நவீன இலக்கியத்தின் காலியிடத்தில் உடைத்த அழுகிய கோழி முட்டை

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

நாகூர் ரூமி


(இரண்டாம் ஜாமங்களின் கதை. சல்மா. காலச்சுவடு பதிப்பகம். முதல் பதிப்பு டிசம்பர் 2004. பக்கங்கள் 519. விலை ரூ. 250/-)

சமீபத்தில் நாலைந்து நாட்களாக கடுமையாக முயன்று நான் படித்து முடித்த நாவல் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை. எனக்குள் சில கேள்விகள் தவிர்க்க முடியாமல் எழுந்தன. ஆனால் ‘இந்நாவல் குறித்து எழக்கூடிய கேள்விகளுக்குப் பதில் எதையும் சொல்லக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன் ‘ (பக் 9) என்று ‘மெளனத்தைப் பேசுதல் ‘ என்று தலைப்பிடப்பட்ட தனது முன்னுரையில் கூறுகிறார் சல்மா. போகட்டும். அவர் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வாசகர்களுடன் எனது கேள்விகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று அவர் தடை விதிக்கவில்லையே! எனவே அவற்றை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

பெண்களால் நிரப்பப்பட்ட ஒரு உலகத்தை விரிக்கிறது நாவல். அவ்வப்போது ஆண்களும் வந்து போகிறார்கள். கதை நடப்பது ஒரு கிராமம் (என்பதாகத்தான் தெரிகிறது). ஆறு முஸ்லிம் குடும்பங்களையும் அக்குடும்பங்களின் மனிதர்களாக, கணவர்கள், மனைவிகள், சகோதர சகோதரிகள், குழந்தைகள் என கிட்டத்தட்ட 42 பாத்திரங்களையும், மாரியாயி, உமா, சிவா, முருகன் போன்ற சில முஸ்லிமல்லாத பாத்திரங்களையும் சுற்றி நடக்கிறது இந்த நாவலின் கதை.

கதை என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்றுமில்லை. இது பின்நவீனத்துவ எழுத்தின் தன்மையாக இருக்கலாம். வயதுக்கு வராத அல்லது வயதுக்கு வந்து கொஞ்ச காலமே ஆன சின்னப் பெண்களை அடாவடித்தனமாக, மனைவிகளைப் பொருட்படுத்தாத குடும்பத் தலைவர்களாக இருக்கும் ஆண்கள், அதாவது தகப்பன்மார்கள், மகளைவிட 15 அல்லது 20 வயது மூத்த ஆண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பது, பொருத்தமில்லாத கல்யாணத்திலிருந்து துணிச்சலாக சில பெண்கள் விவாகரத்து கேட்டு ஒதுங்கி வாழ்வது, உடல் தாகத்தையும் தனிமையையும் பொறுக்க முடியாமல் அவர்கள் வேறு ஆண்களோடு சோரம் போவது, இதையொட்டி நிகழும் மரணங்கள், ஊர் விலக்கல்கள், சண்டைகள், இந்த எல்லாவற்றிலும் கலந்து கொள்ளும் பெண்களின் வாய்வழி புறப்படும் கருத்துக்கள், நம்பிக்கைகள், ஆண்களைப் பற்றிய அவர்களது எண்ணங்கள், பொதுவான நம்பிக்கைகள், மூடப்பழக்கவழக்கங்கள் — இவற்றையெல்லாம் பதிவு செய்கிறது இந்த நாவல்.

ஒரு உதாரணம் : திருமணம் முடித்த 15 நாட்களுக்குப் பிறகுதான் பீவி வயதுக்கே வந்தாள்(பக். 96).

இந்த கதையினூடே இரண்டு விதமான பதிவுகளைப் பார்க்க முடிகிறது. அவற்றை சல்மா ஸ்பெஷல் என்று சொல்லலாம்: 1. போலித்தனமான பெண்ணியக் குரல். துணிச்சல் என்ற போர்வையில் வெளிப்படுத்தப்படும் வக்கிரங்களும் இதில் அடக்கம். 2. மதம் குறித்த சந்தேகங்களை, கேள்விகளாகவும், கிண்டலாகவும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம். ‘இரண்டாம் ஜாமங்களின் கதை ‘ என்பதால் இந்த இரண்டையும் ஜாமத்துக்கு ஒன்றாக வைத்துக்கொள்ளலாம்

முதலில் பெண்களின் பாத்திரப்படைப்புக்கு வருவோம். ராபியா என்ற சின்னப்பெண்ணின் இயற்கை ரசனையில் தொடங்கி மரப்பாச்சி பொம்மையை அஹ்மது என்ற தன் காதலனாக நினைத்துக்கொண்டு அவள் அணைத்துக்கொள்வதில் முடிகிறது நாவல். சின்னப் பெண் என்றால் ரொம்பச் சின்னப்பெண் அல்ல. வயதுக்கு வரும் நிலையில் இருப்பவள். அவளுடைய உயிர்த்தோழி அவளைவிட கொஞ்சம் பெரியவளான மதினா.

