மதம் அலுத்துப் போனது – மாதவிக்குட்டியின் கட்டுரை

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

தமிழில் : இரா முருகன்


(கடந்த வாரம் மாத்ருபூமி ஞாயிறு மலரில், மலையாள எழுத்தாளர் மாதவிக் குட்டி – சுரையா – கமலாதாஸ் எழுதிய ஒரு கட்டுரை முழுப் பக்கத்துக்கு வந்துள்ளது.

‘மதம் மடுத்து ‘ (மதம் அலுத்துப் போனது) என்ற தலைப்பில் முழுக்க பேச்சு மலையாளத்தில் அமைந்த அந்தக் கட்டுரையின் சுருக்கம். இரா.மு)

—-

நான் கொஞ்ச நாள் நானாகவே இருந்தேன். அப்போ கொஞ்சம் போல காதல் எல்லாம் வந்தது. கொஞ்ச நாள் விதவையா வாழறேன். அப்படி இருக்கறபோது, நேசம் தரேன்னு ஒருத்தன் சொன்னான். நானும் ஒரு பெண்ணில்லையா ? அவனெ நம்பினேன். பெண்ணுக்கு எப்பவும் ஒரு பாதுகாப்பாளன் வேணும். அவன் என்னை மதம் மாறச் சொன்னான். நானும் மாறினேன். காதலுக்காக எதையும் துறக்க நாம் தயார் ஆச்சே. ஆனா, அவன் ஒரு கோழையாக இருந்தான். என்னோட துணிச்சல் அவனுக்கு இல்லாமப் போனது. என் மாதிரி ஒரு துணிச்சலான பெண்ணுக்கு ஒரு கோழையைக் காதலிக்க முடியுமோ ? நான் புலி. அவன் ஒரு செம்மறியாடு. அவன் கோழை அப்படின்னு தெரிஞ்ச அப்புறம் காதலாவது ஒண்ணாவது. நான் அவனைக் (கல்யாண பந்தத்திலிருந்து ) விடுதலையாக்கி விட்டேன். எனக்கும் வ்ிடுதலைதான். காதல் எல்லாம் கரைஞ்சு போச்சு. இப்போ இந்த வேஷம் (தலையில் முக்காடாக வந்து, முகம் மறைக்காத பர்தா) தான் பாக்கி. இது மோசமில்லைன்னு தோணுது. என் முடியெல்லாம் நரைச்சுப் போனது வெளியிலே தெரியாதில்லையா ?

மதமெல்லாம் எனக்கு அலுத்துப் போச்சு. இப்ப எந்த மதத்திலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அன்பு வைக்க சுதந்திரம் இல்லாத எந்த மதமும் எனக்கு வேணாம். மதத்தை எல்லாம் விட்டுட்டு, இப்போ கடவுள் மேலே முழு நம்பிக்கை வந்திருக்கு. இந்த உலகத்திலே ஆட்டை, மாட்டை, மனுஷனை, நிலாவை, பாம்பை எல்லாம் பிறப்பித்துவிட்ட ஒரே ஒரு தெய்வத்தோடு தான் என் நம்பிக்கை. எது எப்படி இருந்தாலும், மதத்திலே இருந்து, பாவப்பட்டமுஸ்லீம்களை எதுக்காக நான் இன்னும் வேதனைப்படுத்தணும் ? சுரையாம்மா, எங்களை விட்டுடுன்னு அவங்க எல்லாம் சொல்றாங்களே. ஐயோ, பாவம் இல்லியா அவங்க.

மதம்னு சொல்றது மதகுருமார் ஜீவிக்க ஏற்படுத்தப்பட்ட வழி. தெய்வத்தை நெருங்கிப் பழகினதுக்கு அப்புறம் மதம் எதுக்கு ? ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப்னு எல்லாம் சொல்றாங்களே. மதமும் அதுபோலத்தான். எல்லாருமாக் கூடி மதத்தோட பேரில் தெய்வத்தைச் சிறுத்துப்போக வைக்கறாங்க.

