எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு அஞ்சலி –நாடகவெளி சார்பாக சென்னையில் நடந்தேறிய கூட்டம்

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

லதா ராமகிருஷ்ணன்


ஒரு எழுத்தாளருக்கு செய்யப்படும் உண்மையான மரியாதை அவருடைய படைப்பாக்கங்களை நாம் ரசித்து, அனுபவித்து உள்வாங்கிக் கொள்வதும், அவருடைய படைப்பாக்கத் திறனை மற்றவருக்கு அறிமுகப்படுத்துவதும் தான். அந்த வகையில் சென்னையில் சமீபத்தில் நாடகவெளி சார்பாக நடந்தேறிய ‘எழுத்தாளருக்கான அஞ்சலிக் கூட்டம் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது. மேடையில் எழுத்தாளர் வெளி ரங்கர ாஜன் மட்டுமாய் நின்று கொண்டு திரு சுந்தர ராமசாமியின் படைப்பாக்கத் திறன் குறித்து ஒரு ஆழமான கட்டுரையை அமைதியாக வாசித்து முடித்த பிறகு அவருடைய ‘சீதை மார்க் சீயக்காய்த் தூள் ‘ என்ற சிறுகதையை கூத்துப்பட்டறை அமைப்பினர் சிறந்த முறையில் நாடகமாக நடித்துக் காட்டினர். மூன்றே கதாபாத்திரங்கள் தான். ஒப்பனை இல்லை; மேடை அலங்காரங்கள் இல்லை. ஆனாலும், அந்த ஓவியர் வெட்டவெள ியில் ஒவியம் தீட்டிய விதத்தில் பார்வையாளர்களால் ஆளுக்கொரு சீரிய சீதை ஓவியத்தைக் காண முடிந்தது என்றால் மிகையாகாது! திரு. சுந்தர ராமசாமியின் ‘சவால் ‘ என்ற சிறுகவிதையை நாடகக் கலைஞர் சந்திரா நடித்துக் காண்பித்த விதம் அற்புதம்! அவர் மேடையில் விழுந்த ஒவ்வொரு தடவையும் பார்வையாளர்களும் விழுந்து எழுந்திருந்திருப்பார்கள் கட்டாயமாய். ஒரு கவிதை எப்படி எல்லோரு டைய மனக்குரலுமாகிறது; எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை சந்திராவின் வழி அன்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. நவீன கவிதைகள் எப்படி ‘மனிதனுக்கான படைப்பாகிறது என்பதற்கும் அது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது.

‘ஜே.ஜே. சில குறிப்புகள் ‘ நாவலிலிருந்து சில பகுதிகள் மாற்று நாடக வெளியில் நீண்ட அனுபவம் வாய்ந்த திரு. ஜெயராவ், மற்றும், கவிஞர். தமிழச்சி ஆகிய இருவராலும் இயல்பாக வாசித்துக் காட்டப்பட்டன. முதலிரண்டு நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்க இது கொஞ்சம் மந்த கதியில் இயங்கியதாகத் தோன்றினாலும் மேடை வாசிப்பு என்பதை ஒரே இடத்தில் நின்றவாறு வெறும் குரல்சார் ஏற்ற இறக்கங் களோடு மட்டுமாய் செய்யாமல் இயல்பாக அங்குமிங்கும் நடந்தபடியும், சில இயல்பான அங்க அசைவுகளோடும், தோற்றநிலைகளோடும் அவர்கள் செய்த விதம் குறிப்பிடத் தக்கது. ஒரு மனவோட்டத்தை இருவரைக் கொண்டு வாசிக்கச் செய்ததன் மூலமும், ஒரு ஆண், ஒரு பெண் என்பதாக அந்த இருவரைக் காட்டியதன் மூலமும் அந்த மனவோட்டங்கள் எல்லோருக்குமானவை என்பதைக் குறிப்பாலுணர்த்த முற்பட்டதாக இந்த வாசிப்பை ‘வடிவமைத்த திரு வெளி ரங்கராஜன் குறிப்பிட்டார். பங்கேற்ற இருவரின் வாசிப்பும் உச்சரிப்பு சுத்தமாக இருந்ததையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

ஓவியர். கிருஷ்ணமூர்த்தி ‘ஒரு புளீயமரத்தின் கதை ‘யை திரைப்படமாக்க மேற்கொண்ட முயற்சிகள் பற்றி பேசினார். நிகழ்வுகளில் பங்கேற்றவர்களை திரு.வெளி ரங்கராஜன் பார்வையாளர்களுக்கு மேடையேற்றி அறிமுகம் செய்து வைத்தார். குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம் முடிவுக்கு வந்த போது ஒரு தரமான எழுத்தாளருக்கு தரமான அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிறைவு ஏற்பட்டது.

—-

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்