இந்த இருவரும் என்ன செய்கிறார்கள் ? ஊர் சுற்றுகிறார்கள். ஆண் தோழர்களோடு விளையாடுகிறார்கள். குறிப்பாக அஹ்மது என்பவனோடு. நோன்பு நாட்களில் சினிமாவுக்குப் போகிறார்கள். அதுவும் பலான படத்துக்கு. ‘ ‘ஏ ‘ படத்துக்கா போயிட்டு வர்றே நாயே ‘ என்று அவளை அவள் அம்மா கண்டிக்கிறாள்.

சின்னப் பெண்களோ அல்லது பெரிய பெண்களோ பலான படங்களுக்கு எந்த நாளும் செல்வதில்லை. அதுவும் ஜமாஅத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு சின்ன கிராமத்தில் இருக்கும் முஸ்லிம் பெண்கள். இது வலிந்து செய்யப்பட்ட ஒரு பதிவாகும்.

இதன் மூலம் சல்மா சொல்ல விரும்புவது என்ன ? ஆண்கள் பலான படம் பார்க்கலாம் என்றால் பெண்களும் பார்க்கலாம் என்றா ? பலான படம் பார்ப்பது எந்த வகையிலும் மன ஆரோக்கியத்தை பாதிக்காது, மாறாக வலுப்படுத்தவே செய்யும், எனவே அதை அனுமதிக்க வேண்டும் என்றா ? எப்படி இருப்பினும் இது நடப்பு நிஜங்களில் காணமுடியாத ஒரு கற்பனை நிகழ்வு.

ஆனால் பலான படம் என்று தெரியாமல்தான் ராபியா சென்றதாக ஒரு சப்பைக் கட்டும் உள்ளது. ஆனால் எந்த இடத்திலும் அப்படிச் சென்றது தவறு என்பதான குறிப்பு கிடையாது. சரி, தெரியாமல் போனதாகவே வைத்துக்கொள்வோம். ஆனால் சின்னப் பெண்கள், முஸ்லிம் பெண்கள், அதுவும் நோன்புடைய காலத்தில் படத்துக்குப் போவது நடக்காத ஒன்று. ஆனால் இந்த ராபியாவுக்கு திருட்டுத்தனமாக சினிமா பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. அவளுடைய தொடர்ந்த பழக்கமாகவே அது இருந்து வந்திருக்கிறது. ‘அவள் வருவாளென்று நிச்சயமாகத் தெரியும் ‘ என்று அஹ்மது நினைக்கிறான் (பக். 81).

இதுமட்டுமா ? வஹீதா என்ற பெண்ணுக்கு திருமணமானபோது சொந்தக்காரப் பெண்களில் சில விபரமானதுகள் உடல் உறவுக் காட்சிகளை வெளிப்படுத்தும் நீலப்புத்தகங்களை மதினாவிடம் கொடுத்து அனுப்புகிறார்கள். அதில் ஒன்றை ‘சுட்டு ‘ மதினா ராபியாவிடம் காண்பிக்கிறாள்(பக். 386). புது மணப்பெண் வஹீதாவுக்கு நீலப்பட கேசட்டுகளை போட்டுக் காட்டுகிறார்கள் மும்தாஜும் நபிஸாவும் (பக். 108 & 368). இதனாலெல்லாம் ஏற்படும் விளைவுகள் என்ன ? ஒரு நாள் அம்மா அப்பா விளையாட்டு விளையாடும்போது அஹ்மதுவுக்கு ராபியா தன் மார்பைச் சுவைக்கக் கொடுத்து மகிழ்கிறாள் (பக்.177). ராபியா மதினாவுக்கிடையில் ‘லெஸ்பியன் ‘ ஈர்ப்பு வேறு ஏற்படுகிறது. அணைத்தல் முத்தமிடல் என (பக். 352).

சினிமா பார்க்கும் பழக்கம், அதுவும் தடைசெய்யப்படும் நோன்பு காலத்தில் பார்ப்பது பல பெண்களுடைய பழக்கமாக இருக்கிறது இந்த கிராமத்தில். முடியாதவர்கள் வருத்தப்பட்டுக் கொள்கிறார்கள். ‘அதுசரி, நோன்பு நாள்ல தியேட்டருக்குப் போயி படம் பாக்கச் சொல்றியாக்கும். அந்தப் பாவத்தெ என்னா செய்யிறது ? சலிப்புடன் சொல்லிய சொஹ்ராவுக்கு படம் பார்க்க முடியாத வருத்தம் இழையோடியது ‘ (பக். 105).

