சரணமென்றேன் (காதல் கவிதைத் தொகுப்பு) : முன்னுரை

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

புகாரி


தமிழ் நெஞ்சங்களே,

என் காதல் கடல்கள் கணந்தோறும் எழுப்பும் உணர்வு அலைகள் கணினிக் கரைகளில் முத்தங்களாய்ப் பதித்த கவிதைகளை என் மூன்றாம் தொகுப்பாக காகிதங்களில் இறக்கி இருக்கின்றேன்.

இன்னும் இன்னும் எழுதப்படாத எத்தனையோ கோடி காதல் உணர்வுகள் இதயத்தின் இடுக்குப் பகுதிகளையும் சன்னமாய்க் குறிவைத்து புரியாத புயல்களாய் வீசிக்கொண்டிருக்கின்றன.

அவை ஒவ்வொன்றையும் பிடித்துப் பிடித்து கவிதைக் கிரீடங்கள் சூட்டிக் கெளரவப்படுத்தாமல் என் விரல்கள் நெட்டி முறிக்கப் போவதில்லை. இருப்பினும்… எழுதமுடியாத யுகம் தாண்டும் எத்தனையோ கவிதைகளை உணரவும் சுவைக்கவும் செய்வது காதல் என்னும் மகாாகவிதானே ?

காதல் உயிர்களின் பாடசாலை அதில் கற்க கற்கத்தான் அண்டத்தின் அனைத்தும் செழிக்கின்றன.

இதயத்தின் அத்தனை வலிகளிலிருந்தும் அழுத்தும் பாரங்களிலிருந்தும் காதல் என்னும் புனிதமே விடுதலை தருகின்றது

காதல் தோல்விகளைக் காதலின் எல்லை என்று எண்ணுவது அறிவை அலட்சியப்படுத்திவிட்டு வந்த அவசரக் கருத்து

பெரும்பாலான தருணங்களில் தோல்விகளே நல்ல காதலுக்கு வலுவான அடித்தளமாக இருக்கின்றன.

ஒரு தோல்விக்குப் பின் மலரும் புதிய காதல் மிகவும் புனிதமானதாகவும் வலிமையானதாகவும் இருக்கின்றது.

அதுவே சில்லறைச் சிலிர்ப்புகளை நீக்கி வாழ்க்கைக்குப் புதிய புதிய அர்த்தங்கள் சொல்கிறது.

காதல் கடிதம் எழுதும்போது கிறுக்கல்கள் எல்லாம் சித்திரங்கள் ஆகின்றன

காதல் கவிதை எழுதும்போது சொற்களெல்லாம் சொர்க்க வாசனை ஏற்றிக்கொள்கின்றன.

அக்கணங்களில் காகிதங்களில் இறங்குவது எழுத்துக்கள் அல்ல, முத்தங்கள்.

பல்துலக்கும்போதும் காதலியின் ஞாபகம் பளிச்சிட்டால் வேப்பங்குச்சிகூட பல நூறு முத்தங்களைப் பெற்றுக்கொள்கிறது.

துளித்துளியாகத்தான் என்றாலும் அந்தத் துளிகளுக்குள் முழுமையாய் வாழ்வதே வாழ்க்கை என்று உணரச் செய்வதே காதல்.

வைரத்தையும் துளைத்து வேர்கள் பதிக்க வீரியம் கொண்டது உலகில் காதல் பயிர் ஒன்றுதான்

ரசனையும் விருப்பமும் காதலாகிவிடாது அன்பும் நட்பும் காதலாகிவிடாது

பக்தியும் பரவசமும் காதலாகிவிடாது முத்தமும் மோகமும் காதலாகிவிடாது

பாசமும் தவிப்பும் காதலாகிவிடாது கருணையும் இரக்கமும் காதலாகிவிடாது

ஆனால் காதலுக்குள் இவை யாவும் இருக்கும்

எந்த ஒரு காட்டுப் பாதையையும் பறவைகள் கால் நோகாமல்தானே கடக்கின்றன ? அதைப் போல எந்த ஒரு துயர வாழ்க்கையையும் காதல் சிறகுகளுடன் கடந்தால் அதுவே செளந்தர்யப் பயணமாகிவிடும்.

காதலெனும் பனி பொழியப்பொழிய கரடு முரடுகள் தெரிவதில்லை

காதலில் மனம் கனியக்கனிய காதலர்க் குறைகள் பொருட்டில்லை

காதலெனும் காற்று வீச வீச கிளைகளில் முட்கள் நிலைப்பதில்லை

காதலெனும் நதி பாயப்பாயப் பசுமைக்கு நெஞ்சில் பஞ்சமில்லை.

காதலில் ஏமாற்றம் கொடுமையானதுதான்

ஏமாற்றியவர்கள் ஏற்கவேண்டிய அத்தனை தண்டனைகளையும்

ஏமாறியவர்களே ஏற்பது எத்தனை கொடுமை ?

ஏமாறியவன் தன் ஏமாற்றத்தையே வெற்றியின் வேர்களாக்கி

இன்னொரு சாக்கடைக்குள் தன் மூக்கைக் கொடுத்துவிட்டாலும்

சத்து நீர் மட்டுமே சுவாசித்து எழுந்தால் ஏமாற்றங்களெல்லாம் தூள் தூளாகும்

தண்டனைகூட திசை மாறிப் போகும்

காதல் அன்று புறாக்காலில் துவங்கி இன்று கணினி மடிகளில்

கதகதப்பாய் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

ஓயாத அந்த உயிரோட்டம்தான் உயிர்களின் மூலம்.

காதல் இல்லாவிட்டால், புல்லும் பூண்டும் கூட சுவாசிக்க முடியாது.

வானத்துக் கோள்களும் வாஞ்சையாய்க் காதலிக்கின்றன

ஒன்றை ஒன்று சுற்றிச் சுற்றி ஓயாமல் ஈர்த்து ஈர்த்து குதூகலிக்கின்றன.

உயிர்களைப் புதுப்பிக்க காதலேயன்றி வேறு நூதனமில்லை.

உலகை இனிப்பாக்க காதலேயன்றி வேறு சாதனமில்லை.

இயற்கை சுழன்றோட காதலேயன்றி வேறு சக்கரமில்லை.

இந்தப் பிரபஞ்சம் நிஜமென்றால்

அழிந்தழிந்து எழுகின்ற அதன் தத்துவம் சத்தியமென்றால்

எல்லா உயிர்களும் காதல் உயிர்கள்தாம்

எல்லாப் பொழுதுகளும் காதலர் பொழுதுகள்தாம்

அன்புடன் புகாரி

தலைப்பு: சரணமென்றேன் (காதல் கவிதைத் தொகுப்பு)

ஆசிரியர்: கவிஞர் புகாரி

வெளியீடு:

காவ்யா

14, முதல் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம்

கோடம்பாக்கம், சென்னை – 600 024

தொபே: 2480-1603

kaavyabooks@yahoo.co.in

http://www.kaavyabooks.com/

Series Navigation

புகாரி

புகாரி