ஒடுக்கப்பட்ட நுண்தரப்புகளிலிருந்து விடுதலை சாத்தியமா ?

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

சங்கரராம சுப்ரமணியன்


(வெளி ரங்கராஜனின் ‘இடிபாடுகளுக்கிடையில் ‘ நூல் விமர்சனக் கூட்டத்தில் கவிஞர் சங்கர ராமசுப்ரமணியன் வாசித்த கட்டுரை .)

நான் இங்கே நினைவு கூறும் நிகழ்ச்சி நடந்து ஏழு வருடங்களாகி விட்டது. திருநெல்வேலி சந்திப்பில் ஹோட்டல் ஜானகிராமுக்கு எதிரே உள்ள ஒரு பெரிய கட்டிடத்தின் மாடியில். ஒரு குறுகிய வெட்டவெளி அறையில் நடந்த ‘தாவரங்களின் உரையாடல் ‘ என்ற தொகுப்புக்கான கூட்டமே அது. கூட்டத்திற்கு வந்திருந்த எல்லாரும் அந்த புத்தகத்தை படித்து விட்டு வந்திருந்தார்கள். கோணங்கி. லக்ஷ்மி மணிவண்ணன். சா.தேவதாஸ். கைலாஷ், சிவன் என இரண்டு கைவிரல்களுக்குள் அடங்கி விடக் கூடிய எண்ணிக்கை கொண்ட கூட்டம் அது. வெளி ரங்கராஜனும் அன்று கூட்டத்திற்கு சூரத்திலிருந்து வந்திருந்தார். எஸ்.ராமகிருஷ்ணனின் உலகை அறிமுகம் செய்யும் விதமாக. கதையின் தடயங்களை உணரும் விதமாக அவரது கட்டுரை இருந்தது. இன்றைய சிறுகதையின் புதிய எத்தனங்களையும். சாத்தியங்களையும் தன் உலகம் வழியாக ராமகிருஷ்ணன் ‘தாவரங்களின் உரையாடல் ‘ புத்தகம் மூலம் எப்படி சாதித்திருக்கிறார் என்று கோணங்கியின் பேச்சு இருந்தது.

சக படைப்பாளியின் நூல் குறித்து மறைமுக செயல்திட்டங்கள் எதுவுமில்லாமல். ஈகோ முனைப்பு இல்லாமல் படைப்பு வெளியில் தாங்கள் வேலை செய்யும் வடிவம் குறித்த சிக்கல்களையும். சவால்களையும் தாவரங்களின் உரையாடல் புத்தகத்தின் மீது பகிர்ந்து கொண்ட கூட்டம் அது. அப்போதிருந்த வெயிலின் புழுக்கமும். எல்லார் மீதும் படர்ந்திருந்த ஒளியும் இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது. நாம் எல்லாரும் ஒரு சேரப் பகிர்ந்து கொண்ட காலத்தின் ஒளி என்று நான் சொல்வேன்.

நான் மேற்சொன்ன கூட்டத்தைப் போல இப்போது எங்குமே ஒரு சந்திப்பை நிகழ்த்தவே இயலாது. வெற்றி. தோல்வி மதிப்பீடுகளுக்குள் புத்தகங்களும் சிக்கியாகி விட்டது.

‘நாடகவெளி ‘ ஆசிரியராக. பல்வேறு புதிய முயற்சிகளுக்கு ஆதரவு தருபவராக. படைப்புத் துறையில் பல்வேறு முரண்பாடு உள்ளவர்களும் சந்திக்கும் மையமாக ரங்கராஜனை எனக்குத் தெரியும்.

கவிதை. நாவல். சிறுகதை என்ற படைப்பு வடிவங்களில் இயங்காமல் தமிழ் கலை வெளியில் இயங்கும் பயணியின் குறிப்புகளாகவும். பங்கு பெறாதவர்களுக்கு தன் அனுபவத்தை பகிரும் உரையாடல்களாகவும் இப்புத்தகத்தில் பல்வேறு நிகழ்வுகளும். ஆளுமைகளும். புத்தகங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கார்பா நடனத்தைப் பற்றிப் பேசும் போதோ. தமிழ் சினிமாவின் பாலியல் பண்பாடு பற்றிப் பேசும் போதோ ரங்கராஜனுக்கு மனத் தடைகள் ஏதுமில்லை.

