முட்டாள்களின் பெட்டகம்

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

புதுவை ஞானம்


தவிர்க்க இயலாமல் நாம் தூங்கும்போது தவிர நம்மையும் நம் குடும்பத்தினரையும் ஆட்கொண்டு ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கின்ற தொலைக்காட்சிக்கு ஆங்கிலத்தில் IDIOT BOX என்று பெயர். இந்தப் பெயரை யார் சூட்டினார்கள், எதற்காக சூட்டினார்கள் என்பது தெரியவில்லை. ஆராய்ந்து கொண்டுள்ளேன். BAIRD JOHN LOGIE என்ற ஸ்காட்லாந்துகாரர் 13.8.1888ல் பிறந்து 14.6.1946ல் மறைந்தார். தொலைக்காட்சிக்கான ஆரம்ப வேலைகளைச் செய்து 26.1.1926ல் முதல் ஒளிபரப்பைத் தொடங்கிய இவர் உடல்நலம் சரியில்லாதவர் என இராணுவத்திலிருந்து விரட்டப்பட்டவர். மின்பொறியாளர். BBCல் 30.9.1929ல் முதல் ஒளிபரப்பை நிகழ்த்தியவர்.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனிதான். இந்த பெயரைச் சூட்டிய அறிஞன் தமிழனோ, தமிழ் அலைவரிசைகளைப் பார்த்தவனோ ஆக இருக்க இயலாது. பார்த்திருந்தால் இதைவிட அசிங்கமானதொரு பெயரைத்தான் சூட்டியிருப்பான் என்பது மட்டும் எனக்குத் தெரியும். பரமார்த்த குருவும், சீடர்களும் என வீரமாமுனிவர் எழுதிய கதையில் மட்டி, மடையன், மிலேச்சன், மூடன் என்றெல்லாம் சீடர்களின் பெயர்கள் வரும். இவற்றுள் தரம் தாழ்ந்த எதையாவதுதான் வைத்திருப்பான். இது சொந்த புலம்பல் நிசிக்குயிலின் துயரகீதம் போகட்டும்….

இப்படிப்பட்ட முட்டாள் பெட்டகத்தில் அதுவும் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த குடியின் முட்டாள் பெட்டகத்தில் கூட தப்பித்தவறி சில நல்ல விஷயங்கள் நடந்துவிடுகின்றன. இவர்களின் எச்சரிக்கையான பாதுகாப்பையும் மீறி நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொழிந்தது போல். அப்படி எனக்கு கிடைத்த பெறும்பேறு என்ன தெரியுமா ?

அன்பே சிவம் என்று அறிவித்துக்கொண்டு; அறிவியல் போதித்தார்கள்; தமிழர்களுக்கு இது அடுக்குமா ? என்று சீறி அனல்வாதம் புனல்வாதம் நடத்தி எண்ணாயிரம் சமணர்களைத் துடிக்கத் துடிக்கக் கழுவேற்றிய புண்ணிய பூமியில், திருவாசகம் முற்றோதி சுண்டல் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டு ஏப்பமிட்டு வைத்தீஸ்வரன் கோயில் திருவாரூர் என புண்ணியதலத்தில் எல்லாம் விலைமகளிர் என்றும் பொதுமகளிர் என்றும் போகம் புணர்ந்து அதையும் நியாயப் படுத்தும் முகத்தான் சுந்தரர் என்ற சுகவாசிக்கு கயிலைவாசி இறைவனே பரவை நாச்சியாரிடம் தூதுபோனதாக கதை அளந்து திருக்கயிலாய பரம்பரை காசிவாசி இன்னோரன்ன தம்பிரான்கள் மடாலயம் நடத்தி மாளிகைகள் கட்டி தந்தப் பல்லக்கில் பவனி வந்து கொண்டிருந்தபோது, அரகரா முருகா ‘ என்று பல்லக்கு தூக்கிய தாழ்ந்த தமிழகத்தில் ஒரு வித்தியாசமான ஆதீனம் உண்டு என்றால் அது குன்றக்குடி ஆதீனம். அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து பேசிய ஆதினம் இது.

