப்பானதாக இருந்தன. அவைகளை நோக்கிய கவனத்தை குவிப்பதே எங்கள் வேலையாக நாங்கள் நினைத்தோம். அந்த மாநாட்டில் வைதீஸ்வரன், ‘எனக்குத் தமிழ் தெரியாது, ஆனால் கவிதை தெரியும் ‘ என்றார். அவர் சொன்ன அந்த வரிகள் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன. புதுக்கவிதை குறித்த இதுபோன்ற விவாதங்களையெல்லாம் எங்களுக்குள் கிளர்ந்தெழச்செய்த ஞானக்கூத்தன் இன்று இந்த விருது பெறுவதில் நான், கோ.ராஜாராம், எஸ்.ஆல்பர்ட் மூவரும் மீண்டும் இணைந்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கிறது.

நான் கல்லூரி வாழ்க்கை முடிந்து வேலைக்காகச் சென்னை வந்த போது திருவல்லிக்கேணிக்குதான் வந்தேன். நான் இங்கே முதலில் சந்தித்தது ஞானக்கூத்தனையும் மகா கணபதியையும்தான். அப்போது நாங்கள் ‘கசடதபற ‘ தந்த உத்வேகத்தில் திருச்சியில் இருந்து ‘இன்று ‘ என்ற பத்திரிகை நடத்திக்கொண்டிருந்தோம். என் பெயர் அப்போது ‘இன்று ரங்கராஜன். ‘ விக்கிரமாதித்தன் எனக்குக் கடிதம் எழுதும்போதெல்லாம் இப்போது கூட ‘இன்று ரங்கராஜன் ‘ என்றுதான் குறிப்பிடுவார். ஞானக்கூத்தன் கூட ஒரு பத்திரிகையில் என்னை ‘இன்று ரங்கராஜன் ‘ என்று குறிப்பிட்டிருந்தார். சிறுபத்திரிகைதான் எனக்கான அடையாளமாக இருப்பதை நான் கெளரவத்திற்குரிய விஷயமாக நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு அடையாளக் குழப்பங்களுடன் நான் திருவல்லிக்கேணி வீதிகளில் அலைந்துகொண்டிருந்தபோது கவிதைதான் எனக்கான ஒரே புகலிடமாக இருந்தது. நான் பல நண்பர்களுடன் கவிதை குறித்த முடிவற்ற விவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். ஆத்மாநாம், ஆனந்த், தேவதச்சன் போன்ற நண்பர்களை அப்போதுதான் நான் சந்தித்தேன். ஆத்மாநாம் நான் வேலை செய்த வங்கிக்குப் பக்கத்து வீட்டில் இருந்தார். அவரைப் பெரும்பாலும் தினமும் சந்திப்பேன். சென்னையில் நாங்கள் சந்திப்பதற்குப் பல ரம்மியமான இடங்களை உருவாக்கிக்கொண்டு, விட்டு விட்டுச் சந்தித்துக் கவிதை பற்றிப் பேசினோம். ஆனந்த் தன்னுடைய ‘ஜன்னல் சட்டமிட்ட வானில் பறவை பறந்துகொண்டிருக்கிறது ‘ என்ற கவிதையை அண்ணா ஃப்ளை ஓவர் அடியில் உள்ள சிறிய புல் தரையில் வைத்துக் காண்பித்தார். தேவதச்சனை அடிக்கடி ட்ரைவ் இன் ஹோட்டலில் வைத்துச் சந்தித்துப் பேசுவேன். அவருடைய ‘அம்மா எனக்கு காபி தராவிடினும் ‘ என்ற கவிதை வரிகள் குறித்துக் கிட்டத்தட்ட ஒருநாள் விட்டு விட்டுப் பேசினோம். எண்ணற்ற மனச்சிக்கல்களுடன் நாங்கள் உலாவிக்கொண்டிருந்த சமயங்கள் அவை. ஆனால் எங்களுடைய விவாதங்களுக்கெல்லாம் ஞானக்கூத்தன் ஏதோ விதத்தில் மையமாக இருந்தார். அவருடைய கவிதைகள் எங்கள் மனநிலைக்கு அண்மைப்பட்டதாக இருந்தன.

மனுஷ்யபுத்திரன், நஞ்சுண்டன், ம்காகணபதி, ஞானக்கூத்தன், எஸ் வைதீஸ்வரன்,ந முத்துசாமி, அனந்த், ராஜகோபாலன்.

சில வருடங்களுக்கு முன்னால் நகுலனுக்கு விளக்கு பரிசு அளிக்க தீர்மானித்து நான் திருவனந்தபுரம் சென்று அவரைச் சந்தித்தேன். நகுலன் அப்போதுதான் வயிற்றில் ஆபரேஷன் செய்யப்பட்டுக் கடுமையான உடல்தளர்ச்சியில் இருந்தார். அவரை விளக்கு பரிசுக்குச் சம்மதிக்கச் செய்ய நான் அரும்பாடு படவேண்டியிருந்தது. அவரைப் பரிசை ஏற்கச்செய்யாமல் திரும்புவதில்லை என்ற முடிவுடன்தான் நான் சென்றேன். காலையிலிருந்து மாலை வரை எல்லோருடைய கவிதைகளையும் பற்றிப் பேசி, ஒரே சிரிப்பாக இருந்தது. அவருக்கு நினைவு பிறழ ஆரம்பித்துவிட்டது என்றெல்லாம் பயமுறுத்தி இருந்தார்கள். ஆனால் நகுலன் திருவள்ளுவரிலிருந்து ஆரம்பித்துக் கோணங்கி வரை மிகவும் துல்லியமாக மதிப்பீடு செய்தார். அப்போது ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றித்தான் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். மிகவும் சுவையுடன் நீண்ட அந்தச் சந்திப்பை என் வாழ்நாளில் என்றைக்குமே நான் மறக்கமுடியாது. பிரியும்போது என் கைகளைப் பற்றிக்கொண்ட நகுலனின் மென்மையான ஸ்பரிசத்தை நான் இன்னும் என் உடலில் உணர்கிறேன்.

வெளி ரெங்கராஜன்

இன்றும் ஞானக்கூத்தன் கவிதை குறித்த செறிவான உரையாடல்களைத் தொடர்ந்து நிகழ்த்துபவராக இருக்கிறார். தமிழ்க்கவிதையுடன் தன்னைத் தொடர்ந்து இனம் கண்டுகொண்டிருக்கிற இத்தகைய ஒரு படைப்பாளிக்கும், அந்தப் படைப்புச் சூழலுக்கும் இந்தப் பரிசு மேலும் கெளரவம் சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். இது வெறும் பரிசு மட்டுமல்ல. ஒரு கொண்டாட்டத்தின் அடையாளம் என்று சொல்லிக்கொண்டு, கவிஞனுக்கான இக்கொண்டாட்டத்தில் பங்கு கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

பார்வையாளர்களில் ஒரு பகுதி

[ஞானக்கூத்தனுக்கான விளக்கு விருது வழங்கும் விழாவில் வெளி ரங்கராஜன் பேசியதிலிருந்து]

velirangarajan2003@yahoo.co.in

Series Navigation

வெளி ரெங்கராஜன்

வெளி ரெங்கராஜன்