சினிமா பார்ப்பதோ, பெண்கள் பார்க்க விரும்புவதோ தவறல்ல. ஆனால் முஸ்லிம் பெண்கள் நோன்பு காலத்தில் தொடர்ந்து தவறாமல் படம் பார்க்கச் செல்கிறார்கள் என்பதும், அதை ஆண்கள் எதிர்ப்பதால் அவர்களுக்கு பிரச்சனைகள் வருகின்றன என்பதும் ஒரு கற்பனையான பிரச்சனையின் பதிவு. பெண் சுதந்திரம் என்ற கருத்தின் முட்டாள்தனமான வெளிப்பாடு.

சரி, அந்தக் கிராமத்து பெண்கள் பொதுவாக எப்படிப்பட்டவர்கள் ?

நபிஸாவின் கணவன் பஷீர். ஆனால் அவளுக்கு அஜீஸோடு தொடுப்பு. ரமேஷ் அம்மாவுக்கு ரெண்டு புருஷன். தலாக் சொல்லப்பட்ட மைமூன் யாருக்கோ குழந்தை உண்டாகிறாள். அக்கா ஆமினா ஒரு கிராமத்து மருத்துவச்சி மூலம் கருக்கலைப்புக்கு ஏற்பாடு செய்கிறாள். அந்த கலைப்பு விஷயம் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வர்ணிக்கப்படுகிறது. கிராமத்து தொழில்நுட்ப கருக்கலைப்பில் மைமூனும் சிசுவும் இறந்துபோகிறார்கள்(பக். 65). நூர்நிஷா வேற்று ஆண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளவும் ஆரம்பித்தாள்(பக். 213).

பாத்திமாவின் கணவன் ஓடிப்போய்விடுகிறான். பதிலுக்கு பாத்திமாவும் முருகனோடு ஓடிப்போய்விடுகிறாள் (பக். 269). சபாஷ். கணவன் ஓடிப்போவதற்கு மனைவி கொடுக்கும் தக்க பதிலடி அவளும் இன்னொருத்தனோடு ஓடிப்போவதுதான்! அடடா, இதுவன்றோ புதுமைப் பெண்மை!

சிவா என்ற எதிர்வீட்டு இளைஞனிடம் கெட்டுப் போன தன் மகள் பிர்தெளஸை வற்புறுத்தி விஷம் குடிக்க வைத்துக் கொல்கிறாள் அம்மா ஆமினா(பக். 417).

பிர்தெளவ்ஸ் விஷயத்தில் அவள் வழிதவறிச் செல்வதுவரைதான் யதார்த்தம் இருக்கிறது. பெற்ற மகளை விஷம் குடித்துச் சாகச்சொல்லும் தாய், நாவல் தாயாக மட்டுமே இருக்க முடியும். எனக்கு ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம் ‘ கதை ஞாபகத்துக்கு வருகிறது. கல்லூரிக்குச் சென்று ஒரு பணக்கார இளைஞனிடம் கற்பை இழந்து திரும்பும் தன் ஏழை மகளின் தலையில் தண்ணீரை ஊற்றிக் குளிக்க வைத்துவிட்டு, நடந்ததை மறந்து விட்டு அவளை புது வாழ்வு தொடங்கச் சொல்லும் தாயின் கதை அது. அதுதான் தாயுள்ளம்.

வறுமையின் காரணமாக சில தாய்மார்கள் பிறந்த உடனேயே பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்துக் கொல்வதை நாம் அறிவோம். ஆனால் தாயையும் மகளையும் பிணைக்கின்ற எந்தவிதமான உணர்ச்சிப் பூர்வமான உறவுச் சூழ்நிலைகளும் ஏற்படாத காலகட்டம் அது. பருவ வயது வரை வளர்ந்து, ஒருவனுக்குக் கட்டியும் கொடுத்து, பின் அவள் அவனைப் பிரிந்து, வாழாவெட்டியாக தனிமையில் வாடி, தாயோடு இருக்கும் காலகட்டத்தில் தவறு இழைத்துவிடுவாளேயானால், அவளை விஷம் குடித்துச் சாகு என்று சொல்வது தாயுள்ளத்துக்குப் பொருந்தாத பதிவு.

கதை பூராவும் பல பெண்கள் ஒழுக்கமற்றவர்களாக இருப்பதை சரிக்கட்டும் ஒரு முயற்சியாகவே இதை நாம் பார்க்க முடிகிறது.

பிர்தவ்ஸ் யூசுபுடன் வாழ விரும்பாததற்கு அவள் சொல்லும் காரணமும் இந்த போலித்தன்மையை உறுதிப்படுத்துகிறது. அவள் தன் கணவனை விரும்பாதற்கு இரண்டு காரணங்களாம். ஒன்று அவனது தோற்றம். ‘அவனது தோற்றம் மட்டும் காரணமில்லை ‘, அவனை கணவனாகத் தேர்ந்தெடுத்த தனது மச்சான் ‘கரீமைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறி அவளிடம் இருந்தது ‘ (பக். 37). ஒரு பெண் தன் கணவனுடனான உறவை முறித்துக்கொண்டு வாழாமல் இருப்பதற்கான காரணங்கள் இவை!

