முன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமை

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

புதுவை ஞானம்


‘தன்னை வியந்து தருக்கலும் – தாழ்வின்றிக்

கொண்ணே வெகுளி பெருக்கலும்

முன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமையும்

தன்னை அழிக்கும் படை ‘

— இப்பாடல் நான் சிறுவயதில் படித்தது யார் எழுதினார்கள் எந்த நூலில் இடம் பெற்றது என்பதெல்லாம் நினைவில்லை. இந்த பண்ணாடை மனக்குரங்கு நல்லதையெல்லாம் ஒழுக விட்டு — சாரத்தைவிட்டு சக்கையை பிடித்து வைத்திருப்பதன் – கனத்தையும் மீறி ஒரு பாடல் தற்செயலாக நினைவுக்கு வந்து சிரமப்படுத்துகிறது.

‘தன்னை வியந்து தருக்கலும் ‘

‘கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி

கைதட்ட ஆளிருந்தால் காக்கை கூட நடிகனடி ‘ –

என்ற கவிஞர் கண்ணதாசன் பாடல் கூட நினைவுக்கு வருகிறது. சில முட்டாள்களை பல முட்டாள்கள் கைதட்டி பெரிய மனிதன் ஆக்குவது தமிழகத்தின் தலையெழுத்து நாலு முட்டாள்கள் கைதட்டினால் நான் அறிஞன் என்ற Maglomania எனப்படும் வியாதியால் பீடிக்கப்பட்டு அளவுக்கு மீறி தற்புகழ்ச்சி கொண்டு ஆணவம் பிடித்தலைகிறது ஒரு பேராசை பிடித்த கூட்டம்.

‘தன்னையறிந்து ஒழுகுவார் தன்னைமறப்பார்

தன்னையறியாதவரே தன்னைக்காட்டுவார் ‘ என்றார் ‘பாம்பாட்டி சித்தர் ‘ இதை எனக்கு வெளிக்காட்டியது M.R.ராதாவின் ரத்தக்கண்ணீர் ஒலிநாடா.

‘அடக்கமுடையாரை அறிவிலர் என்றெண்ணிக்

கடக்க கருதவும் வேண்டா — மடைத்தலையில்

ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும்

வாடியிருக்குமாம் கொக்கு ‘ என்பது போல் நிறைகுடமாக குடத்திலிட்ட விளக்காக பலர் இருக்கும் இப்புண்ணிய பூமியில் கிணற்றுத் தவளைகளோ பகுத்தறிவு பஜனை செய்கின்றன. பல்லக்கில் ஏற பகல் கனவு காண்கின்றன.

‘தாழ்வின்றிக் கொண்ணே வெகுளி பெருக்கலும் ‘

‘ஐயா நான் வேண்டுதல் கேட்டருள்

புரிதல் வேண்டும்.

[ஆருயிருர்கட்கெல்லாம் நான்

அன்பு செயல் வேண்டும்]

அணுத்துணையும் சினங்காமம்

அடையாமை வேண்டும் ‘ – என்று யாசிக்கிறார் வள்ளற் பெருமான்.

‘தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம் ‘ என எச்சரிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

‘வல்லவன் போலே பேசக்கூடாது

வானரம் போலே சீறக்கூடாது ‘ என்று கவிஞர் கண்ணதாசன் வேண்டுகோள் விடுக்கிறார்.

‘பிறவி தீர வென்றால்

பேதகம் பண்ணாதே

துறவி ஆனவர்கள்

சும்மா இருப்பார்கள் ‘ – என்று அறிவுறுத்துகிறார் அகப்பேய் சித்தர்.

எனவே சினம் கொண்டு பகைமை விதைத்தால் விதைத்தது பன்மடங்காய் விளையும். பகைமை பன்மடங்கு ஆனால் தாங்க முடியாது பைத்தியம் பிடிக்கும். எனவே சினம் காக்க ‘