வெளி ரங்கராஜனின் இந்த மனத்தடையின்மையே அவருக்கு சில விஷயங்களை நிலைப்பாடுகள் எடுக்காமல் பரிசீலிக்கும் மன நிலையைத் தந்துள்ளது. இந்தப் பார்வையை ஸ்தாபனமாகாத ஒரு உடலே இங்கு உருவாக்கிக் கொள்ள இயலும்.

ஸ்தாபனத்தோடு தன்னை இனம் கொள்ளாத ஒரு பயணியே இன்று ‘சில நிகழ்வுகள். சில பார்வைகள் ‘ ‘ஒரு பத்திரிகை நிருபரின் தற்கொலை ‘ என்ற இரு கட்டுரைகளை எழுதமுடியும். எழுத்து கலை இலக்கிய வெளியில் தீவிர நம்பிக்கை கொண்டு இருப்பின் சிக்கல்களுடனும். அதிரும் நட்பு முரண்களுடன். இன்று இயங்கும் ஒத்த படைப்பாளிகளே புறக்கணிக்கும் இளம் எழுத்தாளனின் மனநிலைகளை ரங்கராஜனால் இயல்பாக உணர முடிகிறது.

‘ஒரு பத்திரிக்கை நிருபரின் தற்கொலை ‘ கட்டுரையும் இச்சூழலில் நடந்திருக்கும் – நம் எழுத்தாளர்கள் யாரும் செய்யாத – அபூர்வமான எதிர்வினை. குமார் என்ற தற்கொலை செய்து கொண்ட நிருபரையும். அவன் தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையும் எனக்குத் தெரியும்.

தமிழின் மூத்த எழுத்தாளர்களுக்கும். மூத்த பத்திரிகையாளர்களுக்கும் இந்நிகழ்வு தெரிந்தும். சொல்லப்பட்டும் அவர்கள் மறதியில் புதைந்து போன செய்தி அது.

வேதியலில் பி.எஸ்.சி படித்து விட்டு பெங்களுரில் ஒரு பாதுகாப்பான வேலையில் இருந்து தினமணியில் பத்திரிகையாளராய் வேலைக்கு சேர வேண்டும் என்ற உலர்ந்த கனவுக்காக வேலையை துறந்தவர் குமார். தினமணியில் சேர்வதற்கு முன்னால் சென்னை தினமலரில் ஒரு வருடம் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்றும். தன் கனவிற்காக – அங்கு பார்த்த வேலையை உதறி தினமணியில் பயிற்சி நிருபராய் தேர்வானவர். தினமணி என்ற பத்திரிகையில் வேலை செய்யும் கனவைத் தவிர வாழ்க்கை குறித்த எந்த அதிகப்படியான சிக்கல்களும். குழப்பங்களும் இல்லாதவர். ஒரு நிருபருக்குரிய, உதவி ஆசிரியருக்குரிய அதிகபட்ச தகுதிகள் இருந்தும் ஒரு நாள் அவர் பயிற்சி காலத்திலேயே நீக்கப்பட்டார். பணியிலிருந்து நீக்கப்பட்ட மறுநாள் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது பொறுப்பிலிருந்த ஆசிரியர் நிருபர்களை எடுப்பதையும். அவர்களை விலக்குவதையும் ஒரு ஹாபியாகவே வைத்திருந்தார். ஒரு தமிழ் நாளிதழில் வேலை செய்ய அதிகபட்ச தகுதிகள் உடைய – அதையே கனவாய் கொண்ட ஒருவனை அவன் கனவைப் பறித்து தற்கொலை செய்யத் தூண்டும் தினமணி என்ற அமைப்பு பற்றியோ. அதன் ஆசிரியர் குறித்தோ ஒரு எதிர்ப்பு கூட்டமோ. விசாரணையோ. எதிர்வினையோ இங்கே நடக்கவில்லை.

தன் வாயையே ஒலிபெருக்கியாக மாற்றி எல்லாவற்றிலும் தன் ‘கருத்து லேபிளை ‘ ஒட்டும் ஒருவர் இது பற்றி மெளனம் காத்தார். ஏனெனில் அது நட்பின் நலன் சார்ந்தது.

சங்கராச்சாரியார் கைது பற்றி ஆதரவுத் தரப்பு. எதிர் தரப்பு இரண்டுமே அங்கீகாரம் உடையது. மாற்று அதிகாரத்தில் அறிவுத் தரப்புக்கு கூடுதல் லாபங்களும் உண்டு. சங்கராச்சாரியாரின் எதிர் தரப்பும் வலுவானதே.

ஆதரவுத் தரப்பு. எதிர் தரப்பு என்று அங்கீகரிக்கப்பட்ட வெளிகளாய் இல்லாமல் பேசுவதற்கே இடமில்லாத ஒடுக்கப்பட்ட நுண்தரப்புகளும் உண்டு. அதைப்பற்றி பேசுவது தான் எழுத்தாளனுக்கு தன் படைப்புக்கு சமமான சிக்கலான பணியாகும். இதைப் பற்றி பேசுவதற்கு அதிகாரம். மாற்று அதிகாரம் இரண்டிலுமிருந்தும் ஆதரவு கிடைக்காது. ஒடுக்கப்பட்ட நுண் தரப்பைப் போலவே அதை பிரதிநிதித்துவப் படுத்துவதும் அபாயகரமான வேலைதான். ஆனால் நம்மைப் போன்ற மூன்றாம் உலகக் கலாசாரங்கள் எல்லாவற்றிலும் கலைஞர்கள் இந்த நுண் தரப்புகளை பிரதிநிதித்துவம் செய்தே சமூக அங்கமாக தம்மை மாற்றியிருக்கிறார்கள். அந்த அழிவுப் பாதையில் பயணம் செய்தே தன் படைப்பின் மூலம் உருவாகும் அதிகாரத்திலிருந்தும் அவர்கள் தங்களை விடுவித்து கொள்கிறார்கள்.

இன்று தமிழ் எழுத்தாளனை திணறடிக்கக் கூடிய அளவுக்கு வெளியீட்டு சாதனங்கள் உருவாகிவிட்டன. சிறுகதை. கவிதை. நாவல்கள். விமர்சனங்கள். மதிப்புரைகள். கடிதங்கள் எல்லாமே புத்தகமாக வெளிவரக் கூடிய அகன்ற சூழல் உருவாகி விட்டது. ஆனால் எழுத்தாளன் தனக்கு கிடைத்திருக்கும் எல்லையற்ற வெளியை உண்மையிலேயே சுதந்திரத்துடன் வெளிப்படுத்திக் கொள்கின்றானா. தான் நினைப்பவற்றை. உணர்வதை பேசுகிறானா. நுண் தரப்புகள் பற்றி அவன் உரையாடலை உருவாக்க விரும்புகிறானா. தான் வேலை செய்யும் சூழல் குறித்து அவனுக்கு சந்தேகங்களைப் பகிர்கிறானா என்று பார்த்தால் நமக்கு இல்லையென்ற பதிலே கிடைக்கும்.

எல்லா படைப்புகளும். எல்லார் படைப்புகளும். எல்லா இடைநிலை. சிறுபத்திரிக்கை இதழ்களிலும் வரும் சாத்தியம் உருவாகின்ற போதே எழுத்தாளனின் தோல்வி தொடங்கி விடுகிறது. குடும்ப வரலாற்று நாவல்கள். கரங்களுக்குள் உண்மை அனுபவத்தைக் கொடுத்து பதிப்பகத்தாரின் அன்பும், சுவடும் சேர்ந்து ஆஃப்செட் அச்சகம் மிக வெற்றிகரமான துறையாய் தன்னை இங்கு விஸ்தரித்துள்ளது. இங்கு தான் அனைத்து வெளியீட்டு வசதிகளும் மறுக்கப்பட்ட பிரமிளின் இயக்கம் என்பது எவ்வளவு தனித்துவமானது என்பதை நம்மால் உணர முடிகிறது. பிரமீளின் பிரசுரத்தை தங்களுக்கு அபாயமென்று ஒடுக்கிய நம் சிறு பத்திரிக்கைச் சூழலின் ஜனநாயகத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

எல்லாம் ஜனநாயகப்படுத்தப்பட்டு விட்டது. எல்லாக் குரல்களையும் கேட்க காதுகள் தயாராகி விட்டது. புத்தகங்கள் விற்பதன் மூலம் கலாசாரம் செழுமையடைந்திருக்கிறது என்ற இன்றைய கலாசார அதிகாரிகளாய் மாறியுள்ள வெளியீட்டு அதிகாரிகளின் ஊளைச் சத்தத்துக்கு கீறல் கேட்காத முனகல்கள் இன்னும் ஒலித்துக் கொண்டுள்ளன.