இந்த குன்றக்குடி ஆதீனமும், பாரதிதாசன் பல்கலை கழகமும் இணைந்து தமிழ் அறிவியல் பேரவை என்றதொரு அமைப்பை நிறுவி பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழில் அறிவியல் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடுவதாக எனது முட்டாள் பெட்டகம் அறிவித்தது. (பிப்ரவரி2000) ஒரு நிமிடம் நெஞ்சடைத்துப் போய்விட்டேன். நம் வாழ்நாளுக்குள் தமிழனுக்கு இவ்வளவு பொறுப்புணர்ச்சியும் தொலைநோக்கும் வந்து விட்டதே ‘ நான் கொடுத்து வைத்தவன்தான் என்று அந்த கட்டுரைகளைப் பெறுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்தேன். பலன் இல்லை. ஆனாலும் தோழர் விழுதுகள் இராகவன் 400 கட்டுரைகள் பற்றிய ஒரு சுருக்கமான அடங்கலைப் பெற்றுத்தந்தார். அவரும் அவரது சந்ததியினரும் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும்.

முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவதுபோல் நான் ஆசைப்பட்ட நூல்களை எல்லாம் அள்ளிவந்து தந்த சடையப்பர் அவர். ஆனால் நான் கம்பன் சாதியல்ல பொன்னுக்குப் பாடுவதற்கு, அவ்வையின் வாரிசு கூழுக்குத்தான் பாடிக்கொண்டிருக்கிறேன். அடுத்த வேளைக்கான கூழை சேமித்து வைக்க முடியாது.

‘ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இருநாள் உணவை ஏலென்றாய் ஏலாய்

இடும்பை கூர் வயிரே

உன்னோடு வாழ்தல் அரிதே ‘ ‘

சரி அறுக்காதே விஷயத்துக்கு வா என்று நீங்கள் அவசரப்படுவது தெரியாதா எனக்கு நான் முட்டாள்தான் என்றும் தமிழர்களைப் புரிந்து கொண்ட முட்டாள் அதனால் விஷயத்திற்கு வந்துவிடுகிறேன். கிசுகிசுக்களும் கொசுறுச் செய்திகளும் படித்து கிளுகிளுப்பில் மிதந்து கொண்டிருப்பவர்களே சற்றே விலகிக் கொள்ளுங்கள்.

‘அடிவானில் குளம் பொலிக்க

நெருப்புப் பந்திழுத்துப் பாய்ந்து வரும்

என் குதிரை.

ஓடத் தெரியாத உதிரமும் – உன்முகத்தில்

யாரோ வரைந்துவிட்ட மீசையுமாய்

பாதை மறைத்து நிற்கும்

மரப்பாச்சிப் போர் வீரா

சற்றே விலகிநில் இன்றேல்

சாம்பராவாய் ‘ என்று கொக்கரித்த பிரமிளின் சீடன் நான்.

என்னைப் பொறுத்தவரை….

அறிவியல் என்பது தன்னைப்பற்றியும் தன்னைச் சூழ உள்ள அண்டத்தைப் பற்றியும் புரிந்து கொள்ளுதல் என்பதுவே சூத்திரம். இதை எனக்கு அருளிச் செய்தவர் அருட்பிரகாச வள்ளலார்.

‘அண்டப் பரப்பின் திறங்களனைத்தும் அறிய வேண்டியே

ஆசைப்பட்ட தறிந்து தெரிந்தாய் அறிவைத் தூண்டியே

பிண்டத்துயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம் தன்னையே

பிரியும் வகையும் பிரியாவகையும் தெரித்தாய் பிள்ளையே

எனக்கும் உனக்கும் இசைந்த பொருந்தம் என்ன பொருத்தமோ ‘ ‘

என்று பாடினார் அவர். திருஅருட்பா.(4994)

‘சிருட்டி ஒன்று சிற்றணுவில் சிறிததனில் சிறிது

சினைத்த கரணக் கரு அச்சிளைக் கருவில் சிறிது

வெருட்டிய மான் அம்மானில் சிறிதுமதி மதியின்

மிகச்சிறிது காட்டுகின்ற வியன்சுடர் ஒன்றதனில்

தெருட்டுகின்ற சக்தி மிகச் சிறிததனில் கோடித்

திறத்தினில் ஓர் சிறிதாகும் சிற்றம்பலத்தே

அருட் டிறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர்

அருட்பெருமை எவர் உறைப்பாய் அறியாய் என்தோழி ‘

(5644)

என்று சிருட்டி தொடங்கி

‘மண் அனந்தம் கோடி அளவுடையது நீர் அதனில்

வயங்கிய நூற்றொரு கோடி மேல் அதிகம் வன்னி

எண்ணிய ஆயிரம் அயுதம் கோடியின் மேல் இலக்கம்

என்பத்து நான்கதின் மேல் அதிகம் வளியொடு வான்

விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை

விந்தளவு சொல்லமுடியாதிந்த வகை எல்லாம்

அண்ணல் அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால்

அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் நீ தோழி.