ஜாதி, மதம் இதுங்களோட வலிமை கூடறபோது தெய்வத்தோட சக்தி குறைஞ்சு குறைஞ்சு போய் .. இதோ, என்னை மாதிரி எழுந்து நிக்க முடியாத தளர்ச்சி. கோவில்களிலும், பள்ளிவாசல், சர்ச்சிலே எல்லாம் மதச் சொற்பொழிவு நடக்குது. கடவுள் எங்கேன்னு கேட்டுப் பாருங்க. அங்கே எங்கியும் தெய்வத்தைப் பார்க்க முடியாது. பாவம், கடவுள்.

மசூதிக்கும், கோவிலுக்கும் போயிட்டு வரவங்க முகத்தைப் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு. எல்லாம் சுயநலம். தன்னோட காரியம் மட்டும் நிறைவேற பிரார்த்தனை. மத்தவங்க எல்லாம் அழியணும் அப்படின்னு இவங்களுக்கு மனசிலே நினைப்பு. அதுக்கா பத்தாயிரம் ரூபாய்க்கு வழிபாடு. கேளுங்க, இங்கே பக்கத்துலே சாப்பாட்டுக்கே வழியில்லாத ஏழைகளோட ஒரு குடியிருப்பு இருக்கு. அவங்க எல்லோருக்கும் நூறு ரூபாய்க்காவது அரிசி வாங்கித் தருவாங்களா இவங்க ? அப்படின்னா, தெய்வத்துக்கு அதுதான் ரொம்பப் பிடிச்ச காரியம்.

முப்பது வருஷமா நான் கோவிலுக்குப் போய்வந்தேன். இப்போ குனிஞ்சு நமஸ்கரிக்க முடியலே. உடம்பை அசைக்கறதுலே பயன் இல்லே. மனசு அசையணும். அதான் முக்கியம்.

இது ஆபாசம் அப்படான்னு தெய்வத்துக்குத் தோணாதது எல்லாம் நான் எழுதுவேன். புரணி பேசறது, அடுத்தவங்களைக் கேலி செய்யறது, அப்பாவிகளைப் பரிகசிக்கறது இந்த மாதிரி ஒண்ணும் நான் எழுதினதில்லே. நான் எழுதறதெல்லாம் ஆபாசம் அப்படின்னா வேறே என்னத்த எழுத ? காதலிக்கிறவங்களுக்கு சிற்றின்பத்தில் இச்சை வராதா என்ன ? கண்ணனும் ராதையும் போகத்திலே ஈடுபட்டு இருக்கறதைச் சொல்றதுதானே கீத கோவிந்தம் ? எவ்வளவு அழகான புத்தகம் அது. அது வெறும் காமம்னு சொல்லிப் புத்தகத்தைக் கொளுத்திப் போடணுமா ?

தெய்வத்தின் முன், காதலுக்கு முன் நாம் நம்முடைய ஜீவிதத்தை சமர்ப்பிக்கணும். எனக்குன்னு இந்த உலகத்திலே எதுவும் இல்லை. நாம இருக்கும்போது நான், என்னுதுன்னு நினைப்போம். இந்த ‘நான் ‘ என்பதுக்கு அம்மாவும் அப்பாவும் கொடுத்த பெயரைச் சொல்லிக் கூப்பிடப்படுவோம். முகக் கண்ணாடியில் பார்த்து நம்மை நாமே பிரியப்படுவோம். ஆனா அதெல்லாம் எத்தனை காலம் ? எழுபது வருஷம் அப்படான்னு சொல்றது ஏழு நொடியிலே கடந்து போயிடறது நமக்குத் தெரியாது. எதைக் கொடுத்தாலும் கூடவே அன்பையும் கொடுங்க.