எல்லாரும் ஒற்றைக் குரலில் பேசத் தொடங்கியுள்ளனர். எல்லார் முகங்களிலும் காதுகள் வரையப்பட்டே உள்ளன. எழுதும் விரல்கள் தரப்படுத்தப்பட்ட சீருடைகள் அணிந்துள்ளன.

இப்போது முன்பை விட சூழல் சுய தணிக்கைக்கும். கூடுதல் கண்காணிப்புக்கும் உள்ளாகியிருப்பதே நிஜம். மறுப்பதற்கு. கேலி செய்வதற்கு. வேடிக்கை புரிவதற்கு. முரண்படுவதற்கு. திளைப்பதற்கு இடமில்லாத மெளடிகமான தீவிர முகங்களின் சவ மெளனமே இன்றைய சூழல் பின்னால் ஆஃப்செட் மெஷினில் பேரிரைச்சல்.

சிறு பத்திரிக்கை இயக்கத்தின் இருப்புக்கான தத்துவத் தேவை எப்போது அதை நடத்துபவர்களிடம் தீர்ந்து போகிறதோ அப்போதே இந்த சவச் சூழலில் உருவாகத் தொடங்கிவிடுகிறது. அதன் அடையாளமே இன்று வரும் சிறு பத்திரிகைகளின் உள்ளடக்கம். ஆளுமைகள். குழுக்கள். இருப்பு இவற்றின் அடையாளம் பிரச்சனைக்கு அப்பாற்பட்ட தேவை எதுவும் இல்லாமல் போனதே அவற்றின் முக இழப்புக்கு காரணம்.

இங்கு அசலான சிறு பத்திரிக்கை இயங்குவதற்கான தத்துவ தேவையை. அதன் எதிர்ப்பு அடையாளத்தை முனை மழுங்கச் செய்ததில் முக்கிய பங்கு காலச்சுவடைச் சாரும். ஒரு சில வெளியீட்டு நிறுவனங்களால் ஒரு தீவிரச் சூழலை வெளிறச் செய்துவிட முடியுமெனில் அச் சூழலின் வலிமை எவ்வளவு நகைப்புக்குரியதென்றும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

உண்மையில் இப்போது தான் நுண் தரப்புகளைப் பற்றி பேசும். பிரதிநிதித்துவப் படுத்தும் வடிவங்களை. வெளிகளை உருவாக்க வேண்டிய தேவை கூடுதலாகியிருப்பதாய் நான் எண்ணுகிறேன். நன்மை. தீமை. நீதிபோதம். குற்றம். அறிவியல். பகைமை. ஜனநாயகம். எதேச்சதிகாரம். ஆசை. ஓடுக்குமுறை. கட்டற்ற துய்ப்பு. அநாதை நிலை. வெளியெங்கும் ஒளி. தலை முற்றும் இருட்டு என இன்றைய மனிதன் எல்லா போதங்களும் நீந்தும் உடலாய் சுமையேறிப் போயிருக்கிறான்.அதோடு அரசியல் ரீதியாக ஒரு சரிநிலை எடுக்க வேண்டிய புதிய பிரக்ஞையையும் ஊடகங்கள் அவனிடம் உருவாக்கியுள்ளன.

உடல் ஆரோக்கியம். மன விடுதலை. ஆன்ம முன்னேற்றம். சமூக முன்னேற்றம் சார்ந்து ஊக்கக் குரல்களும். ஸ்லோகன்களும் நம்மீது அதிகபட்சமாக ஒலித்துக் கொண்டிருக்கும் காலம் இது. பேக் செய்யப்பட்ட பொருள்களின் மேல் உள்ள உறுதிமொழிகள் நம் உடல் மேலும் தன் வெளிறிய எழுத்துக்களில் படர்ந்துள்ளன. உறுதிமொழிகளுக்கு மாற்றாய் இன்னொரு உறுதிமொழிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை தவிர உள்ளடக்கத்தில் எதுவும் மாறுதல் செய்து விட இயலாது.