(5646)

நீர்,நிலம்,காற்று, தீ, உயிர் எனப்பருப்பொருள் அகப்பொருள் சுட்டி

மண்ணாதி ஐம்பூத வகை இரண்டின் ஒன்று

வடிவு வண்ணம் இயற்கை ஒரு வாலனுச் சத்தியலாய்க்

கண்ணென்னும் உணர்ச்சிசொலார் காட்சியவாய் நிற்பக்

கருதும் அவைக்குட்புறம் கீழ் மேல் பக்கம் நடுவில்

நன்னி ஒரு மூன்றைந்து நாலொடு மூன்றெட்டாய்

நவமாகி மூலத்தின் நவின்ற சக்திக்கெல்லாம்

அண்ணுறும் ஓர் ஆதாரசக்தி கொடுத்தாடும்

அடிப்பெருமை யார் அறிவார் அவர் அறிவார் தோழி

(5647)

காட்சி, கருதல் விளக்கி

மண்பூத முதற்சக்தி வாலணுவில் அணுவாய்

மதித்த அதன் உள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்

எண்பூதத் தத்துவ வெளிக்குள் இலங்கு வெளியாய் அவ்

வியல் வெளிக்குள் ஒரு வெளியாய் இருந்தவெளி நடுவே

பண்பூத நடம் புரியும் பதப்பெருமை வெரும்

பகுத்துணர முடியாதேல் பதமலர் என்தலைமேல்

நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்

நல்ல செயல் வல்லபம் ஆர் சொல்லுவார் காண்தோழி (5648)

அணு, அணுத்துகள்கள், வெளி(Space) என விளக்கிக் கொண்டே போகிறார். இயற்பியல், இயல்கடந்த இயற்பியல், உயிரியல், உயிர்காக்கும் மருத்துவம் – பொருள்(Matter) – பொருட்பிரிவுகள்- மூலகங்கள், கந்தங்கள் பிராணன் Matter constituents elements Molecules உயிர் (Vital) ஆன்மா (Soul/Sprit) என மனிதன் அவனைச் சுற்றியுள்ள பிரபஞ்சம் அதன் இயற்பியல் எல்லாமும் பேசப்பட்டதும், மணிமேகலை, நீலகேசி, சிவஞானபோதம், சிவஞான சித்தியார் எனப்பல நூல்கள் இவைப்பற்றிய ஒப்பீடு ஆய்வுகள் (Comparitive Study) நடத்தி முடிக்கப்பட்டதும் இது புண்ணிய பூமி மட்டுமல்ல அறிவியலின் ஆணிவேர், இங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள தமிழும் தெரிய வேண்டும், நவீன அறிவியல் எதைத் தேடிக்கொண்டிருக்கிறது என்ற புரிதலும் வேண்டும்.

META-MORPHOSIS எனப்படும் உடலியல்வளர்சிதை மாற்றங்களும் METEM-PSYCHOSIS எனப்படும் உளவியல் வளர்சிதை மாற்றங்களும் நூற்றாண்டு காலமாய் நாம் ஆங்கிலேயனிடம் அடிமைப்படும் வரை பேசப்பட்ட பூமி இது. மேற்கத்திய அறிவியலை குறைகூற வரவில்லை நான். அது முட்டுச்சந்தில் நின்று குழம்பி கிழக்கு நோக்கி திரும்புவது நவீன அறிவியலைத் தொடர்ந்து கண்காணிப்பவர்களுக்கு தெரியும். ஆனால் சீமான் வீட்டு செல்லப்பிள்ளைகளான நாம் காலத்தின் சூழ்ச்சியால் அறிவைத்தேடி மீந்ததை எடுத்துக்கொண்டு மேற்கே போக கெட்டவன் கிழக்கே போக வேண்டும் என மேற்றிசை அறிஞர்கள் நம் புண்ணிய பூமிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்வுக்கு தேவையான மதிப்பெண்பெறும் அளவு படித்தால் போதும், உத்தியோகம் கிடைக்கும் வரை படித்தால் போதும் என்றில்லாமல் ‘யாதானும் நாடாமல் ஊராமல் எனைத்தொருவன் சாந்துனையும் கல்லாதவாறு ‘ என்றவாறு படிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்தால் அதுவும் நமது மரபணுக்கள் வழியே சந்ததியைச் சென்றடையும் அல்லவா ?

