ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

சோதிப் பிரகாசம்


( வரலாற்றின் முரண் இயக்கம்:பாகம் ஒன்று:இணைப்பு-1-இல் இருந்து . . . )

இந்த நூலின் முன்னுரையை எழுதி முடித்து, ஒன்றாவது ஒளி-அச்சுப்

பிழைகளையும் சரி பார்த்து விட்டு, அணிந்துரைகளுக்காக நான் காத்துக் கொண்டு இருந்த பொழுது பெரும் புன்னகையுடன் கண்ணன் வந்தார் — வெறும் கையுடன்! பாயிரம் எழுதி முடிக்கப் படாததற்குக் காரணமும் அவர் கூறினார் — ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ என்னும் கதை பற்றியும் எழுதிட வேண்டும் என்று!

அவரிடம் இருந்த ‘சொல் புதிது ‘ இதழை நான் புரட்டிப் பார்த்தேன். ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ பற்றி லோக நாதன் என்பவர் எழுதி இருந்த மதிப்பீடு ஒன்று அதில் வெளியாகி இருந்தது. அந்த மதிப்பீட்டின் அடிப்படையில், ஜெய மோகனின் ( சுருக்கமாக இனி ஜெ.எம். — ஜெய மோகனின் பாணியில்! ) கதையைப் பற்றித் தாம் எழுதப் போவதாகக் கண்ணன் கூறியதை நான் ஏற்றுக் கொள்ள வில்லை.

‘படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் ‘ என்னும் பழ மொழியில் அனுபவ முறையான நம்பிக்கை கொண்டவன் நான். இதனால்தான், மார்க்ஸின் நூல்களுக்கு எழுதப் பட்டு வந்து இருந்த உரைகளைப் படிக்காமல் நேரடியாக மார்க்ஸை நான் படித்தும் வந்து இருந்தேன்.

‘தமிழினி ‘யில் இருந்து இந்த நூல் பற்றி ஓர் அஞ்சல் அட்டை கூட ஏற்கனவே வந்து இருந்தது. அப் பொழுதே அதை நான் வாங்கி இருந்து இருக்க வேண்டும். எனினும், தாம் அதைப் பார்த்து கொள்வதாகக் கண்ணன் என்னிடம்

கூறி இருந்ததால் அதை வாங்காமல் நான் இருந்து விட்டேன். எனவே, கண்ணனுக்காக இப் பொழுது அதை வாங்குவது என்று முடிவு செய்து, பொன்மணி பதிப்பகத்தின் பெயரில் உரிய தள்ளுபடியுடன் அந்த நூலை நாங்கள் வாங்கினோம்.

இரண்டு, மூன்று நாட்களில் மீண்டும் கண்ணன் வருவார். அதற்குள் கதையைப் படித்து விட வேண்டும் என்று நான் எண்ணினேன். சோவியத் ருஷ்யாவின்

வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ஒரு வரலாற்றுக் கதையாக அது இருக்கக் கூடும் என்றும் நான் கருதி இருந்தேன். இந்திய ( மார்க்ஸிய )ப் பொதுமைக் கட்சியில் இருந்தவர்தாம் ஜெ.எம். என்று தெரிந்த பொழுது, மார்க்ஸியம் பற்றியும் இவர் எழுதி இருப்பார் என்னும் ஆர்வத்தில் இந்த நூலை நான் படிக்கத் தொடங்கினேன்.

கதை-கவிஞர்கள்

கதைஞர்களையும் கவிஞர்களையும் நினைத்தாலே என் நெஞ்சத்தில் எப் பொழுதும் ஒரு நடுக்கம் ஏற்படுவது உண்டு. புகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்து போகின்ற அவர்கள், விள்ளனத்தைக் கேட்டு அப்படியே உடைந்து போய்

விடுவார்கள். இதனால்தான் இந்த நடுக்கம்!

நான் பெரியவனா ? நீ பெரியவனா ? என்று இவர்கள் வாதிட்டுக் கொள்வது மிகவும் வேடிக்கையாக இருக்கும். சில சமயங்களில், கூட்டங்களை நடத்தித் தங்களுக்குள் அடி-தடிகளிலும் இவர்கள் ஈடு பட்டுக் கொள்வார்கள். இறுதியில்,

உன் முகத்தில் நான் விழிக்க மாட்டேன்; என் முகத்தில் நீ விழிக்காதே; என்று ஒருவருக்கு ஒருவர் வஞ்சினமும் இவர்கள் கூறிக் கொள்வார்கள். ‘பெரியாரை வியத்தலும் இலமே; சிறியாரை இகழ்தல் அதனினும் இலமே; என்று இவர்களைப் பார்த்துக் கணியன் பூங்குன்றனார் நகைத்துக் கொண்டு இருப்பது இவர்களுக்குப் புரிவது இல்லை.

தாங்கள் எழுதுகின்ற கதைகளைப் ‘படைப்பு ‘கள் என்றும் இவர்கள் விளித்துக் கொள்வதுதான் எல்லாவற்றிலும் மிகப் பெரிய வேடிக்கை! அண்டை-அயல் வாழ்க்கைகளுக்குள் அத்து மீறி உற்றுப் பார்த்து, அப்படியே அவற்றை ஈயடித்தான் நகல் அடித்துக் கொள்கின்ற இவர்கள், தங்கள் நகல்களைப் படைப்புகள் என்றும் நகலாளர்கள் ஆகிய தங்களைப் படைப்பாளிகள் என்றும் சித்தரித்துக் கொள்வதை வேறு எப்படி நாம் எடுத்துக் கொள்வது!

எனினும், ஜெய மோகனின் கதை பற்றிக் கொஞ்சம் நாம் பேசித்தான் ஆக வேண்டும். நன்றாகத்தான் இவர் கதை சொல்கிறார்; நன்றாகத்தான் இவர் எழுதுகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் நடை பெற்று வருகின்ற பதவிப் போட்டிகளையும் அவற்றை ஒட்டிய தந்திரங்களையும் பற்றிய கதை இது. கட்சிக் காரர்களுக்கு எட்டாத ஓர் உயரத்தில், ஒரு கடவுளைப் போல, தனியான ஓர் உச்சத்தில் கட்சி நிறுத்தப் பட்டு இருப்பது போன்ற பான்மைகள் மிகவும் நன்றாகத்தான் இதில் சித்தரிக்கப் பட்டும் இருக்கின்றன.

மார்க்ஸியம் இல்லை

ஜெ.எம். மின் கதை-மாந்தர்களில் ஒரு சிலரைத் தவிர மீதம் உள்ள அனைவரும் மார்க்ஸியம் பற்றி அடிக்கடிப் பேசுகிறார்கள்; நிறையவும் பேசுகிறார்கள்! அதே நேரத்தில், அவர்கள் பேசியது மார்க்ஸியம் இல்லை என்பது எனக்குக் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது.

மார்க்ஸியம் தெரியாத கம்யூனிஸ்ட்டுகள் — அவர்கள் இடையே நடை பெறுகின்ற அதிகாரப் போட்டிகள் — அவற்றை ஒட்டிய தந்திரங்கள் மற்றும்

சதிகள் — ஆகியவற்றின் மெய்மையினை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் கம்யூனிஸ்ட்டுகளை இவர் மார்க்ஸியம் பேச வைக்க வில்லை போலும்; ஆனால், மார்க்ஸியம் தெரிந்த ஒரு கதை-மாந்தரை இவர் நகல் ஆக்கித்தான் இருப்பார்; அந்தக் கதை-மாந்தர் ஜெ.எம். ஆகவும் இருக்கக் கூடும்; என்று எண்ணி அந்த மார்க்ஸிய வாதியைக் கதையில் தேடித் தேடி நான் படித்தேன்.

ஜெய மோகன் என்று வருகின்ற கதை-மாந்தர் கூட ஜெ.எம். அல்லர் என்பது மட்டும் அல்ல; அந்தக் கதை-மாந்தருக்கும் மார்க்ஸியம் தெரியாது என்பதும் எனக்குத் தெரிய வந்தது. எப்படியும், இவரது கதை-மாந்தர்கள் பேசிய மார்க்ஸியம் எனக்கு எரிச்சல் ஊட்டத் தவற வில்லை; ஒரு வகையான அருவருப்பினை எனக்குள்

அவை உருவாக்கின என்றால் கூட அது மிகை ஆகாது. 250 பக்கங்கள் வரை மார்க்ஸியம் தெரிந்த எந்த ஒரு கதை-மாந்தனையும் நிழலின் குரலில் என்னால் காண முடிய வில்லை.

கதைகளின் ஊடாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயல்வது, கதைகளின் மூலமாக — உணர்ச்சிகள் மற்றும் உணர்மங்கள் மூலமாக — வாழ்க்கையின் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு விடலாம் என்பது போன்ற கற்பனைகளை உருவாக்குவது, இவற்றைத் தவிர மார்க்ஸியம் பற்றி இந்தக் கதையில் எதுவும் இல்லை.

கடவுள் கதைகளில் கையாளப் படுகின்ற மாய்மைகளை மனிதர் கதைகளில் புகுத்தி வாசகர்களைக் கவர்கின்ற உத்தி, இந்தக் கதையில் கையாளப் பட்டு இருக்கிறது. காதலுடன் தொடர்பு இல்லாத காமம் கூட ஒரு மாய்மையாக இதில் சித்தரிக்கப் பட்டு இருப்பது, ஜெ.எம்.மேல் ஒரு பரிதாப உணர்ச்சியை என்னிடம் உருவாக்கத் தவற வில்லை. Pangs of Conscience என்னும் பெயரில் ஒரு துறவியைப் பற்றியும் அவரது பக்தி மற்றும் காமம் பற்றியும் மாய்மையான ஒரு கதையை நான் எழுதி இருந்தேன் — 21-24 வயதுகளில்! கதை-கவிதை எழுதுவதில்

அதற்கு மேல் எனக்கு நாட்டம் இல்லாமல் போய் விட்டது.

எப்படியும், அனுபவ முறையாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாத சூழ் நிலைகளில், மதங்களின் மாய்மையைத்தான் கதைகளில் வாசகர்கள் காண விரும்புவார்கள் என்பது எனக்குத் தெரியும். இதனால்தான், மதத்தைப் போன்றது ஒரு போதைப் பொருள்தான் கதை-கவிதை என்று ‘வாழ்க்கையின் கேள்விகளி ‘ல் நான் எழுதியும் இருந்தேன். ( பார்க்க: வாழ்க்கையின் கேள்விகள், பக். 211-18. )

எனினும், நான் எதிர் பார்த்து இருந்த ஒரு வரலாற்றுக் கதையும் இது வல்ல; வரலாற்றுக் கதைக்கான அடிப்படைகளுக்கும் ஜெ.எம். உரியவர் அல்லர்; என்பது எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது என்பதை நான் மறைப்பதற்கு இல்லை.

வரலாற்றுக் கதைகள்

கல்கியின் ‘பொன்னியின் செல்வன் ‘ கதையை 15 வயதில் நான் படித்தேன். கதை மறந்து விட்டது என்ற போதிலும், அந்த வரலாற்றுப் பின்னணி இன்னமும் எனது நினைவில் நிற்கிறது. குறிப்பாக, விண்ணவ மதத்தைச் சேர்ந்த ஒருவரும் சிவ

மதத்தைச் சேர்ந்த ஒருவரும் புரிந்து கொண்டு இருந்த வாதங்கள், அந்தக் காலத்து மக்களின் மத நம்பிக்கைகளைச் சுட்டிக் காட்டுவனவாக அமைந்து இருந்தன. தாம் எழுதிய வரலாற்றுக் காலத்தை நன்கு முயன்று கல்கி தெரிந்து வைத்துக் கொண்டு இருந்த அவரது அறிவாண்மை நாணயம்தான் இதற்குக் காரணம்.

லியோ தால்ஸ்தாயின் ‘போரும் சமாதானமும் ‘ கூட அதன் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொண்டு இருந்த ஒரு கதைதான். ருஷ்ய நாட்டுக் கோமான்கள் எல்லாம் ஃப்ரெஞ்ச் மொழியில் தங்களுக்குள் பேசிக் கொள்வதைப் பெருமையாகக் கருதிக் கொண்டு இருந்தார்கள் என்பது அப் பொழுதுதான் எனக்குத் தெரிய வந்தது.

கடைசியாக, சிசரோவைப் பற்றி இருவர் எழுதி இருந்த ஒரு வரலாற்றுக் கதை என்னைப் பெரிதும் கவர்ந்தது. இளம் ஜுலியஸ் சீஸர் கூட அதில் ஒரு

கதை-மாந்தராக வந்து இருந்தார். கதையின் பெயரும் ஆசிரியர்களின் பெயர்களும் எனக்கு நினைவில் இல்லை. ஆனால், ஆறு ஆண்டுகளாகத் தாங்கள் சேகரித்து வந்து இருந்த செய்திகளின் அடிப்படையில் எழுதப் பட்ட ஒரு கதை என்று அதைப்

பற்றி அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.

இம் மாதிரியான முயற்சி எதுவும் ஜெ.எம். கதையில் காணப் பட வில்லை. ருஷ்யப் புரட்சியின் வரலாறும் சோவியத் யூனியனின் வரலாறும் கூட இவருக்குத் தெரிய வில்லை என்பது ஒரு புறம் இருக்க, மார்க்ஸியமும் இவருக்குத் தெரிய வில்லை. ஆனால், மார்க்ஸியத்தை வசை பாடுவதற்கு மட்டும் மிகவும் நன்றாக இவருக்குத் தெரிந்து இருக்கிறது — ஸ்தாலினிசத்தின் மூலமாக!

மார்க்ஸியம் பேசுகின்ற கதை-மாந்தர்களை நகல் ஆக்கி இருக்கின்ற ஒரு கதைஞர், மார்க்ஸின் ஒரு சில நூல்களையாவது படித்துப் பார்த்து இருக்க வேண்டாமா ? பெலிக்கன் வெளியிட்டு இருந்த ‘தொடக்கப் படைப்புகள் ‘ அல்லது மாஸ்கோ வெளியீடான ‘பொருளாதார மற்றும் மெய்ப் பொருண்மை மூலப் படிகள் ‘ மற்றும் ‘ஜெர்மன் கோட்பாடு ‘, ‘புனிதக் குடும்பம் ‘ ஆகிய மார்க்ஸின் நூல்களையாவது இவர் படித்துப் பார்த்து இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

மார்க்ஸியம் தெரியாத கதை-மாந்தர்களை நகல் ஆக்குகின்ற ஒரு கதைஞர், மார்க்ஸியத்தைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது இல்லை என்று கருதுவது

அறிவாண்மை நாணயம் ஆகாது. ஒரு வகையான ‘மூளைச் சோம்பல் ‘ என்று கூட இதனை நாம் குறிப்பிடலாம்.

‘வரலாற்றின் மையத்தில் வெற்றிடம் ‘, ‘உழைப்பின் உபாசகன் ‘, என்பன போன்ற வெறுமைக் கருத்துகளையும் காரண முறையான வகைப்பாட்டிற்குப் பொருத்தம் இல்லாத ‘குறியீடு ‘ பற்றிய திணிப்புகளையும் இவர் கையாள்வதற்கு இதுதான் காரணம். ஆனால், ‘குறியீடு ‘ என்னும் சொல்லை ‘அடையாளம் ‘ என்னும் பொருளிலும் ‘வடிவம் ‘ என்னும் பொருளிலும் இவர் கையாண்டு இருக்கிறார்.

புதிய வகைப்பாடுகள் வரவேற்கத் தக்கவைதாம் — செம்மையான விளக்கங்களைத் தருவனவாக அவை இருந்தால்! ஆனால், ‘குறியீடு ‘ என்பன போன்ற புதிய வகைப்பாடுகளால் எந்த விதச் சிந்தனை வளர்ச்சியும் நாட்டில் ஏற்பட்டு விட வில்லை என்பதுதான் உண்மை.

நிகழ்வுகளுக்குப் புதிய விளக்கங்களைத் தந்து நிறைவு செய்வது புதுமை — புதிய சிந்தனை! பழைய விளக்கங்களுக்குப் புதிய பெயர்களைக் கொடுத்துப் புதுமையாக அவற்றைக் காட்டிட முயல்வது போலி — போலிச் சிந்தனை! அதுவும், மார்க்ஸுக்கு முந்திய பழைமையான போலி! பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கதையை நான் எழுதினேன் — ‘மன்னன் ஜெயலாலும் ஐந்து புலிகளும் ‘ என்று! குறியீட்டுக் கதை என்பது ஒரு வேளை அதுதானோ, என்னவோ!