பெண்களைப் பற்றிய பதிவு இது. இதற்கு சப்பைக் கட்டு கட்டுகிறது ரவிக்குமாரின் முன்னுரை. அவர் சொல்கிறார். ‘திருமண உறவு, குடும்ப அமைப்பு ஆகியவை எந்த அளவு இறுக்கமானவையாக உள்ளனவோ அந்த அளவு விபச்சாரத்தின் தேவையை அதிகரிக்கச் செய்கின்றன ‘ (பக் 15). குடும்பம் கட்டுக்கோப்பாக இருந்தால் பெண்கள் விபச்சாரிகளாக மாறுவார்கள் என்ற இந்த ‘ஆராய்ச்சி முடிவை ‘ ஒத்துக்கொள்வீர்களா ?

ஷெரிபாவின் கடிதம்

ஷெரிபா என்பவள் தன் கணவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள்(பக். 344). இலக்கணப் பிழைகள் மலிந்த தமிழில் அது இருக்கிறது. படிப்பறிவில்லாத ஒரு பெண்ணின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு பதிவாம் அது. இதில் விஷேஷம் என்னவெனில், இது ஷெரிபாவுக்குத் தெரிந்த தமிழ் அல்ல. சல்மாவால் ஷெரிபாவுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட கடிதம். நான் இப்படிச் சொல்வதற்குக் காரணம் உள்ளது. கடிதத்தை ஊன்றி வாசித்தால் ‘தொழில்நுட்பம் ‘ புரிந்துவிடும். அடைப்புக்குறிகளுக்குள் பேசுவது நான்.

அன்புல்ல மச்சனுக்கு,

அஸ்ஸலமு அலைக்கும். …இன்றொடு நிங்கள் எண்ணை விட்டு போய் முப்பத்திரன்டு நாட்களாகிறது.

(நெடிலுக்கு பதிலாக குறில். இது ஒரு டெக்னிக். பெரிய எழுத்துக்கு பதிலாக சின்ன எழுத்து. இது ஒரு டெக்னிக். ‘ள் ‘-ளுக்கு பதிலாக ‘ல் ‘. ‘ன் ‘ -னுக்கு பதிலாக ‘ண் ‘. ஆனால் ‘நாட்கள் ‘ என்பதில் மட்டும் நெடிலும் ‘ந ‘ வும் சரியாக இருக்கிறது கவனிக்கவும்). ஒவ்வொரு நாலும்…திணமும் துங்கும் நேரத்திள் முலித்திருந்து உங்கலை…நிணைத்துக்கொள்வேன். இருந்திருப்பார்கலோ தெரியவிள்ளை. பிள்லைகளை…நிணைக்க நேரமிள்லாமல் எனக்கும் பிள்லை பிரந்து விட்டாள். உங்கலை நினைத்து கொண்டிருக்க (இங்கே ‘நினைத்து ‘ என்று சரியாக எழுதுகிறாள் ஷெரிபா. ‘அன்புல்ல ‘ என்று ‘ள் ‘, ‘ள ‘ இரண்டையும் தவறாக எழுதியவள், ‘பிள்ளை ‘ என்பதில் ஒரு ‘ள் ‘ சரியாகப் போடுகிறாள்). நேரமிறுக்காதோ…நேட்று…திரந்தபோது…கண்ணிள்..நற்பது நாளிலேயே ( ‘நாலும் ‘ என்று மேலே உள்ளது. ஆனால் இங்கே ‘நாளிலேயே ‘ என்று சரியாக போடப்பட்டிருக்கிறது) நிங்கள் உருக்கு போய்விட்டது கண் மரந்தார்போல இருக்கிரது…ஒட்டியிருக்கிறேன்…( ‘ஓ ‘வுக்கு பதிலாக ‘ஒ ‘) மீதி 23 மாதத்தை (இங்கே நெடில் சரியாக வந்துள்ளது) எப்படி ஓட்டப்போகிறேன் (இங்கே ‘ஓ ‘ சரியாக போடப்பட்டிருக்கிறது) தெரியவிள்லை. நினைக்கையிலேயே ( ‘னை ‘ சரியாக உள்ளது. ஆனால் மேலே ‘ணை ‘ உள்ளது). மளைப்பாக இருக்கிரது. எங்க வீட்டிளும் உங்க வீட்டிளும் அணைவரும் நலம். உரில்…முடியும்போது போணில் பேசுங்கல். உங்க குரலை கேட்டலாவது ஆருதலாக இருக்கும்.