மேற்றிசை ஊறிவந்த அறிவியல்தான் நாம் படிக்கிறோம் துண்டு துண்டாக. அதிலும் கூட History and Philosphy of Science அறிவியலின் வரலாறும் தத்துவமும் நாம் படிப்பதில்லை. படித்தால் தெரியும் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைகிறான் என்பது வெட்டவெளிச்சமாய்த் தெரியும்.

Black Athena, Orientalism, Secret Doctrine, Non European roots of Mathematics, Difference between Epicurius and Demacratis என்ற KARL MARX அவர்களின் முனைவர்பட்ட ஆய்வோடு, TAO OF Physics, Turning Point, Web of life, HIDDEN FACTS OF LIFE, SPECTRUM OF CONSCIOUSNESS, POLITICS OF EXPERIENCE, SCIENCE AND CULTURE OF CHINA, SCIENCE AND THE RAJ, EIGHTEENTH CENTURY INDIAN SCIENCE, HOMO FABER எனப்பல நூல்கள் கிழக்கத்திய தொழில்நுட்ப அறிவியலின் சிகரங்கள் பற்றி எடுத்தியம்புகின்றன. இதையெல்லாம்….

படிப்போமோ…. ?

முட்டாள் பெட்டகத்தில்

மூழ்கிப் போவோமா…. ?

இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் யார் தமிழ்ச்செய்யுள்களைப் படித்து புரிந்து கொள்ள முடியும் யார் விளக்குவார் என்ற உங்கள் கவலையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் தெரிந்தவர்களுக்கு நவீன அறிவியலில் பரிச்சயம் இல்லை. நவீன அறிவியல் தெரிந்தவர்களுக்கு இயற்றமிழ் புரிவதில்லை. இப்படிப்பட்ட இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளவன் தான் நானும்கூட. இருந்தாலும் தட்டுதடுமாறிப் படித்து வருகிறேன். தமிழ் படிக்க சிரமப்படும் தமிழர்கள் குறிப்பாக வெகுகாலம் முன்னரே வெளிநாட்டில் குடியேறி தலைமுறை தாண்டி விட்டவர்கள் பண்டைய தமிழரின் அறிவியல் பற்றிய சுருக்கமான விளக்கத்தை தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ‘நீலகேசி ‘ என்ற நூலுக்கு பேரா. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள விளக்க உரையைப் படிக்கலாம்.

இதன் தொடர்பாக நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். காகிதமும் அச்சு எந்திரமும் வந்து புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு கல்வி ஜனநாயகப் படுத்தப்பட்டு மாணவர்களுக்கு ஆளுக்கு ஒரு புத்தகம் கிடைக்கும் காலம் வரை BILL GATES தனது ROAD AHED நூலில் குறிப்பிடுவது போல புத்தகங்கள் ஓலைச் சுவடிகளாகவும், பட்டுச் சுருளாகவும், களிமண் தகடுகள் செப்பேடுகள் என்ற வடிவில் சில மடாலயங்களில் மட்டும் இருந்தன. அவற்றை குருமார்களிடம் செவிவழியாய்க் கேட்டு மாணவர்கள் மனப்பாடம் செய்தனர். மனப்பாடம் செய்வதற்கு வசனத்தை விட பாடல்கள் வசதியாக இருந்தன. அவற்றிற்கு சந்தம் இருந்ததாலும் நமக்கு சந்தம் தாலாட்டு தொடங்கியே அறிமுகமாகி இருந்ததாலும். எனவே காலத்தோடு ஒட்டி அவற்றின் இருப்பையும் பயனையும் புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது திருமணம், கும்பாபிஷேகம் நீத்தார் இறுதிச்சடங்கு போன்றவற்றில் தமிழகச் சைவர்கள் திருவாசகம் போன்றவற்றை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு விநியோகிக்கின்றனர். பல ஊர்களிலும் முற்றோதல், சுண்டல் வழங்கல் நடைபெறுகிறது. ஆனால் அறிவியல் ரீதியாக விளக்கத்தான் ஆளில்லை.