‘முன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமை ‘

சொத்துபத்து, தோட்டம் துரவு, பண்டபாத்திரம் வாய்க்கால் வரப்பு, நகைநட்டு இப்படி முன்னோர்கள் ஏதாவது வைத்து விட்டுப் போனால் பிதூர்ஜிதம். அதன் மேல் நமக்கு மோகமோ மோகம். அரையடி அண்ணன் தம்பிக்கு விட்டுக் கொடுக்காமல் அறுபது ஏக்கர் விற்று மயிலாப்பூர் நாலு கை வக்கீலுக்கு (Senior Lawyer என்பதற்கு கிராமத்தானின் தமிழாக்கம் தான் ‘ நாலுகை வக்கீல் ‘) கப்பம் கட்டி அழிந்து போன தமிழர்கள் ஏராளம். இதுபற்றி ‘பகையதமென்னும் படுதோஷி விலாசம் ‘ என்று ஒரு இசை நாடகம் வெகு அமர்களமாக – வக்கீல்கள் கோர்ட்டு குமாஸ்தாக்கள், அமீனாக்கள், கோர்ட்டு உள்ள நகர்த்தின் உணவு விடுதிகள், அங்கிருந்த தேவடியாள்கள் அவர்களுக்கும் இங்கிலிஷ்கார ஜட்ஜஉகளுக்கும் இருந்த உறவுகள் மாமா வேலை பார்த்த வக்கீல்கள் – பற்றி யெல்லாம் விவரிக்கிறது.

இப்படி முன்னோர்கள் விட்டுச்சென்ற ஸ்தாவர ஜங்கம சொத்துகளுக்காக பிரிவீ கவுன்சில் வரை சென்று வழக்காடி பார் அட்லாகளை கொழுக்க வைத்து தாம் இளைத்துப் போன தமிழினமோ மூதாதையர் விட்டுச் சென்ற அனைத்து ஓலைச் சுவடிகளையும் குங்குமம் சுமந்த கழுதையாகவும் ‘கற்பூர வாசம் கழுதைக்கு தெரியுமா ‘ என்றவாறும் ஆடிப்பெருக்கன்று ஆற்றில்வீசி புண்ணியம் தேடிக்கொண்டது. தமிழ் தாத்தா உ.வே.சா, தருமபுரம் போன்ற ஆதினங்கள் ஆற்றில் வலை வீசி அரும்பாடு பட்டு பல ஓலைகளை மீட்டெடுத்து நமக்கு விட்டு வைத்தனர். மயிலை சீனி வேங்கடசாமி போன்ற அறிஞர்கள் ‘அழிந்து போன தமிழ் நூல்கள் ‘ பற்றி ரத்தக்கண்ணீர் சிந்தி இருக்கின்றனர். (நாத்திகராகவும் பெரியாரின் பெருந்தொண்டராகவும் வாழ்ந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா தனது ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில்,

‘உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி ?

உலகத்தில் மூடர்களுக்குண்டோ உயர்ச்சி ?

புலியிட்ட செம்பினில் குற்றம்போமோ

அஞ்ஞானம் போகாது மூடருக்கென்று ஆடு பாம்பே ‘

பூசை செய்ததாலே சுத்த போதம் வருமோ ?

பூமி வலம் செய்ததனால் புண்ணியம் உண்டோ

ஆசையற்ற காலத்திலே ஆதிவத்துவை

அடையலாம் என்று துணிந்தாடு பாம்பே

தன்னை அறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்

தன்னையறியாதவரே தன்னைக் காட்டுவார்

பின்னையொரு கடவுளை பேண நினையார்

பேரொளியைக் காணுவர், என்றாடு பாம்பே ‘ ‘

என்ற பாம்பாட்டி சித்தரின் பாடலைப் பயன்படுத்தி இருப்பது இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இளிச்சவாய் தமிழனுக்கு ஒரு சரியான பாடமாகும். )

ஓலைச்சுவடிகளுக்குத்தான் இந்த அவலம் என்றால் அச்சேறிய சில நல்ல தமிழ் நூல்களையாவது காப்பாற்றினார்களா என்றால் அதுவும் இல்லை. ஏதோ கோட்டையூர் ரோஜா முத்தையா போன்றவர்கள் விதிவிலக்காக இருக்கலாம். என்னைப்பொறுத்தவரை நான் பழைய புத்தகக்கடைகளில் — நடைப்பாதைக் கடைகளில் தான் எனது மொத்த அறிவுத்திரளையும் சேகரித்தேன் என்றால் மிகையாகாது. சொத்து சுகத்துக்கு வழக்கு போடும் தமிழர்கட்கு முன்னோர் விட்டுச்சென்ற ஓலைச்சுவடிகள் கீழ்த்திசை சுவடி நூலகத்திலும், சரஸ்வதி மகால், திருவனந்தபுரம், மைசூர் சமஸ்தான நூலகங்களில் மக்கி மடிவது பற்றி சுரணையே இல்லையா ?