முத்தங்கலுடன்

ஷெரிபா

There is method in his madness என்று பைத்தியக்காரனாக நடிக்கும் ஹேம்லட் என்ற பாத்திரத்தைப் பற்றி ஷேக்ஸ்பியரில் ஒரு வரி வரும். முறைப்படி இழைக்கப்பட்ட தவறுகளுடன் கூடிய ஷெரிபாவின் கடிதம் எனக்கு அதைத்தான் ஞாபகப்படுத்தியது. நாவலின் ஒட்டுமொத்த போலித்தனத்தையும் அடையாளம் காட்டும் பகுதியாக இது மாறிப்போகும் என்று சல்மா நினைத்திருக்க மாட்டார் பாவம்.

ஆண்களைப் பற்றிய பதிவும் இதைப்போன்ற மிகைப்படுத்தப் பட்டதேயாகும். ஆண்கள் அனைவரும் அயோக்கியர்கள். பொம்பளைப் பொறுக்கிகள். பெண்களை அவர்கள் பெண்கள் என்ற காரணத்துக்காகவே மதிக்காதவர்கள். சில உதாரணங்கள்.

சொஹ்ராவின் கணவன் கரீம் மாரியாயியை வைத்துக்கொண்டிருக்கிறான். கனி ராவுத்தர் அரசமரத்தடியில் அமர்ந்து இஸ்மாயிலிடம் தன் பத்துவயது மகளை வைத்து சீட்டாடித் தோற்கிறார் (பக். 59). இரண்டாம் தாரமாக தன் மகளைத் தர ஒத்துக்கொள்கிறார். இந்த மகாபாரத அல்லது ‘கிழக்குச் சீமையிலே ‘ கிராமம் எங்குள்ளது சகோதரி ?

தன் மகள் வஹீதாவைவிட 15 வயது பெரியவனும் தன் அக்கா மகனுமாகிய சிக்கந்தருக்கு வஹீதாவை மணமுடிக்க காதர் முடிவெடுக்கிறார். அதில் அவர் மனைவி றைமாவுக்கு விருப்பமில்லை. ஆனால் அவர் நினைக்கிறார். ‘அவளிடம் சம்மதம் கேட்பது தேவையில்லாமல் அவளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மாறக்கூடும். திருமண வேலைகளைத் தொடங்கிவிடுவதன் மூலமே அவளது கருத்துக்கு மதிப்பில்லை என்பதை அவளே உணரும்படிச் செய்யலாம் ‘ (பக். 89).

ஊர்ல எவன் தான் ஒழுங்கு சொல்லு பாப்பம் ? ஆம்பள அப்படித்தான் இருப்பான். பொம்பள அப்பிடி இருந்தாத்தான் தப்பு.– கரீம் சொஹ்ராவிடம் (பக். 181).

ஆண்களில் எவனும் யோக்கியன் இல்லைதான் — றைமா நினைக்கிறாள் (பக். 197).

இறந்த நூர்நிஷாவின் கணவனுக்கு ஏதோ பெண் நோய் என்று ஊரில் பேசிக்கொண்டார்கள்(பக். 213).

இறந்து போன வீட்டுக்குச் செல்பவர்கள் பொதுவாகத் திரும்பி வரும்போது ‘போயிட்டு வர்றோம் ‘ என்று சொல்வதில்லை. ஆனால் இந்த நாவலில் இறப்புக்குச் செல்லும் பெண்கள் அத்தனை பேரும் திரும்பும்போது ஸலாம் சொல்லிவிட்டுத்தான் திரும்புகிறார்கள்(பக். 29).

முஸ்லிம் இளைஞர்கள் பொதுவாக வேஷ்டி கட்டுவதே இல்லை. அதுவும் கல்யாண மாப்பிள்ளை என்றால் சூட்டு கோட்டுதான் பெரும்பாலும். ஆனால் இந்த நாவலில் வரும் மாப்பிள்ளை பட்டு வேட்டி சரசரக்க வருகிறார் (பக். 36).

இப்படிப்பட்ட பதிவுகளின் இன்னொரு பரிமாணமாக, உச்சகட்டமாக, யதார்த்தம் அல்லது துணிச்சல் என்ற நினைப்பில் இன்னொரு காரியத்தையும் சல்மா செய்திருக்கிறார். வெளிப்படையாகப் பேச நாம் கூசும் பச்சையான வார்த்தைகளையும், நிகழ்வுகளையும் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். முக்கியமாக, பெண்களின் உரையாடல் மொழி உடல் தொடர்பானதாகவும், மர்ம உறுப்புகளைச் சுற்றியும், உடலுறவு பற்றியுமே அடிக்கடி நிகழ்கிறது. அதுவும் மரண வீட்டில் குழுமியிருக்கும்போதும். சில உதாரணங்கள்.