படைப்பிலக்கிய வெளியும் இன்று இங்கே நான் மேற்சொன்ன தரப்படுத்தல் நிலைக்கு வந்துவிட்டது. வார்த்தைகள் தனியாட்களால் இன்னும் சொந்தமாக்கப்படாததால் குறிப்பிட்ட மொழி வெளிப்பாட்டுக்குள். மொழி சமிக்ஞைக்குள். அழகான. தரப்படுத்தப்பட்ட உறுதி மொழிகளை படைப்புகளாக வெளியீட்டு நிறுவனங்களின் எழுத்துக் கூலிகள் எழுதுகின்றன. இன்று நிறுவப்பட்டிருக்கும் எல்லா அறிவுப் பிராந்தியங்களின் தகவலறிவு பெற்றவை இவை. ஒரு நவீன கவிதையை சில ஆயத்தமான மொழிப் பிரயோகங்கள் மூலம் நிறுவிவிட இயலும். கால்வினோ. மிலன் குந்தேரா. லக்ஷ்மி மணிவண்ணன். ராணி திலக். மனுஷ்ய புத்திரன். பாலை நிலவன். சங்கரராமசுப்பிரமணின். இரா.முத்துக் குமார் இவர்களைச் சேர்த்து நம் தமிழக அரசே சிறு பத்திரிகை வாசகர்களுக்கு ஒரு இதழ் நடத்தக் கூடிய அளவுக்கு எளிமையான திட்ட நிரலுக்குள் நம் சிறு பத்திரிகைகள் வந்திருக்கின்றன. ரோட்டரி கிளப் போன்ற செயல்பாடுகளில் உள்ள ஒரு மூட்டமான குழு உணர்வும். குற்றவுணர்ச்சியும் போன்றது தான் நம் தமிழ் எழுத்தாளர்களின் செயல்பாடுகளும்.

நம் மேல் ஆதிக்கத்தை செலுத்தும் அரசு. அவற்றின் உப அலகுகளாய் திகழும் நிறுவனங்கள் இவற்றுக்கு ஈடான அதிகாரப் பிராந்தியத்தின் அங்கீகரிக்கப்பட்ட குற்றவியல் பரப்புக்குள் தானும் நுழையும் ரகசியக் கனவை நம் தமிழ் எழுத்தாளர்கள் செயல்படுத்த தயாராகி விட்டார்கள். என் ஒன்பது வரியை வெளியிடுவீர்களா. என்று பணிவான பாவனையில் கேட்பதும். ‘எனக்கும் அதிகாரத்தில் இடம் கொடுத்து விடுங்களேன் ‘ என்று கேட்பதும் ஒன்றானதே. இவர்கள் சக எழுத்தாளர்களுக்கான கருத்து வெளி குறித்து கவலைப்படுவது தங்கள் அங்கீகாரத்தின் மீதான முனைப்பே தவிர வேறொன்றுமில்லை.

கால்வினோ சொல்வது போல நசுக்கப்படும் உணர்ச்சிகளின் கால கட்டத்தில் நம் கட்டுக் கதைகளையும் புதிய வேடிக்கைகளையும் உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளோம். எல்லா குரல்களும் தாங்கள் உண்மையே பேசுகிறோம் என்று தீவிரம் மிகுந்த முகங்களுடன் பேசும் பொத்து நாம் பொய் கதைகளை பரப்புவோம்.

இது போன்ற ஆன்மீக நெருக்கடி மிகுந்த தருணங்களில் படைப்புத் தூண்டல் பெறக்கூடிய. ஸ்தாபனமாகாத ஒரு இளைப்பாறும் இடமாய். முரண்களை இயல்பாய் எதிர்கொள்ளும் ஒரு ஆளுமை இயங்க முடியும் என்பதற்கு உதாரணம் வெளி.ரங்கராஜன்.

இப்புத்தகம் சார்ந்து ஒரு பத்திரிக்கை நிருபரின் தற்கொலை. ‘சில நிகழ்வுகள். சில பார்வைகள் ‘ என்ற விளைவில் இரு கட்டுரைகளிலிருந்து உருவான என் கட்டுரையை சற்று நீளமாய் எழுதிவிட்டேன் என நினைக்கிறேன். இன்றைய சூழலின் பங்கேற்பாளன் ஒருவனுக்குரிய நெருக்கடிகள் இவை. அவ்வளவே.

**

(சில நீக்கங்கள் உண்டு . தலைப்பு திண்ணை குழு இட்டது.- திண்ணை குழு)

Series Navigation

சங்கரராம சுப்ரமணியன்

சங்கரராம சுப்ரமணியன்