இது ஒருபுறமிருக்க ஒன்றை நாம் தெளிவாகவும், கறாராகவும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை தெகார்தே வரை கிரேக்கத்தில் கூட அறிவியல் தத்துவம் எனப்பிரித்து யாரும் பேசியதில்லை டிதகோரஸ் ஒரு கணிதமேதை மட்டும் அல்ல, தத்துவவாதியும் தான். உமர்கயாம் ஒரு கவிஞர் மட்டும் அல்ல கணித மேதையும் தான். தெகார்தே(DESCARTES) கணிதமேதை மட்டுமல்ல தத்துவமேதையும் சிறந்த வைத்தியரும் கூட. இந்திய தத்துவாதிகளில் பலர் வானவியல் கணிதம் வைத்தியம் தத்துவம் எதையும் விட்டு வைக்கவில்லை. ஆன்மிகமும் அறிவியலும் இப்போதிருப்பதுபோல் யாந்திரிகமான இறுகிப்போகாத அந்த காலத்தில் இந்திய தத்துவமரபில் இறைப்பற்றாளர்களும் இறை மறுப்பாளர்களும் ஒருவருக்கொருவர் இளைக்காமல் பங்களிப்பு செய்துள்ளனர். ஒரு ஆரோக்கியமான தர்க்கத்தை – வாதத்தை நடத்தி வந்துள்ளனர். இருதரப்பாருமே ஒரு குறிப்பிட்ட காலம் வரை சடங்கு சம்பிரதாயமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிப்போகவில்லை. அனேகமாக பக்தி இலக்கியம் வரும்வரை தொடர்ந்திருக்கலாம்.

குறிப்பாக கடவுள் மறுப்பாளர்களுக்கு அந்த உலகம் தானே தோன்றியது, விண்துகள்கள் ஒன்று சேர்ந்து அணுக்களாகவும், அணுக்கள் மூலகங்களாகவும், மூலகங்கள் கூட்டுப்பொருட்களாகவும் (கந்தங்கள் (Molecules)) இவற்றில் சேர்க்கை அளவில் உள்ள ஏற்றதாழ்வுகளுக்கேற்ப உயிரினங்கள் தோன்றின அவை பரினாம வளர்ச்சி பெற்றன, என்பதை நவீன அறிவியல்வாதிகள் போலவே with Facts and Figures வாதிக்க வேண்டிய ஒரு தேவை இருந்தது. இந்த பூதவாதிகள் எனும் பொருள்முதல் வாதிகளுடன் உயிர் ஆன்மா என இறை நம்பிக்கையாளர்கள் ஒப்பீட்டு ஆய்வு (Comparative Study) நடத்தி வாதங்களை முன்வைக்க வேண்டி இருந்தது. இது காலத்தின் கட்டாயம்.

MADAM BLAVATSKY தனது SECRET DOCTRINE என்ற நூலில் ‘Modern physics in borrowing from the Ancients their Atomic theory forgot one point, the most important point of the doctrine, hence they have got only the husks and will never be able to get the kernal. ‘ In adopting physical atoms they omitted the suggestive fact that form Anaxagorus to Epicurius to the Roman Lucicretius and finally even to Gallilio all there philosophers beleived more or less in Animated Atoms not in invisible specs of so called ‘brute matter ‘ என்று விவாதித்த விஷயத்தை நீலகேசியும் மணிமேகலையும் ஏற்கெனவே பேசி விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.

நவீன அறிவியலாளர்கள் கொட்டையின் ஓட்டைத்தான் – தோலைத்தான் – கண்டுபிடித்திருக்கிறார்களே ஒழிய பருப்பை அல்ல. நம்மாட்கள் தோலிருக்கச் சுளை விழுங்கிகள் என்பதாகவும் தோன்றுகிறது.

‘கல்வி கரையில கற்பவர் நான் சில

மெல்ல நினைக்கின் பிணி பல ‘.

puduvai_gnanam@rediffmail.com

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்