ஏன், சின்ன வயசா இருந்தா படுக்கத் தெரியாதாக்கும் ?(பக். 108)

மும்தாஜைப் பார்த்து ஒருத்தி : என்னம்மா மாப்பிள்ளை வர்றாராமே ? சத்து ஊசி போடுறதுக்கு. தயாரா இரு. உடம்பை தேத்திவை (பக். 219)

நீ புள்ளைக்கு தாய்ப்பால் குடுத்தியா, குடுக்கலையா ? ஒன்னோட பால்கோவாவைப் பார்த்தா குடுத்தது மாதிரியே தெரியலயே (பக். 220)

நீ பிள்ளைக்கி மட்டும் பால் குடுத்திருந்தா அது இப்புடி ஓடுமா ? பாலை நீ மச்சான் கிட்ட குடுத்திருப்ப. அவரு ராத்திரியெல்லாம் தஸ்பீஹ் உருட்டியிருப்பாரு. அதுதான் ஒன்னோடது தொங்கிப் போயிருச்சு (பக். 220)

கணவன் வருவதைப் பற்றி ஒருத்தி : (புருஷன்) வந்தாலும் என் சாமானுக்குத்தான் கேடு…ஒரு வாரம் படுக்கலைன்னா, சாமான் நகச்சுத்தி வந்த மாதிரி விண்விண்ணுன்ணு தெறிக்க ஆரம்பிச்சுடுமுல்ல (பக். 221)

நாலு திருமணம் செய்து கொள்ளும் அப்துல்லா என்ற ஒரு பணக்கார கிழவனைப் பற்றி நபிஸா: அந்தாளு வயசுக்கு எந்திரிக்கிதா ? ஆச்சரியமாவுல்ல இருக்கு (பக். 240)

பாத்திமாவின் அம்மா நூரம்மா: வீணாப்போன முண்டை, ஒரு பள்ளப்பய சுண்ணிதானா இவளுக்குக் கெடைச்சிச்சு, துலுக்கப் பயலுது கெடைக்கலயா ? (பக். 272)

அஹ்மது தன் தோழி ராபியாவின் சின்ன மார்பைச் சுவைப்பதை சல்மா இப்படி விவரிக்கிறார்:

அவள் (ராபியா) ஒன்றும் சொல்லவில்லை. அவன் (அஹ்மது) மெதுவாகத் தவழ்ந்து வந்து அவளது சட்டையைத் தூக்கிவிட்டு மார்பைப் பார்த்தான்…பொம்மையை எடுத்துக் கீழே வைத்துவிட்டு அவளது மார்பை மிருதுவாக வருடினான்…தன் விரல்களால் அதைப் பற்றிக் கைகளில் எடுத்துக்கொள்ள முயற்சிப்பதுபோல் செய்துவிட்டு பிறகு தன் தலையைச் சாய்த்து உதடுகளால் மெதுவாக முத்தமிட்டான். பின் அதனைப் பற்றி உறிஞ்சத் தொடங்கினான் ஒரு குழந்தையைப் போல (பக். 177).

இதெல்லாம் காட்டுவது என்ன ? ‘எல்லா அறிதல்களுடன் விரிகிறது என் யோனி ‘ என்ற சல்மாவின் கவிதை வரி பிரபலமானது. மாலதி மைத்ரி போன்றவர்கள் இந்த மாதிரி மனித உடலின் மர்ம உறுப்புகள் பற்றிய கவிதைகளை காப்பாற்றும் பொருட்டு ‘யோனி ‘ என்பதல்லாம் ஒரு குறியீடுதான் என்று கட்டுரை கட்டுரையாக எழுதுகிறார்கள். எனக்கு இந்த விஷயத்தில் வேறு கருத்துள்ளது. யோனி என்பது குறி என்பதுவரை எனக்குத் தெரியும். அது எப்படி குறியீடாகிறது என்பது விளங்கவில்லை. சரி, அந்த விவாதத்துக்கு இப்போது போகவேண்டாம். கவிதை என்பது எதையுமே விரிப்பது அல்ல. திரையை விலக்கிவிட்டுப் பார்த்தால் ஏற்படும் தெளிவைவிட தெளிவாக திரைகளினூடே காட்டவல்லது கவிதை. எல்லாவற்றையும் விரித்துக்கொண்டே போவது இலக்கியமாகாது என்பது அடியேனுடைய மூடிய நம்பிக்கை. ஆனால் இந்த நாவலின் பெண்கள் பேசும் மொழியும் அஹ்மது ராபியா நிகழ்ச்சியும், மதினா ராபியா நிகழ்ச்சியும் காட்டுவது என்ன ?

‘பின் நவீனத்துவப் பிரதியொன்றில் காணக்கிடைக்கும் சாதகமான பண்புகள் இவை ‘ என்று முன்னுரையில் ரவிக்குமார் சொல்கிறார். யாருக்குச் சாதகமான பண்புகள் என்று அவர் குறிப்பிடவில்லை. போகட்டும். சாருநிவேதிதா சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். தமிழுக்கு இன்னொரு சாருநிவேதிதி கிடைத்துவிட்டார் என்று. ஆனால் பைத்தியக்காரன் வழித்துக் காட்டுகிறான் என்றால் அதே போல செய்துகாட்டித்தான் அடுத்தவருக்குப் புரியவைக்க வேண்டும் என்ற நினைப்பை என்னவென்று சொல்வது ? இதுதான் பின் நவீனத்துவமோ!

