சமீபத்தில் வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

ஜெயமோகன்


தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர்

மூவாலூர் ராமமிர்தத்தம்மாள்

மறுபதிப்பு சிவசக்தி பதிப்பகம் நாகப்பட்டினம்

கும்பகோணத்தில் தாசி குலத்தில் பிறந்த மூவாலூர் ராமமிர்தத்தம்மாள் அக்குலம் சார்ந்த வாழ்வை வெறுத்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான பிரச்சாரகராக ஆனார் . தாசிப்பழக்கத்தை ஒழிப்பதற்காகவும் பெண்கல்விக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். தமிழ் பண்பாட்டு வரலாற்றில் அவருக்கு முக்கியமான இடம் உண்டு. 1935ல் வெளிவந்த இந்நாவல் இலக்கியம் சார்ந்த இயல்புகள் எதுவும் இல்லாத தட்டையான பிரச்சார ஆக்கம். எளிமையான வாசகனுக்குரிய சாதாரணமான கதையோட்டம் கூட இதில் இல்லை. ராமமிர்தத்தம்மையாரின் மனதில் இருந்த முன்மாதிரி வடிவம் அன்று பரவலாக வாசிக்கப்பட்ட அக்கப்போர்த் [polemics] தன்மை கொண்ட நாவல்களே என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆகவே பழைமையான நடையையும் தாண்டி இந்நாவலை வாசிப்பது மிகவும் சலிப்பூட்டும் அனுபவமாகவே உள்ளது.

இந்நாவலில் அனைவருமே ஒன்றுபோல பிரசங்கக் குரலில் பேசுகிறார்கள். அனைத்துக் கதாபாத்திரங்களுமே ஒரு குறிப்பிட்டக் கருத்துநிலையின் அடையாளங்களாக ஒற்றைப்படையாக காட்டப்பட்டுள்ளனர். கதை மாந்தரின் பெயர்களே குணநலன்களைக்காட்டும்படியாக உள்ளன– போகசிந்தாமணி , ஞானசுந்தரி , குணபூஷணி என்றெல்லாம். மைனர்களும் வீணர்களும் நல்ல கதாபாத்திரங்களின் சுயமரியாதைப் பிரசங்கத்தைக் கேட்டத்துமே திருந்தி சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து விடுகிறார்கள். கதை என்பது ஒரு தீய கதாபாத்திரத்தைப் பற்றி சொல்லி அவனை ஒரு சுயமரியாதைப் பிரச்சாரகரின் கைகள் நோக்கி வசமாகத் தள்ளிக் கொண்டு செல்வதாகவே உள்ளது. குணபூஷணியை தற்செயலாகக் கண்ட மைனர் அவளாது நீண்ட பேச்சைக் கேட்டதுமே மனம் திருந்தி அவளை சகோதரியாக எண்ணத்தலைப்பட்டு விடுகிறான். கதையில் நம்பவே முடியாத ‘ வடுவூர் துரைசாமி அய்யங்கார் பாணி ‘ மாறுவேடங்கள் , நாடகம்போட்டுத்திருத்துதல் ஆகியவையும் மர்மங்களும் நினைத்தபோது வருகின்றன. உதாரணமாக ஞானசுந்தரி ஆண்வேடமிட்டு தன் கணவனிடமும் பிற தாசிகளிடமும் ஜமீன்தாராக நடிக்கிறாள்.

ஆசிரியையின் நோக்கில்கூட இன்றைய வாசகர்கள் பல சிக்கல்களைக் காணலாம் . உதாரணமாக இசையை கேளிக்கைக்கும் ஒழுக்கமின்மைக்கும் கொண்டுசெல்லும் தேவையற்ற ஓர் ஆடம்பரமாகவே அவர் எண்ணுகிறார். இசைக்கச்சேரிகள் வைப்பது, கேட்பது ஆகியவற்றை இழிவானதாக கூறுகிறார். பெண்கள் நல்ல உடைகள் அணிவதையும் பொது இடங்களில் நின்று பேசிச் சிரிப்பதையும் தவறானதாகவே என்ணுகிறார். இந்நாவலில் சோமசேகரன் காந்தாவைத்தேடிச்சென்று ஒரு சாதாரண குடும்பப்பெண்ணை தாசி என்று எண்ணி விடுகிறான். அவள் கணவனிடம் இது தாசி வீடுதானே என்று கேட்டுவிடுகிறான். அதற்கு அப்பெண் நகைகள் அணிந்து வீட்டுமுற்றத்தில் நின்று பேசிச் சிரித்தமையே காரணம் என்று ஆசிரியை சொல்லி அவள் கணவன் வாயால் நீண்ட அறிவுரைகள் சொல்லவைக்கிறார். ‘மாமா ‘ வேடமிட்ட இலட்சியவாதியான நடராஜன் தாசிகளை திருத்தும்பொருட்டு அவர்களுடன் தங்கும்போது அவர்களிடம் தாராளமாகவே உறவு கொள்கிறான். அது தவறாக சொல்லப்படுவதில்லை .

ஆயினும் இந்நாவல் ஒரு சமூக ஆவணமாக இன்றும் மிக முக்கியமானது. இதில் நாம் ஏறத்தாழ முற்றாக மறந்துபோன ஒரு காலகட்டத்தின் எளிய சித்திரம் உள்ளது. தாசிகள் , அவர்களின் தாய்மார்கள், டாபர் மாமாக்கள், மைனர்கள், கிரிமினல் வக்கீல்கள் அடங்கிய ஓர் உலகம். ‘தில்லானா மோகனாம்பாள் ‘ [கொத்தமங்கலம் சுப்பு] போன்ற நாவல்களில் நாம் ஓரளவு கலைப்பூர்வமாகவும் விரிவாகவும் காணும் உலகம்தான் அது. அந்தக் கோணத்தின் மறுபக்கம் இந்நாவலில் உள்ளது. தாசிவாழ்க்கையில் உள்ள இழிவுகள் அனைத்தையுமே தார்மீகமான கோபத்துடன் ஆசிரியை சொல்லிச்செல்கிறார். அவ்விழிவை உருவாக்கி நிலைநிறுத்தும் சமூக நம்பிக்கைகள், மதநம்பிக்கைகள், அதை வைத்து சுரண்டிப் பிழைக்கும் தனவந்தர் மற்றும் புரோகிதர் சோதிடர்க் கும்பல், அதன் பொருளியல் உள்ளடக்கங்கள் என ஒர் அர்ப்பணிப்புள்ள சமூக சேவகியின் சீற்றம்கொண்ட குரலை நாவல் நெடுகிலும் கேட்க முடிகிறது.

இரண்டாவதாக இந்நாவலின் சிறப்பாகச் சொல்லவேண்டியது இதில் தாசிகளின் உலகின் தந்திரங்கள் சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் நுட்பமான உளவியல் அவதானிப்பு உள்ளாது என்பதுதான். உதாரணமாக காந்தா, கானவதி இருவரும் பயணம் செய்யும் ரயில்பெட்டியில் அவர்கள் தளுக்காக பேசி அருகே வந்தும் ஊடிவிலகியும் பாவனைப்பேச்சு பேசியும் கேலிசெய்தும் மைனரை கவர்ந்து அலைக்கழித்து சுழற்றி அடிமைப்படுத்தும் காட்சி நுட்பமானது. குணபூஷணி செய்யும் நீண்ட சொற்பொழிவில்கூட தாசிகள் செய்யும் தந்திரங்கள் விவரிக்கப்படுகையில் ஆண் பெண் உறவின் ஆழங்களும் ஜாலங்களும் வெளிவருகின்றன. உதாரணமாக பெரியமனிதர்களை நக்கல்செய்து பேசி இழிவு செய்தும், குற்றேவல்கள் செய்யவைத்தும் அவர்களுடைய உள்ளார்ந்ந்த மசோக்கிய இயல்பைத்தூண்டி விசித்திரமான இன்பங்களை அளிக்கிறார்கள். தங்கள் வீடுகளில் அடிமைமனைவிகளைக் கண்டு பழகிய அவர்களுக்கு இது பிரம்மானந்தமாக இருக்கிறது. பொதுவாகவே ஏமாற்றப்படுவதற்குரிய மனநிலைகளுக்கு அவர்களை தாசிகள் தள்ளுகிறார்கள், ஏமாற்றப்படுவதையே அவர்கள் இன்பமாக எண்ணும்படிச்செய்கிறார்கள். வீட்டில் மனைவி கற்புடன் இருப்பது குறித்து இவ்வாசாமிகளுக்கு எவ்வித ஐயமும் இல்லை. ஆகவே அதில் ஆர்வப்பரபரப்பும் இல்லை. தாசி கற்புடன் தன்னையே நினைத்து உருகி வாழ்வதாகக் கற்பனைசெய்ய விழைகிறார்கள். அதை அவர்கள் உள்மனம் நம்புவதில்லை. ஆகவே மனப்போராட்டம், அலைக்கழிப்பு. இந்த மன அலைகளே அவ்வுறவின் முக்கியக் கவர்ச்சியாக அமைந்து அவர்களை மூழ்கடிக்கின்றன. இத்தகைய நுட்பங்கள் இன்றும் ஒருவாசகனுக்கு மிக முக்கியமானவையே. உண்மையில் இன்று இந்நாவலின் முக்கியத்துவம் இந்த ஆழ்தள உளவியல் அவதானிப்பு மூலம் உருவாவதேயாகும்.

மூலநாவலின் தலைப்பு இப்பதிப்பாளரால் மதிபெற்ற மைனர் என்று சுருக்கப்பட்டுள்ளது. இது நல்ல வழக்கமல்ல. கூடவே ஒரு நல்ல சமகால ஆய்வு எழுதிச்சேர்க்கப்பட்டிருக்குமென்றால் இன்றைய வாசகனுக்கு உதவியாக இருந்திருக்கும். இதை மறுபிரசுரம் செய்ய முயற்சி எடுத்துக்கொண்ட நாவலாசிரியர் சோலை சுந்தரப்பெருமாள் பாராட்டுக்கு உரியவர்

****

தமிழ்ப் புதுக்கவிதை வரலாறு [ இலக்கிய வரலாறு]

ராஜமார்த்தாண்டன்

தமிழினி

தமிழ் புதுக்கவிதையின் வரலாறு குறித்துப் பேசும் நூல்களில் முக்கியமாக இதுகாறும் குறிப்பிடப்பட்டது வல்லிக் கண்ணன் எழுதிய ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் ‘[ இந்நூலுக்காக அவர் சாகித்ய அக்காதமி விருது பெற்றார்] . அக்கினிபுத்திரன் [ கனல் மைந்தன்] எழுதிய புதுக்கவிதைவரலாறு மிதமிஞ்சி வானம்பாடி இயக்கப் புகழ்பாடுவதாகையால் பொது வரலாறாகப் பொருட்படுத்தப்படுவதில்லை. சி சு செல்லப்பாவே புதுக்கவிதை குறித்து எழுதியிருக்கிறார் . அது எழுத்து இதழ் சார்பான பார்வை. வல்லிக்கண்ணனின் நூல் சமநிலையுள்ள நுட்பமான பார்வையும் ஏராளமான தகவல்களும் கொண்டது. வல்லிக்கண்ணன் தமிழ்புதுக்கவிதையுடன் சேர்ந்தே வளர்ந்தவர் என்பதனால் அத்தகைய ஒருநூலை அவர் எளிதாக எழுதமுடிந்தது. ஏறத்தாழ ராஜமார்த்தாண்டனும் வல்லிக்கண்ணன் போன்றவர். எழுத்து காலகட்டத்துக்குப் பிறகான புதுக்கவிதை இயக்கத்துடன் சேர்ந்தே முப்பதாண்டுகாலமாக வளார்ந்தவர். கொல்லிப்பாவை இதழில் முக்கியமான கவிதைகளையும் விவாதங்களையும் வெளியிட்டவர். ஏற்கனவே சி மணி , பசுவய்யா , நகுலன் போன்றவர்களைப்பற்றிய விரிவான ஆய்வுக்கட்டுரைகளை அவர் எழுதியுமுள்ளார். ஆகவே இந்நூல் அடிப்படையான தகவல்பலமும் சீரான விமரிசனநோக்கும் கொண்ட முக்கியமான வரலாற்று ஆவணமாக உள்ளது.

ராஜமார்த்தாண்டனின் நோக்கு எழுத்து இதழ் உருவாக்கிய கவிதைவடிவம், பொதுவான கலைநோக்கு ஆகியவற்றை பெரிதும் சார்ந்துள்ளது. அவரது பார்வையில் அதிக முக்கியத்துவம் பெறுபவர்களும் எழுத்து காலகட்ட முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி, நகுலன், சி மணி, பிரமிள், பசுவய்யா ஆகியோரே. இது இயல்பானதே. இன்றைய புதுக்கவிதையில் எழுத்து உருவாக்கிய வடிவமும் நோக்கும்தான் மேலோங்கி உள்ளது. ஆனந்தவிகடன் குமுதம் ஆகிய இதழ்களில்கூட எழுத்து உருவாக்கிய வடிவத்தைக் கொண்ட ஆக்கங்களையே நாம் காண்கிறோம். எழுபதுகளில் வானம்பாடி இயக்கம் உருவாக்கிய வடிவமும் நோக்கும் இன்று மிகச்சில கவிஞர்களின் தனிப்பட்ட கைப்பழக்கமாக மட்டுமே எஞ்சியுள்ளன.

1950களில் சி சு செல்லப்பாவால் வெளியிடப்பட்ட எழுத்து இதழ் உருவாக்கிய கவிதைநோக்கின் இயல்புகளாக கீழ்க்கண்ட அம்சங்களைச் சொல்லலாம். 1] கவிதையின் மறைபிரதிக்கு [subtext] முக்கியத்துவம் தந்து வாசகனின் கற்பனையை தூண்டும் விதமாக எழுதுவது 2] கவிதைமொழியை ஆர்ப்பாட்டமில்லாமல், அணிகளோ அலங்காரங்களோ இல்லாமல், முடிந்தவரை எளிமையாக, பேச்சுமொழிக்கு அருகேவரும்விதமாக அமைப்பது 3] கவிதைவடிவில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாக சொற்களை பயன்படுத்துவது 4] இசையமைதியைத் தவிர்த்துவிடுவது 5] கவிஞனின் அந்தரங்கமான குரலையே கவிதையில் வெளிப்படுத்துவது. பொதுவான கருத்துக்களையும் குரல்களையும் தவிர்த்துவிடுவது .

இதற்கு மாறான அமைப்பாக உருவானது வானம்பாடி இயக்கம். அப்துல் ரகுமான், சிற்பி, மு மேத்தா, நா காமராசன், மீரா ஆகியோர் இவ்வியக்கத்தின் முக்கிய கவிஞர்களாக உருவாகிவந்தார்கள்.வைரமுத்து இவ்வியக்கத்தின் அடுத்தகட்ட நீட்சியே. இதில் எழுதினாலும் அபி எழுத்து அழகியலைக் கொண்டவர். எழுபதுகளில் அக்கினிபுத்திரன் , ஞானி, சி ஆர் ரவீந்திரன் ஆகியோரால் நடத்தப்பட்ட வானம்பாடி இதழ்மூலம் உருவான நோக்கு இது. இது 1] வெளிப்படையான, நேரடியான, மறைபிரதி ஏதும் இல்லாத குரல் 2] தளர்வான கட்டுப்படில்லாத வடிவம் 3] பொதுவான அரசியல் சமூகக் கருத்துக்கள் மற்றும் அறைகூவல்கள் 3] அணிகள் சொல்விளையாட்டுக்கள் கொண்ட மேடைப்பேச்சு நடை ஆகியவை கொண்டது.

ராஜமார்த்தாண்டன் தமிழ்ப்புதுக்கவிதை வரலாற்றை இருவகையான முரணியக்கமாக சரியாகவே சித்தரித்துள்ளார் என்றே நான் எண்ணுகிறேன். அது முதலில் சத்தற்ற செய்யுளியக்கத்துக்கு எதிராகவும் பிறகு வான்ம்பாடிகளின் உரத்த குரல்களுக்கு எதிராகவும் செயல்பட்டு அதன் விளைவாகவே தன் இயல்புகளை அடைந்தது. அதை நுட்பமாகப் பகுத்துப் பார்த்தால் இப்படிச் சொல்லிவிடலாம் — மொழியை உதாசீனமாகவும் சாரமற்றும் பயன்படுத்துவதற்கு எதிரான போரே தமிழின் புதுக்கவிதை இயக்கமாகும்.

அதேசமயம் ராஜமார்த்தாண்டன் இந்நூலில் வானம்பாடி இயக்கத்தை சற்று கடுமையாகவே விமரிசனம் செய்துள்ளார் என்பதையும் மறுக்க இயலாது. இன்று புதுக்கவிதைவடிவம் துணுக்கு வடிவில் சீரழிய அவர்களே காரணம் என்று அவர் எண்ணுகிறார். வானம்பாடிகள் வெறுமே அரசியல் கோஷங்களையும் சொல்லலங்காரங்களையும் மட்டுமே எழுதினர் என்கிறார்.

வானம்பாடிகளின் முன்னோடி கவிதை வடிவம் கலீல் கிப்ரான், ரூமி, நெரூதா ஆகியோரின் கவிதைகள் . அமூலக் கவிதைகள் அறிக்கைத்தொனியும் வெளிப்படையான வேகமும் கொண்ட ஆக்கங்களே. அதுவும் கவிதையின் வடிவ இயல்புகளில் ஒன்றே. அத்தகைய கவிதைகள் உலகம் முழுக்க எழுதப்பட்டும் வருகின்றன. அது எழுத்து உருவாக்கிய ‘நவீனத்துவ ‘ Modernism] வடிவுக்கு எதிரானது . ராஜமார்த்தாண்டன் எளிதாக அதை திறனற்ற வடிவம் என்றும் அதை வானம்பாடிகள் உருவாக்கினர் என்றும் சொல்லிவிடுகிறார். அவர் அவ்வடிவை வானம்பாடிகள் எந்த அளவுக்கு ஆத்மார்த்தமாகவும் நேர்த்தியாகவும் கையாண்டனர் என்பதை அளவையாகக் கொண்டிருக்கவேண்டும்.

வானம்பாடி இயக்கம் சில சாதகமான விளைவுகளுக்கும் காரணமாக அமைந்தது என்பதே என் எண்ணமாகும்.1] அது புதுக்கவிதை வடிவை எளிமைப்படுத்தி பரவலாகக் கொண்டு சென்றது. தமிழ்ச்சமூகத்தின் அனைத்து தரப்பினரும் புதுக்கவிதையை தங்கள் ஊடகமாகக் கொள்ள வழிவகுத்தது .அதன்மூலமே பலவகையான மக்கள்தரப்பிலிருந்து கவிதைகள் உருவாயின. அவற்றில் பெரும்பாலானவை வெற்று வெளிப்பாடுகளாக இருந்தாலும் பல அசல் கவிதைக்குரல்களும் உருவாகி வந்தன. 2] பரவலாக ஆனதன் மூலம் புதுக்கவிதை சார்ந்த நுண்ணுணர்வை வானம்பாடி இயக்கம் பொதுமக்களிடையே உருவாக்கியது. எழுத்துவகை புதுக்கவிதை இன்று பரவலாக வாசிக்கப்படுகிறதென்றால்கூட அதற்குக் காரணம் இந்த நுண்ணுணர்வுதான். இன்று திரைப்படப் பாடல்களில்கூட புதுக்கவிதையின் நுண்ணுணர்வு இடம் பெற்றுள்ளதென்றால் காரணம் வானம்பாடி இயக்கமே. [உதா; காற்றே என் வாசல் வந்தாய் / மெதுவாகக் கதவு திறந்தாய்/ காற்றே உன் பேரைக்கேட்டேன் காதல் என்றாய் ] இந்தப் பங்களிப்புகளை கருத்தில் கொண்டபிறகே விமரிசனங்கள் அமையவேண்டும்.

இன்று நாம் புதுக்கவிதையின் சாதனைகளையும் சரிவுகளையும் தொகுத்துப்பார்க்கவேண்டிய காலத்தில் நிற்கிறோம். அதை பலகோணங்களிலான விவாதம் மூலமே நிகழ்த்த முடியும். இத்தகைய பலவகையான அவதானிப்புகளுக்கு உரிய முக்கியமான வரலாற்று ஆவணம் இந்த நூல். இந்நூலில் பிற்காலக் கவிஞர்களைப் பற்றிய மதிப்பீடுகள் சற்று சுருக்கமாக செய்யப்பட்டுள்ளன. விவாதம் அவற்றை வளர்க்கக் கூடும்.

****

கிழவனும் கடலும் [மொழிபெயர்ப்பு நாவல்]

தமிழில் எம் எஸ்

காலச்சுவடு பதிப்பகம்

எர்னஸ்ட் ஹெமிங்வேயின் உலகப்புகழ்பெற்ற சிறிய நாவலின் இரண்டாவது தமிழாக்கம் இது. ச து சு யோகியாரின் மொழிபெயர்ப்பு அக்காலத்தில் பாராட்டப்பட்டது. அதில் பல வரிகள் விடுபட்டுள்ளான என்று கண்டு நவீன மொழியில் இது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. எம் எஸ் வரிக்கு வரியும் , சரளமாகவும் மொழியாக்கம் செய்துள்ளார். ஆகவே சரளமாக படிக்க முடிகிறது.

இந்நாவல் முற்றிலும் ஓர் ஐரோப்பிய மதின் படைப்பு. ஐரோப்பிய மனதுக்கு உகப்பது. இயற்கையை ‘வெல்லும் ‘ மனிதனை அவர்கள் மீண்டும் மீண்டும் எழுதுகிறார்கள். இந்நாவலைப்பற்றி வைக்கம் முகமது பஷீர் சொன்னதாக எம் டி வாசுதேவன் நாயர் ஓரிடத்திலே எழுதினார் . ‘ அது ஒரு சோட்டா நாவல். கடல் வெறும் தண்ணீராக உள்ளது ‘ ஒருவேளை இந்நாவல் குறித்து முன்வைக்கப்பட்ட மிகப்பெரிய விமரிசனம் இதுவாக இருக்கலாம். கடல் என்ற விரிவை, ஓய்வின்மையை, ஒளியிருள் வெளியை நாம் இந்நாவலில் காணாமுடியாது. சாண்டியாகோ காண்பது வெறும் கடலை. மீனவன் அப்படிக் காணாலாம். நாவலாசிரியன் காணும் மீனவனுக்கு அப்படி மட்டும் காணமுடியாது.

இந்நாவல் அமெரிக்க இலக்கிய விமரிசகர்களால் உலக இலக்கியமாக தூக்கப்பட்டபோது இங்கே எழுந்த எதிர்வினைகளை இப்போது படித்தால் சிரிப்பு வருகிறது. இந்நாவலை போலிசெய்யும் ஆக்கங்கள் எல்லா மொழியிலும் எழுதப்பட்டன.நம் அறிவுஜீவிகள் எந்த அளவுக்கு வெள்ளைத்தோலுக்கு பக்தியுடன் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இது. அக்காலகட்டத்திலேயே பஷீர் தன் தனித்துவம் கொண்ட குரலை முன்வைத்தார். இன்று சாதாரண வாசகன் கூட ஹெமிங்வேயை பெரிதாக எண்ண மாட்டான். நம் இலக்கியம் விமரிசகர்கள் மற்றும் வாசகர்களை மீறி பஷீர் போன்ற மூலப்படைப்பாளிகளை நம்பியே தன் தனித்தன்மையை நிலைநிறுத்தி வந்துள்ளது.

****

தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

சுஜாதா

உயிர்மை பதிப்பகம்

சுஜாதாவுக்கு தமிழ்ச் சிறுகதையில் முக்கியமான இடம் உண்டு என்று 1990களில் நான் சொன்னபோது தனிப்பேச்சில் அதை ஒப்புக் கொண்ட பலர் [உதா; சுந்தர ராமசாமி , எம் யுவன்]எங்குமே அதை பதிவுசெய்தது இல்லை. நான் அதை எழுதி விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறேன். இப்போது அத்தகைய விவாதத்துக்கு இடமில்லாமலேயே அவ்விஷயம் பரவலாக ஏற்கப்பட்டுள்ளதை நேர்ப்பேச்சுக்களில் காண்கிறேன். சுஜாதாவின் நடை சிறுகதைக்கு உரியது. சுருக்கம் , நேர்கோட்டில் வேகமாகத் தாவிச்செல்லும் இயல்பு ஆகியவை காரணம். இவ்வியல்புகள் நாவலுக்கு தடையாக அமைவதை ரத்தம் ஒரே நிறம் முதலிய ஆக்கங்களில் காணலாம். சிறுகதையின் செவ்வியல் [ ஓ ஹென்றி பாணி] வடிவில் நம்பிக்கை கொண்டவர் சுஜாதா. சம்பவங்களை நம்பியே கதையை அமைத்தல், குறைவான கதைமாந்தரும் சிறிய கால அளவும், மையமுடிச்சு இறுதித் திருப்பத்தால் அவிழ்க்கப்படுதல் ஆகிய இயல்புகள் கொண்டது அது. அவரது கதைகள் வலுவான வடிவ உணர்வுடனும் நேர்த்தியான மொழியுடனும் அமைக்கப்பட்டவை.

சுஜாதாவின் கதைகளின் பலவீனம் இரண்டு . ஒன்று பெரும்பாலான கதைகளில் அவரது கதைமுடிவுகள் இதழியல் எழுத்துக்கு உரிய எளிய உத்திவிளையாட்டாகவோ அல்லது பொதுவான நியாயம் சார்ந்த முடிவுகூறலாகவோ உள்ளன. முதல்வகைக்கு உதாரணமாக ஒரே ஒரு மாலை, வழி தெரியவில்லை,சென்ற வாரம் முதலிய கதைகளைச் சொல்லலாம். இரண்டாம் வகைக்கு அம்மா மண்டபம் ,கள்ளுண்ணாமை ,கால்கள் , கரைகண்ட ராமன் முதலிய கதைகளை. இக்கதைகள் வாசக ஆர்வத்தை தக்கவைத்துக் கொள்ளும் வேகம் மற்றும் மேல்தள நுட்பம் கொண்டவை. சுஜாதா ஒரு கைதேர்ந்த சித்தரிப்பாளார் என்பதிலிருந்து உருவாகும் இயல்புகள் இவை. ஒரு காட்சியை அல்லது நிகழ்வைச் சொல்ல அவர் தேவையற்ற எதையுமே சொல்வதில்லை. ஆகவே வேகம் . சித்தரிப்பில் எப்போதுமே நுட்பமான அவதானிப்புகள் உள்ளன. ஆனால் இத்தகைய கதைகள் வாசிப்புமுடிவில் சட்டென்று இல்லாமலாகிவிடுகின்றன.

இங்கே முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சுஜாதாவின் கதைகள் உணர்ச்சிகரத்தன்மை இல்லாதவை. நெகிழ்வை நோக்கிச் செல்பவையோ, மன எழுச்சிகளை உருவாக்குபவையோ அல்ல. சுஜாதாவின் தொடக்கம் தமிழில் தி ஜானகிராமன், அசோகமித்திரன் ஆகியோரில் இருந்து. ஆங்கிலத்தில் ஹெமிங்வே முதல் ரே பிராட்பரி வரை பலர். ஜானகிராமனில் இருந்து அவர் பெற்றுக் கொண்டது நுட்பமான தகவல்களை அடுக்கி கதை சொல்லும் முறை. அசோகமித்திரனில் இருந்து கறாரான விலகலை. இருவரில் இருந்தும் அவர் வேறுபடுவது உணர்வுரீதியாக வாழ்க்கையில் ஈடுபடாத அறிவுஜீவியின் அங்கதம் கொண்ட நோக்கு மூலம். ஆகவே அவரது கதைகள் ‘ நெஞ்சைத் தொடுவது ‘ இல்லை — இதை பல வாசகர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

சுஜாதாவை முக்கியச் சிறுகதைக்காரர் ஆக்குபவை இத்தொகுதியில் உள்ள பலவகையான நல்ல கதைகள்.அவரது கதைகள் நான்குவகை. நம் நினைவுகளை நுட்பமான தகவல்கள் மூலம் தூண்டி நடுத்தர வற்கவாழ்வின் செறிவான சித்திரம் ஒன்றை அளிப்பவை. உதாரணம் : மகன் தந்தைக்கு ,வீடு, சிலவித்தியாசங்கள் ,செல்வம் ,எல்டொராடோ , ரேணுகா. நம் தர்க்கபுத்தியை புனைவாட்டம் மூலம் சற்றே அசைத்து மேலே கற்பனைசெய்ய வைப்பவை. ஒருவகையான விடையின்மையை உணரச்செய்பவை. இதை அவர் அறிவியல்சிறுகதைகளைச் சார்ந்து உருவாக்கிக் கொண்ட எழுத்துமுறை எனலாம். உதாரணம்: பார்வை, ரஞ்சனி ,நீர் ,நிபந்தனை, நிதர்சனம், சாரங்கன். மூன்றாவதாக உற்சாகமான கதைசொல்லல் மூலம் நம்மை புன்னகைக்க வைக்கும் கதைகள். சுஜாதாவின் தலைசிறந்த கதையாக நான் எண்ணும் ‘குதிரை ‘ இவ்வகையை சார்ந்தது. மாமாவிஜயம், சார் இந்த அக்கிரமத்தை போன்ற கதைகளை இவ்வகையில் சேர்க்கலாம். நான்காவது வகை ஒரு வகையான பகீரடலை உருவாக்கும் கதைகள். கரிய நகைச்சுவை கொண்டவை. தார்மீக உணர்வை தொட்டு சீண்டுபவை. இத்தொகுதியில் நகரம், முரண், நிலம் ,நொ ப்ரொப்ளாம், எப்படியும் வாழலாம்,பாரீஸ் தமிழ்ப்பெண் முதலிய கதைகள் இவ்வகை.

இந்த நான்குவகை கதைகளுக்கும் வாசகன் கதைகளுடன் உணர்வுரீதியாக ஒன்றவேண்டிய தேவை இல்லை என்பதைக் காணலாம். சிறுகதைவாசிப்பை ஒருவகை விளையாட்டாக மேற்கொண்டாலே இவை தங்கள் விளைவை நிகழ்த்திவிடுகின்றன. இத்தகைய கதைகள் தமிழுக்கு ஏன் முக்கியமென்றால் தமிழில் பெரும்பாலான பிற எழுத்தாளர்கள் — நான் உள்பட — தீவிரமாக வாசகனை ஈடுபடச்செய்யும் ஆக்கங்களையே எழுதிவருகிறோம் என்பதனால்தான். ஆகவே சுஜாதாவின் ஆக்கங்களை ஒருவகை விளையாட்டுகளாக எடுத்துக் கொண்டு அவ்விளையாட்டு உருவாக்கும் அனுபவங்களை வாசிக்க முயலவேண்டும். மற்ற கதைகளின் அளவுகோல்களைப் போடலாகாது.

சுஜாதாவின் இக்கதைகளை விட மேலாக நான் புதுமைப் பித்தன், லா.ச.ராமாமிருதம், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி , கி ராஜநாராயணன் ஆகியோரின் ஆகங்களை முன்வைக்க நான்கு காரணங்களைச் சொல்வேன். 1] சுஜாதா சிறுகதைக்குள் கவித்துவத்தை அடைவதே இல்லை . மேலான சிறுகதை ஒருவகை கவிதை – சுந்தர ராமசாமியின் பல்லக்குதூக்கிகள் போல. 2] சுஜாதா தீவிரமான அறஎழுச்சியை அடைவதில்லை, உருவாக்குவதில்லை. மேலான கதைகள் காலத்தால் பழமைகொள்ளாத அறவேகம் கோண்டவை– அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் போல. 3] சுஜாதா கதையில் ஒருபோதும் அவரை விலக்கிக் கொள்வதில்லை. மேலான கதைகள் எழுத்தாளனைவிட பெரியவை. அவனது அறிவையும் மனதையும் மீறி ஆழ்மனம் வெளிப்படுபவை. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் போல. 4] சுஜாதாவிடம் நம் மரபின் நேர் அல்லது எதிர் விளைவுகள் இல்லை. மேலான ஆக்கங்கள் மரபின் நீட்சியாக நின்று மரபை மறு ஆக்கம் செய்கின்றான. கி ராஜநாராயணனின் பேதை போல.

ஆயினும் சமகால சிறுகதை இலக்கியம் சுஜாதா இல்லாமல் முழுமைபெறுவது இல்லை. இந்த முதல் தொகுப்பு அதை உறுதி செய்கிறது. நூலின் அட்டை எனக்கு பிடிக்கவில்லை. நேர்த்தி அற்ற அபத்தமான கோடுகள்.

—-

jeyamoohannn@rediffmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்

சமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் ,

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

ஜெயமோகன்


இதுதான் என்பெயர் [நாவல்]

சக்கரியா

தமிழாக்கம் சுகுமாரன்

அகரம் பதிப்பகம் சென்னை

சக்கரியா தமிழில் பஷீருக்கு அடுத்தபடியாக மதிக்கப்படும் மலையாள எழுத்தாளர். அவரது பெரும்பாலான ஆக்கங்கள் தமிழில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. இந்த நட்சத்திர மதிப்பு காரணமாக அவரது இந்நூல் மலையாளத்தில் வெளியாகி சில நாட்களுக்குள்ளாகவே தமிழில் வெளியாகியது. அதைவிட ஆச்சரியம் ஜெயஸ்ரீ மொழிபெயர்ப்பில் ஒருமுறையும் இந்த மொழிபெயர்ப்பு பிறகுமாக இது வெளியானமைதான்.இதை ஒரு நாவல் என்று சொல்வது மிகை. ஒருவகை உருவகச்சிறுகதை இது. சரியாக அச்சிட்டால் இருபது பக்கம் வரக்கூடும். காந்தியைக் கொன்ற கோட்சேயை உளவியல், வரலாற்று ரீதியாக அணுக முயல்கிறது . காந்தியை சுட்ட பின் மடக்கிப்பிடிக்கப்பட்டு உன்பெயர் என்ன என்று வினவப்பட்ட அக்கணம் முதல் வண்டியில் ஏற்றப்படும் வரையிலான சில நிமிடங்களை கால அளவாகக் கொண்டு கோட்சேயின் வரலாற்றுப் பின்னணியைச் சொல்ல முயல்கிறது .

கோட்சேயின் உண்மையான வரலாற்றை ஆராயவோ அவரது உளச்சிக்கல்களுக்குள் செல்லவோ சக்கரியா முயலவில்லை. காந்தி உருவாக்கிய தார்மீகம் லெளகீக அரசியல் தளத்தில் ஏற்படுத்திய சிக்கல்களுக்குள் செல்லவும் இல்லை. மாறாக கோட்சேயை வரலாறெங்கும் நிரம்பியிருக்கும் மத சகிப்பின்மை, இனக்காழ்ப்பு , அழிவுநோக்கு ஆகியவற்றுடன் படிப்படியாக இணைத்து அப்போக்குகளின் நீட்சியே அவர் என்று வரையறுக்க முயல்கிறார். மூலநூலில் புதுக்கவிதைக்கு அருகே செல்லும் ஒரு நடை இருந்தது, அதை சுகுமாரன் சிறப்பாக தமிழில் கொண்டு வந்திருக்கிறார். பலவிதமான உளஎழுச்சிகளை உருவாக்கும் இந்த ஆக்கம் அதேசமயம் ஒற்றைப்படையான வேகம் மட்டுமே கொண்டது என்பதையும் மறுக்க இயலாது.

====

கொங்குத்தேர் வாழ்க்கை [மரபுக் கவிதைத்தொகைநூல்]

தொகுப்பு சிவகுமார்

தமிழினி வெளியீடு

தினமணி நாளிதழின் துணை ஆசிரியரான [மீசை] சிவகுமார் தமிழ் இலக்கியச்சூழலின் நண்பர்வட்டத்தில் அறியப்பட்ட ஆளுமை. மிக விரிவான இலக்கிய அறிமுகமும் , வியப்பூட்டும் தமிழ் மரபிசைப் பயிற்சியும் மிக்கவர் அவர். தினமணி வெளியிடும் புகழ்பெற்ற ‘இசைமலர் ‘களுக்கு பின்னால் உள்ள உழைப்பு அவருடையது. சிவக்குமாரின் முதல் நூல் இது. சங்க காலம் முதல் செய்குத்தம்பிப் பாவலர் வரை நீளும் காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைப்பெரும்பரப்பிலிருந்து தன்னைக் கவர்ந்த ஏறத்தாழ 750 கவிதைகளைச் சேர்த்து இத்தொகைநூலை உருவாக்கியிருக்கிறார். தனிக்கவிதைகள், காவியங்களில் இருந்து சிறந்த சில பகுதிகள் என தேர்வு நிகழ்ந்துள்ளது. சிவக்குமாரின் சுருக்கமான எளிய உரை பாடல்களுக்குள் செல்வதற்கு உதவியாக உள்ளது. அதேசமயம் பாடல்களை மறைக்கவுமில்லை. தமிழிலக்கிய மரபின் விரிவையும் பன்முகத்தன்மையையும் அழகையும் அறிய உதவக்கூடிய மிக முக்கியமான நூல் இது. சில பக்கங்கள் புரள்வதற்குள் கவிதையின் மொழியும் பொருளும் முகமும் ஆத்மாவும் மாறும் ஆச்சரியம் திகட்டாதது. தமிழன்றி வேறு ஒரு மொழியில் இத்தகைய பேரனுபவம் கிடைக்க முடியாது. மலைகள் மீது பறப்பதுபோல நாம் நூற்றாண்டுகள் மீது பறக்கிறோம்.

தீம்பெரும் பொய்கை ஆமை இளம்பார்ப்புத்

தாய்முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்கு

அதுவே ஐய நின் மார்பே

அறிந்தனை ஒழுகுமதி அறனும் ஆரதுவே [ ஓரம்போகியார். ஐங்குறுநூறு]

இனிய நீர் பொய்கையில் வாழ்கிற ஆமை தன் குட்டிகளைப் பேணாவிடினும் அவை தாய்முகம் கண்டு அந்த ஆறுதலிலே வளரும். அதுபோல உன்னையே உன் மார்பையே பார்த்து உயிர்வாழ்கிறாள் தலைவி. ஆகவே அவள் உயிர்வாழ உதவுவதே உன் கடன்

முட்டையிட்டு மணலில் கைவிட்டுவிட்டு செல்லும் ஆமை அடைகாப்பதோ பால்கொடுப்பதோ பேணுவதோ இல்லை என்ற தகவலுடன் வாசிக்கும்போது எத்தனை நுட்பமான மறைபிரதிகொண்ட பாடல் இது என்ற வியப்பு உருவாகிறது. ஏறத்தாழ பதினைந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு

செருப்புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்

பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு

தண்தேன் பொழிந்த திரு தாமரைமேல் வீற்றிருக்கும்

வண்டே விளக்குமாறே

[காளமேகம். தனிப்பாடல் .செருப்பு தொடங்கி விளக்குமாறுக்கு பாடியது]

போர்க்களத்திலே புகுந்து பகைவர்களை கலங்கவைக்கும் வேலாயுதம் தாங்கியோனும் மலைகளுக்குத் தலைவனுமாகிய முருகனை அணைவதற்குத்துடிக்கிறது என் மனம். குளிர்ந்த தேன்பொழியும் தாமரையில் வீற்றிருக்கும் வண்டே அவனிருக்கும் இடம் எங்கே என்று விளக்கிக் கூறுவாயாக

என்றகவிதைவரை வருகையில் ரசனையின், மொழியின், ஒரு யுகமே புரண்டிருப்பதைக் காண்கிறோம்.

சிவக்குமாரின் தனிப்பட்ட ரசனையின் விளக்கமாக அவர் ஆண்டாள் பாடலுக்கு அளித்துள்ள சிறப்பு விளக்கமும் வைணவ உரைமரபு குறித்த அழகிய பின்னடைவும் உள்ளான. வைணவ உரையாசிரியர்களையும் ஒருவகை கவிஞர்களாக அவர் கொண்டிருப்பதை சிறப்பான பார்வை எனலாம்.

இந்நூலில் குறைகளாக என் வாசிப்புக்குப் பட்டவை இரண்டு விஷயங்கள். சிவக்குமாரின் ரசனை தமிழின் மொழியழகை முக்கியமாகக் கவனிப்பது. ஆகவே அறம், பெருங்கருணை ஆகியவை வெளிப்படும் ஆக்கங்களை விட மொழிநுட்பம் செறிந்த ஆக்கங்கள் முன்னிலைப்படுகின்றன. சிற்றிலக்கியங்கள் இந்நூலில் அதிக இடம் பெற்றிருப்பது இதனால்தான். ஒப்புநோக்க சங்க இலக்கியங்களின் இடம் குறைவாக உள்ளது. இரண்டாவதாக இப்போது கிடைக்காத, பொதுவாக வாசகர்கள் அறிந்தேயிராத பல ஆசிரியர்கள் அவர்களின் அபூர்வத்தன்மை காரணமாகவே நூலில் இடம் பெற்றுள்ளனர். உதாரணம் செண்பகராமன் பள்ளு. அவற்றில் சில உயர்ந்த கவித்துவம் கொண்டவை என்று சொல்ல முடியவில்லை. ஆனால் இவ்விரு இயல்புகளையும் இந்நூலின் சிறப்புகளாகச் சொல்பவர்களும் இருக்கலாம்.

====

யுரேகா என்று ஒரு நகரம் [நாவல்]

எம் ஜி சுரேஷ்

புதுப்புனல் வெளியீடு

சென்னை

எம் ஜி சுரேஷ் பின்நவீனத்துவப் பாணியில் எழுதுபவராக தம்மை அறிவித்துக் கொண்டிருப்பவர். அப்போக்கின் இயல்புகளாக அவர் காண்பவை 1 ] உணர்ச்சிகளோ அழகுகளோ நுட்பங்களோ வெளிப்படாத நேரடி சித்தரிப்பு முறை– இதை அவர் ஜீரோ நடை என்கிறார். 2] செயற்கையாக உருவாக்கப்பட்ட சிக்கலான கதைப்பரப்பு மற்றும் வடிவம். இவ்விரு இயல்புகளும் கொண்ட அவரது முந்தைய நாவல்கள் போன்றதே இந்நாவலும். அந்தமான் அருகே ஒரு நகரம் நீருக்குள் கண்டடையப்படுகிறது. அதன் வயது பத்தாயிரம் என்று சொல்லப்படுகிறது. ஜனாதிபதி அதற்கு யுரேகா என்று பெயர் போடுகிறார். அதைப்பற்றிய பரபரப்பின் ஊடாக அதனுடன் தொடர்புள்ள பலர் கொல்லப்படுகிறார்கள். இறுதியில் தங்கள் வணிக நோக்கத்துக்காக இந்திய மக்களின் கவனத்தை திசைதிருப்பும்பொருட்டு சில பன்னாட்டுநிறுவனங்கள் உருவாக்கிய போலி நகரம் அது என்று தெளிவாகிறது. சர்வ சாதாரணமான கதை. முதிராத எழுத்துமுறை .அங்கதம் கூட எந்தவகையிலும் மனதைக் கவராமல் உள்ளது. உண்மையான வரலாற்றாய்வு முறைமையைக் கவனிப்பவர்கள் வரலாற்றாய்வு இந்நாவலில் உள்ளதுபோல எளிய ஒன்றல்ல என்பதை அறிவார்கள். உண்மையில் நம் வரலாற்றாய்வில் தர்க்கத்தை சுழற்றியடிக்கும் , அபத்த உணர்வை உருவாக்கும் பற்பல புதிர்கள் இன்னும் உள்ளன. உதாரணம் சங்கம் என்பது என்ன என்ற வினா. சரியான நாவலாசிரியன் அவற்றிலிருந்துதான் நாவலைத் தொடங்குவான். உண்மையா கற்பனையா என்று வரலாற்றாய்வாளானே மயங்கும்படி மெய்யையும் பொய்யையும் கலந்து புதிய புதிய தர்க்கங்களுடன் நாவலை சுழற்றிச்செல்வான். பின்நவீனத்துவநாவல் என்பது நாம் அறிந்து தொகுத்து வகைப்படுத்தி வைத்துள்ள அறிவின் அமைப்பை குலைத்து விளையாடி நம்மை புதிய தளங்களுக்குள் செலுத்துவதாக இருக்கும். அப்படிப்பட்ட நாவல் ஏற்கனவே இருக்கும் அறிவுத்தளத்தின் உச்ச எல்லையிலிருந்து மேலே செல்லக்கூடியதாகவே இருக்கும் . அதை எழுத ஆராய்ச்சியாளனின் கடும் உழைப்பும் ஒவ்வொரு தளத்திலும் புதிய திறப்புகளும் தேவை. அப்படி போகுமிடமெல்லாம் மொழி வளைந்து கூடவே வரவேண்டும். அதாவது தர்க்கத்தை நன்கறிந்து கடந்துசென்ற ஒருவனே தர்க்கங்களை குலைத்து விளையாட இயலும். சுரேஷின் இந்நாவல் மிகவும் எளிமையானதாக உள்ளது. வரலாற்றாய்வின் எளிய அடிப்படைகளை அறிந்த ஒருவர் சற்றே ஏளனம் தெரியும் ஒரு புன்னகையுடன் இதை தாண்டிச்செல்வார். எளிய கதையாகக் கூட இதை அலுப்பூட்டுவதாகவே கொள்ள இயலும்.

