நேர்த்தியான கதைகளும் நேர்மையான கேள்விகளும் (பாவண்ணனின் ‘நூறுசுற்றுக் கோட்டை ‘ – நூல் அறிமுகம்)

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

வளவ.துரையன்


உலகின் உயிரினங்களில் மனிதன் மட்டுமே பேசத் தெரிந்தவன். சைகை மொழி பேச்சுமொழியாக உருவானபோதுதான் கருத்து வெளிப்பாடு செம்மையான முறையில் இயங்கத் தொடங்கியது. காலங்காலமாக பலதரப்பட்ட கருத்துகளை உள்வாங்க உதவும் சாதனமாகத் திகழும் மொழி இன்னமும் முற்றிலும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு புதிராகவே விளங்குகிறது. மொழிக்குள் மறைந்திருக்கும் பற்பல ரகசியங்களை தேர்ந்த மொழிவல்லுநர்களாலும் சரியாக அறிய முடிவதில்லை. கற்றுத் துறைபோகிய மருத்துவ நிபுணர்கள் கூட சில நோய்களின் போக்கு பிடிபடாமல் திணறுவதைப்போல.

எழுத்துமொழி தனக்கான ஒரு தளத்தை வகுத்துக்கொண்டு காந்தம்போல அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. ஆனால் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று என்பதைப்போல அதிலிருந்து சில மலிவானவற்றையே பலரும் எடுத்துக்கொள்கிறார்கள். ஆழ்ந்த வாசிப்புப் பழக்கமுள்ள சிலர் மட்டுமே மேலும் தம் தேடலை அதிகரித்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். அப்போது அவர்கள் மொழி வேறுபாடின்றி எல்லாப் பக்கங்களிலிருந்தும் வீசும் காற்றை நேசமுடன் சுவாசிக்கத் தொடங்குகிறார்கள்.

இச்சிலருக்காகவே மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் உருவாகின்றன. நம் மொழிக்கு படைப்புகள் சார்ந்து உள்ள வலிமை என்ன, அடுத்த மொழியில் படைப்புகள் சார்ந்து எத்தகைய வலிமை உருவாகிவந்திருக்கிறது என்று அறிந்துகொள்வதில் அவ்வாசகர்களிடம் ஆர்வம் உருவாகிறது. அவ்வாசகர்களின் ஆர்வம் குன்றிப்போகாத அளவு தளராத ஈடுபாட்டை உருவாக்குவதில் மொழிபெயர்ப்பாளர்கள் வகிக்கக்கூடிய பங்கு மிகமுக்கியமானது. கிட்டத்தட்ட ஒரு குழந்தையை ஒரு புதிய பள்ளியில் சேர்ப்பதற்குஆன்புடன் கையைப்பற்றி அழைத்துச் செல்வதற்குச் சமமான விஷயம் இது. மொழிபெயர்ப்பாளர்களின் தேர்வும் மொழியும் மட்டுமே வாசகர்களை ஈர்க்கும் வலிமை கொண்டவை. இத்தகு வலிமையுடன் தமிழில் இயங்கும் மொழிபெயர்ப்பாளர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைவானவர்கள். அவர்களில் முக்கியமானவர் பாவண்ணன்.

பாவண்ணன் மொழிபெயர்ப்பில் சமீபத்தில் வந்துள்ள தொகைநூல் ‘நூறுசுற்றுக் கோட்டை ‘. இந்நூல் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ‘வண்ணமும் வாழ்வும் ‘ என்னும் முதல் பகுதியில் கன்னடமொழியல் நவீனத்துவம் படர்ந்தபிறகு எழுதப்பட்ட கதைகளில் நவீனத்துவத்தின் நிறம் சரியாகப் புலப்படும்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது கதைகள் உள்ளன. மூன்று தலைமுறைக்கு முந்தைய மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் சிறுகதை முதல் இருபத்தைந்து வயது இளைஞனுடைய சிறுகதைவரை இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. ‘ஆறுகளின் தடங்கள் ‘ என்னும் இரண்டாம் பகுதியில் மூத்த கன்னடப் படைப்பாளிகளின் சுயசரிதையிலிருந்து சில பகுதிகள் மொழிபெயர்த்துக்கொடுக்கப்பட்டுள்ளன. ‘அணையாத சுடர்கள் ‘ என்னும் மூன்றாம் பகுதியில் மறைந்துபோன முக்கிய கன்னடப் படைப்பாளிகள்பற்றி பாவண்ணனே தனிப்பட்ட வகையில் எழுதிய அஞ்சலிக் குறிப்புகள் அடங்கியுள்ளன.