ஆனால், காதலர்கள் சந்தித்துக் கொள்வதைக் குறிஞ்சி என்றும் அவர்கள் இடையே பிரிவு ஏற்படுவதைப் பாலை என்றும் — மன்னர்கள் போர் தொடுத்துக் கொள்வதை வஞ்சி என்றும் அவர்கள் வெற்றி பெறுவதை வாகை என்றும் — குறிப்பிட்டு வந்து இருக்கின்ற தொல்காப்பியரின் வகைப்பாடுகள் எல்லாம் ‘குறியீடு ‘கள்தாம் ஆகும். எனவே, ‘குறியீடு ‘ என்பதைக் கற்றுக் கொள்வதற்காக ஃப்ரான்ஸ் நாட்டின் சிற்றுடைமைச் சிந்தனை யாளர்களின் முன்னால் தமிழர் யாரும் மண்டி இட்டு நின்று கொண்டு இருக்க வேண்டிய தேவை இல்லை!

இதனால்தான், ஈரோப்பியப் பூதங்களை உப்புப் போட்டுத் தின்று விடுகின்ற வேதாளங்களாக நம் ஊர் ‘இசம் ‘களை நாகம்மை குறிப்பிடுகிறார். ஆனால், படைத்து முடித்ததன் பின்னர்தான் தமது படைப்பைக் கடவுள் புரிந்து கொள்ளுகிறார்

என்று ஹே:கல் கூறியது போல, நாகம்மையை இனிதான் ஜெ.எம். புரிந்து கொள்ள

வேண்டும் போலும்!

ருஷ்யச் சமுகாண்மை

ஏழு ஆண்டுகளாக எனது நினைவில் நான் சுமந்து வந்து இருந்த ருஷ்யச் சமுகாண்மை பற்றிய மாயை, சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைவதற்கும் பதினைந்து

ஆண்டுகளுக்கு முன்னரே என் நினைவில் இருந்து வீழ்ச்சி அடைந்து விட்டு இருந்தது. ஏனென்றால், மார்க்ஸியத்தின் ஆழத்திற்குள் அப் பொழுதுதான் நான் நுழையத் தொடங்கி இருந்தேன்.

ஜெ.எம்.மும் மார்க்ஸைப் படித்துப் பார்த்து இருந்தால், சோவியத் யூனியனில் சமுகாண்மை மோட்சம் எதுவும் உருவாகி இருக்க வில்லை என்பது நன்றாக இவருக்குத் தெளிவாகி இருந்து இருக்கும். மார்க்ஸியத்தைத் தெரிந்து கொள்ளாமல் இவர் இருந்ததுதான், அது உடையும் வரை இவருக்கு அது புரியாமல்

போய் இருந்ததற்குக் காரணம்!

இதனால்தான், கனவு கலைந்து விட்டதே என்னும் கவலையில் இவரது கதை-மாந்தர்களை இவர் குடிக்க வைத்து ஒப்பாரி பாட வைக்கிறார். இவரது ஒப்பாரி மட்டும் தனியாக நமது காதில் ஒலிக்கிறது. வாழ்க்கையின் விளக்கங்களைக் கதைகளுக்குள் தேடுபவர்கள், போதையில் மயங்கிப் புலம்பிக் கொள்வது ஒன்றும் வியப்பு அல்ல!

:கார்க்கியின் தாய்

:கார்க்கி எழுதிய ‘தாய் ‘ என்னும் கதை, இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கக்

கூடிய ஒரு கதைதான். ஆனால், மார்க்ஸியத்திற்கும் அதற்கும் அப்படி என்ன தனித் தொடர்பு என்பதுதான் இன்னமும் எனக்குப் புரிய வில்லை. ஏனென்றால், ஏ.எம்.கோதண்ட ராமனையும் குசேலரையும் தலைவர்களாக ஏற்றுக் கொண்டு எழுந்து வந்து இருந்த எத்தனையோ தொழிற் சங்கப் போராட்டங்களில் இருந்து, இப்படி எத்தனையோ கதைகளை எத்தனையோ கதைஞர்கள் எழுதி இருக்க முடியும்.

ருஷ்யப் புரட்சியை ஆண்களின் புரட்சியாகச் சித்தரித்து இருக்கின்ற ஜெ.எம்.,

பெண்களின் புரட்சி வேண்டும் என்கின்ற பாணியில் எழுதுகிறார். ருஷ்யப் பேரரசின் அரியணையில் ஸ்தாலினுக்குப் பதிலாகக் :கார்க்கியின் தாய் அமர்ந்து இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று சற்று இவர் எண்ணிப் பார்த்து இருந்தார் என்றால், அவசர நிலையைப் பிரகடனப் படுத்திய அன்னை இந்திரா அம்மையார் இவரது கனவில் வந்து இவரை நடுநடுங்க வைத்து இருப்பார்!

நிக்கோஸ் கஜ்ஸன்சாக்கிஸ் என்று ஓர் எழுத்தாளர்; ‘Fratricide ‘ என்று ஒரு கதை எழுதினார். அதில் வருகின்ற ஒரு கிறிஸ்தவக் குருவானவரும் :கார்க்கியின் தாயைப் போன்றவர்தாம்!

ஊர் எங்கும் வறுமை; தாங்கிக் கொள்ள முடியாத வறுமை! அரசின் படைகளுக்கும் புரட்சிப் படைகளுக்கும் இடையே போர்களும் அவ் அப்போது நடந்து கொண்டு வருகின்றன! திரு மணம் ஆகாமல் வயது ஆகிக் கொண்டு இருந்த பெண் ஒருத்தி, வீதிக்கு ஓடி வந்து கத்துகிறாள்: ‘எனக்கு ஓர் ஆண் வேண்டும்; இப் பொழுதே வேண்டும்; ‘ என்று! பசியால் குழந்தைகள் செத்து மடிகிறார்கள்.

குருவானவர் விண்ணை நோக்கிக் கூவுகிறார்: ‘ஏசுவே, நீர் வர வேண்டும்; மீண்டும் வர வேண்டும்; ஆனால், ஒரு துப்பாக்கியுடன் வர வேண்டும்; ‘ என்று! அருகில் குற்றுயிராய்க் கிடந்த ஒருவன் கூறுகிறான்: ‘அவர் வந்து விட்டார்; ருஷ்யாவில்! அவர்தான் லெனின்; ‘ என்று!

இறுதியில், புரட்சிக் காரர்களுக்கு அரசுப் படைகளைக் காட்டிக் கொடுத்து அவர்களைச் சரண் அடைய வைக்கிறார் குருவானவர் — யாரையும் அவர்கள் கொல்லக் கூடாது என்ற நிவந்தனையுடன்! ஆனால், எதிர்த் தலைவர்களைச் சுட்டுக் கொல்கிறார்கள் புரட்சிக் காரர்கள். அதனைத் தாங்கிக் கொள்ள

முடியாமல் குருவானவர் புலம்புகிறார். இறுதியில், குருவானவரையும் அவர்கள்

சுட்டுக் கொன்று விடுகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். எனது ‘கதை-கவிதை ‘க் காலத்தில் படித்த கதை அது! சரியாக எனக்கு நினைவு இல்லை. ஆனால், அந்தப் புரட்சிக் காரர்கள் யார் ? துப்பாக்கிப் பிடித்த ஏசுகள்தாமே!

காமம்

காமம் என்பதை ஒரு மாய நிலைக்கு — ஒரு கடவுள் நிலைக்கு — இவரது சித்தரிப்புகள் உயர்த்தி விடுகின்றன — தமிழ் நாட்டு விடலைகளை விடவும் மாய்மையாக! காமமும் பக்தியும் அவற்றின் தீவிரத்தில் ஒன்றானவை என்று கூறிய ஓர் ஆங்கில நூலை நான் படித்து இருக்கிறேன் — எனது ‘கதை-கவிதை ‘க் காலத்தில்! எனது pangs of conscience கதை கூட அதன் எதிர் விளைவாகத்தான் இருந்து இருக்கவும் வேண்டும். ஆனால், பாசம், நட்பு என்பவை எல்லாம் அன்பின் உறவுகள்தாம் என்பது போல விளக்கி இருந்த திரு.வி.கலியாண சுந்தரனாரின் கருத்துகள், பத்தாம் வகுப்பிலேயே எனக்குத் தெரிந்து இருந்தன.

பக்தி என்பது கடவுளுடன் மனிதன் கொள்ளுகின்ற உறவு; அருள் என்பது மனிதனுடன் கொள்ளுகின்ற உறவு. ( பார்க்க: வாழ்க்கையின் கேள்விகள், பக்.26-27. ) இப்படி, கொடுக்க ஒருவர்-எடுக்க ஒருவர் என்னும் உறவுதான் கடவுள்-மனிதர் உறவு! ஆனால், இன்றைய காதல்-உறவு அப்படிப் பட்டது அல்ல.

‘கொடுக்க ஒருவர்-எடுக்க ஒருவர் ‘ என்றுதான் முந்திய சமுதாயங்களில் காதலும் காமமும் இருந்து வந்து இருக்கின்றன. ஆனால், மனிதர்களைத் தனி மனிதர்கள் ஆக்கி இருக்கின்ற இன்றைய முதலாண்மைச் சமுதாயத்திலோ, ஒருவருக்கு ஒருவர் இருவரும் கொடுத்தும் எடுத்தும் கொள்கின்ற உறவுதான் காதல். இந்தக் காதலின் செயல் நிலைதான் காமம்! காமம் ‘செயல் நிலை ‘ கொள்வது இனப் பெருக்க உறுப்புகளில்தான் என்ற போதிலும், அது தொடங்குவதும் முடிவதும் இந்த உறுப்புகளில் அல்ல; மனிதர்களின் உள்ளங்களில்; அதாவது, மூளையில்!

‘உடல் முழுக்கச் சதை ததும்பி அலையடிக்கும் சிரிப்பு. கண்களை இடுக்கி, தலையைப் பின்னால் சரித்து, குரல் வளை அசைய, சிரிப்பாள் ‘ ( பக்.242. ) என்று இசக்கி என்னும் ஒரு பெண்ணின் சிரிப்பை ஜெ.எம். சித்தரிக்கிறார். ஆனால், வீர பத்ரன் மீது இசக்கி கொண்டு இருந்த அன்பின் வெளிப்பாடுதான் அந்தச் சிரிப்பு என்பதும், எனவேதான், அவரது ‘உறுதியான திரண்ட கரிய . . . ‘ ( பக். 245. ) உறுப்புகளைப் பார்த்து விவரித்திட வீர பத்ரனால் முடிந்தது என்பதும் ஜெ.எம்.முக்குப் புரிய வில்லை.

‘உடல் உறுப்புகளில் அப்படி என்னதான் அந்தரங்கம் இருந்திட முடியும் ? ‘ ( பக். 247. ) மூடி மறைக்கப் படுவது எல்லாம் அந்தரங்கம் ஆகி விட முடியுமா, என்ன! இதனால்தான், வீர பத்ரனுக்கு உரிய அகத்திணைகளாகப் பெருந்திணையையும் கைக்கிளையையும் ஜெ.எம். தேர்ந்து எடுத்துக் கொண்டார் போலும்!

‘சாமியார் சொன்னார் என்ற உடன் புடவையை அவிழ்க்கும் பெண்கள் ‘ என்று

சாமியார்களைத் தேடிச் செல்கின்ற பெண்களை மிகவும் காட்டமாகச் சாடி இருந்தார் வாஸந்தி என்னும் ஒரு தமிழ் எழுத்தாளர் — அவரது பத்தரிகையில்! இவருக்குப் புரிய வில்லை — உரியவனின் நோக்கம் அறிந்து அல்லாமல், தாமே விரும்பிப் புடவையை அவிழ்க்கும் உரிமை, பெண்களுக்கு இந்த நாட்டில் இல்லை என்று!

இப்படி, காமத்தைப் பற்றிய ஜெ.எம்.மின் பார்வை, ஓர் ஆண் பார்வையாக இருக்கிறதே ஒழிய ஒரு சமன் பார்வையாக இல்லை; ஒரு காதலின் பார்வையாகவும் இல்லை. சரியாகச் சொன்னால், ஓர் ஆண்டானின் பார்வை கூட அது வல்ல; மாறாக, சிற்றுடைமைப் பண்பாட்டின் மாயப் பார்வை! ( பார்க்க: இந் நூல், முன்னுரை. )

குறுக்கத்தில் அறையப் பட்டுச் சாவுக்குத் தயாராகிக் கொண்டு இருந்த ஏசுவின் மனத்தில் ஆயிரம் எண்ணங்கள்; அவற்றுள் ஒன்று, மரியா மாக்தலேனாவுடன்

அவர் நடத்துகின்ற குடும்ப வாழ்க்கை — The Last Temptation of Jesus christ

என்னும் நிக்கோஸ் கஜ்ஸன்சாக்கிஸின் இன்னொரு கதையில்! இந்த முடிவை ஏற்றுக் கொள்வதில் நமக்குத் தயக்கம் எதுவும் ஏற்பட வில்லை. ஆனால், ஜெ.எம். மின் கெ.கெ.மாதவன் நாயர், இறுதியில் கிருஷ்ண பக்தர் ஆகி விடுவதைத்தான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. ஏனென்றால், அவருக்கு அது பொருந்தி வர வில்லை.

கம்யூனிஸ்ட்டுகள்

கம்யூனிஸ்ட் கட்சிகளில் இரண்டு புத்தகங்களைக் கட்டாயமாக வலியுறுத்தாமல்

இருக்க மாட்டார்கள்! ஒன்று: ‘செய்ய வேண்டியது என்ன ? ‘; இரண்டு: ‘அரசும் புரட்சியும் ‘; இரண்டும் லெனின் எழுதியவை.

தலைவர்களின் தேற்ற முறையான கட்டளைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு,

தொண்டர்களும் மக்களும் செயல் முறையாகப் பணி புரிந்திட வேண்டும் என்னும் தலைவர் வழி பாட்டினை உருவாக்குவது முன்னதன் பயன்! கட்சியின் வல்லதிகாரத்தைத் தமது வல்லதிகாரமாக உழைப்பாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்னும் அடிமைப் பண்பாட்டினை உருவாக்குவது பின்னதன் பயன்!

ஆனால், இந்த இரண்டு நூல்களையும் கூட ஜெ.எம். படித்துப் பார்த்து இருக்க மாட்டார் போல்தான் நமக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், கட்சிக்குள் இவர் நுழைந்ததற்கு இவரது அம்மாவன்தாம் காரணமே ஒழியப் புரட்சி அல்ல! புரட்சிக்காகக் கட்சிக்குள் இவர் போய் இருந்தால், கட்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் புரட்சியை இவர் தேடிக் கொண்டு வந்து இருப்பார்; இறுதியில் மார்க்ஸையும் இவர் சந்தித்து இருந்து இருப்பார்.

தன்னைப் பற்றி ஒருவன் என்ன நினைக்கிறான் என்பதைக் கொண்டு அவனை நாம் கணித்திட முடியாது; இது மார்க்ஸின் கூற்று! எல்லோருக்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும்; ஜெ.எம். மிற்கும் பொருந்தும். இது போல, ஒரு சமுதாய மாற்றத்தின் காலத்தை, அந்தக் காலத்தின் உணர்மையைக் கொண்டு, அதாவது, அந்த மாற்றத்தைப் பற்றி அந்தக் காலத்து மனிதர்கள் கொண்டு இருந்த கருத்தைக்

கொண்டு, நாம் கணித்து விடல் ஆகாது; இதுவும் மார்க்ஸின் கூற்று. மாறாக, அந்தக் காலத்தில் உண்மமாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கொண்டுதான் அந்த மாற்றத்தை நாம் கணித்திடல் வேண்டும்; இதுதான் மார்க்ஸியப் பார்வை!