கொடுப்பதற்குக் கற்றுத் தரணும் குழந்தைகளுக்கு. இப்போ எல்லோருக்கும் எடுக்க மட்டும்தான் தெரியும். கையில் ஏதுமில்லாவிட்டாலும் அன்பைக் கொடுக்கவாவது நாம் கற்றுக் கொள்ளணும். அப்போதான் தெய்வத்தை நமக்கு அடையாளம் தெரியும்.

யாரும் யாரையும் சதியில் தள்ளமுடியும். அதுவும் காதல்னு சொல்லி. ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு எழுப்பி, ஃபோனில் கவிதையோ பாட்டோ பாடிக் கொடுத்தால், எந்தப் பெண்ணும் காதலிப்பாள்.

காதலிக்காமல் எப்படிக் கல்யாணம் செய்துக்கறது ? சட்டுனு பார்த்த ஒருத்தனோடு கட்டிப் பிடிச்சுக் கிடக்க என்னாலே முடியாது.

என் கதைகளிலே வர ஜானுவைத் தெரியும்தானே ? என் கூடத்தான் இருக்கா. என்னை விட கொஞ்சம் வயசு அதிகம். அவளுக்கு சின்ன வயசா ஒரு காதலன் இருக்கான். அதுனாலே வயசு தெரியலை.

இப்பவும் எனக்குக் கிருஷ்ண பகவானை ரொம்பப் பிடிக்கும். ஒரு காதலானாக. கணவனாக. தெய்வமாக இல்லை. ‘உன்னிகிருஷ்ணன், உன்னிகிருஷ்ணன் ‘ அப்படான்னு தேவநாமம் கேட்டு வளர்ந்தவளாச்சே நான். முஸ்லீம் ஆனபோது, நாயர் பெண்களிலிருந்து எனக்கு சுதந்திரம் கிடைச்சது. அவங்க சரியான குசும்பு பிடிச்சவங்க. விதவையானா, பாகவதம் படிச்சு வீட்டுலே கிடக்கணுமாம். எனக்கு அதெல்லாம் முடியாது.

நான் இப்பவும் சைவம்தான். முஸ்லீம் ஆனபோது பலபேர் கேட்டாங்க – மாமிசம் எல்லாம் இனி சாப்பிட வேண்டி வருமே அப்படான்னு. நான் ஒரு கொசுவைக் கூடக் கொன்னது இல்லே. அது கடிச்சா ஒரு துளி ரத்தம் போகும். போகட்டுமே. அதுக்கும் உயிர் வாழறதுக்கும் ஒரு துளி ரத்தம் குடிக்கறதுக்கும் உரிமை இருக்கு.

வயசாச்சு. என் அழகு எல்லாம் போயாச்சு. நான் எதுக்கு இனியும் பவுடர் எல்லாம் பூசிக்கணும் ? ஃபோட்டோ எடுக்க பவுடர் போடணுமாம். சுகுமார் அழிக்கோடு சாருக்கு பவுடர் பூசித்தான் ஃபோட்டோ பிடிப்பீங்களா ? (சுகுமார் அழிக்கோடு – மூத்த இலக்கிய விமர்சகர்).

இந்த எழுதும் அறை, படுக்கை அறை இது ரெண்டும் தான் என் உலகம் இப்போ. தள்ளாமை. எங்கேயும் போக முடியலை.

ஜெயில்லே இருந்து விடுதலையானவங்க, சித்தப் பிரமை உள்ளவங்க, குழந்தைகள் இப்படி எத்தனையோ பேர் என்னைத் தேடி வராங்க. என் கையில் அன்பும் பாசமும் உண்டு. அதுனாலே தான். அதை நான் அவங்களுக்குத் தரும்போது எனக்குக் கடவுளை அறிய முடிகிறது. ஒரு ஷாக் போல், கைவிரல் நுனியில் தெய்வத்தின் இருப்பு எனக்குத் தெரியுது.