கதைப்பகுதியில் உள்ள ஒன்பது கதைகளுமே ஏதோ ஒருவகையில் முக்கியத்துவம் உள்ளவை. புராணப்பின்னணியில்ஆமைந்த மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் ‘குசேலரின் கொள்ளுப்பேரன் ‘ மனிதமன ஆழத்தை அறிய முயலும் கதை. குசேலர் வறுமையில் வாடியவர். கிருஷ்ணனுடைய உதவியால் வறுமை அகன்ற வாழ்வை அடைந்தவர். குசேலருக்கு அச்செல்வத்தில் நாட்டமில்லை. குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி வாழ்ந்து மறைந்துவிடுகிறார். அடுத்தடுத்த தலைமுறைகள் அச்செல்வத்தில் திளைக்கிறார்கள். இப்போது புதிதாக முளைத்த மூன்றாம் தலைமுறைக்கு தன் பழமை வறுமை சார்ந்து மதிப்பிடப்படுவதில் விருப்பமில்லை. புதிய புனைவொன்றை உருவாக்குகிறது. புனைவினால் பழமைக்கு வேறு நிறம் கொடுக்கப்படுகிறது. மனத்தின் விசித்திரம் இது. கதையை வாசித்து முடித்ததும் நம் கண்ணில் காணப்படும் நிறங்களில் உண்மை எத்தனைப் பங்கு புனைவு எத்தனைப் பங்கு என்று அலசத் தோன்றுகிறது. மானுட சரித்திரம் முழுக்க இப்படிப்பட்ட புனைவுகளால் உருவான ஒன்றுதானா என்கிற கேள்வி உருவாக்கும் மலைப்பும் கூச்சமும் கொஞ்சநஞ்சமல்ல. யு.ஆர்.அனந்தமூர்த்தியின் ‘சூரியனின் குதிரை ‘ சிறுகதை மிக நல்ல அனுபவத்தைத் தரக்கூடியது. சூரியனின் குதிரை என்னும் தலைப்பு புராணம் அல்லது அறிவியல் சார்ந்த ஒரு கதையை எதிர்பார்க்கத் துாண்டுகிறது. இறுதியில்தான் அத்தலைப்பு ஒரு சாதாரண புழுவைக் குறிப்பிடக்கூடிய ஒரு கன்னடப்படிமம் என்று கண்டடைகிறோம். கதையில் இடம்பெறும் வெங்கட் ஜோயிஸ் அக்கம்பக்கத்தார், ஊரார், நண்பர்கள், மனைவி, மகன் என எல்லாராலும் சாதாரணமாக, பிழைக்கத் தெரியாதவனாக, சாமர்த்தியமற்றவனாக, ஒரு புழுவைப்போல மதிக்கப்படுபவன். மற்றவர்கள் தலைக்கு எண்ணெய் மஸாஜ் செய்து மகிழ்ச்சியடையக்கூடியஆந்தச் சாதாரணன் இறுதியில் சூரிய ஒளியில் தளரிலைமீது நெளிகிற ஒரு புழுவைக்கண்டு ஆனந்தப் புன்னகை கொள்கிறான். ஒரு புழு இன்னொரு புழுவைப் பார்த்துச் சிரிப்பதான சித்திரம் நம் கண்முன் விரிகிறது. நிர்வாக அதிகாரிகள் உருவாக்கப்படும் விதத்தை ஒரு பயிற்சி நிலையத்தை முன்வைத்து விவரிக்கும் ‘புலி சவாரி ‘ (விவேக் ஷான்பாக்) கதையும் ஒரு பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தபடி விடுதியறையொன்றில் பதற்றத்துடன் இருக்கும் நடுவயதுக்காரன் எதிர்பாராத மரணமடைந்ததும் அவனால் செய்யப்பட்டஆப்பயண ஏற்பாடுகள் அனைத்தும் மரண்பபயணத்துக்கான ஏற்பாடுகளாக மாறிப்போன அவலத்தை விவரிக்கும் ‘பயணம் ‘ ( யஷ்வந்த சித்தாள் ) கதையும் தீவிரவாதி என்ற பட்டம் சூட்டி காவல் துறையினரால் என்கெளண்டர் செய்யப்படும் நண்பனுக்காக ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் தவிக்கும் சதாசிவனைக் காட்டும் ‘ரத்தமும் ரோஜாவும் ‘ (நடராஜ ஹூளியார்) கதையும் தொகுப்பின் முக்கியமான மற்ற கதைகள். எத்தனைமுறை வாசித்தாலும் அலுக்காத கதை வெங்கடேஷ் எழுதியுள்ள ‘சின்னஞ்சிறு விஷயம் ‘. இயந்திரமயமாக இயங்கக்கூடிய ‘லுவலகம் ஒன்று கதையில் இடம்பெறுகிறது. அங்கே தரைவிரிப்பில் தங்களைவிட இருமடங்கு எடையுள்ள சோற்றுப் பருக்கையினை கருமமே கண்ணாயினராக இரண்டு எறும்புகள் தள்ளுகின்றன. அவற்றின் சைகைகள், அங்க அசைவுகள், நகர்த்தும் நுணுக்கங்கள் அனைத்தையும் பார்த்து தட்டச்சு செய்பவனை எதிர்பாராத விதமாக அங்கே தோன்றும் அதிகாரிக்குரல் அழுத்தித் தேய்க்கிறது. எறும்பை சாதாரண மனிதனாகவும் பருக்கையை வாழ்க்கையாகவும் பார்க்கத்துாண்டும் கதை இது.