இப்படி, ருஷ்யப் புரட்சியைச் சமுகாண்மைப் புரட்சி என்று கணித்த தலைவர்களுக்கு நேர் எதிர் நின்று, மெய்மை நிலவரங்களை இவர் கணித்துப் பார்த்து இருந்தால், அது சமுகாண்மை அல்ல என்பதை முன்னரே இவர் புரிந்து கொண்டு இருந்து இருப்பார். இவருக்கு உதவி புரிந்திட மார்க்ஸும் முன் வந்து இருப்பார்! அது வீழும் வரை காத்து இருந்து தீர வேண்டிய அவசியம் இவருக்கு ஏற்பட்டு இருக்காது.

ஆனால், உழைப்பாளர் தலைவர்களைக் கடவுளர்களாக முன்னர் இவர் கருதிக் கொண்டு வந்து இருக்கிறார். எனவே, அவர்கள் மேல் கோவம் வந்த உடன் புரட்சிக்

கடவுளர்களை விட்டு விட்டுச் சிற்றுடைமைக் கடவுளர்களை வழி பட்டு வர இவர் முற்பட்டு விட்டார். ஒரு கடவுளில் இருந்து இன்னொரு கடவுளுக்கு; ஒரு மூட நம்பிக்கையில் இருந்து இன்னொரு மூட நம்பிக்கைக்கு; ஒரு மாய்மையில் இருந்து

இன்னொரு மாய்மைக்கு!

மனிதர்களாக மட்டும் தலைவர்களை இவர் கருதி வந்து இருந்து இருந்தால், அவர்களை எதிர்த்து இவர் கருத்துப் போர் புரிந்து இருப்பார்; கோயில்களில் குடியேற்றி வைக்கப் பட்டு இருந்த அவர்களை வீதிக்குக் கொண்டு வந்து விரட்டி அடித்து இருப்பார். இறுதியில், இது வரை கொல்லப் பட்டவர்களை நினைத்துக் கண்ணீர் வடிக்கின்ற அதே நேரத்தில், பட்டினியால் இன்று மடிந்து வருபவர்களைப் பற்றியும் இவர் கவலைப் படத் தொடங்கி இருப்பார். கதையின் மாய்மைகளினால் தீர்ந்து விடுவது அல்லவே பசி!

இதனால்தான், அதிகமாக உண்பதைப் பாவம் என்கின்ற கிறிஸ்தவ மதம், பட்டினி கிடப்பதைப் பாவம் என்று கூறிட வில்லை போலும்!

கதையில் ஜெ.எம்.மைத் தேடித் திரிந்த நான், 239-ஆம் பக்கத்தில் அவரைக் கண்டேன் — வீர பத்ர பிள்ளையாக!

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தூக்கி வீசப் பட்டு, ஒரு குடிகாரன் ஆகி, வீதியிலே இறந்து கிடந்த வீர பத்ர பிள்ளையின் கடிதம், கதைகளிலே புரட்சியைக் காண முனைந்த பரிதாவத்துக்கு உரிய ஒருவரின் ஒப்பாரியாக எனக்குப் பட்டது. ஒவ்வொரு பக்கத்தைப் படித்ததும் ‘பாவம், ஜெ.எம். ‘ என்று நான் குறிப்பு எழுதிக் கொண்டு வந்தேன். 250-ஆம் பக்கத்தின் முடிவில் இப்படி நான் எழுதி முடித்தேன்: ‘பாவம், ஜெ.எம்.! யாரும் அவனைத் திட்டாதீர்கள்! நன்றாக அவன் அழுது முடிக்கட்டும்! ‘ ( ஒருமைச் சுட்டு, சோக நயம் பற்றியது. )

ஜெ.எம்.மின் மாயத் துயரங்களையும் பொய்மைப் புலம்பல்களையும் தனிமை இருட்டுகளையும் தூக்கிச் சுமக்கின்ற ஒரு பொதி மாடாக இருந்திட மேலும் நான் விரும்ப வில்லை. எனவே, நிழலின் குரலைப் படிப்பதை அத்துடன் நான் நிறுத்திக் கொண்டேன். இதற்குப் பின்னர் வருகின்ற 473 பக்கங்களும் முந்திய 250 பக்கங்களுக்கு உரிய விளக்கமாகத்தான் இருந்திட வேண்டும் என்றும் நான் முடிவு செய்து கொண்டேன்.

நல்ல நகைச் சுவை

வாய் விட்டு நான் சிரித்த பகுதி ஒன்று கதையில் உண்டு. வாசகர்களுடன் அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வீட்டு மனைவி: ‘உண்மையிலேயே யாராவது செய்வினை செய்திருப்பாவளோ ? உங்க பதவி பிடிக்காதவங்க உண்டு. போட்டியாட்டு ஆராவது. . . ‘

கம்யூனிஸ்ட் கணவன்: ‘இந்த மார்க்ஸ் ஒரு புஸ்தகத்திலே எழுதினாரு — ஐரோப்பாவை ஒரு பூதம் பிடிச்சு ஆட்டி வைக்குது. அந்தப் பூதத்துக்க பேரு கம்யூனிசம். இந்தப் பூமியிலே உண்டானதிலேயே பெரிய பூதம். அதுக்க கிட்ட ஒரு

பேயும் நிக்காது. ‘

வீட்டு மனைவி: ‘அது இங்கிலீஷ் பூதம். நம்ம ஊரு வேதாளங்கள் அதை உப்புப்

போட்டுத் தின்னுடும். ‘

கம்யூனிஸ்ட் கணவன்: ‘பேச்சு மட்டும் வக்கணையா. ‘

வீட்டு மனைவி: ‘சொல்லுததக் கேளுங்க. அச்சுதன் ஆசானிட்ட சொல்லி ஒரு

தாயத்து வாங்கிட்டு வர்றேன். இடுப்பிலே கெட்டிக்கிடுங்க. ஆருக்கும் தெரியாது. ‘

( பக்.153. )

ஆக, இனியாவது மார்க்ஸை ஜெ.எம். படிக்க வேண்டும்; படித்து விட்டு மார்க்ஸைப் பற்றி எழுத வேண்டும். அவரது அறிவாண்மை நாணயத்தைக் காட்டுவதாக அது அமையும். மார்க்ஸைக் கொச்சைப் படுத்துகின்ற அளவுக்கு மார்க்ஸ் மீது இவருக்கு என்ன கோவம் இருந்திட முடியும் ? தெரியாத ஒருவர் மேல்

யாராவது கோவம் கொள்ளத்தான் முடியுமா ?

மார்க்ஸின் முகம் போன்றது ஒரு முக மூடியைச் செய்து, ஸ்தாலின் முகத்தில் அதனைப் பொருத்தி வைத்துக் கொண்டு, ஸ்தாலினிசத்தை மிகவும் சரியாகச் சாடி விடுவதால் மட்டும் மார்க்ஸைச் சாடி விட்டதாக அது ஆகி விடாது. ஏனென்றால், ஸ்தாலினிசம் என்பது வேறு; மார்க்ஸிசம் என்பது முற்றிலும் வேறு; ஸ்தாலினிசத்திற்கு

நேர் எதிர் ஆனது.

எனினும், மார்க்ஸின் கருத்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று யாருக்கும் எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால், மார்க்ஸைத் தெரிந்து வைத்துக் கொண்டு அவரை எதிர்ப்பவர்கள், அவரை வளப் படுத்தியே தீருவார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. ஒரு கடவுளாக மார்க்ஸைக் கருதுவதன் மூலம் மார்க்ஸை ஒரு மார்க்ஸிய வாதி எப்படி வளப் படுத்திட முடியாதோ, அப்படி, ஒரு பேயாக மார்க்ஸைக் கருதுவதன் மூலம் எந்த ஒரு மார்க்ஸிய எதிர்ப்பு வாதியும் அவரை வீழ்த்தி விடவும் முடியாது.

எனவேதான், மார்க்ஸை நோக்கி ஜெ.எம். வீசி எறிகின்ற கற்கள் எல்லாம், திசை மாறிப் போய்ப் போலிப் ‘புனிதர் ‘களின் பாதங்களில் பூக்களாக விழுந்து கொண்டு இருக்கின்றன! இதன் இறுதி விளைவுதான் மாய்மை! பண்பாட்டில் மாய்மை; சொற்களில் மாய்மை; காதலில் மாய்மை; அனைத்திலும் மாய்மை! பொருளாதாரம் மட்டும்தான் இவர் கண்களுக்குத் தட்டுப் பட வில்லை!

கருத்துக் கூறும் உரிமை

இப்படி எழுதி முடித்து விட்டுக் கண்ணனுக்காக நான் காத்து இருந்தேன். நிழலின் குரல் பற்றித் தாம் எதுவும் எழுதப் போவது இல்லை என்று கண்ணன் கூறி

விட்டார். நான்கு நாட்களுக்குப் பின்னர் இந் நூலின் வெளியீட்டாளர் வசந்த குமாரிடம் நான் கூறினேன் — நான் படித்த 250 பக்கங்களில் மார்க்ஸியம் எதுவும் வர வில்லை என்று!

நூலை முழுவதும் படிக்காமல் அது பற்றிக் கருத்துக் கூறும் உரிமை எனக்கு இல்லை என்று வசந்த குமார் கூறினார். கொஞ்சம் மலைத்தும் கொண்டார். இதில்

மலைப்பதற்கு என்ன இருக்கிறது! ஒரு நூலை முழுவதும் படிக்காமல் அது பற்றிக் கருத்துக் கூறிட நான் முற்பட்டு இருந்தது தவறுதானே! எனவே, நூலை நான் தொடர்ந்து படித்தேன்.

( திரு. வசந்த குமாருக்கு, வணக்கம்.

250 பக்கங்கள் படித்து முடித்து விட்டு, ‘நிழலின் குரலி ‘ல் மார்க்ஸியம் எதுவும் இல்லை என்றும் தொடர்ந்து அதைப் படிக்கப் போவது இல்லை என்றும் உங்களிடம் நான் கருத்துக் கூறினேன். மார்க்ஸியம் இனி வரப் போகிறது என்றும் முழுவதும் படிக்காமல் கருத்துக் கூறும் உரிமை எனக்கு இல்லை என்றும் நீங்கள் அடித்துக் கூறினீர்கள்; கொஞ்சம் மலைத்தும் கொண்டார்கள். உங்கள் உறுதியான ஞாயத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து படித்து வந்து 567-ஆம் பக்கத்தில் இப் பொழுது நான் நின்று கொண்டு இருக்கிறேன். மார்க்ஸியம் வருமா ? கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடக்குமா ?

மிகவும் சரளமாகவும் தெளிவாகவும், அதே நேரத்தில், மாயமாகவும் ஜெ.எம்.எழுதுகிறார். இப்படி எல்லாம் என்னால் எழுதிட முடிவது இல்லை. பிணக் குவியல்களுக்கு இடையே சோகக் கடலில் ஜெ.எம். தத்தளித்துக் கொண்டு இருப்பதைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சாத்தான்தான் அவரைக் கரையேற்ற முடியும் என்ற போதிலும், தமது தேவ தூதர்களை அனுப்பி ஏசு அவரை வேவு பார்த்துக் கொண்டு இருக்கிறாரே! அவர் கரை ஏறுவாராக!

அன்புடன், சோதிப் பிரகாசம். 30-12-2000.)

‘நிழலின் குரல் ‘ கூறும் கதையை முதலில் நாம் பார்ப்போம்.

கதை ஓட்டம்

கெ.கெ.மாதவன் நாயர் என்பவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய

மான ஒரு தலைவர். ஸ்தாலின் மீது மிகவும் பற்றுக் கொண்டவர். மார்க்ஸியம்,

படிப்பு, கலை-இலக்கியம், என்பன வற்றில் எல்லாம் எந்த வித ஆர்வமும் அவருக்கு

இல்லை. இசையை மட்டும் கொஞ்சம் அவர் சுவனிப்பார். மிகவும் கடினப் பட்டு உழைத்து, காடு, மலை, எல்லாம் ஏறி நடந்து, ரப்பர் தொழிலாளர்களுக்கு என்று ஒரு தொழிற் சங்கத்தை அவர் நிறுவினார். அவரது குடும்பத்தினர் அவருக்கு அளித்து

இருந்த பெரும் தொகையைச் செலவிட்டுச் சங்கத்திற்கு என்று ஒரு கட்டடமும் அவர் வாங்கினார். அந்தக் கட்டடம்தான் இன்னமும் சங்கத்தின் அலுவலகம். ரப்பர் தோட்டத்து உழைப்பாளர்கள் இடையே ஒரு முடிசூடா மன்னர் அவர்!

தோழர் கெ.கெ.எம். முடன் அவரது உதவியாளராகப் பணி புரிபவன் அருணாசலம். கெ.கெ.எம். மேல் அன்பும் மரியாதையும் கொண்டவன்; தனது மனைவி நாகம்மையுடன் மகிழ்ச்சியாக அவன் குடும்பம் நடத்திக் கொண்டு வருகிறான்; தொழிற் சங்கப் பணிகளிலும் அவன் ஈடு படுகிறான். அவனுடன் உதவியாளராகப் பணி புரிகின்ற நாராயணனுக்கு அருணாசலத்தின் பதவி மேல்

ஒரு கண்!

தொழிற் சங்கத்தின் பேராயக் கூட்டம் நடை பெற விருக்கிறது. தலைவர்கள் தேர்ந்து எடுக்கப் பட வேண்டும். கட்சி-மேலிடத்துத் தூதுவர்கள் வருகிறார்கள். கெ.கெ.எம்.மை எப்படியும் தூக்கி விட வேண்டும் என்பது மேலிடத்தின் நோக்கம். சங்கத்தில் இருந்து அவரைத் தூக்கி விட்டால் உழைப்பாளர்கள் கொதித்துப் போய்

விடுவார்கள் என்று அருணாசலம் கூறுகிறான். கெ.கெ.எம். மின் மரியாதையைக் காப்பாற்றி ஆக வேண்டும் என்று அவனது மனச் சான்று கூறுகிறது.

கட்சி-மேலிடத்துத் தூதுவர்கள் ஒரு கணக்குப் போடுகிறார்கள் — கெ.கெ.எம்.

ஒரு நாயர்; கிளைச் செயலாளர்களில் நாயர்கள் குறைவு; அருணாசலம் ஒரு பிள்ளை; நாராயணன் என்னும் நாடாரின் உதவியுடன் கட்சியில் அருணாசலம் உயர

முடியும்.

இறுதியில், மிகுதி-நேரம் வேலை செய்வது, புதிய உழைப்பாளர்களின் வேலை வாய்ப்புக்கு ஊறு செய்யும் என்று கூறிய கெ.கெ.எம்.மிற்கு எதிராக வாதங்கள் புரிந்து, உழைப்பாளர்களை மேலிடத் தூதுவர்கள் திசை திருப்புகிறார்கள். கெ.கெ.எம். இடத்தில் இப் பொழுது அருணாசலம்! அருணாசலம் இடத்தில் நாராயணன்!

கெ.கெ.எம். தூக்கி வீசப் பட்டது அருணாசலத்தின் உள்ளத்தை உறுத்துகிறது.

எனினும், அதனை அவன் கல்லாக்கிக் கொள்ளுகிறான். இதற்கு இடையில், கட்சியில் இருந்து தூக்கி வீசப் பட்டு, ஒரு குடிகாரன் ஆக வீதியிலே இறந்து போய் இருந்த வீர பத்ர பிள்ளையின் கதையும் அவனது உள்ளத்தை உறுத்தத் தொடங்குகிறது. வீர பத்ர பிள்ளையின் நினைவையே கட்சி அகற்றி விட்டு இருந்தது, ஒரு வஞ்சகம் என்று அவன் எண்ணுகிறான். இறுதியில், வீர பத்ர பிள்ளையின் பழைய குறிப்புகள், கதை-கவிதை-நாடகங்கள், அவனுக்குக் கிடைக்கின்றன. அவரது பெயரை மீண்டும் தூக்கி நிறுத்திட அவன் முற்படுகிறான்.