இனி சல்மாவின் பிரதியின் அடுத்த பக்கத்துக்கு வருவோம். இது மதம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் பகுதி. ஆங்காங்கு பாத்திரங்கள், குறிப்பாக பெண் பாத்திரங்கள் மூலமாக மதம், சட்டதிட்டங்கள் சார்ந்த கேள்விகளை சல்மா எழுப்புகிறார். சில உதாரணங்கள்.

‘இந்த மாசம் பூராவும் நன்மையை மட்டும்தான் சம்பாதிக்கணுமாம் ‘ (பக். 80). ஜும்ஆவுக்குக் கோடி உடுத்தித் தொழுவது நன்மையாம் (பக். 98). ‘யாம் ‘களாகவும் ‘மாம் ‘களாகவும் மத நம்பிக்கைகளின் மீதான கிண்டல் நாவல் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

‘காதருக்கே தெரியாமல் கருத்தடை செய்துவிட்டு வந்தபொழுது ஷரியத்தை மீறி நடந்து கொண்டதாகக் கூறி கொஞ்சகாலம் றைமாவிடம் பேசாமலிருந்தான்…அவளுக்குத் தெரியும் ஷரியத்தை மீறி ஒரு அடிகூட எடுத்து வைக்க அவனால் முடியாது ‘(பக் 97).

ஷரீயத்தை மீறுவதுதான் சரி என்ற தொனி இதில் கிடைக்கிறது.

அஹ்மது ராபியாவிடமும் மதினாவிடமும் சவால் விடுவான். எங்கே, எங்களை மாதிரி உள்ளே வந்து தொழுங்கடி பாப்பம் (பக். 169). ஏன் நாமும் போய் பள்ளிவாசலுக்குள்ளேயோ கொத்வா பள்ளியிலோ ஆண்களோடு சேர்ந்து தொழுக கூடாது ? — ராபியா (பக். 189)

இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது ? இரண்டு பேர் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினால் யாருக்கென்ன ? சிவா முஸ்லிமாக இருந்தால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாமாம். இந்துவாக இருப்பதால் முடியாதாம் (பக். 283)

எல்லாவற்றையுமே படைத்த அல்லாவை யார் படைத்திருப்பார்கள் ? (பக். 317).

இத்தகையை கேள்விகளும் இதற்கான பதில்களும் பல முறை கேட்கப்பட்டு பதில்களும் சொல்லப்பட்டு நீர்த்துப் போயாச்சு. ஒரு மதத்தைப் பின்பற்றும் ஒருவர் அதன் சட்டதிட்டங்கள் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்துகொள்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அப்படிக் கேள்வி கேட்பதே முற்போக்கு என்றும் ஆதிக்கத்துக்கு எதிரான நியாயமான குரலென்றும் எழுத்தில் பதிவு செய்வது, அதுவும் சீரியஸாக அல்ல, ஒரு ஓரமாக, எந்த வகையில் சரி என்று எனக்கு விளங்கவில்லை. திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லி ஈரான் போன்ற நாடுகளில் விபச்சாரம் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி ஏழைப் பெண்களை பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்துக் கொலை செய்கிறார்கள். இதை எதிர்த்து என்றைக்காவது சல்மா போன்றவர்கள் குரல் கொடுத்துள்ளார்களா ? (பார்க்க எனது கட்டுரை கற்காலம்). அதெல்லாம் இவர்களுக்கு முக்கியம் அல்ல. பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும். மிக அவசியமான தேவை அதுதான். அதற்காக ஒரு நாவல் எழுதவும் அவர்கள் தயார்.

எந்தக் கேள்விக்கும் சல்மா பதில் சொல்லப்போவதில்லை. ஆனால் raasathi@yahoo.com என்று தன் மின்னஞ்சல் முகவரியை மட்டும் ஏன் கொடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை பாராட்டுக் கடிதங்களை மட்டும் ஒரு நூலாக வெளியிடும் எண்ணமிருக்கலாம்.

கடைசியாக

500 பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த நாவலில் எனது அனுபவத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு வாக்கியம்கூட இல்லை. இலக்கியத்தின் சுவை என்பது மருந்துக்குக்கூட இல்லாத மொன்னையான, தட்டையான, முனை மழுங்கிப்போன அல்ல, முனையே இல்லாத, மிக மிகச் சாதாரணமான எழுத்தில் ஒரு நாவல். ஒரே விதமான சம்பவங்கள். பெயர்கள் மட்டும்தான் மாறுகின்றன. ஒரே ஒப்பாரியையே பலகுரலில் பாடுவது மாதிரி. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவல் வந்திருந்தால் ஒரு வேளை நவீன இலக்கிய படைப்பாக இது கருதப்பட்டிருக்க வாய்ப்புண்டு. நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்றெல்லாம் இதற்கு ஜால்ரா போடுவதிலிருந்தே இது இலக்கியக் கலப்பில்லாத சுத்தமான அரசியல் என்று தெரிந்துவிடுகிறது.

