ஹரப்பா நாகரிகத்தின் ‘மொழி ‘

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

அருள் செல்வன் கந்தசுவாமி


வேதகாலத்துக்கு முற்பட்டதாக (2600-1900 BC ) வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படும்

ஹரப்பா நாகரிகம் இந்தியத் துணைக்கண்ட இன, சமுதாய, மொழி வரலாற்றை எழுதுவதற்கான முக்கிய துவங்கு புள்ளியாகவே இன்னும் இருக்கிறது. அவ்வளவில் ஹரப்ப நாகரிகத்தைப் பற்றிய இக்கால கொள்கைகளும் கருத்தாக்கங்களும் தமிழ் மொழி பேசும் மக்களின் வரலாற்றை முழுமைப்படுத்த தவிர்க்க இயலாதவையாகும். 19ம் நூற்றாண்டில் அகழ்ந்தாய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, ஹரப்ப முத்திரைகள் என்று அழைக்கப்படும் மட்பாண்டங்களிலும், சில தகடுகளிலும் இன்ன பிற ஊடகங்களிலும் காணப்பட்ட

சின்னங்களை ஹரப்ப மொழியை மீழ்வாசித்தல் என்ற பெயரில் அது முன் இந்திய-ஐரோப்பிய மொழியாக இருக்கலாமோ என்றும் பின்னர் ரஷ்ய-ஃபின்னிஷ் அறிஞர்களால் 60 களிலும்,70களிலும், ஐராவதம் மகாதேவன் போன்றோராலும் அது திராவிடக் குடும்பத்தை சார்ந்ததெனவும் வாசிக்கப் பட்டதை இங்கு நாம் நினைவுகூற வேண்டும்.

முக்கியமாக இருக்கு வேதத்தில் தென்படும் இறை, தொழில், கலை, உணவு, இசை போன்ற அன்றாட வாழ்க்கைக்கூறுகளின் பயில்மொழி வளம் இதற்கு முற்பட்ட காலகட்டத்தை

சேர்ந்ததாக அறியப்படும் ஹரப்ப நாகரிகத்தின் வழங்கு மொழியின் தொடர்ச்சியாகவே கூறத்தகும் என்ற அளவில் ஹரப்ப இலச்சினைகள் சமஸ்கிருத மொழியின் ஆரம்ப கால வரலாற்றை ஆராய ஒரு முதல் படியாகவும் கருதப்பட்டது. இதன் தொடர் நிலைபாடாக ‘தொலைந்த்து போன ஹரப்ப நூல்கள் ‘ பற்றிய கருத்தாக்கமும் உருவானது. ஹரப்ப மொழி என்று ஒன்றும் கிடையாது, காணப்படும் அனைத்து இலச்சினைகளும் குறியீடுகளே (முக்காலும் தொழுபயன் கருதியவை) அன்றி சொற்களோ, அடிகளோ அல்லது வேறு எந்த மொழிக் கூறுகளோ குறித்தன அல்ல என்ற ஒரு கோட்பாடு முன்வைக்கப் படுகிறது. இதனை ஸ்டாவ் ஃபார்மர், ரிச்சர்ட் ஸ்ப்ரோட் மற்றும் மைக்கேல் விட்ஸல் எனும் மூன்று ஆய்வாளர்கள் ஒரு ஆய்வுக்கட்டுரை மூலம் முன்வைக்கிறார்கள். இது இந்தியத்

துணைக்கண்ட வரலாற்றைப் பற்றிய முற்றிலும் புதிதான ஒரு நோக்கு என்பதால்

மிக பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. Frontline இதழில் 2000ம் ஆண்டு வந்த ஹிந்துத்துவவாதிகளின் ஹரப்ப குதிரை இலச்சினை பம்மாத்து பற்றிய

‘Horseplay in Harappa ‘ என்ற தொடர் கட்டுரைகள் வாசித்தவர்களுக்கு இவர்களை நினைவிருக்கும். (கடந்த ஒரு வருடமாகவே இக்கருத்தாக்கத்தின் முன்வரைவுப் பிரதிகள் ஸ்டாவ் ஃபார்மரின் இணைதளத்தில் இருந்து இறக்கம் செய்ய வைஇகப்பட்டிருந்தன. சில நாட்கள் முன்பு அவர் இண்டடாலொஜி மடற்குழுவில் கட்டுரையின் இறுதிப்படியைப்

பற்றி குறிப்பிட்டிருந்தார். படிக்கப் படிக்க நான் எடுத்த குறிப்புகள் கீழே).

1. ஹரப்ப இலச்சினைகள் கண்டெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே ஒரு மொழியின் எழுத்து வடிவமாக கருதப்பட்டன. பிராமி, சீனாவின் யீ, சுமேரிய, எகிப்திய, முன்திராவிட, முன்இந்தோ-ஆரிய, முன்முண்டா என பல மொழிகளின் எழுத்துருவாக அவை இருக்கலாமோ என ஆராயப்பட்டன.

2. ஜான் மார்ஷலும் அவரது கூட்டாளிகளும் ஹரப்ப நாகரிகம் பிற மொழிஎழுத்துப் பயிற்சியுடைய நாகரிகங்களாய எகிப்திய, மெசொபொடாமிய நாகரிகங்களைப் போன்றது

என கருத்துருவாக்கம் செய்ததால், சிந்து சமவெளி நாகரிகமும் கற்றறிந்த மொழிவளம்

மிக்கதாகவே அனைவராலும் கருதப்பட்டது.

3. மாய (Maya) நாகரிகத்தின் பண்டை மொழியை அறியப்பகுத்த சோவியத் ஆராய்ச்சியாளர் யூரி நோரொசோவ் மற்றும் பின்லாந்து நாட்டின் அஸ்கொ பர்பொலா

போன்றோர்களின் குழுக்கள் 1960 களில் கணினி உதவியுடன் ஹரப்ப இலச்சினைகளை ஆராய்ந்து அவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த் மொழி குறித்தவை என கருத்துருவாக்கம் செய்தனர்

4. இக்குறிகளின் (signs) கூட்டங்களை ‘படிப்பதற்கு ‘ அவை எழுத்துக்களோ, சொற்களையோ குறிக்கவேண்டும். இவ்வகை ‘வாசிப்புகள் ‘ தமக்குள் ஒத்திசைவனவாக இருக்க பலநூறு வாய்பாடுகளை கண்டறிய வேண்டியிருந்தது. அதாவது ஒரு குறியை எடுத்துக்கொண்டால் அதற்கு முன்னும் பின்னும் வரும் குறிகளைக்கொண்டு எப்படிப்பட்ட ‘சொற்கள் ‘ அமைகின்றன எனக்கண்டு அவற்றை ஒரு மொழியாக அடையாளம் காணலாம். இம்முறையில் ஆராய்ந்த போது குறிகளின் இட அமைப்புகள் பல நூறு சாத்தியங்கள் கொண்டதாக இருந்த்தால் பலநூறு விதிகளும் வாய்பாடுகளும் அவற்றை மொழியாக

படிப்பதற்குத்தேவை.

5. மேற்கண்ட ‘திராவிட ‘ வாசிப்பு ஒருவழியாக ஓய்ந்தபின்பு ‘ஆரிய ‘ வாசிப்பு மீண்டும்

துவங்குகிறது. 80 களில் ஆரம்பித்துத் தொடரும் இம்முறையை ராவ், காக், ஜா, ராஜாராம்

போன்றவர்கள் செய்துவருகிறார்கள்.

6. ஏறக்குறைய 5000 இலச்சினைகள் பல்வேறு ஊடகங்களில் ( களிமண் பலகைகள், சுதைவட்டுகள், சுட்டமண்பாண்டங்கள், கற்கள், உலோக ஆயுதங்கள் … போன்றவை) இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அனால் அனைத்திலும், இந்தக்குறியீட்டுச் சொற்கள் மிகக் குறைந்த எழுத்துக்களையே கொண்டு அமைந்திருக்கின்றன.

7. சராசரியாக மஹாதேவன் கணக்கிட்டபடி ஒரு சொல்/இலச்சினை 4 குறிகளை ( ‘எழுத்துக்களைக் ‘) கொண்டுள்ளதாக இருக்கின்றது. 1% சொற்களே/இலச்சினைகளே 10

குறிகளைக்கொண்டவையாக இருக்கின்றன. (இது முக்கிய தரவாகும். அதாவது சாதாரணமாக சொற்றொடர்கள்களின்/இலச்சினைகளின் நீளம் முன் இணை, பின் இணை

விதிகளின் படி கணக்கிட்டால் 4 குறிகளே சராசரியாக கொண்டிறுத்தல் ஒரு ‘மொழி ‘யினது

வளமின்மையையே காட்டும். அது மொழியா என்ற சந்தேகத்திற்கும் இது இடமளிக்கிறது). ஒப்புமைக்காக ஈரானின் எலம் மொழியின் குறிச் ‘ சொல் ‘(இலச்சினை) நீளங்களை இக்கட்டுரை காட்டுகிறது.

8. இவ்வாறு பெரும் தொடர்குறிகள் கொண்ட இலச்சினைலகள் கண்டுபிடிக்கப் படாமல் இருப்பதால் இக்குறிகள் ஒரு மொழியின் எழுத்துவடிவங்களா என்ற சந்தேகம் எழுகிறது.

இச்சந்தேகத்தை ஒரு கறாரான model ஒன்றை உறுவாக்கி நிறுவுகின்றனர் இக்கட்டுரையாசிரியர்கள்.(இது ஒரு model மட்டும்தான். இதைப்பற்றின சந்தேகங்கள் எனக்கு நிறைய இருக்கின்றன. ஆனால் இத்தகைய அறிவுத்துறைகளில் ஒரு அளவுக்குமேல் இயல்பியல், பொறியியல் போன்று ‘உண்மை ‘களைத் தேடக்கூடாது என்பதையும் எனக்கே நினைவுறுத்திக்கொள்கிறேன்).

9. பெரும்பாலும் இலச்சினைகள் பானை. தாழி போன்றவற்றின் உடைதுண்டங்களில் இருக்கின்றன. அதனால் சுட்ட மண் பலகைகளில் எழுதினர் என்பதில்லை. எழுதினபின்பே அவை உடைந்துள்ளன.

10. மாற்றமடையா குறிகளாகவும், இணைகளாகவும் பலநூறு ஆண்டுகள் காணப்படுகின்றன. சொல்லப்படும் சொற்களின் வடிவங்களாயிருந்தால் அவை மாறும். குறைந்த அலைஎண்களில் காணப்படும் இலச்சினைகள் (தனிம இலச்சினைகளும்) மிகுந்த அளவில் உள்ளதால் அவை எந்தவிதமான பொருள்கட்டுமையை (encoding) உள்ளடக்கும் என்பதும் சந்தேகத்துக்குறியதே.

11. மாக்கியின் முறைகளையும், ஐராவதம் மஹாதேவனின் ஹரப்ப இலச்சினைகளை திராவிட மொழியினதாக அறியப்பகுக்கும் முறையினதுமாகிய குறைகளை முன்வைக்கின்றனர். .

12. ஹரப்ப இலச்சினைகள் எவ்வாறு ஒரு மொழியினைச் சுட்டாது என்பதை எகித்திய ஹீராக்ளிபிக்ஸ் மற்றும் பிற குறித்தொகுப்புகளினதுமாகிய ஒப்புமை வாதங்களினால் நிறுவுகின்றனர்..

இவ்வாறு பல வாதங்களைக் கொண்டு இக்கட்டுரை ஹரப்ப நாகரிகம் ஒரு கற்றறிந்தோர் (literate) நாகரிகம் அல்ல என நிறுவுகிறனர்.. இனிவரும் அகழ்வாராய்ச்சிகளில் எந்த

வித தரவுகள் அகப்பட்டால் இந்த கருதுகோள் பொய்மைப்படும் (falsify) என்பதையும்

தெரிவித்துள்ளனை. முறையான ஒரு ஆய்வுக்கட்டுரை, ஒரு முற்றும் புது கருதுகோளை முன்வைத்து அதற்குச் சார்பான வாதங்களையும் , அக்கருதுகோள்களின் பயனுறு எல்லைகளையும், பொய்மைப்படுத்தப்படும் சந்தர்பங்களையும் தானே விளக்கி எவ்வாறு எழுதப்படும் என்பதை அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளலாம். இதில் தமிழ் வரலாறு எங்கே ஒளிந்துள்ளது என்று கண்டறிபவர்களுக்கு பல உறக்கமில்லா இரவுகள் காத்திருக்கின்றன.

—-

பின்குறிப்புகள்:

1. ‘The collapse of the Indus-Script Thesis: The myth of a literate

harappa civilization ‘

Steve Farmer, Richard Spoat and Michael Witzel

இக்கட்டுரையும் இது தொடர்பான அனைத்துக் கட்டுரைகளும் ஸ்டாவ் ஃபார்மரின்

இணைத்தளத்தில் கிடைக்கின்றன.

சுட்டி: http://www.safarmer.com/downloads/

2.

தமிழ் மொழியில் அமைப்பியல் (structuralism) கற்றவர்கள் குறிகள், ஒலியன்கள், உருபன்கள் போன்ற கலைச் சொற்களைப் பயன்படுத்துவர். அவற்றை நான்

தவிர்த்திருக்கிறேன். இவை பற்றிக் கற்க இரு புத்தகங்கள்:

தமிழவனின் ஸ்ட்ரக்சுரலிஸம்,

அகத்தியலிங்கத்தின் தமிழ்மொழி அமைப்பியல்.

குறியியல் (semiotics) பற்றி சரியான நூல்கள் தமிழில் இல்லை.

****

– 2 –

ஹரப்ப நாகரிகத்தின் மொழி பற்றி ஒரு மாற்றுக்கருத்தை முன் வைத்த ஒரு கட்டுரை பற்றிய முதல் பதிவை இட்டிருந்தேன். அதன் இரண்டாம் பகுதியாக ஸயன்ஸ்

இதழில் வந்த கருத்துகளைத் தொகுத்து இப்பதிவில் இடுகிறேன். உரிமைபெற்ற பதிப்பாகையால் மொத்த மொழிபெயர்ப்பாக இல்லாமல் குறிப்புகள் மட்டும் கீழே:

-> புதையாராய்ச்சி, வரலாற்று அறிஞர்கள் முன் கருதியிருந்ததைப் போல

ஹரப்ப நாகரிகம் ஒருமுனைப்படுத்தப்பட்ட, அமைதியான, பலத்த நடுவண் அரசைக்கொண்டதாக இராமல், பன்முகமான, பல்மொழி புழங்கும் ஒரு பெரும்பரப்பு நாகரிகமாக இருந்ததாக இப்போது காண்கின்றனர். இவ்வரசை ஒன்றாகக் கட்ட தொழுகுறிகள் கொண்ட இலச்சினைகளும், பலகைகளும் பிற வழங்கிகளும் பயன்பட்டன

என்பது இக்கருதுகோளாகும்.

எழுத்துருவா, இல்லையா ?

—-

-> இத்தகைய கருதுகோளுக்கு எதிர்ப்பும் பலமாகவே இருக்கிறது. பல சிந்து சமவெளி நாகரிக அறிஞர்களின் பதில்வினைகள் இப்படி:

-> ‘இந்த குறித்தொகுப்பு ஒரு மொழியைக் குறித்ததாகாது எனும் கருத்தை

நான் முற்றிலும் நிராகரிக்கிறேன் ‘

மார்க் கெனோயர், புதையாராய்ச்சி நிபுணர்,

விஸ்கான்ஸின் மாடிசன் பல்கலைக் கழகம்

-> ‘அம்மக்கள் மொழியை பொருள்கட்டுமைக்காமல் வேறே என்ன செய்து

கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறீர்கள் ? ‘

அஸ்கோ பர்போலா, மொழியியல் வல்லுனர்,

ஹெல்சிங்கி பல்கலைக் கழகம், ஃபின்லாந்து

-> ‘அவை ஒரு மொழிக்குறிகளாகவன்றி வேறெதுவாக இருப்பதற்கும்

சாத்தியமே இல்லை. அது ஒரு முழுமையான மொழிக்குறியீடு. அது ஒரு பேச்சுஒலிக்குறியீடும் ஆகும் ‘

கிரிகோரி பொஸ்ஸெல்,

மொழியியலாளர், பென்ஸில்வேனியா பல்கலைக்கழகம்.

->இப்படி எதிர்ப்புகள் இருந்தாலும், ஆதரவாளர்களும் கூடுகின்றனர்

-> ஹார்வர்ட் மானுடவியலாளர் ரிச்சர்ட் மெடடா, ‘ இந்தக் கட்டுரை இத்துறைக்கு மிக முக்கியமான பயனளிப்பாகும். இது இத்துறையில் ஹரப்ப மொழிபற்றிய

முடிச்சவிழாச்சிக்கலாக இருந்த ஒன்றையும் விடுவிக்கும் ‘ என்கிறார்

-> வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழக ஸ்டாவென் வெபர், ‘ சில சமயங்களில்

துறைசாராத வெளியாட்கள் வந்துதான் இத்தகைய மிக ஆதாரமான கேள்விகளை எழுப்புகிறார்கள். இனி ஹரப்ப குறிகள் இன்ன மொழியின் எழுத்துவடிவம் தான் எனச் சொல்பவர்கள் முதலில் அது ஒரு எழுத்துவடிவம் தான் என்பதை முதலில் நிரூபிக்கவேண்டும் ‘ என்கிறார்.

குறிகளின் காலம்:

—-

-> ஏறக்குறைய 3200 கி.மு வில் இக்குறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன(எகிப்திய

ஹீரோக்ளிபிக்ஸ் மற்றும் இராக்கிய கூனிபோர்ம் எழுத்துகளின் காலத்துக்கு

இணையாக ). 2800 கி.மு வாக்கில் அவை சகஜமான புழக்கத்தில் வருகின்றன. 2400 கிமு வில் மிகப்பலதரப்பட்ட பன்முகத்தன்மையுடையவையாக காணப்படுகின்றன. 1900 கிமு வாக்கில் குறையத்தொடங்கும் இவை 1700கி.மு வில் முற்றும் மறைந்து விடுகின்றன.

-> இவை குப்பைத்தொட்டிபோன்ற இடங்களில் வீசிஎறியப்பட்டவை போன்றே

தோன்றுகின்றன. மரியாதையுடன் இறந்தவர்களுடன் புதைக்கப்பட்டடா, கல்லறைகளிலோ அல்லது அன்றாட புழக்கத்திலிருக்கும் வீட்ட்டறைகளிலோ காணப்படவில்லை என்பது சுவாரசியமானதாகும்.

ஒட்டியும் வெட்டியும் வாதங்கள்

—-

முந்தைய பதிவில் கூறப்பட்ட விவாதங்களையும் ஸயன்ஸ் கட்டுரை குறிப்பிடுகின்றது. அதில்

காணாததை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்.

-> முக்கியமாக இச்சின்னங்கள்/குறிகள் மொழியின் வடிவக்குறிப்புகள் அல்ல என்றும் அவை தொழுபயன் குறித்தவை அல்லது பிற குழுக் குறுகளாகவோ இருக்கலாமென்றும் கருத்து

எழுந்துள்ளது.

-> முக்கியமான புதையாராய்ச்சியாளர்களும், மொழியியலாளரும் இதை அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்வதாயில்லை:

-> ‘எழுத்துசார்ந்த மொழியில்தான் குறிகளின் அலையெண்கள் சீரான இடைவெளிகளில் தொடர்ந்து காணப்படும். ‘ என்கிறார் ஐராவதம் மஹாதேவன். அதாவது ஒலிக்குறியாக

மொழியை எழுதினால் அதில் முன்கண்டதைப்போன்ற அலையெண் சீரமைதி காணப்படத்தேவையில்லை என்பது அவர் வாதம்.

-> வெல்ஸ் மிகவும் வெளிப்படையாகச் சொல்கிறார், ‘ஒரு கல்வெட்டாய்வாளராக, மொழிக்

குறிவல்லுனராக சிலவற்றை பார்த்தாலே அவை ஒரு மொழியின் குறிகள்தான் எனத் தெரிந்துவிடும் ‘

(அதாவது அவ்வளவு வெளிப்படையாக ஹரப்பாவின் குறிகள் ஒரு மொழி குறித்தவை எனத்தெரியும் போது இந்த வாதங்களே தேவையற்றவை என்ற பொருளில்)

->மேலும் ‘இந்த எழுத்துரு முற்றிலும் வளர்ந்த உட்கட்டமைப்பு உடையதாகவும், சரியான இலக்கணங்களைக் கொண்டதாகவும் தென்படுகிறது ‘ என்றும் வெல்ஸ் றுகிறார்.பர்போலாவும் இக்கருத்தை ஆமோதிக்கிறார்.

மற்றும் சில ஆய்வாளர்களுக்கு இந்த புது கருதுகோள் பயனின்றி தேக்கமடைந்து போயிருந்த துறையில் புது உற்சாகம் கொடுக்கும் ஒரு ஊக்கியாக காணப்படுகிறது.

-> ஹன்ஸ் ஹொக், இல்லினாய் பல்கலைக்கழகம், அர்பான ஷாம்பய்ன், ‘ இருபுற வாதங்களும் இன்னும் உறுதியானவையாக முழுமையாக இல்லை. அவர்கள் தத்தம் வாதங்களை முறையாக்கட்டும் ‘

-> சிலர் முன்னர் இருந்த தம் கொள்கைகளை சற்றே தளர்த்தவும் தொடங்கியிருக்கின்றனர்: போஸ்ஸல் போன்றவர்கள் இப்போது இக்குறிகள் ஒரு முழுமயடைந்த மொழியின் சொல்லாடல்களாக இல்லாமல் இடம், ஊர், குழு, கடவுளர் போன்றவற்றின் பெயர்குறித்த

சொற்களாக இருக்கலாம் என்ற நம்பிக்கைக்கு வந்த்துள்ளனர்.

ஹார்வர்ட்டின் புதையாராய்ச்சியாளர் கர்ல் லாம்பர்க்-கார்லோவ்ஸ்கி இக்குறிகள் ஆழம்,அர்த்தம் காணமுடியாதவையாக இருக்கின்றன என்கிறார். அவை மொழிச் சொல்லாடல்களா இல்லையா என்பதைவிட அவை ஒருவித கருத்துப் பரிமாற்ற வழி என்பதுதான் முக்கியம் எனக் கருதுகிறார்.

இப்படி பல்வேறு விதமான கருத்துகள் இருந்தபோதிலும், ‘ துரதிருஷ்டவசமாக இதை இந்தியக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகத் தான் காண்பார்கள் ‘ என டில்லியின் நேரு பல்கலைக்கழகத்திலிருந்த்து ஓய்வுபெற்ற புதையாராய்ச்சியாளர் ஷிரீன் ரட்னாகர் கூறுகிறார்.

மேற்கத்திய இந்தியத்துறை ஆய்வியலாளர்களுக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் இடையே பிணக்குகள் தோன்றி பெரும் சச்சரவாக மாற சாத்தியங்கள் உள்ளன என்றே பலரும்

கருதுகின்றனர். நாம் திறந்த மனத்துடன் இதை அணுகவேண்டும் என்று ஷிரீன் ரட்னாகர்

கூறுகிறார். அதுதான் இருப்பதிலேயே கடினமான செயல் என்று தோன்றுகிறது.

—-

navlesa@yahoo.co.in

Series Navigation

அருள் செல்வன் கந்தசுவாமி

அருள் செல்வன் கந்தசுவாமி