‘ஆறுகளின் தடங்கள் ‘ பகுதியில் இடம்பெற்றுள்ள சிவராம காரந்த் அவர்களின் சுயசரிதைப்பகுதிகள் ஆர்வமூட்டும் பகுதிகளாக உள்ளன. காந்தியடிகளுக்கும் அவருக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து இருவரையும் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளன. இருவருமே வெவ்வேறு திசைகளில் இலட்சியவாதிகளாக வாழ்ந்தவர்கள். அப்பாவுக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையிலிருந்த உறவை மிகச்சில வரிகளிலேயே லாவகமாகச் சொல்லித் தாண்டிச்செல்லும் லங்கேஷின் எழுத்தாளுமை பாராட்டத்தக்கது. தந்தையின் மரணத்துக்குப் பிறகு கணக்குப் பிள்ளையாக பொறுப்பேற்று ஊரூராகச் செல்கிற அம்மாவின் பின்னால் அலைந்த இளம்பிள்ளைக் கால நினைவுகளை பைரப்பாவின் சுயசரிதையில் படிக்கும்போது மனம் கனத்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் காலராவால் இறந்துபோன அம்மாவின் மரணச்செய்தியை காலம்கடந்து அறிந்துகொள்ள நேர்ந்த நிகழ்ச்சியைப் படிக்கும்போதே மனம் பதற்றத்தில் மூழ்குகிறது.

‘அஞ்சலிக்குறிப்புகள் ‘ பகுதியில் ஆளுமைகளைப்பற்றி பாவண்ணன் சொல்கிற பல செய்திகள் முக்கியமானவை. காவிரிப் பிரச்சனையின்போது தமிழர்கள் தாக்கப்பட்ட சமயத்திலும் திருவள்ளுவர் சிலைதிறப்பை கர்நாடக அரசு தடைசெய்த சமயத்திலும் அவற்றை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் டி.ர்.நாகராஜ் என்பதும் ஒரு சாதாரண எழுத்தாளர் எழுதிய ‘தர்ம காரணம் ‘ என்னும் நாவலை வீரசைவ மடங்களுக்காக அரசு தடைசெய்தபோது அதை எதிர்த்து மிகப்பெரிய ஊர்வலம் நடத்தி வழக்குமன்றம் சென்று வெற்றியும் பெற்றவர் லங்கேஷ் என்பதும் சுற்றுப் சூழல் பாதுகாப்புக்காக பல முன்னணி தொழில் நிறுவனங்களுக்கெதிராக வழக்குமன்றங்களில் மரணப்படுக்கையில் விழும்வரை ஏறிஏறி இறங்கியவர் சிவராம கார்ந்த் என்பதும் நாம் அறியவேண்டிய முக்கியமான விஷயங்களாகப் படுகின்றன.

சிவராம காரந்த் மறைவையொட்டி கர்நாடக மக்களும் அரசும் செலுத்திய அஞ்சலியைப்பற்றி விரிவான குறிப்புகளை எழுதிய பாவண்ணன் அதன் இறுதிப்பகுதியில் எழுதியுள்ள வரிகள் மிக முக்கியமானவை. கேரளத்தில் பஷீீருக்கும் கர்நாடகத்தில் சிவராம காரந்துக்கும் செலுத்தப்பட்ட மரியாதைபோல தமிழில் எந்த எழுத்தாளனுடைய மறைவுக்கும் மரியாதை செலத்தப்படவில்லை என்பது எவ்வளவு பெரிய சோகமான உண்மை. இதற்குக் காரணம் என்ன என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஊடகங்களா ? அரசாங்கமா ? படைப்பாளிகளா ? வாசகர்களா ? பொதுமக்களின் பார்வையா ? இல்லை, எல்லாருமா ? பதிலைத் தேடும் பயணத்தின் வழியாகவே நம் சமூகம் செழுமையடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

தன் சொந்தப்படைப்பாக்கங்கள் வழியாக நம் மனத்தில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிற பாவண்ணன் தன் மொழிபெயர்ப்புத் தொகுதி வழியாகவும் வெளிச்சத்தைப் பாய்ச்சத் தவறவில்லை. அவருடைய முயற்சிகள் தமிழுக்குப் பெருமை சேர்ப்பவை. தொகுதியை மிக அழகான முறையில் வெளியிட்டுடுள்ள அகரம் பாராட்டுக்குரியது.

( நூறு சுற்றுக் கோட்டை – தொகுப்பும் மொழிபெயர்ப்பும் : பாவண்ணன். வெளியீடு: அகரம், 1, நிர்மலா நகர், தஞ்சாவூர். விலை. ரூ 110. பக்கங்கள் 216)

valavanurduraiyan@yahoo.co.in

Series Navigation

வளவ.துரையன்

வளவ.துரையன்