சென்ற ஆண்டு அதாவது 29,30 செப்டம்பர் தேதிகளில் சென்னை பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த முதுபெரும் பேராசிரியர் சிவதம்பி அவர்களைச் சந்திக்க சென்றபோது அவ்விடுதிக்கு பக்கத்திலேயே அதே வளாகத்திலேயே (Seminar on Science Technology in Sanskrit Writing) ‘வடமொழி இலக்கியத்தில் அறிவியலும் தொழில்நுட்பமும் ‘ என்ற தலைப்பில் ஒரு மாநாடு நடந்து கொண்டிருந்தது. அதில் சமர்பித்த ஒரு கட்டுரை : ‘தனியாரிடமும் பொது நூலகங்களிலும் உள்ள 400 ஓலைச்சுவடிக் காப்பகங்களில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் சுவடிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் அவற்றில் 12250 சுவடிகள் அறிவியல் பற்றி இருந்ததாகவும் அந்த அறிவியல் சுவடிகளில் 3500 (வடமொழியில் ) அறிவியல் பற்றி இருந்ததாகவும் அவற்றில் 230 சுவடிக்கட்டுகள் 1997 – 98ல் அச்சேறி விட்டதாகவும் சொல்கிறது.

(Sciences of Ancient India Certain Novel Facts of their study – by – K.V.Sharma, Director, SSEC Research Centre 32, II Road, Gandhi Nagar, Adyar, Chennai 20.)

அடுத்த முறை மீண்டும் அங்கே சென்றபோது வள்ளுவம் 2000 என்ற கருத்தரங்கை ஆந்திரப்பல்கலைக்கழகம், (குப்பம்) தமிழ்த்துறை நடத்திக்கொண்டிருந்தது. இவ்விரு நிகழ்ச்சிகளும் ஒரு ஆழமான கேள்வியை எழுப்புகிறது.

சிறுவர்களாய் இருந்தபோது நமக்கு எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்று போதித்தார்கள். சாவகாசமாக யோசித்து பார்த்தால் நூற்றாண்டு காலமாக எழுத்து, சொல், பொருள் இலக்கியம் என்று ‘எழுத்துத் தமிழ் பற்றி ஏராளமாக ஆய்வு செய்த தமிழுலகம் ‘எண் தமிழை ‘ மட்டும் கோட்டை விட்டுவிட்டது. ஒற்றைக் கண் தமிழராக நாம் ஆகிவிட்டோம் என்ற அச்சம் தவிர்ப்பதற்கில்லை. ‘எண் ‘ எனப்படும் சொல் Numbers எனும் எண்ணிக்கை சாதனத்தை மட்டுமா குறிப்பிடுகிறது. ‘எண் ‘ எனப்படும் ஏவல் வினை முற்றையும் தான் குறிக்கிறது. அதாவது ‘சிந்தனை செய்/ யோசித்துப் பார் ‘ என்று ஏவுவதும் அந்த சொல்தான். ‘உன்னையே நீ எண்ணிப்பார் ‘ அப்படி எண்ணிப் பார்த்ததால் தான் சிலைவடிக்கும் இந்தச் சிற்பி சிந்தனைச் சிற்பியாக மாறினான் ‘ என்ற சிம்மக்குரலில் சிவாஜி கணேசன் சாக்ரடாஸ் நாடகத்தில் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஆனால் count என்று உணரும் (பணத்தை) எண்ணுவதைத் தவிர, சிந்திப்பது என்ற கண்ணோட்டத்தில் அச்சொல்லை பயன்படுத்துகிறோமா என்று யோசித்ததில் மேடைப் பேச்சாளர்கள் எப்போதாவது சோடா குடித்து தாகம் தணிக்க விரும்பும் போதெல்லாம் ‘இங்குதான் தோழர்கள் சற்று சிந்திக்க வேண்டும் ‘ ‘ என்று சொல்லிவிட்டு சோடா குடிப்பது நினைவுக்கு வருகிறது. பேச்சாளர்கள் எவ்வளவு சிந்தித்தார்கள் அல்லது பொதுமக்கள் எவ்வளவு சிந்தித்தார்கள் என்பதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிதான். இதுபற்றி நான் எதுவும் சொல்லத் தேவையில்லை.

கணிதம், தமிழ் எண்கள், கட்டிடக்கலை, சிற்பக்கலை, கடற்பயண நூல்கள், மருத்துவம், சோதிடம், வானவியல், பாசனக்கலை என பல்வேறு அறிவியல் (பண்டை அறிவியல்- இயற்கை இயற்பியல்) மற்றும் தொழில் நுட்பம் பற்றிய ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியிருக்கிறது.