டி.வி சீரியலில் எப்பவும் அழுதபடி வரும் பெண்களைக் குற்றம் சொல்லிட்டு இருந்த நானும் இப்போ அழ ஆரம்பிச்சுட்டேன். துன்பம் தாங்கலை. இதை என்னால் பார்க்க முடியாது. பெண்ணு, பிள்ளைன்னு இருக்கறது நல்லதுதான். ஆனால் புது வருட வாழ்த்து சொல்லக்கூட அவங்க வராட்ட துக்கம்தான்.

கொஞ்ச நாள் முன் எட்டு தினம் பரோலில் வெளியே வந்த ஒரு கொலைக் குற்றவாளி என்னைப் பார்க்க வந்தான். அவன் என்னை ஏதாவது செய்திடுவான்னு இங்கே இருக்கப்பட்டவங்க பயந்து போனாங்க. உங்க மடியிலே தலை வைச்சுக்கட்டுமா அம்மான்னு அவன் கேட்டான். குளிக்காமல், தலையெல்லாம் பரட்டையாக இருந்த அவனுக்கு அதுதான் ஆறுதல் தரும் அப்படான்னா, சரிதான்னு சொன்னேன். அவன் தலையை வருடினேன். எப்படிக் கொலை செய்தான்னு கேட்டேன். வயிற்றிலே குத்தி குடலை உருவியெடுத்தானாம். அது கஞ்சி கொதிக்கறது போல சூடாக இருந்ததாம். ஏன் கொலை செய்தேன்னு கேட்டேன். பதில் சொல்லலே. வீட்டில் யாரெல்லாம் உண்டுன்னு கேட்டேன். யாரும் இல்லேன்னான். ஜெயில்லே என் புத்தகம் எல்லாம் படிச்சானாம். பரோல்லே வந்ததும் நேரே என்னைப் பார்க்க வந்திருக்கான். கல்யாணம் ஆச்சான்னு கேட்டேன். இல்லேன்னான். ஏதாவது எனக்குச் சொல்லுங்கன்னான். எனக்கு என்ன சொல்லத் தெரியும் ? சொன்னேன் – ‘நான் இப்படி ஜெயில்லே இருந்து எட்டு நாள் பரோல் கிடைச்சா, யார் மேலாவது அன்பு வைப்பேன். பாசத்தோட அவங்க கூட இருப்பேன் ‘.

கொஞ்ச நாள் கழிச்சு மாத்ருபூமியிலே அவன் பரோல்லே இருக்கும்போதே கல்யாணம் செஞ்சுக்கிட்டான்னு படிச்சேன். மகிழ்ச்சியா இருந்தது. எனக்கு இப்படித்தான் சொல்ல முடியும். அன்போடு இரு. உயிரோடு இருக்கற வரை அன்போடு இரு.

எல்லா வருஷமும் அமீரக வானொலிக்காக நான் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வது வழக்கம். இந்த ஆண்டும் அவங்க என்னைக் கூப்பிட்டாங்க. நான் அழுதேன். எல்லாரும் செத்துப்போய் மண்மறைஞ்சு போயாச்சே. அழாமல் எப்படி முடியும் ?

நான் இப்போ ஒரு நாவல் எழுதிட்டு இருக்கேன். அது ஒரு முஸ்லீம் பெண் எழுதக்கூடியதில்லை. அதனால் ஒருவேளை என்னை மதத்தை விட்டு விலக்கலாம். இந்த நாவலை எழுதும்போது நான் பழைய மாதவிக்குட்டிதான். நாலப்பாட்டு மாதவிக்குட்டிக்குத்தான் அதை எழுத முடியும். சில உண்மைகளை இன்னும் நான் உலகத்துக்குச் சொல்ல வேண்டி இருக்கு. எல்லாம் சொல்லிய பிறகு நான் போய்ச் சேர்ந்திடுவேன்.

(நன்றி மாத்ருபூமி)

—-

eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்