இதற்கு இடையில், ‘மார்க்ஸியத்தின் காலம் முடிந்து விட்டது. பூமியில் அற்புதங்களை அது நிகழ்த்தும் என்பது மூடத் தனம் ‘ ( பக்.105. ) என்று கம்யூனிஸ்ட் கட்சிக் காரரான கதிர் கூறி இருந்ததும் அவனை அலைக்கழிக்கத் தொடங்குகிறது. மார்க்ஸியத்தின் காலம் முடிந்து விட்டதா ? என்பது பற்றிக் கவலைப் படும் அருணாசலம், மார்க்ஸின் நூல்களைப் படித்துப் பார்த்திட முற்பட வில்லை. இத்தனைக்கும், மார்க்ஸ் எழுதிய ‘முதல் ‘ என்னும் நூல் தினமும் அவனது கண்களில் தட்டுப் படாமல் இல்லை — எண்ணெய்க் குப்பியை அவனது மனைவி வைத்துக் கொள்ளும் ஒரு பலகையாக!

ஆனால், பெரிய மனிதர்களைத் தேடி அவன் ஓடுகிறான்; ராமசாமி என்று ஒருவரைச் சந்திக்கிறான். மெய்ப்பொருண்மைக்கு எதிரான ராமசாமியின் கருத்துகள்

மார்க்ஸியத்தின் மீது அருணாசலத்தை ஐயம் கொள்ள வைக்கின்றன. ஸ்தாலினிசத்தின் மீதான அவரது தாக்குதல்களை மார்க்ஸியத்தின் மீதான தாக்குதல்களாக அவர் தொடுத்தது அருணாசலத்திற்குப் புரிய வில்லை. எனினும்,

அவர் சுட்டிக் காட்டிய ஏசுவின் அரத்தம், கருணையாலும் அன்பாலும் அருணாசலத்தை நிறைத்துக் கலை-இலக்கியத்தின் பால் அவனை உந்தித் தள்ளுகிறது.

இன்றைய ‘இலக்கிய உலகின் சுடர் ‘ என்று ராமசாமி சுட்டிக் காட்டிய

ஜெய மோகனை அவனுக்கு ஏனோ பிடிக்காமல் போயிற்று! எனவே, வீர பத்ர பிள்ளையின் கதைகளை அவன் படிக்கத் தொடங்குகிறான். மூடி மறைக்கப் பட்டு இருந்த பல வரலாற்று உண்மைகள், வீர பத்ர பிள்ளையின் மூலம் அவனுக்குத் தெரிய வருகின்றன.

ஸ்தாலினின் ஆட்சிக் காலத்தில் ருஷ்யாவில் நடைபெற்று வந்து இருந்த கொடுமைகளை வீர பத்ர பிள்ளை படம் பிடித்துக் காட்டுகிறார்.

லெனினின் மரணத்திற்குப் பின்னர் ஆட்சியைப் பிடிப்பதில் ஸ்தாலினுக்கும் திரோத்ஸ்கிக்கும் இடையே போட்டி ஏற்படுகிறது. :புக்காரின், காமனேவ், ஜ்ஸினோவேவ், போன்ற தலைவர்கள், திரோத்ஸ்கிக்கு எதிராக நின்று ஸ்தாலினுக்கு

ஆதரவு தருகிறார்கள்.

ஏனென்றால், உழைப்புப் பாசறைகள் ஏற்படுத்தப் பட்டுக் கட்டாய உழைப்பின் மூலம் உழைப்பாளர்கள் கொடுமைப் படுத்தப் பட்டு வந்ததற்குத் திரோத்ஸ்கிதான் காரணம். லெனின் கூட திரோத்ஸ்கியின் கருவியாக இருந்துதான் செயல் பட்டுக் கொண்டு வந்தார். உழவர்கள் சுரண்டப் பட்டுக் கொடுமைப் படுத்தப் பட்டு வந்ததற்கும் பசி-பட்டினியால் அவர்கள் மடிந்து கொண்டு வந்ததற்கும் திரோத்ஸ்கிதான் காரணம்.

புரட்சியில் தமக்குச் சாதகமாக இருந்து வந்த ‘க்ரான்ஸ்டாட் ‘ வீரர்களைக் கூட அடக்கி அடி பணிய வைத்தவர் திரோத்ஸ்கி. அவர் மட்டும் ஆட்சியைப் பிடித்தால், கொடுமைகளும் கொலைகளும் அதிகரித்துக் கண்ணீரும் கம்பலையுமாக ருஷ்ய மக்கள் மடிந்து போக நேரிடும்.

எனவே, ஸ்தாலினுக்கு ஆதரவாகக் கட்சிக் காரர்களை அணி திரட்டுகிறார்

:புக்காரின். அரியணையில் அமருகிறார் ஸ்தாலின். ஸ்தாலினுக்கு எதிராகத் தொடர்ந்து செயல் பட்டு வருகிறார் திரோத்ஸ்கி. எனவே, அவரை நாடு கடத்திட முடிவு எடுக்கிறார் ஸ்தாலின். அதனைத் திரோத்ஸ்கிய வாதிகள் எதிர்க்கிறார்கள். அதே நேரத்தில், ஸ்தாலினுக்கு ஆதரவாக நின்று திரோத்ஸ்கியைப் :புக்காரின் பழி வாங்குகிறார்; திரோத்ஸ்கியும் நாடு கடத்தப் பட்டு விடுகிறார்.

இறுதியில், ஸ்தாலினையும் :புக்காரினுக்குப் பிடிக்காமல் போயிற்று! விடுதலையாக விடப் பட்டு இருந்த வேளாண்மையில் சிறு முதலாளர்களாக வளர்ந்து வந்து கொண்டு இருந்த குலக்குகளை ஒழித்துக் கட்டி, கூட்டுப் பண்ணைகளை ஸ்தாலின் உருவாக்குகிறார். குவியல் குவியலாக வேளாண் மக்கள் கொல்லப் படுகிறார்கள்; ஊர் ஊராக விரட்டி அடிக்கப் படுகிறார்கள்.

இந்தக் கொடுமைகளைப் :புக்காரினால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. எனவே, ஸ்தாலினைப் :புக்காரின் எதிர்க்கிறார். ஸ்தாலினுக்கு அவர் மேல் ஐயம் ஏற்படுகிறது. திரோத்ஸ்கிக்கு எதிரான சதியில் தன்னுடன் ஒத்துழைத்த :புக்காரின், தமக்கு எதிராகவும் சதி செய்யக் கூடும் என்று கருதிய ஸ்தாலின், :புக்காரினை வீழ்த்திடத் திட்டம் தீட்டுகிறார். :புக்காரினின் இளம் மனைவியை விட்டு விடுவதாக வாக்குறுதி அளித்து விட்டு, :புக்காரினை விசாரணைக்கு உட்படுத்திட ஸ்தாலின் வட்டாரங்கள் முடிவு செய்கின்றன.

தம் மீது பொய்க் குற்றச் சாட்டுகள் ஏவி விடப் படும் என்பது :புக்காரினுக்குத் தெரியும். எனவே, நடந்த நிகழ்மைகளைத் தம் மனைவியிடம் எடுத்துக் கூறி, மனப் பாடமாக அவற்றைத் தம் நினைவில் அவர் வைத்து இருக்க வேண்டும் என்றும்

தக்க நேரத்தில் உலகுக்கு அவற்றை அவர் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகிறார். இறுதியில், சை:பீரியாவிற்கு அவர் கொண்டு செல்லப் பட்டு, பொய்க்

குற்றச் சாட்டுகள் உறுதி செய்யப் பட்டு, உறைந்த பனி போல் அவரது உள்ளமும் உறைந்து, அவர் கொல்லப் படுகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சிகளால் மூடி மறைக்கப் பட்டு இருந்த இந்தச் செய்திகள், வீர பத்ர பிள்ளைக்குத் தெரிய வருகின்றன. :புக்காரினின் கதையை உலகுக்கு அறிவித்தே தீருவேன் என்று அவர் உறுதி பூணுகிறார்; ருஷ்ய வரலாறு பற்றித் தாம் எழுதி வந்த ஒரு நூலில் :புக்காரின் பற்றிய செய்திகளையும் அவர் சேர்க்கிறார்.

எம்.என்.ராய் மீதும் அவருக்குப் பற்று ஏற்படுகிறது.

வீர பத்ர பிள்ளையைச் சமதானப் படுத்திட கெ.கெ.எம். எடுத்த முயற்சிகள் பலிக்க வில்லை. இறுதியில், கட்சியில் இருந்து தூக்கி வீசப் படுகிறார் வீர பத்ர பிள்ளை. அவர் மீது வசை மாரிகள் பொழியப் படுகின்றன.

எனினும், மார்க்ஸின் நூல்களைப் படிக்க வேண்டும் என்று வீர பத்ர பிள்ளைக்குத் தோன்ற வில்லை. மெய்ப்பொருண்மை மீது, அதாவது, சித்தாந்தங்கள் மீது, அதாவது, தருக்கங்கள் மீது, அவருக்கு வெறுப்பு ஏற்படுகிறது. கதைகளின் ஊடாக — உணர்ச்சிகளின் ஊடாக — உணர்மங்களின் ஊடாக — வாழ்க்கையை அவர் பார்க்கிறார். சில கவிதைகளையும் கதைகளையும் நாடகங்களையும் அவர் எழுதுகிறார்.

ருஷ்யாவில் கொல்லப் பட்டவர்களின் பிணங்கள் — பனிப் பாளங்களுக்கு இடையே அடையாளம் இன்றி உறைந்து போய் இருந்த அவர்களின் ஆன்மாக்கள்

— அவர்களின் கண்ணீர் ஓடைகள், புலம்பல்கள் — குறிப்பாக, :புக்காரினின் ஏமாற்றங்கள் — அவரது கண்ணீர்த் துளிகள் — மகா பீட்டர் காலத்தில் இருந்து தொடர்ந்து கொண்டு இருந்த அடக்கு முறைகள் — ஓயாத ஓலங்கள் — நிழல்களைப் போல வீர பத்ர பிள்ளையைத் தொடர்கின்றன.

ஏசு போல ஒருவர் வந்து, புறக்கணிக்கப் பட்ட ஆன்மாக்களைத் தம் அரத்தத்தால் கழுவி, அவர்களுக்கு மீட்பினை அருள வேண்டும் என்று கண்ணீர்க் காவியங்களை எழுதி வைத்து விட்டு அவர் மடிந்து போகிறார். சித்தாந்தங்கள் அனைத்தையும் கிண்டல் செய்திடவும் அவர் தவற வில்லை.

வீர பத்ர பிள்ளையின் எழுத்துகளைப் படிக்கப் படிக்க அவரது சோகம் அருணாசலத்தையும் பற்றிக் கொள்கிறது. அந்தச் சோகத்துடன் :புக்காரினின் சோகமும் சேர்ந்து விடவே, நிலை குலைந்து போகிறான் அருணாசலம்; மீட்புத் தேடி அலைகிறான்.

இந்த நேரத்தில் அவனுக்குச் சாத்தானின் தெரிசனம் கிட்டுகிறது. மத வெறி, சாதி வெறி, இன வெறி, முதலிய எல்லா வெறிகளுக்கும் முடிவுரையாக, ‘உச்சக் கட்டத் தருணம் எது தோழர்களே ? தின்று, குடித்து, புணர்ந்து, அவர்கள் உந்தி விட்ட வருடங்களின் நீண்ட வரிசையா ? இல்லை; இல்லவே இல்லை; தலைவனின் உத்தரவு ஒலித்ததும் படையெனும் உயிர்ப் பிரவாகத்திற்குத் தன் உடலையும் உயிரையும் ஒப்படைத்து விட்டு முன்னால் பாய்ந்து, விழுந்து, உயிர் துறக்கும் கணம் வரையிலான ஒரு சில நொடிகள் மட்டுமே! இதை எவரும் மறுக்க முடியாது. சுய மறுப்பும் தியாகமும்தான் மானுடப் பரிபூரணத்தின் ஒரு வழிப் பாதைகள். . . ‘ ( பக்.467. ) என்ற சாத்தானின் அறை கூவல் அவனை அச்சம் கொள்ள வைக்கிறது.

‘மானுட மீட்புத் தியாகிகள் சங்கம் ‘ என்ற பெயரில் சாத்தான் நிறுவி இருந்த ஒரு சங்கத்தின் கூட்டம் அது. இச்சைதான் சாத்தானின் மேடை என்னும் ஒரு தெளிவு அருணாசலத்திற்கு அப் பொழுது ஏற்படுகிறது.

இந்த நேரத்தில் அருணாசலத்திற்கு மடல் எழுதுகிறார் ராமசாமி. மானுட அறத்தைப் பற்றியும் தருக்கங்களின் இயலாமை பற்றியும் அவர் எடுத்துக் கூறுகிறார்.

ஸ்தாலின் காலத்துக் கொடுமைகள் அனைத்தும் மானுட அறத்திற்கு எதிரான பாவங்களாகத் தெரிகின்றன என்று கூறுகின்ற அவர், பாறைகளாக மாறிப் போகின்ற

சொற்களைப் பற்றி எழுதி விட்டு, கலை-இலக்கியங்களைப் புகழ்கிறார். அவரைப் பார்க்கச் செல்கிறான் அருணாசலம். ஜோணி என்னும் ஒரு தீவிரக் கம்யூனிஸ்ட்டையும் அங்கே அவன் சந்திக்கிறான்

முதலில் வீர பத்ர பிள்ளையின் கதைகளைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். பிணங்களுக்கு இடையே சோகக் கடலில் ஆழ்ந்து எழுதப் பட்டு இருந்த அந்தக் கதைகளின் கலை அழகு பற்றியும் கலைத் தரம் பற்றியும் அவர்கள் பேசுகிறார்கள். வாழ்வின் உன்னதங்களை உருவாக்க முயலும் ஒரு மன எழுச்சிதான் கலை என்கிறான் ஜோணி. ஜோணியும் ராமசாமியும் வாதிட்டுக் கொள்வதை அருணாசலம் கவனிக்கிறான். மானுட விரோதி என்று ஸ்தாலினை ராமசாமி வருணிக்க, அது பூர்ஷுவா பேச்சு என்று ஜோணி எதிர்க்க, வாதம் தொடர்கிறது.

மக்களை நேசித்து, அவர்களுக்காகத் துப்பாக்கி பிடிக்கப் போய், பின்னர் துப்பாக்கியை நேசிக்கத் தொடங்கி விட்டு இருந்த ஒரு தீவிரவாதி ஜோணி. பொருளாதாரத்தில் மார்க்ஸியம் தவறு புரிந்து இருக்கலாம்; ஆனால், மானுட உலகத்தின் கனவு அதுதான் என்று அவன் கூறுகிறான். எனினும், மார்க்ஸியத்தின் கதி என்ன ? என்னும் அருணாசலத்தின் கேள்விக்குப் பதில் எதுவும் அங்கே கிடைக்க வில்லை. மிரண்டு போய் வீட்டுக்கு ஓடி வந்து விடுகிறான் அருணாசலம்.

பின்னர், மார்க்ஸிய அறிஞர் கந்தசாமியைச் சந்திக்கும் வாய்ப்பு அருணாசலத்துக்குக் கிட்டுகிறது. ஜெய மோகனையும் அங்கே அவன் காண்கிறான்.ஜெய மோகனின் ‘விஷ்ணு புரம் ‘ கதை வெளியிடப் படும் முயற்சி பற்றி அவர்கள் பேசுகிறார்கள். பின்-நவீனத்துவம் — ஒன்று உண்டு; என்றால், மற்றது இல்லை; என்று கூறுகின்ற பைனரி முறை — தேசிய வாதம் — என்றெல்லாம் அவர்களின் பேச்சுத் தொடர்கிறது.

‘ஹெகலோட வரலாற்றுப் பொருள் முதல் வாதம்ங்கிற கருத்து முதல் வாதத் தரிசனம் ‘ ( பக்.599. ) என்று மார்க்ஸியத்தைக் கொலை செய்து அதை அருணாசலத்துக்கு அறிமுகம் செய்கிறார் கந்தசாமி.

‘பெளதிக சக்திகள்னு மார்க்ஸ் சொல்றப்ப, பொருளாதார அடிப்படைகளைத்தான் சொன்னார். உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சக்திகள்னு அதை வரையறுத்து, அடித்தளம்னு பேர் குடுத்தார். எல்லா சமூக மாற்றமும் பொருளாதார அடிக்கட்டுமானத்தில ஏற்படக் கூடிய மாற்றங்களினாலதான் வரும்னு சொன்னார். ‘ (பக்.600.) ஒரு மனப் பாடச் சூத்திரமாக மார்க்ஸியத்தைப் பற்றி இதற்கு மேல் கந்தசாமியால் வேறு எதுவும் கூறிட முடிய வில்லை.