ஜோசம் நீடாம் என்ற அறிவியல் மேதை சீனாவில் அறிவியல் மற்றும் கலாச்சாரம் என்பது பற்றி 16 தொகுதிகள் கொண்ட நூற்களஞ்சியம் வெளியிட்டிருப்பதாகவும் அவர் ‘UNESCO ‘ போன்ற சர்வதேச நிறுவனங்களில் அறிவியல் துறை ஆலோசகராக இருந்ததாகவும் அவர் ‘அறிவியல் என்பது மேலை நாட்டில் மட்டும் தோன்றியதல்ல உலகின் தொன்மைக்கலாச்சாரங்கள் அனைத்தும் அறிவியல் வளர்ச்சிக்குப் பங்களித்து இருப்பதாகவும் ‘ கூறியிருப்பதை தமிழர்களாகிய நமக்கு எந்த அறிஞர்களும் வெளிப்படுத்தவில்லை என்பது வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. (இந்த லட்சணத்தில் அவர் ஒரு மார்க்சீயவாதியாகவும் இருந்தார் என்பதை 35 ஆண்டுகால அரசியல் வாழ்வில் எனக்கு எந்த மார்க்சிஸ்ட் தலைவரோ அல்லது திரு.மார்க்ஸ் போன்ற அறிவியல் பேராசிரியர்களோ சொன்னதில்லை என்பது வெந்த புண்ணை வேல் பாய்ச்சுவது போலிருக்கிறது.)

முதன்முதலில் ஜோசப் நீடாம் பற்றிய தகவல் என் கண்ணுக்குப்பட்ட தகவல் யுவான்சுவாங் எழுதி ‘மேல் நோக்கிய பயணம் ‘ என்ற ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூலில் இருந்து தான். அதிலிருந்து ஒரு ஆறு மாதக்காலம் தேடியதில் நம் நாட்டில் திருமதி ரொமீலா தாப்பர் போன்ற சரித்திர ஆசிரியர்களும் பன்னாட்டு அறிவியல் மேதைகளும் இணைந்து நடத்திய ஒரு மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய SITUATING THE HISTORY OF SCIENCE என்ற நூல் கிடைத்தது அதன் ஒரு கட்டுரையில் ரொமீலா தாப்பர்

‘There would therefore be much to be learnt even about Indian Science through consulting texts in their languages ‘

அதாவது இந்திய மொழிகளில் அறிவியல் பற்றிய ஓலைச்சுவடிகள் ஆய்வுசெய்யப்பட வேண்டும் என்ற அறைக்கூவலை விடுத்திருக்கிறார்.

சமீபத்தில் சரஸ்வதி மஹால் சில ஓலைச்சுவடி தொகுதிகளை புத்தகமாக மறுபதிப்பு செய்துள்ளது. அதில் ‘கணக்கதிகாரம் ‘ என்ற நூல் குறிப்பிடத்தக்க ஒன்று. INSTITUTE OF ASIAN STUDIES – CHENNAI. 600119. கருவை நஞ்சையன் இயற்றிய ஒரு ஓலைச்சுவடி தொகுதியை ‘கணித நூல் ‘ (Treatise on Mathematics) என்ற பெயரில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டுள்ளது. ஆழ்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டிய நூல்கள் இவை. இவ்வெளியீட்டாளர்களுக்கு தமிழ் மக்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.

ஆனால் சென்னையில் உள்ள கீழ்த்திசை சுவடி நூலகத்தில் (Oriஎntal Manuscript Library) உள்ள பண்டைத் தமிழரின் அறிவியல் தொழில் நுட்ப சுவடிகள் உடனடியாக புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட வேண்டும் அவை உடனடியாக Micro Film ல் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஜோசப் நீடாம் போன்ற அறிஞர்கள் சீனச் சுவடிகளை ஆராய்ந்து நிரூபித்து இருப்பதைப் போல் தமிழர் தம் பண்டைய அறிவியல் தொழில் நுட்பத்தை நம்மூர் அறிஞர்கள் ஆய்வு செய்வதுதான் உண்மையான தமிழ்த் தொண்டு என்பதாகத் தோன்றுகிறது.

படிக்க வேண்டிய ஆங்கில நூல்கள்:

1. Science and Civilization of China – by Joseph Needham.

2. India another Millennium by Romilla Thapper.

3. Situating the History of Science Dialogues with Joseph Needham.

இனி ‘கணக்கதிகாரம் ‘ என்ற தலைப்பில் தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ள நூலில் எண்கள் அளவைகள் மற்றும் கணிதம் பற்றிய சில பாடல்களைப் பார்ப்போம்.

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்