மோகத்தையே மைய இழையாக வைத்து ‘மோகமுள் ‘ என்ற அற்புதமான நாவலை ஜானகிராமன் படைக்கவில்லையா ? உடலைப் பேசவேண்டுமென்றால் அதற்கு சரோஜாதேவித்தனம்தான் வழியா ? அதுதான் பின்நவீனத்துவம் என்றால் அப்படிப்பட்ட பின்நவீனத்துவம் தூக்கி எறியப்பட வேண்டியது.

எழுத்து என்பது நடப்பதையெல்லாம் நடப்பதுபோல சொல்வதல்ல. இருப்பதை எழுதுவதுதான் மிக உயர்ந்த இலக்கியம் என்று சொல்வோமேயானால் நாளிதழ்களும், மற்ற பத்திரிக்கைகளும்தான் இலக்கிய இதழ்களாக இருக்கும். இலக்கியம் என்பதே சொல்முறையில்தான் உள்ளது. நிஜம் ஏற்படுத்தும் பாதிப்பைவிட அதிகமான பாதிப்பை, நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்த வல்லது இலக்கியம். எழுதுமுறையில்தான் ஒரு விஷயம் இலக்கியமாகவோ அல்லது அரசியலாகவோ மாறுகிறது. (பெற்றோர் பெயர், கணவர் பெயர், பிள்ளைகள் பெயர்களெல்லாம் குறிப்பிட்ட சல்மா, சகோதரர் மனுஷ்யபுத்திரன் பற்றி குறிப்பிடாததற்கு ஏதேனும் காரணம் இருக்கலாம். அதையும் அரசியலில் சேர்க்க முடியாது என்று நினைக்கிறேன்).

சல்மா அவர்கள் ஏற்கனவே ஊராட்சி மன்றத் தலைவியாக இருக்கிறார். அரசியல் அவருக்கு வெற்றிகரமாக வருகிறது. அதிலேயே அவர் தொடர்ந்து சேவையாற்ற வாழ்த்துகிறேன். இலக்கியத்தில் அவர் அரசியலைக் கொண்டுவரச் செய்த இந்த மகா முயற்சி கடுமையான தோல்வியாகிவிட்டது. ஏனெனில் உண்மையை நாவலாக்க வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இல்லை. அதை அவரே முன்னுரையில் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுகிறார்:

‘நவீன இலக்கியத்தில் காலியாகக் கிடக்கும் பக்கங்களை நிரப்ப வேண்டும் என்கிற ஆர்வமும் கூட, வளர்ந்து கொண்டிருந்தன பக்கங்கள் ‘. (பக் 9, மெளனத்தைப் பேசுதல்). ஆக, நிறைய பக்கங்கள் எழுதியதன் காரணம் இதுதான்.

ஆனால் காலியாக உள்ள இடம் தூங்கும் இடமா துப்பும் இடமா என்று தெரியாமல் அந்த இடத்தில் யாரும் கால் வைக்க முடியாதபடியும், மூக்கைப் பொத்திக்கொண்டு கடக்கும் படியும் நிரப்பியிருக்கிறார்.

‘ஏதேனும் ஒரு கட்டத்தில் வாசகர்களுக்கு அலுப்புண்டாக்கக் கூடிய நீளமான நாவல்தான் இது என்றாலும் பெண்களின் உறைந்து போன காலத்தை உணர்த்த வேண்டிய கட்டாயத்தோடு… ‘

என்று மறுபடியும் இலக்கிய முட்டுக் கொடுக்கிறார். அவருடைய மன உறுத்தலின் விளைவாக இந்த அலுப்பை எடுத்துக்கொள்ளலாம். அவர் சொல்ல வருகின்ற காலம் உறைந்து போயிருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.

ஒரே நேரத்தில், மானுடவியல் ஆவணமாக, வரலாற்றுப் பதிவாக, படைப்பு குணம் நிரம்பிய புனைவாக விளங்குகின்ற இந்தப்பிரதியின் ஒளி, நம்மை மேலும் மனிதப்பண்பு கொண்டவர்களாக மாற்றுகிறது. இந்த ஆக்க சக்தி பெண்களுக்கே உரியது. (ரவிக்குமார், பக். 20).

நல்லது. எனது நோக்கம் இலக்கியம் மட்டுமே. இப்படி இமயமலையில் உச்சியின் சல்மாவை வைப்பதற்கு ரவிக்குமாரின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை.

ruminagore@gmail.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி