கவிபாரதிகள்

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

புதியமாதவி


சாகித்திய அகதெமியின் பொன்விழா சிறப்பு நிகழ்ச்சி மும்பை பிரபாதேவி

ரவீந்திர நாட்டிய மந்திர் கலையரங்கில் 17, 18, 19 அக்டோபர் 2004ல்

நடைபெற்றது.கவிதை இந்தியாவின் குரல் முதல் முறையாக ஓரிடத்தில்

சங்கமம் ஆன நிகழ்வு. இந்தியாவின் 22 மொழிக்கவிஞர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

மொழிகள் வேறானால் என்ன ?

புள்ளிகள் புள்ளிகள்தான்

கோடுகளும் வீடுகளும்தான்

மாறிப்போனது,

அவரவர் வாசலில்

அவரவர் கோலங்கள்.

சின்னதாக, பெரிதாக, மாக்கோலமாக, தேர்க்கோலமாக, பூக்கோலமாக,

வண்ணப்பொடிகளின் ரங்கோலியாக ..

தேசியமில்லாத இந்த தேசத்தில்

அவரவர் முகங்களுடன் ஒப்பனை இல்லாமல்

‘ நீ பெரியவனா நான் பெரியவனா

உன் இனமா என் இனமா

உன் மொழியா என் மொழியா ‘

என்ற கேள்விகளின் கட்டுடைத்து ஒருவரின் குரலை மற்றவர்கள் மதித்து

ஒருவருடன் ஒருவர் இனிய முகத்துடன் கைகுலுக்கிக் கொண்ட அற்புதமானக்

காட்சியாக அந்த நிகழ்வு அமைந்திருந்தது.

அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார் அகதெமியின்

செயலாளர் சச்சிதானந்தன். அகதெமியின் தலைவர் கோபிசந்த் நரங் தலைமையுரை

நிகழ்த்தினார்.அய்யப்ப பணிக்கர், குல்ஷர், ஜாவத் அக்தர், பத்மா சச்தேவ்,

அனுபவ்துளசி, சுனிதா ஜெயின்,தர்ணம் ரியாஷ், ப்ரபல்குமார் பாசு, நாகேஷ் கர்மலி,

மோகன் தாக்குரி, இப்ராகிம் அஷ்க், கனகா, விஜயலஷ்மி, சரத் சந்திரா,

மல்லிகா சென்குப்தா,அருந்ததி சுப்ரமண்யம், சூர்யமிஷ்ரா,கீதா, பிரதிபா….

இப்படி 60 கவிஞர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி 9 அமர்வுகளாக

நடைபெற்றது. பெண்களின் எண்ணிக்கை 30% அதிகமாகவே இருந்தது

நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம். நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட நேரத்தில் திட்டமிட்டப்படி

நடந்ததும் அரங்க அமைப்பும், பகலுணவு, தேநீர்.. எல்லாம் நிமிடம் தவறாமல்

நடந்ததும் கண்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த டில்லி அகதெமியின் ராவ், மராட்டியமாநில

செயலாளர் பிரகாஷ் இருவரையும் மும்பை இலக்கிய உலகம் மனம் திறந்து

பாராட்டியது.

கவிஞர்கள் அனைவரும் முதல் கவிதையை அவரவர் தாய்மொழியில்தான் வாசித்தனர்.

அதன்பின் தான் ஆங்கில/இந்தி மொழியாக்கங்கள்.

வயோதிகம் என்ற கவிதையை கன்னடக்கவிஞர் வாசித்தவுடன் கண்ணிமைகள்

ஈரமாகியது. ‘கட்டிலுக்கும் கழிவறைக்கும் நடுவில் வாழும் முதுமையில்

ஈரம் என் உடலுக்கும் கட்டிலின் விரிப்புக்கும் நடுவில்தான்..இனிமேல்தான்

சாவா.. நான் எப்போதோ செத்துவிட்டேன் ‘

தன் முதல் குழந்தைக்கு முதன் முதலில் கடைவீதிச் சென்று புதுச்சட்டை

வாங்கிய அனுபவத்தை ஜெய்ப்பூரின் கவிஞர் கவிதையாக்கியபோது வாழ்வின் ஒவ்வொரு

அனுபவங்களும் கவிதைதான் கவிஞர்களுக்கு என்பது புரிந்தது..

மும்பையின் குண்டுவெடிப்பு அந்த இருண்ட இரவு..மறுநாள் விடியலில்

குழந்தை ஒன்று பள்ளிக்கு செல்வதைக் கண்ட கவிஞர் ‘இதோ எழுந்து நடக்கிறது என் இந்தியா ‘

என்று எழுதிய கவிதையை வாசித்தவுடன் மும்பை இலக்கிய உலகம்

ஒவ்வொரு வரிக்கும் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை தங்கள்

உணர்வுகளை உணர்த்தியது.

பிரதிபா (பெங்களூர்) painting/repairing/construction/deconstruction

என்றெல்லாம் கவிதை வாசித்தப்போது இப்படி எல்லாம் கூட வாழ்க்கையை

உருவகப்படுத்த முடியுமா ? என்ற கேல்வி எழத்தான் செய்தது.

வயதும் அனுபவமும் கைகோர்த்த முதுமையில் சிலரின் கவிதைகள்

தத்துவ மழை பொழிந்தன.

மலையாளத்தில் கவிஞர் சித்தானந்தன் அவருக்கே உரிய அத்தனைத் திறமைகளையும்

இருபது நிமிடங்கள் கொட்டித் தீர்த்துவிட்டார்.

பஞ்சாபி, வங்காள கவிஞர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால்

மணிப்பூர், சிந்தி, ஒரியா மொழிக்கவிதைகளின் வளர்ச்சியும் அவர்களின் சிந்தனையுன்

கண்டு அசந்துவிட்டேன்.

உருதுக்கவிஞர் வாசித்த சமுத்திரம் என்ற கவிதையில் கடலின் அலைகள் எதையோ

மறந்துவிட்டு தேடுவதாக சொல்லிக்கொண்டேவந்து கடைசி வரியில் அலையே

நீதான் சமுத்திரம் என்பதாவது நினைவிருக்கிறதா என்று முடித்தவுடன்

எங்கள் கரவொலியில் கடலலையே ஒதுங்கிப்போனது.

கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களும் சென்னையிலிருந்து வந்திருந்தார்.

கவிதைகள் வாசித்தார்.

இந்திய மொழியில் கவிதைப் புத்தகம் ஒன்று 25 பதிப்புகள் வெளிவந்திருக்கிறது.

அதுவும் அந்தக் கவிஞன் வாழ்கின்றபோதே அவனுக்கு அந்தச் சிறப்புக் கிடைத்திருக்கிறது

என்றால் அந்தச் சிறப்புக்கு உரிய கவிஞர் மு.மேத்தா தான். அவருடைய

கண்ணீர்ப்பூக்கள் கவிதைநூல் 25வது பதிப்பு அண்மையில் வெளிவந்துள்ளது

என்ற அறிமுகத்துடன் கவிஞர் மு. மேத்தா அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதிசயத்தில் புருவங்கள் உயர அந்த எளிமையானக் கவிஞனின் கவிதையை

கேட்க ஆவலுடன் கவிஞர்கள் தங்கள் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்ததை

சொல்லித்தான் ஆகவேண்டும்.

‘திருவிழாக்கள் வரும்போது

ராஜகவிகள் பாட வருகிறார்கள்

நாங்கள்-

பாடவரும்போது

திருவிழாக்கள் வருகின்றன.. ‘

என்று அகதெமியின் விழாவை வரவேற்று ஆங்கிலமொழியாக்கத்தை அவர்

வாசித்தபோது மற்றவர்களுக்கு அது புதுமையாகவே இருந்தது.

‘ஈராக்

போரில் அழிந்தப்பிறகுதான்

உலகத்திற்கு தெரிந்தது

பேரழிவு ஆயுதங்கள்

யாரிடமிருக்கின்றன என்பது ‘

மேத்தாவின் இந்தக் கவிதை மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

மொழியாக்கம்/அயல்மொழியை வாசிக்கும் திறமை இதில்

கஜல் கவிஞர்கள் (இந்தி, உருது) பெரும் வரவேற்பை

பெற்றச் சூழலில் அதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு

கவிஞர் மேத்தா ஒரு சந்தக்கவிதையை அப்படியே தமிழில் சொல்லி

‘இதை எப்படி எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் என் தாய்மொழி தமிழ்

மொழி உணர்த்தியதை அப்படியே முழுமமையாக உணர்த்த முடியாது ‘ என்று ஆங்கிலத்தில்

சொன்னவுடன்….

மொழியாக்கங்களில் கிடைக்காத மிகப்பெரிய வரவேற்பு கிட்டியது.

மொழியாக்கம் என்பது மூலத்தின் நகலாக இருக்கவே முடியாது.

மொழியாக்கம் மூலப்பிரதியைப் பார்த்து வரைந்ததாக மட்டுமே இருக்கமுடியும்

என்பதை ஒவ்வொரு படைப்பாளியும் உணர்ந்துதான் இருக்கிறார்கள்.

Translation and its Dycontents என்ற தன் புத்தகத்தில் மிகச்சிறந்த

மொழி பெயர்ப்பாளாராக உலகம் ஏற்றுக்கொண்டிருக்கும் கிரெகரி ரபஸா

சொல்லியிருப்பது நினைவுக்கு வந்தது.

‘மொழிபெயர்ப்பு என்பது சாத்தியமில்லாதது. ஒரு கோழிக்குஞ்சை அப்படியே

ஒரு வாத்து குஞ்சாக்குவதற்கு வாய்ப்பே இல்லை. கிட்டத்தட்ட மிக அண்மைவரையில்

போகலாம் ‘

மும்பையில் வாழும் இந்தியாவின் அனைத்து மொழி கவிஞர்களும் கவிபாரதி

நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியின்

அனைத்து அமர்வுகளையும் சிறப்புச் செய்தியாக்கியது என்றாலும் மற்ற

பத்திரிகைகளும் ஊடகங்களும் மராட்டிய மாநிலத்தின் தேர்தல் முடிவுகளில்

தன் பக்கங்களைச் சூடாக்கிக் கொண்டிருந்தது.

மராட்டிய மாநில அகதெமியின் செயலாளர் பிரகாஷ் பதம்பிரெக்கர் நன்றியுரையுடன்

நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

….>>> புதியமாதவி,

மும்பை.

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை