ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்து தேவதைகளும்….

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

ஐகாரஸ் பிரகாஷ்


இந்த சிக்கல் எனக்குப் பல முறை நேர்ந்திருக்கிறது. ஒரு ஆக்கத்தைப் படிக்கிறேன். அந்த ஆக்கம் என்னை என்ன செய்கிறது என்பது என் மனதுக்குப் புரிகிறது. ஆனால், அவற்றை விசைப்பலைகை வழியாக உள்ளிடும் பொழுது, அந்த உணர்ச்சி, என்னை அறியாமலேயே சட்டென்று நீர்த்து அல்லது மறைந்து போய்விடுகின்றது.

நினைக்கிற வேகத்துக்கும் எழுதுகிற வேகத்துக்கும் இருக்கும் இடைவெளிதான் காரணம் என்று நண்பர் ஒரு முறை சொன்னார். அந்த சமயங்களில், அந்த உணர்வுகளை எழுதுவதைக் காட்டிலும், வாசித்ததை மனதுக்குள்ளாகவே அசை போட்டு, அந்தரங்கமாக இன்பம் அடைவது மேலானதாக அல்லது என்னால் இயலக்கூடிய காரியமாகப் படும். சில சமயம் காத்திருப்பேன். யாராவது ஏதாவது சொல்கிறார்களா என்று. சொன்னால் அவர்களைப் பின் தொடர்ந்து செல்வது.

ஸ்ரீரங்கத்து தேவதைகளைப் பொறுத்த மட்டில், சென்ற வாரம் திண்ணையில் எழுதிய திரு. ஜெயமோகன் அவர்களின் பின்னால் நிழல் போலத் தொடர்வதிலே சிக்கல் இருக்காது என்று நினைக்கிறேன்.

ஏனெனில் இந்த குறிப்பிட்ட விஷயத்திலே , எனக்குத் தோன்றிய விதமாகத்தான் ஜெயமோகன் அவர்களுக்கும் தோன்றியிருக்கிறது என்பது என் முதல் சந்தோஷம். ‘சுஜாதாவா ? அவர் லைட் ரீடிங்னா ?.. என்று ஒரு அம்மையார் கிண்டல் பண்ணின சுஜாதாவை, ஹெவி ரீடாங் என்று நான் சற்று பயத்தோடே பார்க்கிற ஜெயமோகனுக்கும் பிடிக்கிறது, அதுவும் எனக்குப் பிடிக்கிற விதமாகவே பிடிக்கிறது என்பது இரண்டாவது சந்தோஷம்.

ஸ்ரீரங்கத்து தேவதைகளை, சஞ்சிகைகளில் தொடராக வந்த போது படித்திருக்கவில்லை. மந்தைவெளியில் வாடகை நூலகம் வைத்திருந்த ( மறைந்த ) எழுத்தாளர், பத்திரிக்கையாளர் கே.பி.நீலமணி அவர்கள் தான் அறிமுகப்படுத்தினார். சுஜாதாவின் , துப்பாக்கிகள் வெடிக்கிற, முத்தம் கொடுக்கிற, வக்கீல்கள் சாகசம் பண்ணுகிற கதைகளை மட்டுமே படித்திருந்த எனக்கு, இயல்பான ஸ்கூல் பையனுடைய, அவனைச் சுற்றி இருக்கிறவர்களின் கதை என்பது ஸ்கூல் படிக்கிற வயதில் அத்தனை தூரம் பிடித்துப் போயிற்று.

வேதம் பயின்ற ஒருவன் பின்னால் சினிமா ப்ரொடக்ஷன் மானேஜர் ஆகிற கதையும், விஷம் குடித்து செத்துப் போகின்ற கணக்கு வாத்தியார் கதையும், வேலைக்காரியின் இருபது ரூபாய் நோட்டைக் கவர்ந்து சார்மினார் சிகரட்டுக்கும், கொக்கோகப் புத்தகத்துக்கு செலவழிக்கிற கதையும், மகனைப் பறிகொடுத்து விட்டு, வீடு வீடாக வாங்கிச் சாப்பிடுகின்ற ஒரு பெண் பற்றிய கதையும், தலைப்புகள் நினைவில் இல்லாவிட்டாலும், மனசுக்குள் பசுமையாக இருக்கின்றது. அதிலே வருகின்ற ஆட்கள் அனைவரும் வேறு சில பெயர்களில் எனக்கு ஏற்கனவே அறிமுகமாகி இருந்தார்கள். ஒரு கதை நமக்கு அதிகம் பிடித்துப் போக இது ஒரு முக்கியமான காரணமா என்பது தெரியவில்லை.

திரு. ஜெயமோகன் அவர்கள் சொன்னது போல, அக்கதைகள் ஒரு துள்ளலுடன் இருந்தன என்று தான் இப்போது தோன்றுகிறது. சொந்தக் கதைகளை எழுதும் போது மட்டும் இப்படி ஒரு உற்சாகம் ஏற்படும் போலும். அசோகமித்திரனின் சில சிறுகதைகள், நாகூர் ரூமியின் குட்டியாப்பா, இரா.முருகனின் நாவல் போன்ற சில உதாரணங்கள் நினைவுக்கு வருகின்றன. ஏன் அப்படி என்று யாராவது சொன்னால் நலம்.

இணையத்தில், சுஜாதாவின் ஆக்கங்களைப் பற்றி பல விதமான எதிர்மறை விமர்சனங்களைப் பார்த்திருக்கிறேன். பத்திரிக்கைகளில் நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டு எழுதப் பட்ட புதினங்கள் காரணமாக, சுஜாதாவின் மற்ற நல்ல படைப்புக்களையும் ஒட்டு மொத்தமாக ஒதுக்கிவிடும் போக்கையும் கண்டிருக்கிறேன். காகித சங்கிலிகள், குருபிரசாதின் கடைசி தினம், நிலா நிழல், ஜன்னல் மலர், பாரீஸில் ஒரு தமிழ் பெண் போன்ற சிறுகதைகளையும் குறுநாவல்களையும் , புதினங்களைக் கூட வசதியாக மறந்து விட்டு, கையில் பிரம்புடன், ஒரு தீர்மானத்துடன் அணுகுபவர்களைக் கண்டு, ஒதுங்கி சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் திரு. ஜெயமோகன் அவர்களின் கட்டுரை ‘ஜில் ‘ என்று இருந்தது.

அதற்காக அவருக்கு என் நன்றி.

—-

icarus1972us@yahoo.com

Series Navigation

ஐகாரஸ் பிரகாஷ்

ஐகாரஸ் பிரகாஷ்