====

ஆசை [திரைக்கதை]

வசந்த்

சந்தியா பதிப்பகம்

வசந்த் எழுதி இயக்கிய சினிமாக்களின் கேளடிகண்மணி , ஆசை இரண்டும்தான் அதிகமான புகழ்பெற்றவை. சினிமாவின் அழகியலை அதிகம் நெருங்கி வருபவை. இரண்டுமே வசந்துக்கு மிகவும் நெருக்கமான நகர்ப்புற மத்தியவற்க வாழ்க்கையைக் காட்டக் கூடியவை. ரிதம் உட்பட அவரது மூன்று திரைக்கதைகள் இப்போது சந்தியா பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளன. ஆசை வணிகத் தமிழ் சினிமாவுக்குத் தேவையான பாடல்கள், சற்று மிகையான காதல்காட்சிகள் , சற்றே கொடூரமான வில்லன் ஆகிய அம்சங்கள் கொண்டிருந்தாலும் நேர்த்தியான திரைக்கதையும் படமாக்கலும் கொண்டது. கதை தொடங்கும்போது தெருக்கூத்து ராவணனில் இருந்து காட்சி முளைக்கும் விதம் , யமுனாவுக்கும் அவள் அக்காவுக்கும் இடையேயான சகஜமான உறவு , நிலைமீறிய காமம் மெல்ல மெல்ல மாதவன் மனதில் ஊறி அவனை மிருகமாக்கும் விதம், இயல்பான தந்திரத்தால் அவன் படிப்படியாக கட்டியெழுப்பும் வலை எல்லாம் யதார்த்தமாகவும் மனதைக் கவர்வனவாகவும் உள்ளன. நல்ல திரைக்கதைகள் காலப்போக்கின் அத்திரைப்படத்தைவிட நல்ல சினிமாவை நமக்குக் காட்டும். இதுவும் அப்படிக் காட்டுகிறது.

====

ராமாயணத் தோல்பாவைக்கூத்து [ நாட்டாரியல் பாடல்]

தொகுப்பு டாக்டர் அ. கா. பெருமாள்

காவ்யா பதிப்பகம்

தென் தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ள , இப்போது பெரிதும் அழிந்துவருகிற ஒரு நாட்டார் கலைவடிவம் தோல்பாவைக்கூத்து. இது மண்டிகர் என்ற மராட்டிய நாடோடிக்குழுவினரால் நிகழ்த்தபப்டுகிறது. ஒளி ஊடுருவும் எம்ல்லிய ஆட்டுத்தோலால் செய்யப்பட்ட பல வண்ணப் பொம்மைகளை வெண் துணிக்கு பின்னால் நிறுத்தி குச்சிகளால் ஆட்டுவிப்பார்கள். அதற்கு அப்பால் விளக்கு இருக்கும். வண்ண ஒளி திரையில் பிம்பங்களாக விழுந்து அசைகையில் திரைப்படம் போன்ற ஓட்டம் உருவாகிறது. பாவைகளை ஆட்டுவிக்கும் கலைஞரே கதையையும் பாடுவார். அதிகமும் புராண இதிகாசக் கதைகள். நல்லதங்காள் போன்ற கதைகளும் உண்டு.அக்காலத்தைய காட்சிக்கலைகளில் இது மிக வசீகரமானதாக இருந்துள்ளது. மண்டிகர் பெரிதும் விரும்பப் பட்ட கலைஞர்களாக இருந்துள்ளார்கள். திரைப்படம் இக்கலையை அழிக்க ஆரம்பித்தது.

நாட்டாரியல் ஆய்வாளரான அ கா பெருமாள் அவர்களின் இந்நூல் தோல்பாவைக்கூத்து ஆட்டத்தில் பாடப்படும் ராமாயணப்பாடலை நேரடியாக அவர்களின் வாய்மொழியிலிருந்தே பதிவுசெய்துள்ளது. அதில் உள்ள ‘காமிக் ‘ பகுதிகளான உச்சிக்குடும்பன் உளுவத்தலையன் உரையாடல் தவிர்க்கப்பட்டுள்ளது. காரணம் அவை அன்றாட அரசியல் நிலவரம் , உள்ளூர் செய்திகள் ஆகியவை சார்ந்தவை. மையஓட்டப் பாடல் வழிவழியாகப் பாடப்படுவது. கலைமாமணி பட்டம் பெற்ற ஜி பரமசிவ ராவ் நாகர்கோவில் தட்டான்விளை கிராமத்தில் பத்து இரவுகளாக நடத்திய தோல்பாவைக்கூத்து ஆட்டத்தின் ஒலிநாடாப் பதிவு இது. தோல்பாவைக்கூத்து குறித்த விரிவான அறிமுகம், பொதுவான ராமாயணத்துக்கும் தோல்பாவைக்கூத்து ராமாயணப்பிரதிக்கும் இடையேயான வேறுபாடு ஆகியவற்றை விளக்கி விரிவான ஆய்வுரை ஒன்றை பெருமாள் எழுதியுள்ளார். கதைச்சுருக்கத்துக்குப் பிறகு பாடல்கலந்த உரை வடிவில் நாடகம் உள்ளது.

இந்நாடக வடிவம் மிகுந்த ஆர்வமூட்டுவதாக் உள்ளது. ராமன் லட்சுமணன் எல்லாரும் வழக்கமான கதை ஓட்டத்துடன் இருந்தாலும் அவை மண்டிகர்களால் சொல்லப்படுவதானாலேயே ஒரு ‘நாடோடி ‘ பண்பாட்டுக் கூறும் அக்கதாபாத்திரங்களுக்குள் ஊடாடியிருப்பதைக் காணலாம்.

====

விடிந்தும் விடியா பொழுது [கவிதைகள்]

தேவதேவன்

தமிழினி பதிப்பகம்

தேவதேவனின் சமீபத்திய கவிதைகளின் தொகுதி. இதில் அவரது கவிதைகளுக்கு முக்கியமான ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. முன்பிருந்த படிமத்தன்மை சற்றே விலகி நேரடியான நெகிழ்ச்சியை கவிதைகள் வெளிக்காட்டுகின்றன. வழக்கமான கவிதை உத்திகள் ஏதுமற்ற இந்த நேரடித்தன்மை அதன் ஆத்மார்த்தம் காரணமாகவே முக்கியமான கவிதையனுபவமாக உள்ளது

எத்தனை அழுக்கான இவ்வுலகின்

—-

கொட்டகை நோக்கிச்செல்லும்

காலிக்குப்பைவண்டியின் உள்ளே

ஆற அமர கால்மடித்து அமர்ந்து

வெற்றிலை போட்டுக்கொண்டு

வண்டியசைவுக்கு அசையும்

தன் ஒத்திசைவையும் அனுபவித்தபடி

ஆடி அசைந்து ஓர் அழகான தேவதைபோல

சென்றுகொண்டிருக்கும் பெண்ணே

முகஞ்சுளிக்கும் புத்தாடைகளுடன்

அலுவலம் செல்லும் வேகத்தினால்

பரபரப்பாகிவிட்ட நகரச்சாலை நடுவே…

பணிநேரம் முடிந்த ஓய்வமைதியோ

மாடு கற்பித்த ஆசுவாசமோ

இல்லை

அபூர்வமாய் ஒளிவிடும் பேரமைதியே தானோ…

எத்தனை அழுக்கான இவ்வுலகின் நடுவிலும்

நீ ஒரு மூலையை தேர்ந்தெடுத்துக்கொண்டு

வாழ்ந்தேவிடுவது கண்டு

இன்பத்தாலோ துன்பத்தாலோ

துடிக்கிறதேயம்மா என் இதயம்

====

jeyamoohannn@rediffmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்