ஸ்தாலினிசக் கொடுமைகளை அருணாசலத்திற்கு விளக்குகின்ற கந்தசாமி, ஜெய மோகனை ஒரு மூடன் என்கிறார். ஸ்தாலினின் கொடுமைகள் அத்தனைக்கும் தானும் பொறுப்பு என்கிறான் அருணாசலம். மார்க்ஸியத்தை நான் நம்புகின்ற வரைக்கும் இதற்கு எல்லாம் நானும் பொறுப்பு என்று அவன் கலங்குகிறான். வரலாற்றுப் போக்குகளை விளக்குகின்ற கந்தசாமியிடம், ‘அப்ப, மார்க்ஸியம் பேர்ல தப்பு இல்லை, இல்லியா ? ‘ (பக். 603.) என்று உறுதியான ஒரு கேள்வியை அருணாசலம் எழுப்புகிறான்.

அவனுக்கு வேண்டியது அந்தக் கேள்விக்கு உரிய விடைதான். அந்தக் கேள்விக்கு விடை கூறாமல், சித்தாந்தங்களின் அடிப்படைக் கோளாறுதான் அனைத்துக்கும் காரணம்; மனிதச் சிந்தனையின் பலவீனம் மார்க்ஸின் சிந்தனையிலும் உண்டு; என்று அருணாசலத்தை மேலும் குழப்புகிறார் கந்தசாமி. ஆனால், சுரண்டப் படுகின்ற மக்களின் ஒரே ஆயுதமாக அதுதான் இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார். அருணாசலம் விடை பெற்றுக் கொள்கிறான்.

வீர பத்ர பிள்ளையின் எழுத்துகளைப் படிக்கப் படிக்க அருணாசலத்தின் குழப்பம் அதிகப் படுகிறது. நிம்மதி இன்றி அவன் கலங்குகிறான்; மனச் சான்றின் உறுத்தலில் துடிதுடித்துப் போகிறான். நாகம்மையின் அன்பு கூட அவனது உள்ளத்தை நிலைப் படுத்திட முடிய வில்லை. இப்படி, பெரியவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து இறுதியில் அவனை ஒரு பைத்தியம் ஆக்கி விடுகிறார்கள்.பைத்தியம் பிடித்து மருத்துவ மனையில் அடை பட்டுக் கிடக்கின்ற அருணாசலத்திற்கு ஏசுவின் தரிசனம் கிட்டுகிறது.

உலகில் நீதிமான்கள் என்று எவரும் இல்லை; அனைவரும் குற்றவாளிகள்; குற்றங்களைத் தண்டிப்பது என்றால் உலகையே நான் அழித்து விட வேண்டியது வரும்; தங்கள் பாவங்களைக் கழுவி இதயத்தை இலகுவாக்கிக் கொள்பவர்கள் மட்டும்தாம் மீட்பு அடைகிறார்கள்; என்னும் ஏசுவின் அன்பு அவனைக் கவர்கிறது. எனினும், அவனது மனைவியிடம் அவன் காணுகின்ற காமத்தில்தான் இறுதியில் அவனது மன நோய் தீருகிறது — ஒன்றரை மாதம் கழித்து!

முடிவில், சித்தாந்தங்களின் மேல் அவன் நம்பிக்கை இழக்கிறான்; தியாகம் மட்டும்தான் முழுமையானது என்னும் முடிவுக்கும் வருகிறான்; ஒரு சிவாலயத்தில் அவன் கண்ட ஆவுடை-லிங்கம், அவனை ஒரு நிலைப் படுத்துகிறது.

அருணாசலத்தின் இந்த முடிவை ஜெய மோகன் ஏற்றுக் கொள்ள வில்லை. தன்னால் புரிந்து கொள்ள முடியாதவை மனித மனமும் வரலாறும்தாம் என்று அருணாசலத்துக்கு அவன் மடல் எழுதுகிறான். அசோக வனம் என்று ஒரு புதிய கதை எழுதப் போவதாகக் குறிப்பிடுகின்ற அவன், எழுதும் போது தான் தோல்வி அற்றவன் என்றும் துயரம் இல்லாதவன் என்றும் பெருமைப் பட்டுக் கொள்கிறான்.

இதுதான் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ கதையின் ஓட்டம். கதை முழுவதும்

கனத்து நிற்பது சோகம்!

ஸ்தாலின் ஆட்சியின் அடக்குமுறைகள் — அந்த அடக்குமுறைகளினால் கொல்லப் பட்ட அப்பாவி மக்கள் — பனியில் உறைந்து போன அவர்களின் பிண முகங்கள் — மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டு அவர்கள் எழுப்பிய ஓலங்கள்

— உள்ளக் கடுப்புகள் — அவர்களுடைய மனைவி-மக்களின் கண்ணீர் ஓடைகள் — என ஒரு சோகக் கடலின் ஓயாத அலைகளை நமக்குள் இந்தக் கதை எழுப்பி விடுகிறது.

கதை-மாந்தர்கள்

இந்தக் கதையின் மாந்தர்களில் மெய்மை மாந்தர்கள் யாரேனும் உண்டா ? என்பது நமக்குத் தெரிய வில்லை. வீர பத்ர பிள்ளை என்பவர் கூட ஒரு மெய்மை மாந்தரா ? அல்லது ஒரு கதை-மாந்தரா ? என்பதும் நமக்குத் தெரிய வில்லை. வீர பத்ர பிள்ளையின் எழுத்துகள், அவை வெளி வந்து இருந்த பத்தரிகைகள், முதலியவை கூட மெய்மை ஆனவையா ? என்பதும் நமக்குத் தெரிய வில்லை.

இந்தக் கேள்விகளுக்குப் பதில் தரக் கூடிய விளக்கங்கள் எதுவும் இந்தக் கதையிலோ அல்லது முன்னுரையிலோ இல்லை என்பதால், எல்லாக் கதை-மாந்தர்களையும் புனைவுகளாகக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை.

ஏன், ஜெய மோகன் என்பவன் கூட இந்தக் கதையில் ஒரு கதை-

மாந்தன்தான். தால்ஸ்தாய், தாஸ்தாவெஸ்கி, :கார்க்கி, பெரிய மீனாகப் பிடித்தும் வெறும் எலும்புக் கூட்டுடன் கரை திரும்பிய நாயகனின் ‘கடலும் கிழவனும் ‘, பின்- நவீனத்துவம், தருக்கம், சித்தாந்தம், கலை-இலக்கியம், சமயம், வரலாறு, ஸ்தாலின், ப்ளேட்டோ, மார்க்ஸ், ஹே:கல், எனப் பலவும் இவனுக்குத் தெரிந்து இருக்கின்றன

— கதை-மாந்தர்கள் மூலமாக!

ஆனால், ஜ்ஸார், லெனின், ஸ்தாலின், திரோத்ஸ்கி, :புக்காரின், ஆகியோர் மெய்மையான வரலாற்று நாயகர்கள் என்பது நமக்குத் தெரியும். மார்க்ஸியம் இல்லாத இந்த நூலில் அதன் மீது வசை மாரிகள் பொழியப் பட்டு இருப்பதுதான் மிகப் பெரிய வேடிக்கை!

கதையின் உத்திகள்

இந்தக் கதையின் உத்திகளைப் பின் வருமாறு நாம் வகைப் படுத்தலாம்:

ஒன்று: இந்தக் கதையை எழுதுபவர் ஜெ.எம். அல்லர். ஜெ.எம்.மின் கதையும் இது வல்ல. ஏனென்றால், கதை-மாந்தர்களின் கதை இது; கதை-மாந்தர்கள் தாங்களே வாழ்ந்து, தாங்களே எழுதி, இறுதியில், தாங்களே நமக்குச் சொல்கின்ற ஒரு கதை; இதில் ஓர் எழுது கருவி மட்டும்தான் ஜெ.எம்.!

எனவே, இந்தக் கதை, ஜெ.எம்.மின் கதை ஆகாது; இந்தக் கதையில் வெளிப்

படுத்தப் படுகின்ற கருத்துகள், ஜெ.எம்.மின் கருத்துகள் ஆகா! எனவே, ஜெ.எம்.மீது வீசப் படுகின்ற எந்த ஒரு விள்ளனக் கணையும் ஜெ.எம்.மைத் தாக்காது! ஏனென்றால், ஜெ.எம். இதில் ஒரு கதை-மாந்தரே அன்றி, இதன் எழுத்தாளர் அல்லர்.

இரண்டு: மிகவும் அழுத்தம் திருத்தமாக வாசகர்களின் பான்மை இதில் வடிவமைக்கப் படுகிறது — அவர்களுக்கே தெரியாமல்! அதாவது, ஜெ.எம். மூலமாக,

வாசகர்களுக்கே தெரியாமல், அவர்களது கருத்துகளைக் கதை-மாந்தர்கள் இதில் வடிவமைக்கிறார்கள். இந்தக் கருத்துகள், மார்க்ஸியத்தை ஏற்றுக் கொள்ள முடியாத

— மனித இதயத்தால் மார்க்ஸியத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்கின்ற — ஒரு பான்மையாக வடிவமைக்கப் படுகின்றன. இப்படி ஒரு தீர்ப்பினை மார்க்ஸியத்தின் மீது இதன் கதை-மாந்தர்கள் எழுதுகிறார்கள் — ஜெ.எம். அல்லர்!

மூன்று: மார்க்ஸியம் தெரியாத கம்யூனிஸ்ட்டுகள் இதில் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள். ஸ்தாலின் வழி வந்த கம்யூனிஸ்ட்டுகள்தாம் அவர்கள் என்பதால், ஸ்தாலினிசமாக மார்க்ஸியம் நமக்கு அறிமுகப் படுத்தப் படுகிறது. இந்த வகையில் எரிச்சல் ஊட்டுகின்ற ஒரு கதை இது. ஆனால், ஸ்தாலினின் கொடுமைகள் மூலமாக

மார்க்ஸியம் இதில் வசை பாடப் பட்டு இருப்பதால், நாணயமான மார்க்ஸிய எதிர்ப்பு

வாதிகளிடம் இந்த எரிச்சல் கொஞ்சம் தணியலாம். ஆனால், நமக்கோ இந்த எரிச்சல் அதிகப் படுகிறது; ஆத்திரம் ஏற்படுகிறது.

இதைக் கூர்ந்து கவனிக்கிறார் ஜெ.எம். இதற்கு மருந்தாகப் பெரும் சோகத்தை நமக்கு அறிமுகப் படுத்துகிறார். சோகக் கடலில் நாம் தத்தளித்துப் போகிறோம். ஆனாலும், அவ்வளவு எளிதாக நமது ஆத்திரம் தீர்ந்து விடாது என்பது ஜெ.எம்.மிற்குத் தெரியும். எனவே, நம்மை அவர் சிரிக்க வைக்கிறார் — ஒரு பிதற்றல் நாடகத்தின் மூலம்; தாக்குதலைத் தவிர்க்கின்ற ஒரு புன்னகையாக!

பக்.624 முதல் 678 வரை, இடை விடாமல் இந்தச் சிரிப்புத் தொடர்கிறது. சிரிப்பு என்றால் வெடிச் சிரிப்பு; ஒவ்வொரு பக்கத்திலும் சிரிப்பு; அடக்கிட முடியாத

சிரிப்பு! சோகத்தைக் கடந்து சிரிப்பின் தொடக்கம் வரை நம்மைத் தொடர்ந்து வந்த நமது ஆத்திரம், சிரிப்பு முடிகின்ற பொழுது நமக்குள் தணிந்து விடுகிறது. இறுதியில், நம்மைச் சோகத்தில் ஆழ்த்தி இருந்த பிணங்கள் எல்லாம், ஏசுவின் மூலம் மகிழ்ச்சியான ஒரு மீட்சியினை அடைவதைக் கண்டு நாம் மதி மயங்கிப் போகிறோம். மார்க்ஸியத்தை வசை பாடிய ஜெ.எம்.மை மன்னித்து விடலாம் போல் நமக்குத் தோன்றுகிறது.

நான்கு: இது ஒரு கதை அல்ல; பல கதைகள்; அதாவது, குளகம்! அதே நேரத்தில், இது ஒரு கட்டுரை! பல கதைகளின் மூலமாக ஒரே ஒரு கருத்தை வலியுறுத்தி வளர்கின்ற ஒரு கட்டுரை. ஒரு கட்டுரையை ஒரு கதையாக எழுதுவதில்

ஒரு வசதி இருக்கிறது. ஏனென்றால், எந்தக் கருத்தையும் முழுமையாக அதில் கூற

வேண்டியது இல்லை. ஒரு கதையை ஒரு கட்டுரையாக எழுதுவதிலும் ஒரு வசதி இருக்கிறது. ஏனென்றால், கதைத் தொடர்ச்சி எதுவும் அதற்குத் தேவை இல்லை; பல கதைகளின் ஒரு தொகுப்பாக அதனை எழுதி முடித்து விடலாம்!

இந்த உத்திகளில் ஒரு கதைஞராக ஜெ.எம். வெற்றி பெற்று இருக்கிறார்; ஒரு கட்டுரையாளராக அவர் தோல்வி அடைந்து இருக்கிறார். ஏனென்றால், ‘இவர்கள் செய்வது இன்னது என்று இவர்கள் அறியாது இருக்கிறார்கள் ‘ என்று குறுக்கத்தில் ஏசு கூறியது போல, இவர் வசை பாடுவது மார்க்ஸிசமா ? அல்லது ஸ்தாலினிசமா ? என்று இவர் அறியாமல் இருக்கிறார். எனினும், ‘தந்தையே, இவர்களை மன்னித்து விடுங்கள்! ‘ என்று கடவுளிடம் ஏசு மன்றாடியதைப் போல, ஜெ.எம்.மை மன்னித்து விடுங்கள் என்று வாசகர்களிடம் நாம் மன்றாடி விட

முடியாது. ஏனென்றால், மார்க்ஸைக் கொச்சைப் படுத்துகின்ற ஒரு குற்றத்தை இவர்

புரிந்து இருக்கிறார் — ஸ்தாலினிஸ்ட்டுகளைப் போல!

ருஷ்யாவில் ஒரு புரட்சி நடை பெற்று மன்னர் ஆட்சி வீழ்த்தப் பட்டு, பழைய பண்ணைய உறவுகள் உடைந்து நொறுக்கப் பட்டு இருந்தன என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அங்கே அமைக்கப் பட்டு வந்தது ஒரு சமுகாண்மைச் சமுதாயம்தானா ? என்பது எல்லோருக்கும் தெரியாது. புரட்சியில் ஈடு பட்டு இருந்த உழைப்பாளர்களுக்கோ அல்லது உழவர்களுக்கோ கூட இது தெரியாது. தங்கள் கட்சி அமைப்புகளுக்குள் ருஷ்யக் கம்யூனிஸ்ட்டுகள் அப்படிக் கூறிக் கொண்டார்கள், அவ்வளவுதான்!

எனினும், அது சமுகாண்மை அல்ல என்பதைப் புரிந்து கொண்டு

இருந்தவர்கள், லெனின் காலத்திலேயே உலகு எங்கிலும் இருந்தார்கள்;

ருஷ்யாவிலும் இருந்தார்கள். எனினும், இரக்கம் உள்ள ஓர் ஆட்சியாளராக லெனின்

கருதப் பட்டு வந்தார். இறுதியில், லெனின் கூறினார் — ருஷ்யச் சமுதாயம் ஓர் அரசு-முதலாண்மைச் சமுதாயம் என்று!

ஸ்தாலின் ஆட்சிக் காலத்தில் ருஷ்யாவில் நடை பெற்று வந்த கொடுமைகளைப் பொறுத்த வரை, இந்தக் கதையின் கருத்துகளில் நமக்கு உடன்பாடு உண்டு. ‘ஸ்டாலினின் கொடுமையை இங்குள்ள ஸ்டாலினிஸ்டுகள் மூடி மறைக்கிறார்கள் என்கிறாயா ? இல்லை, அதை அவர்கள் ரசிக்கிறார்கள். மானசீகமாக அதில் பங்கு பெறுகிறார்கள் ‘ ( பக்.271. ) என்று கதை-மாந்தர் ராம சுந்தரம் மூலமாக ஜெ.எம். வெளிப் படுத்துகின்ற கருத்துகளையும் நாம் மறுப்பதற்கு இல்லை.

ஆனால், மார்க்ஸியம்தான் ஸ்தாலினிசத்திற்குக் காரணம் என்றும் மனித நேயம்

இல்லாத ஒரு வறட்டு வாதம்தான் மார்க்ஸியம் என்றும் மார்க்ஸியத்தைக் கொச்சைப்

படுத்துகின்ற பொய்மையைப் பொறுத்த வரை, இந்தக் கதையை நாம் கண்டிக்கிறோம் — மிகவும் வன்மையாக! ஏனென்றால், மார்க்ஸியம் என்பது மனித வாதம்; அப்படித்தான் தமது கருத்துகளை மார்க்ஸும் வரையறுத்து இருக்கிறார்.

விள்ளனம்

இந்தக் கதை முழுவதையும் விள்ளனம் செய்யும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை. ஏனென்றால், இந்தக் கதை அளவுக்கு இல்லை என்றாலும் தனி ஒரு நூல்

அளவிற்கு அதுவும் விரிந்து விடக் கூடும்.

இப்படித்தான், கோவை ஞானியின் ‘இந்திய வாழ்க்கையும் மார்க்ஸியமும் ‘ என்னும் நூலுக்குத் திறனாய்வு ஒன்றினை நான் எழுதினேன் — 1977 வாக்கில்! அதுவும் நானாக எழுத வில்லை. தமது நூலை விள்ளனம் செய்வதற்கு யாரும் முன் வர வில்லை என்று கோவை ஞானி என்னிடம் குறைப் பட்டுக் கொண்டதால் மட்டும்தான் அதனை நான் எழுதினேன்; ‘ஞானியின் ஞானம் ‘ என்று அதற்கு நான் பெயரும் சூட்டினேன். அவரது நூலின் அளவிற்கு அது பற்றிய எனது விள்ளனமும் விரிந்து விட்டது.

எனது நண்பர் சி.இராதா கிருஷ்ணன், தன் கையெழுத்தில் அதனை மூன்று பிறதிகள் எடுத்தார். கோவை ஞானிக்கும் ஒன்று அனுப்பி வைக்கப் பட்டது. இதற்காகக் கோவை ஞானி ஒன்றும் மகிழ்ந்து போய் விட வில்லை; எனது விள்ளனம் பற்றிய கருத்துகளைக் கூறிடவும் அவர் முன் வர வில்லை. இதனால், எனது விள்ளனத்தில் அவர் கண்ட நிறை-குறைகளை நான் தெரிந்து கொள்ளவே முடியாமல் போயிற்று!

எல்லோரும் ஏற்றுக் கூடிய ஒரு நூலை எழுதுமாறு தாம் பணிக்கப் பட்டு இருப்பதாகத் தாம் கருத வில்லை என்று மாக்ஸ் முல்லர் ஒரு முறை குறிப்பிட்டார். திரவிட இயலின் ஆய்வுகளில் எல்லோரும் ஈடு பட வேண்டும் என்றும் தனி ஒரு மனிதன் மட்டும் நிறைவேற்றிடக் கூடிய ஒரு பணி அது அல்ல என்றும் கூறி, அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் பி.:டி.சீனிவாச அய்யங்கார்.

அறிவைத் தேடுவது என்பது அறிவு மணி முடிகளை நமக்கு நாமே சூட்டிக் கொள்வது ஆகாது என்பதும் வேறு நோக்கங்கள் மேலோங்குகின்ற பொழுது ஆய்வு நோக்கம் அடிபட்டுப் போய் விடுகிறது என்பதும்தாம் இவற்றிற்குப் பொருள். கொக்கி

போட்டு மனிதர்களைச் சாத்தான் இழுத்துப் பிடிக்கின்ற இடம், அவர்களின் ஆன்மா அல்ல, அவர்களின் வயிறு, என்று கிறிஸ்தவக் குருவானவர் ஒருவர் கூறியதைச் சிறு வயதில் நான் கேட்டு இருக்கிறேன். இதைத்தான் இச்சை என்று ஜெ.எம். குறிப்பிடுகிறார். நிலையாமை பற்றிய நாலடியார் கருத்துகள் நாம் அனைவரும் அறிந்தவை.

எனினும், நிலையான கருத்துகளாக நமது கருத்துகளைக் கருதி, கருத்துப் போராட்டங்களைத் தவிர்ப்பதில்தான் முழு மூச்சுடன் நாம் ஈடு பட்டுக் கொண்டு வருகிறோம். இறுதியில், நமது வாசக மண்டைகளில் நமது மடமைகளை நாம் திணித்து விட்டும் இருக்கிறோம். இது ஏமாற்று இல்லையா ? பொய்மை இல்லையா ?

நமக்கு என்ன தலைவிதியா, பொய்யர்களாகவும் ஏமாற்றுக் காரர்களாகவும் நாம் இருந்திட வேண்டும் என்று! இதனால், எதிர்க் கருத்துகளோ எதிரிக்

கருத்துகளாகத் தோன்றி நம்மை வருத்தம் அடையச் செய்து விடுகின்றன.

இப்படி. ஜெ.எம்.மும் வருந்தி விடுவாரோ என்பது அல்ல இந்த நூல் முழுவதையும் நான் விள்ளனம் செய்திடாததற்குக் காரணம். மாறாக, இந்த நூல் எழுப்புகின்ற கேள்விகளுக்கு ‘வரலாற்றின் முரண் இயக்கத் ‘தில் தக்க விடைகள் அடங்கி இருக்கின்றன என்பதுதான் இதற்குக் காரணம். ‘வாழ்க்கையின் கேள்விகள் ‘, ‘மனத்தின் விடுதலை ‘, ஆகிய நூல்களில் , இந்த நூல் எழுப்புகின்ற மெய்ப்பொருண்மைக் கேள்விகளுக்கும் விடைகளை வாசகர்கள் காணலாம்.

எனவே, ஜெ.எம். மின் மாய்மையான சில சொல் ஆட்சிகள், அவரது ராமசாமி மற்றும் கந்தசாமி என்னும் கதை-மாந்தர்கள், ஏசு வழங்கும் மீட்சி, கவிஞர் இன்குலாப், என்னும் தலைப்புகளில் மட்டும் ஒரு சில கேள்விகளை ஈண்டு நாம் பார்ப்போம்.

மாய்மை

‘இரவின் இருளில் இருளோடு கலந்து என் அருகே அது ( நிழல் ) மறைந்து நிற்கும். இருளாகப் பரந்து வான வெளியை நிரப்பும். ‘ (பக்.234.) ஜெ.எம்.மின் இந்தக் கவிதைக்கு அவர்தாம் உரை எழுதிட வேண்டும்.

‘சித்தாந்தி தருவது தனிமை. சிதறும் போதுதான் எண்ணங்கள் இயல்பாக நகர்கின்றன. ‘ (பக்.212.) சித்தர் பாடல்களில் கூட ஜெ.எம்.கூறுவது போன்ற ஒரு

தனிமையை நம்மால் காண முடிவது இல்லை. ஞானப் பாறையில் மோதி உச்சி மண்டை உடைந்து சிதறுகின்ற பொழுதுதான் ஞானமே பிறக்கிறது என்று ஞானிகளைக் கிண்டல் அடிக்கிறார் கார்ல் மார்க்ஸ். ஆனால், ஜெ.எம்.மோ சிதறுகின்ற பொழுதுதான் எண்ணங்கள் இயல்பாக நகர்கின்றன என்று ஒரு கதை-மாந்தரைக் கூற வைக்கிறார். அந்தக் கதை-மாந்தரின் மண்டையில் ஜெ.எம்.விடுகின்ற ஒரு குட்டுப் போலும் இது!

‘வரலாற்றின் மையத்தில் வெற்றிடம்; வெற்றிடத்தில் இறுகும் மெளனம் ‘ (பக்.234.) என்று வரலாற்றை விண்ணகத்தில் தேடுகின்ற ஜெ.எம்., அது என்ன ? என்றும் நமக்கு விளக்குகிறார் — ‘அரத்தமும் கண்ணீரும் வீணாகிப் போன மனித வாழ்வும் நிரம்பிய உயிருள்ள படலம்தான் வரலாறு ‘ (பக்.234.) என்று!

வரலாற்றின் மையத்தில் ஒரு வெற்றிடம் இருக்கிறதாம்; அதைச் சுற்றி ஒரு மவுனம் இறுகிக் கொண்டும் இருக்கிறதாம்; இதனை எப்படித்தான் நாம் புரிந்து கொள்வது ? எனினும், ‘துளை ‘–ஞானியின் கண்களுக்கு இந்த மையத்தின் வெற்றிடம் எட்டாமல் போய் விட்டதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி! (பார்க்க:சொல்

புதிது, ஏப்ரல்-ஜுன், 2000 இதழ், பக்.55; நிறப் பிரிகை, செப்டம்பர், 2000 இதழ், அட்டைப் படம், மேலும் பார்க்க: பட்டினத்தார், கோயில் திரு அகவல்-1.)

ஆனாலும், வரலாற்றின் மையம் என்றால் என்ன ? அரத்தமும் கண்ணீரும் நிரம்பிய வாழ்வுதான் வரலாறு என்றால், அதன் வெற்றிடத்தில் மவுனம் எப்படி இறுகிட முடியும் ? மாறாக, அழுகையும் ஒப்பாரியும் அல்லவா, அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டு இருக்க வேண்டும் ? என்னும் கேள்விகள் நமக்குள் எழுகின்றன.

விடுதலையை நோக்கிய தனது பயணத்தில், மனித இனம் குவித்துக் கொண்டு வந்து இருக்கின்ற வெற்றிகளாக வரலாற்றைப் பார்க்காமல், மனித இனத்தின் அழிவுகளாக வரலாற்றை இவர் பார்ப்பதுதான் இந்த மாய்மைக்குக் காரணம்.

அதே நேரத்தில், ‘செவ்வியல் மார்க்ஸியத்தின் தவறு, மீதமின்றி வகுத்து விடச்

சாத்தியமான ஜட அமைப்புகளாகச் சமூகத்தையும் தனி மனிதர்களையும் அது உருவகித்தது என்பதே! தனி மனிதர்களை வெறும் சமூக ஜீவிகளாக மட்டும்தான் அது வகுத்துக் கொண்டது, ‘ (பக்.567.) என்று மார்க்ஸியத்தை இவர் கொச்சைப் படுத்தவும் செய்கிறார். இப்படி, சமுதாயத்திற்கும் அதன் வளர்ச்சி வடிவங்களுக்கும் அப்பால் பட்டவர்களாகத் தனி மனிதர்களை வரையறுத்திட இவர் முற்படுகிறார். (பார்க்க:கார்ல் மார்க்ஸ், முதல், தொகுதி-1, பக்.168, 507; வாழ்க்கையின்

கேள்விகள், பக்.123.)

குலச் சமுதாயத்தில் ஒரு ‘குல மனிதனாக ‘ — அடிமைச் சமுதாயத்தில் ஓர் ‘அடிமை மனிதனாக ‘ — அரை-அடிமைச் சமுதாயத்தில் ஒரு ‘பண்ணை-அடிமையாக ‘ அல்லது ‘அடிமைச் சாதியாக ‘ — முதலாண்மைச் சமுதாயத்தில் ‘விடுதலையான ஒரு தனி மனிதனாக ‘ — வரலாற்றில் வெற்றிகளைக் குவித்துக் கொண்டு வந்து இருக்கின்ற மனித இனத்தின் உயர்ச்சியை மார்க்ஸை விடத் தெளிவாகப் புரிந்து கொண்டு இருந்தவர்கள், அவர் காலத்தில் வேறு யாரும் இருந்தது இல்லை. புதிது புதிதாக இன்று முளைத்து வந்து கொண்டு இருக்கின்ற எந்த ஒரு வாதமும் மார்க்ஸியத்தை இன்னமும் வீழ்த்தி விடவும் இல்லை; அது முடியக் கூடியதும் இல்லை.

மார்க்ஸியத்தைப் புறக் கணித்து விட்டு, சிந்தனை வரலாற்றின் தொடர்ச்சியைத்

துண்டித்து விட்டது ஒரு நிலையில், புதிய வாதங்களாகப் பழைய வாதங்களை முன் வைத்துக் கொண்டு இருப்பதில் யாருக்கு என்ன பயன் ? ‘டூரிங்கிற்கு மறுப்பு ‘ என்னும் பெயரில் ஏங்கெல்ஸ் எழுதி இருக்கின்ற ஒரு நூல் இதனைத் தெளிவு படுத்தும். பின்-புதின வாதத்தின் கேள்விகள், மார்க்ஸுக்கும் முந்திய பழைய கேள்விகள்தாம் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வதற்கும் இது உதவியாக இருக்கும்.

‘இலட்சிய வாதி ‘, ‘இலக்கிய வாதி ‘, என்பன போன்ற ஜெ.எம்.மின் சொல்லாட்சிகள், வாசகர்கள் அறியாமலே அவர்களைக் குழப்பி வைத்திடத் தவறாதவை.

இலக்கு அல்லது இலட்சியம் என்பதைப் புரிந்து கொள்வதில் நமக்குக் குழப்பம் எதுவும் இல்லை. ஆனால், ‘இலட்சிய வாதம் ‘ என்பதை எப்படி நாம் புரிந்து கொள்வது ? ஓர் இலட்சியத்தை அடைவதற்குப் பல் வேறு வாதங்கள் இருக்கலாம் — பொதுமை வாதம், அரசு-முதலாண்மை வாதம், பருமை வாதம், கருத்து வாதம், என்று! எனவே, இலட்சியத்திற்கு என்று இருக்கின்ற வாதங்களை இலட்சிய வாதங்கள் என்று வேண்டும் என்றால் மிகவும் பொதுப் படையாக நாம் குறிப்பிட்டுக் கொள்ளலாமே ஒழிய, இலட்சிய வாதம் என்று ‘இலட்சியம் ‘ எதையும் நாம் வரையறுத்து விட முடியாது.

இது போல, இலக்கிய வாதம் என்று எதுவும் இலக்கிய வாதி என்று எவரும் இருந்திடவும் முடியாது. மெய்மையிசம், கற்பனையிசம், என்பன போன்ற வகைப்பாடுகளினால் இலக்கியங்களை நாம் வகைப் படுத்திடலாமே ஒழிய, இலக்கிய

வாதம் என்று தனியாக ஒரு வாதம் இருந்திட முடியுமா ?

மனம் என்னும் சொல்லைக் கூட மிகவும் தாறுமாறாகத்தான் ஜெ.எம். பயன் படுத்துகிறார். ‘ஆறறிவதுவே அவற்றொடு மனனே ‘ என்ற தொல் காப்பியரைப் புரட்டிப் பார்ப்பதற்கு ஒரு வேளை இவருக்கு நேரம் இல்லாமல் இருந்து இருக்கலாம். அல்லது, தொல்காப்பியர் காலத்தில் குறிப்பிடத் தக்க சிந்தனை எதுவும் தமிழ் நாட்டில் வளர்ந்து இருக்க முடியாது என்று இவர் கருதிக் கொண்டும்

இருந்து இருக்கலாம். ஆனால், ‘மனத்தின் விடுதலை ‘ என்னும் எனது நூலைத் தொல்காப்பியத்தில் இருந்துதான் நான் தொடங்கி இருக்கிறேன்.

இனி, ராமசாமி என்னும் கதை-மாந்தர் மூலமாக ஜெ.எம். வெளிப் படுத்துகின்ற

கருத்துகளுக்கு நாம் வருவோம்.

ராமசாமி : மானுட அறம்

‘பல லட்சம் கோடி விதிகளால் சமுதாயம் உருவாகி இயங்கிக் கொண்டு இருக்கிறது. ‘ (பக்.164.)

‘வெறுப்பைத் திட்டமிட்டு வளர்க்கிறார்கள். அதிகாரத்திற்குத் தேவை வெறுப்பு. மக்களை வெறுப்புக்குப் பலி கொடுப்பார்கள் — விஞ்ஞான பூர்வமாக! வெறி வருவது

மாதிரி மேடையில் பேசுவது! ‘ (பக்.164.)

‘சமரசம் செய்து வைக்க அரசாங்கம் தேவை. அதற்கு ஒரு கையில் தடி வேண்டும். வன்முறை இல்லாமல் அரசாங்கம் இல்லை. அரசாங்கத்திற்குக் கருத்தியல் அடிப்படை உண்டு. ‘ (பக்.164.)

‘வன்முறையின் அளவு, இயல்பு! இதை வைத்துதான் அரசாங்கத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். ‘ (பக்.164.)

‘சித்தாந்தங்களில் நம்பிக்கை இல்லை. ‘ (பக்.164.)

‘ஆழ் மனசுக்குள் இறங்கிப் பார்த்தால் நீதி தெரியும். நீதிக்காக மனிதன் தன்னையே தந்து விடுகிறான். நீதியை நிர்ணயிக்க முடியாது. ‘ (பக்.164.)

‘என் அறம் ‘எம்மவருக்குள் ‘ மட்டுமே அடங்கும் என்றால், மானுடம் என்ற ஒன்றை நான் ஏற்க வில்லை. ‘ (பக்.528.)

‘அவதூறுப் பிரச்சாரம் செய்யப் படுகிறது என்று முறையிடாத வன்முறை இயக்கம் ஏதும் இன்று வரை இல்லை. ‘ (பக்.529.)

‘அறங்கள் மானுடப் பொதுவானவை. ‘ (பக்.529.)

‘தருக்கம் மூலம் எதையும் எவரையும் நம்ப வைத்து விட முடியாது. ‘ (பக்.529.)

‘பொது அறங்களை நாம் மீறும் போது, ஒரு போதும் சரி செய்ய முடியாத விரிசல் ஒன்று நம் ஆழத்தில் நிகழ்ந்து விடுகிறது. நம் நீதி உணர்வுதான் பயங்கரமான போர் ஆயுதம் ஆகிறது. . . ‘ (பக்.529.)

‘நமது நீதி உணர்வு உடை பட்ட பிறகு நம்மிடம் எஞ்சுவது என்ன ? வாழ்க்கை

ஒரு வலிமை விளையாட்டு என்ற வன நீதி அல்லவா! (பக்.530.)

‘இயற்கை விதிகளை மனிதன் மீறி விட்டான். ஒவ்வொரு மானுட உரிமையும் இயற்கை விதிக்கு எதிரான அறைகூவலே ஆகும். ‘ (பக்.530.)

‘1918-இல் ஜார் குடும்பம் கொடூரமாகக் கொல்லப் பட்டது. ‘ (பக்.531.)

‘அன்பு, கருணை, நீதி, தியாகம், சமத்துவம், உரிமை — இவையெல்லாம் சொற்கள் கூட அல்ல, மானுட ஒப்பந்தங்களின் சாரங்கள், அறங்கள் இவை. இந்த ஒவ்வொரு சொல்லும் ஒரு கடற் சங்கு போல, காதோடு சேர்த்து வைத்தால் கடலலை ஒலி கேட்கும். ‘ (பக்.534.)

‘உலகில் கோடானு கோடி ஏழை மக்கள் இன்னும் ஈவிரக்கமின்றி சுரண்டப் படுகிறார்கள். பசித்தழிகிறார்கள். வதைபடுகிறார்கள். அவமதிக்கப் படுகிறார்கள். கற்பழிக்கப் படுகிறார்கள். கொன்று குவிக்கப் படுகிறார்கள். ‘ (பக்.534.)

‘தருக்கங்களை அடுக்கலாம். ஆனால், அநீதி அல்ல என்று அநீதி ஆவதில்லை.சோவியத் பரிசோதனை மனிதனுக்குக் கற்பிக்கும் பாடம் இதுதான். நீதியை ஒளித்து

வைக்க முடியாது. புதைத்து விட முடியாது. ஏனெனில், ஓர் இனத்திற்கு, மண்ணிற்கு,

வர்க்கத்திற்கு மட்டும் உரியதல்ல நீதி.அது மானுட குலத்திற்குப் பொதுவான ஒன்று. ‘

(பக்.535.)

தமது திருவாய் மலர்ந்து ராமசாமி அருளி இருக்கின்ற கருத்துகள் இவை — ஜெ.எம்.மின் கருவியாக!

பல் வேறு வாதங்கள்

‘ஆயிரத்தில் ஒருவர் ‘ என்கிறார்களே, அப்படிப் பட்ட ஒரு நல்ல மனிதர்தாம் இந்த ராமசாமி.

அறத்தை மறந்து விட்ட மனிதர்கள் இடையே அறத்தை நிலைநிறுத்திட இவர் துடிக்கிறார்; அநீதியை ஏற்றுக் கொண்டு விட்ட உலகத்திற்கு ‘நீதியைப் போற்றுங்கள் ‘ என்று இவர் போதனை புரிகிறார்; வெறி பிடித்துப் போன மனித குலத்திற்கு, ‘வெறுப்பையும் வெறியையும் தூக்கி எறிந்து விடுங்கள் ‘ என்று இவர் அறிவுரை கூறுகிறார்; பசி-பட்டினியால் வாடுபவர்களுக்காகவும் கற்பழிக்கப் படுபவர்களுக்காகவும் கொல்லப் படுபவர்களுக்காகவும் இவர் அழுகிறார். எனவே, இவர் ஆன்மிக மயமானவர். (பார்க்க: மனத்தின் விடுதலை, அதிகாரங்கள்-7,11.)

இது மட்டுமா ? இவர் நல்லவர்; ஓர் அறவாணர்! தம்மால் முடிந்த அளவுக்கு மற்றவர்க்கு உதவிடத் துடிப்பவர்! பைத்தியம் பிடித்துப் போகின்ற அளவுக்குத் தமது அறிவை வாரி வாரி வழங்கி அருணாசலத்துக்கு உதவியவர்! பைத்தியம் பிடிக்கா விட்டால் அருணாசலத்துக்கு ஒரு தெளிவு ஏற்பட்டு இருக்குமா ? இவரது போதனைகளைக் கேட்டு இருக்கா விட்டால் அவனுக்குப் பைத்தியம்தான் பிடித்து இருக்கவும் முடியுமா ?

இப்படி, மற்றவர்க்கு உதவிடத் துடிக்கின்ற பித்துப் பிடித்தவர் இவர்!

இதற்காக, பக்கத்து வீடுகளிலும் பக்கத்துத் தெருக்களிலும் மானுடர்கள் பட்டினி கிடக்கிறார்களே என்று அவர்களுக்கு இவர் சோறு போட்டு விட முடியாது;

தாமும் பட்டினி கிடந்து கொள்ளவும் முடியாது. ஏனென்றால், இவர் ஒரு சிற்றுடைமைப் பண்பாளர்; குறிப்பாக, ஒரு போதகர்! போதகம் என்பது ஊருக்கு

தானே ஒழிய வீட்டிற்கு அல்லவே!

ஓர் அரசியல் காரராக இவர் இருந்து இருந்தாலும், எல்லா மக்களுக்கும் இவர் நன்மை செய்து விட முடியாதுதான் என்ற போதிலும், தமக்கு வேண்டியவர்களின் துன்பங்களைக் களைவதற்கு மட்டும் கட்டாயம் இவர் முன் வருவார். அவர்கள் அளிக்கின்ற வாக்குகள் வேண்டும் அல்லவா, இவருக்கு!

ஒரு கதை-கவிதை எழுத்தாளராக இவர் இருந்து இருந்தால் கூட, எழுத்தாளர்கள் அனைவரையும் இவர் பாராட்டி விட முடியாது; இவரைப் போல் சிந்திப்பவர்களை மட்டும்தாம் இவர் பாராட்டிக் கொள்ள முடியும்; அவர்களுக்கு மட்டும்தான் இவர் உதவிடவும் முடியும்; இவரது கலை அழகையும் கற்பனை நயத்தையும் பாராட்டுவதற்கு எழுத்தாளர்கள் சிலரேனும் இவருக்கும் வேண்டும் அல்லவா!

ஒரு முதலாளியாக இவர் இருந்து இருந்தால், உழைப்பாளர்கள் கோருகின்ற அளவுக்குக் கூலி உயர்வுகளை இவர் கொடுத்துக் கொண்டு இருக்க முடியாதுதான் என்ற போதிலும், கொஞ்சமேனும் அவர்களுக்குக் கூலி உயர்வு கொடுத்திடாமல் இவரால் இருந்திட முடியாது. தாங்கள் உழைத்து, உழைத்து, இவருக்கு என்று ஆதாயத்தை அவர்கள் குவித்துத் தர வேண்டும் அல்லவா!

ஒரு பத்தரிகையாளராக இவர் இருந்து இருந்தால், ‘சரி ‘ என்று இவர் தீர்ப்புக் கூறுகின்ற கதை-கவிதைகளை மட்டும்தாம் இவரது பத்தரிகையில் இவர் வெளியிட முடியும். ஏனென்றால், நீதியைத் தெரிந்து வைத்து இருக்கின்ற இவர் எழுதுகின்ற தீர்ப்புதான் மிகவும் சரியான தீர்ப்பாக இருந்திடக் கூடும். எனவே, இவரது கருத்துகளுக்கு எதிரான கருத்துகள் எவற்றையும் இவரது பத்தரிகையில் வெளியிட்டுக் கருத்துப் போராட்டங்களை இவர் கிளர்த்து விட முடியாது.

தவறு என்று தீர்ப்பு எழுதி, இவர் சபித்து விட்டு இருக்கின்ற கருத்துகளைத் தமது பத்தரிகையில் இவர் ஏன் வெளியிட வேண்டும் ? இவர் முதலீடு செய்து, இவர் நடத்துகின்ற பத்தரிகை அல்லவா அது! இவரது பத்தரிகையில் கூடவா, போர்களும்

போராட்டங்களும் ? அதற்காக இவரைப் பாராட்டி, அறிவாண்மை மணி முடிகளை இவரது மண்டையில் எதிர்க் கருத்து எழுத்தாளர்கள் சூட்டி விடப் போகிறார்களா, என்ன ?

அவர்கள் முரடர்கள்; ஏனென்றால், எதிர்க் கருத்துகளை — தருக்கங்களை — ஏந்தி நிற்பவர்கள் — வாள் ஏந்தி நிற்கின்ற கொலை காரர்களைப் போல! ஆனால்,

ஜெய மோகனோ தருக்கங்களைத் தகர்த்து எறிகின்ற தந்திரம் தெரிந்தவன்; இலக்கிய உலகின் ‘இன்றைய சுடர் ‘!

ராமசாமியின் இந்தத் தீர்ப்பில், பொது அறம் என்பது பல் வேறு அறங்களாக

— பொது நீதி என்பது ஆளுக்கு ஒரு நீதி எனப் பல் வேறு நீதிகளாக — இங்கே பிளவு பட்டுப் போய் விட வில்லையா ? (பார்க்க: மனத்தின் விடுதலை, அதிகாரங்கள்-9,10.)

ஆனாலும், இவர் நல்லவர்; அடுத்தவர் வாழ்க்கையின் அவலங்களையும் கடினங்களையும் கண்டு மனம் வருந்துபவர்; அப் பொழுதுதானே, அவலங்களையும் அழுகைகளையும் கலை நயமாகக் கண்டு கலை-இலக்கியங்களில் இவர் ஆறுதல் அடைந்திட முடியும் ? (பார்க்க: வாழ்க்கையின் கேள்விகள், அதிகாரம்-15, பக்.211- 18.)

மனித இயல்பு என்பது இவருக்குப் புரிய வில்லை. ஏனென்றால், அதைப் பற்றிச் சிந்திப்பதற்கு இவருக்கு நேரம் இருந்தது இல்லை. இப்படி நேரம் இருந்தது இல்லை என்பதால், கார்ல் மார்க்ஸின் ‘தொடக்கப் படைப்பு ‘களைப் படித்துப் பார்ப்பதற்கும் இவரால் முடிந்திட வில்லை. இப்படி, மார்க்ஸை இவர் படித்துப் பார்த்திட வில்லை என்ற போதிலும், மார்க்ஸியம் என்பது மிகவும் நன்றாக இவருக்குத் தெரியும். ஏனென்றால், பிறந்த பொழுதே ஒரு ஞானியாகப் பிறந்தவர் இவர்.

எனவே, இவர் பிறந்த பொழுதே இவருக்குத் தெரியும் — கார்ல் மார்க்ஸ் ஒரு

ஸ்தாலினிஸ்ட் என்று! இப்படித் தெரிந்து கொண்டதன் பின்னர், மார்க்ஸியம் விளக்குகின்ற மனித இயல்பையும் அதன் பகுதிகளான மானுட அறம் மற்றும் நீதிகளையும் தெரிந்து கொள்வதற்காக மார்க்ஸை ஏன் இவர் படிக்க வேண்டும் ? விண்ணில் அவை நிழலாடிக் கொண்டு இருப்பது இவருக்குத் தெரியாதா, என்ன!

அறம், நீதி, என்பவை எல்லாம் பாராட்டிப் போற்றிட வேண்டியவை என்று இவருக்குத் தெரிந்து இருப்பதைப் போல வேறு யாருக்கும் தெரிந்து இருக்க வில்லை. அல்லது, இவர் விரும்புவது போல வேறு யாரும் அவற்றை விரும்பிட வில்லை. எனவே, ‘வலிமை விளையாட்டு ‘ என்னும் ஒரு வன-நீதியாக வாழ்க்கை நீதி பிறழ்ந்து போய் இருப்பதை மற்றவர்கள் பொறுத்துக் கொண்டு இருப்பதைப் போல இவரால் பொறுத்துக் கொண்டு இருந்து விட முடியாது. (மாறாக, பார்க்க:வாழ்க்கையின் கேள்விகள், அதிகாரங்கள்-4, 5.)

ஏனென்றால், இவர் நல்லவர்; மற்றவர்கள் கெட்டவர்கள். நல்லவராக இருந்திட

இவரால் முடிகின்ற பொழுது, மற்றவர்களால் மட்டும் அது முடியாமல் போய் விடுகிறதே, ஏன் ? கெட்டவராக மாறிட இவரால் முடியாது என்கின்ற பொழுது, மற்றவர்களால் மட்டும் கெட்டவர்களாக மாறி விட முடிந்து விடுகிறதே, அது எப்படி ?

ஏனென்றால், அவர்கள் பிறந்த பிறப்பின் குற்றம் அது. எனவே, இவர் உயர்ந்தவர்; மற்றவர்கள் இழிந்தவர்கள். இருந்தாலும், அந்த இழி பிறவிகளுக்காக இவர் வருந்துகிறார்.

மனிதர்களின் குண நலன்களையும் அவர்களின் வாழ்க்கை நிலவரங்களையும் இப்படி எல்லாம் விளக்கி விட முடியும் என்று ராமசாமி நினைத்துக் கொண்டு இருக்கலாம்; இது போன்ற கற்பனைகளை வளர்த்துக் கொண்டும் இருக்கலாம். ஆனால், மார்க்ஸியமோ மனித இயல்பினை அதன் பருமைச் சூழ் நிலைகளில் இருந்து விளக்குகிறது. நல்லது-கெட்டது, அறம்-மறம், என்பன வற்றை எல்லாம் மனிதர்களின் உயிர் வாழ்க்கைச் சூழல்களில் இருந்து அது வகைப் படுத்துகிறது.

‘அஹுர மஜ்ஸ்தா என்னும் நல்ல கொள்கைக்கும் அங்க்ர மைன்யு என்னும் கெட்ட கொள்கைக்கும் இடையே ஏற்படுகின்ற மோதல்தான் மனித வாழ்க்கையில் ஏற்படுகின்ற நல்லது-கெட்டதுகளுக்குக் காரணம் ‘ என்று மனிதர்களின் அறத்திற்கும்

மறத்திற்கும் விளக்கம் கூறுகிறது ஜ்ஸெண்ட் அவஸ்தா. (ஜேம்ஸ் :தர்மஸ்ததர், அறிமுகம்-4, ஜ்ஸெண்ட் அவஸ்தா, பாகம் ஒன்று, கீழ்த் திசையின் புனித நூல்கள், தொகுதி-4, பக்.56.)

