சுதந்திரமாக எழுதுதல்

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

தேவமைந்தன்


பாரதி நினைவைப் போற்றும் நாளில், சட்டென்று என்னுள் கேள்வி ஒன்று எழுந்தது.

நாம் சுதந்திரமாக எழுதுகிறோமா ?

‘ஃப்ரீலேன்ஸ் ரைட்டிங் ‘ என்கிறார்களே, அதற்கும் நான் இங்கே முன்வைப்பதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. எந்தவொரு நிறுவனம்/தலைமையின்கீழ் இல்லாமல், தனிநின்று எழுதுவது ‘ஃப்ரீலேன்ஸ்; ‘ அது ‘சுதந்திரமாக எழுதுதல் ‘ ஆகாது.

உதாரணமாக ‘நாலு மூலை ‘ – கட்டுரைத் தொகுப்பு. நாற்பத்திரண்டு ஆண்டுக் காலம் குமுதம் வார இதழில் பணியாற்றி ஓய்வு பெற்றபின், ‘அண்ணாநகர் டைம்ஸ் ‘ இதழில் ஒருவர் எழுதுவதால் மட்டுமே அது ‘சுதந்திரமான எழுத்து ‘ ஆகிவிடாது. ரா.கி.ரங்கராஜன் அவர்களின் எழுத்துகள் எனக்குப் பிடித்தவை. ஓய்வு பெறுவதை நினைத்தும் பார்க்காமல் எழுதிக்குவித்துக் கொண்டிருந்தவர்தாம் அவர். அப்பொழுது அவர் ‘ஃப்ரீலேன்ஸ் ‘ எழுத்தாளராகவும் இல்லை. ‘ ‘சரி, விஷயத்துக்கு வா! ‘ என்கிறீர்களா ? இதோ வந்தேன்.

லரி த்ராம்ப்லே என்று ஒரு பிரஞ்சு எழுத்தாளர். புதுச்சேரிக்கும் வந்திருக்கிறார். ‘உறங்காத உள்மனது ‘ என்ற கவிதை நூலைப் படைத்தவர். எந்த அளவு சுதந்திரமாக எழுதினார் தெரியுமா ? காற்புள்ளி, அரைப்புள்ளி, முழுப்புள்ளி முதற்கொண்டு எந்தவிதமான நிறுத்தற்குறிகளும் இல்லாமல்…சும்மா, அப்படியே எழுதிப் போயிருக்கிறார். காரை இரா. கிருஷ்ணமூர்த்தி[மற்றும் மூவர்] தமிழாக்கத்தில் 112 பக்கங்கள். எந்தக் குறிகளும் இல்லாமல்.[எங்காவது இருந்துவிட்டால் நான் பொறுப்பல்ல; மூலநூலில் இல்லை என்பதற்கு நான் உத்தரவாதம்].

சரி. லரி த்ராம்ப்லே, தன் வாழ்க்கையில் ? பல கலைநிகழ்ச்சிகளில் நடிகராகவும் இயக்குநராகவும் பணியாற்றியவர். ஷிக்குத்திமி என்ற ஊரில் 1954-இல் பிறந்தவர். எளிமையானவர். மோந்[த்]ரேயால் பல்கலைக் கழகத்தில் நாடகவியல் துறையில் பேராசிரியராக உள்ளவர்.

‘உறங்காத உள்மனது ‘ என்பதன் பிரஞ்சுத் தலைப்பு ஒலிப்பு – ‘ ‘லெசோ[ன்]தனாதொமி ‘ ‘ என்பது. சென்னை சம்ஹிதா பதிப்பக வெளியீடு. கவிதா பதிப்பக விற்பனை.

இது ஒரு கதைக்கவிதை. கவிதைக்கதை என்றாலும் ஒன்றும் கெடாது. மார்த்தா மயேர் தம்பதி பற்றிய சித்திரம் ஒன்பது பகுதிகளாக அமைக்கப்பெற்றிருக்கும் இதில், கதைமாந்தர் இரண்டு பேர் இருப்பினும் நம்மிடம் பேசுவது மார்த்தா மட்டுமே. மார்த்தாவின் மன உளைச்சல் சித்திரிக்கப்படுகையில், பெண்ணின் மன அவசம் வெளிப்படுத்தப்பெறுகையில் எங்கே நிறுத்தற்குறிகளுகான தேவை இருக்கிறது என்று த்ராம்ப்லே விட்டுவிட்டார்.

‘ ‘புள்ளிகள்இல்லாத கவிதை நடை ‘ ‘ என்று இதனை வகைப் படுத்தலாம்.

மீண்டும் ரா.கி. ரங்கராஜன் அவர்களிடம் வருகிறேன். ‘ ‘கனத்த இதயத்தின் நனைந்த நினைவுகளை…உயிரற்ற சொற்களில் அடைத்துவிட முடியாது ‘ ‘[பக்கம்:205] போன்ற சில இடங்களில் அவருடைய சுதந்திரம் தென்படுகிறது. ‘நான் ஏன் ? ‘ ‘பேட்டி தர மறுத்த நீதிபதி ‘[இதில் பக்.161-162] ஆகியவற்றில் பணிஓய்வுக்குப் பின்னுள்ள வாழ்க்கையினர், அவர்களிலும் குறிப்பாகப் படைப்பாற்றல் உள்ளவர்கள் கவனித்துக் கடைப்பிடிக்கவேண்டிய சில ‘சுரண்டல் தடுப்புகள் ‘ இருக்கின்றன. ஆனாலும் எப்பொழுதும் ரா.கி.ர. தன் மனத்தில், அதிகார/குரு பீடத்தில் எஸ்.ஏ.பி. முதலானவர்களை வைத்திருத்தலால் ஒருவகைச் ‘சுதந்திர-சமரசம் ‘ அவருடைய 78 வயதுக் கட்டுரைகளையும் பாதிப்பதை உணர முடிகிறது.

உத்திரீதியில் சிறப்பான கட்டுரையாக ‘ஏதோ ஒன்று நெருடியது ‘[பக்169-172]உள்ளது. இன்னொன்றில், ‘ ‘எழுதும்பொழுது மனசுக்குள் எழுதிக்கொண்டே காகிதத்தில் எழுதுகிறோம். அதுபோல, கச்சேரி செய்யும்பொழுது மனசுக்குள் வாசித்துக்கொண்டே வயலின் வாசிப்பீர்களா ? ‘ ‘ என்ற கேள்வி விடுதலையாக எழுகிறது (ப.178). ‘[ ‘இலக்கியச் சிந்தனை ‘] யாரை எழுதச் சொல்லலாம் [தூரன் அவர்களைப் பற்றி] என்று நாலு மூலையையும் பார்த்தபோது ‘இந்த ஆள் சும்மாதானே உட்கார்ந்திருக்கிறார் ? இவரை எழுதச் சொல்லலாம் ‘ என்று முடிவு செய்து எனக்கு அந்தப் பொறுப்பைப் பணித்து விட்டார்கள் ‘[ப.162] என்று ரா.கி.ர. எழுதிய தில் எனக்கு அவர்தம் ’42ஆண்டுக்காலப் பணிக் கட்டுப்பாடே ‘ எதிரொலிப்பதாக உணரமுடிகிறது. அது ஒரு உள்வலி. அநுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அது, ‘உள்ளோடும் நகைச்சுவை உணர்வு ‘(கிழக்கு பதிப்பகம் – நூல் அட்டை, கடைசிப் பக்கம்) மட்டும் அல்ல. அது ஒருவகையான, ‘வேதனை – வெய்துயிர்ப்பிலிருந்து மீள எழமுயலும் பழிவாங்கல் ‘ (ழா[ன்]போல் சார்த் ‘ரின் தொடர்). அங்கதம் அப்படித்தான் பிறந்தது. கவி காளமேகம் முதல் இன்றைக்கெழுதும் — ‘சுதந்திர எழுத்தை எப்பொழுது எழுதப் போகிறோம் ? ‘ என நெஞ்சுள் கணந்தொறும் குமைகின்ற ஒவ்வொரு படைப்பாளனும் ‘வேறு வழி கிடைக்காதபொழுது ‘ தன்னொத்த மற்றொரு படைப்பாள சகஜீவனுக்கு அவ்வப்பொழுது விடுவிக்கும் ‘சிக்னல் ‘தொகுதி ஆகும். ‘மலையத்தனை ‘ அயல் ‘களை மொழிபெயர்த்துக் குவிக்கிற ஒவ்வொரு படைப்பாளியும் தன் 78ஆம் வயதில் இப்படிப்பட்ட அங்கத எழுத்தில் மேதை ஆகிவிடவே நேரும். என்னைப் பொறுத்தவரை உறுதியாகச் சொல்வேன். ரா.கி.ர. எழுதியுள்ளாரே, ‘லட்சுமணன் சிரித்தது ஏன் ? ‘ என்ற வங்காள [கிருத்திவாசரின்] இராமாயணத்தின் உபகதை பற்றி….(பக்.175-176). அதுபோலத்தான் ஆகிவிடுகிறது ரா.கி.ர. போன்ற அருமையான எழுத்தாளர்களின் நிலை.

அளவுக்குமேல் மொழிபெயர்த்துத் தள்ளுவதும் அளவுக்குமேல் பிள்ளை பெறுவதும் ஒன்றுதான். சொந்தப் படைப்பாற்றல் சுரண்டப்பட்டுவிடும். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லும்/எழுதும் ‘கம்பல்ஸரி அப்செஸஸ்ஸிவ் ‘ மனநிலை எழுத்திலும் எதிரொலித்துவிடும். பிரஞ்சு எழுத்தாளர்களின் சுதந்திர எழுத்துத் தாகம் தமிழுக்கு எப்பொழுது வருமோ என்னும் ஏக்கம் பிறக்கிறது. எந்த ‘இச ‘த்துக்கும், எந்தவிதத் தலைமைக்கும், எந்த ‘குரு ‘வுக்கும், எந்த வகையான ‘அரசியலாவ ‘தற்கும் கட்டுப்படாமல் எழுதுவதே ‘சுதந்திரமாக எழுதுதல் ‘ ஆகும்.

இந்த என் ‘முன்வைத்த ‘லுக்கு எதிர்வினைகள் வருமானால் நலம்.

pasu2tamil@dataone.in

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்