இந்த விளக்கத்தைக் கார்ல் மார்க்ஸ் ஏற்றுக் கொள்ள வில்லை. ஏனென்றால், மண்ணில் காணப் படுகின்ற அறத்திற்கும் மறத்திற்கும் விண்ணின் கொள்கைகளை அது காரணம் ஆக்குகிறது. இப்படி, மண்ணின் நிகழ்வுகளுக்கு விண்ணின் கருத்துகளில் இருந்து விளக்கம் கூறுவதுதான் ‘புற நிலைக் கருத்து வாதம் ‘.

ஆசைகள்தாம் துன்பத்திற்குக் காரணம் என்று வாழ்க்கையின் சிக்கல்களுக்குத் திரு வள்ளுவர் மற்றும் புத்தர் முதலியவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். அதாவது, அன்பையும் அறத்தையும் மனிதர்கள் வளர்த்துக் கொள்கின்ற பொழுது, அன்பும் அறமும் நிறைந்ததாக அவர்களின் வாழ்க்கை அமைந்திட முடியும் என்றும் வெறுப்பையும் வெறியையும் அவர்கள் வளர்த்துக் கொள்கின்ற பொழுது,

வன்முறையும் உயிர்ப் பலிகளும் நிறைந்தது ஒரு வாழ்க்கையாக அவர்களின் வாழ்க்கை அமைந்து விடுகிறது என்றும் இவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

இப்படி, மனிதர்களின் கருத்துகளில் இருந்து அவர்களின் வாழ்க்கைக்கு விளக்கம் கூறுவதுதான் ‘அக நிலைக் கருத்து வாதம் ‘. இந்த அக நிலைக் கருத்து வாதத்தையும் கார்ல் மார்க்ஸ் ஏற்றுக் கொள்ள வில்லை.

சூழ் நிலைகளுக்கு ஏற்பத் தங்கள் வாழ்க்கையை மனிதர்கள் அமைத்துக் கொள்கிறார்கள். இந்தப் பருமைச் சூழ் நிலைகள்தாம் மனிதர்களின் அன்பையும் அறத்தையும் தீர்மானிக்கின்றன என்பது ‘பருமை வாதம் ‘.

சூழ் நிலைகளின் நெருக்கடிகளில் மனிதர்களின் வாழ்க்கை வடிவமைக்கப் படுகிறது என்பதால், மனிதர்களின் கருத்துகளுக்கு வாழ்க்கையில் இடம் இல்லை என்பது ‘வறட்டுப் பருமை வாதம் ‘ அல்லது ‘விதி வாதம் ‘.

கருத்து வாதம், பருமை வாதம், விதி வாதம், அனைத்தும் ‘ஒருமை வாதங்கள் ‘.

அதே நேரத்தில், இருமை வாதங்களும் கதம்ப வாதங்களும் சிந்தனை உலகில் இல்லாமல் இல்லை.

கருத்து என்பது தனி; பருமையான மெய்மை என்பது தனி; ஒன்றை ஒன்று இவை தீர்மானிப்பது இல்லை; மாறாக, ஒன்றின் அருகே மற்று ஒன்றாக இவை வளர்ந்து கொண்டு வருகின்றன என்பது ‘இருமை வாதம் ‘.

கருத்தும் மெய்மையும் சில சமயங்களில் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொள்ளலாம்; கொள்ளாமலும் போகலாம்; என்பது ‘கதம்ப வாதம் ‘.

அனைத்து நிகழ்வுகளும் தற்செயல் ஆனவை; இவற்றுள் கரணியம் மற்றும் காரணம் என்று எவையும் இல்லை; என்பது ‘தற்செயல் வாதம் ‘.

தற்செயலான நிகழ்வுகள் என்று மெய்மையில் எவையும் இல்லை; எல்லா நிகழ்வுகளும் ஒழுங்கு முறையான விதிகளுக்கு உட்பட்டவை; என்பது ‘கரணிய வாதம் ‘. (பார்க்க: மனத்தின் விடுதலை, அதிகாரம்-5.)

மெய்மையை அறிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனின் அறிவுக்கு இல்லை; ஏனென்றால், மெய்மை என்பது ‘பொன்றாமை ‘ ஆனது. அதாவது, எல்லை இல்லாதது; என்பது ‘ஐயப்பாட்டு வாதம் ‘. இதன் விளைவாக உருவானதுதான் ‘அவ-நம்பிக்கை வாதம் ‘.

மெய்மையை அறிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனின் அறிவுக்கு உண்டு; ஏனென்றால், ‘பொன்றாமை ‘ ஆனதுதான் மெய்மை என்ற போதிலும், ‘பொன்றிமை ‘

ஆன கட்டங்களின், அதாவது, எல்லைகளின், ஒரு தொடர்ச்சிதான் ‘பொன்றாமை ‘, அதாவது, எல்லை இல்லாமை ஆகும்; என்பது ‘நம்பிக்கை வாதம் ‘. (பார்க்க: டூரிங்கிற்கு மறுப்பு.)

இவை போன்ற வாதங்கள் அனைத்தையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார் கார்ல் மார்க்ஸ். மனிதர்களின் கருத்துகளுக்கு வாழ்க்கையில் ஒரு பங்கு இருக்கிறது

என்பதும் மனிதர்களின் பருமைச் சூழ் நிலைகளுக்கும் இதில் தீர்மானமான ஒரு பங்கு இருக்கிறது என்பதும் அவருக்குப் புரிகின்றன.

இறுதியில், தங்கள் வாழ்க்கையைத் தாங்கள்தாம் மனிதர்கள் வடிவமைத்துக் கொள்கிறார்கள்; ஆனால், அவர்கள் விரும்புவது போல அதனை அவர்கள் வடிவமைத்து விடுவது இல்லை; மாறாக, கடந்த காலத்தில் இருந்து வளர்ச்சி உற்று வந்து, நிகழ் காலத்தில் அவர்கள் எதிர் கொண்டு நிற்கின்ற பருமைச் சூழ் நிலைகளின் அடிப்படையில், தங்கள் வாழ்க்கையை அவர்கள் அமைத்துக் கொள்கிறார்கள்; என்று அவர் கருத்துக் கூறுகிறார்.

இதுதான் மார்க்ஸியம். மனித வாதம் என்றும் இதனை அவர் அழைக்கிறார். எனவேதான், அறம் என்றால் அறம்; மறம் என்றால் மறம்; என்கின்ற ராமசாமி பாணியில் அறத்தையும் மறத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடிவது இல்லை.

ஏனென்றால், வானத்தில் பறந்து கொண்டு இருக்கின்ற அறம் என்பது பற்றிப் பிடித்துக் கொள்கின்ற மனிதர்கள் அறம் உடையவர்களாக இருக்கிறார்கள்; வெறியும் வெறுப்பும் பற்றிப் பிடித்துக் கொள்கின்ற மனிதர்கள் மறம் உடையவர்களாக இருக்கிறார்கள்; என்று அறவர்களுக்கும் மறவர்களுக்கும் நாம் விளக்கம் அளித்திட முடியாது. அல்லது அறத்துடன் பிறந்தவர்கள் அறவர்கள் என்றும்

மறத்துடன் பிறந்தவர்கள் மறவர்கள் என்றும் நாம் முடிவு செய்து விடவும் முடியாது.

ருஷ்ய மக்களை ஸ்தாலின் கொன்று குவித்து வந்தது மட்டும் அல்ல, ஜ்ஸார் மன்னரின் குடும்பம் கொல்லப் பட்டதும் கூட தவறுதான் என்று ராமசாமி கூறுகிறார்.

இந்த ராமசாமி மட்டும் என்ன, எல்லாச் சாமிகளும் இதனைத்தான் கூறுவார்கள். ஏனென்றால், மனிதர்கள் கொல்லப் படுவதை எந்த ஒரு மனிதனும் விரும்ப மாட்டான் — ஓர் அறவனாக அவன் இருந்தாலும் சரி; ஒரு மறவனாக இருந்தாலும் சரி!

ஆனால், கொலை புரிவதைக் குற்றம் என்று இன்று நாம் கருதி வருவது

போல, எல்லாக் காலங்களிலும் எல்லா மனிதர்களும் கொலையை ஒரு குற்றம் என்று கருதிக் கொண்டு வந்து இருக்க வில்லை.

குலச் சமுதாயத்தைத் ‘தொன்மைப் பொதுமைச் சமுதாயம் ‘ என்று சித்தரித்துக்

காட்டுகின்ற கம்யூனிஸ்ட்டுகள் இன்னமும் இங்கே இருக்கலாம். ஆனால், அடக்குமுறைகளைக் கருத்தரித்துக் கொண்டு இருந்த ஒரு வல்லதிகாரச் சமுதாயம்தான் அது! (பார்க்க: மனத்தின் விடுதலை, அதிகாரம்-8.) யாரை வேண்டும் என்றாலும் கொல்லுகின்ற உரிமை, குலத் தலைவனுக்கு அன்று இருந்தது. எல்லோரும் அதனை ஏற்றுக் கொண்டும் இருந்தனர்.

அதன் பின்னர் வந்த ஆண்டை-அடிமைச் சமுதாயத்தில், அடிமைகளைக் கொல்லுகின்ற ஆண்டைகள் குற்றவாளிகளாகக் கருதப் பட வில்லை. ஆடு-மாடுகளைப் போல அடிமைகளை விற்கின்ற உரிமையும் ஆண்டைகளுக்கு அன்று இருந்தது. ஆண்டைகள் யாரையாவது அடிமைகள் கொல்லுவார்கள் என்றால், அது மட்டும்தான் மறமாக அன்று கருதப் பட்டு வந்தது.

தெய்வங்களுக்குப் பலி கொடுக்கப் பட்டு வந்த மிருகங்களது அரத்தத்தின் அடையாளம்தான் கோயில்களில் இன்றும் பூசப் பட்டு வருகின்ற சிவப்பு வண்ணம் என்று பி.:டி.சீனிவாச அய்யங்கார் கூறுகிறார். தெய்வங்களுக்கு நரபலி கொடுக்கப் பட்டு வந்த காலமும் வரலாற்றில் இல்லாமல் இருந்தது இல்லை. இப்படி, எல்லாக் காலங்களிலும் ஒரு குற்றமாகக் கொலை என்பது கருதப் பட்டு வந்து விட வில்லை.

‘இவர்களூக்காக இவர்கள் பாடினார்களா ? இவர்களுக்காக இவர்கள் ஆடினார்களா ? இவர்களுக்காக இவர்கள் சாக முடியுமா ? ‘ என்று அன்றைய அடிமைகளைப் பற்றிக் கவிஞர் இன்குலாப் இன்று பாடுகிறார் என்றால், தங்களுக்காகச் சாவதற்குக் கூட அடிமைகளுக்கு அன்று உரிமை இருந்தது இல்லை என்னும் வரலாற்று நிகழ்மைதான் இதற்குக் காரணம்.

ஆனால், இன்றைய முதலாண்மைச் சமுதாயத்திலோ ஒவ்வொரு மனிதனும் விடுதலையான ஒரு தனி மனிதனாக விளங்குகிறான். மனித மாண்பு என்பது ஒவ்வொருவருக்கும் உரிய ஒர் உரிமையாக எல்லோரிடத்திலும் இன்று ஒப்பளிக்கப் பட்டும் இருக்கிறது.

இந்தச் சமுதாயத்தில்தான், ஒருவரை ஒருவர் மனிதர்கள் கொல்லுவது மறம்; ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளது உடலை ஒருவன் தன் வயப் படுத்திக் கொள்வது கற்பழிப்பு; ஒரு மனிதனை இன்னொரு மனிதன் கேவலப் படுத்துவது அவமதிப்பு. இப்படி, சமன்மையும் உரிமையும் கிளைமையும் மாண்பும் ஒவ்வொரு மனிதரிடத்தும் இன்று ஒப்பளிக்கப் பட்டு இருக்கின்றன.

வணிக உறவுகளில் — பண உறவுகளில் — இந்தக் கூறுகள் அனைத்தையும் ராமசாமி காணலாம் — கதை-கவிதைகளைச் சற்று மூடி வைத்து விட்டுப் பொருளாதாரத்தைக் கொஞ்சம் உற்றுப் பார்ப்பதற்கு இவருக்கு நேரம் இருந்தால்!

மேலும், விடுதலையான தனி மனிதர்களாக மனிதர்கள் எழுச்சி பெறத் தொடங்கி இருந்த வணிகக் காலத்தில்தான், ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய ஓர் இயல்பாக ‘மனித இயல்பு ‘ என்னும் ஒரு கருத்தாக்கத்தினைச் சிந்தனைச் சிற்பிகளால் உருவாக்கிக் கொள்ளவும் முடிந்தது. அதற்கு முன்னர், இப்படி ஒரு கருத்தாக்கம் எங்கும் இருந்தது இல்லை; விண்ணிலும் இருந்தது இல்லை; மண்ணிலும் இருந்தது இல்லை!

இயற்கையின் விதிகளை மனிதன் மீறி விட்டான் என்று ராமசாமி குறைப் பட்டுக் கொள்கிறார்; கூடவே, இதற்காக ஏங்கெல்ஸ் மீது ஜெ.எம்.மின் கதை-மாந்தர் ஒருவர் பழி போட்டும் கொள்கிறார். ஏங்கெல்ஸ் மட்டும் என்ன, கதை-மாந்தர் ராமசாமி நினைத்தால் கூட இயற்கையின் விதிகளை யாரும் மீறி விட முடியாது.

உண்ணாமல் இருந்து பார்க்கட்டுமே ராமசாமி. இறுதியில் அவர் இறந்து போய்

விட மாட்டாரா ? மலை உச்சியில் இருந்து குதித்துப் பார்க்கட்டுமே ராமசாமி. புவியீர்ப்பு ஆற்றல் அவரைப் பிடித்து இழுத்து அவரது மண்டையைச் சிதறடித்து விடாதா ?

இயற்கையின் விதிகளை மீறி மனிதன் வாழ்ந்து விட முடியும் என்று எந்த அறிஞனும் இன்று வரை கூறியது இல்லை. இயற்கையின் விதிகளை ஒட்டித் தங்கள் வாழ்க்கையை மனிதர்கள் அமைத்துக் கொள்கிறார்கள் என்றுதான் எல்லா அறிஞர்களும் கூறிக் கொண்டு வந்து இருக்கிறார்கள்; மார்க்ஸியமும் கூறுகிறது.

அனுபவ முறையாகவும் பரிசோதனைகள் மூலமாகவும் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையின் விதிகளை மனிதர்கள் அறிந்து வந்து இருக்கின்ற அறிவின் நிலைகள்தாம் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நிலைகள் ஆகும். (பார்க்க: வாழ்க்கையின் கேள்விகள், அதிகாரம்-4; மனத்தின் விடுதலை, அதிகாரம்-7.) இந்தத் தொழில் நுட்பம் என்னும் உற்பத்திச் சக்திகள் வளர வளரத்தான் சமுதாய வடிவங்களும் மாறிக் கொண்டு வந்து இருக்கின்றன என்பதுதான் மார்க்ஸியம். பொதுமைச் சமுதாயம் ஒரு நாள் மலர்ந்தே தீரும் என்று மார்க்ஸ் கூறியதன் சரியான பொருள். அந்த அளவுக்குத் தொழில் நுட்பம் ஒரு நாள் வளர்ந்துதான் தீரும் என்பதுதான்.

இரண்டு உரிமைகள் மோதிக் கொள்கின்ற பொழுதுதான் — இரண்டு ஞாயங்கள் மோதிக் கொள்கின்ற பொழுதுதான் — வன்முறை அங்கே தீர்ப்பு எழுதுகிறது என்று கூறுகிறார் கார்ல் மார்க்ஸ். (பார்க்க: முதல், தொகுதி-1,

பக்.225.)

உழைப்பு ஆற்றலை விற்று உயிர் பிழைத்து வருகின்ற உழைப்பாளி, வாழ்க்கைச் சாதனங்களை அதிகமாகக் கேட்கிறான். அதாவது, கூலி உயர்வு கேட்கிறான். முதலாளியோ கூலி உயர்வு கொடுக்க மறுக்கிறான். அப்படி அதிகமாகக் கூலி கொடுத்து விட்டால், தனக்கு வருகின்ற ஆதாயம் குறைந்து விடும்

என்றும், எனவே, சந்தைப் போட்டியை அவனால் எதிர் கொள்ள முடியாமல் போய் விடும் என்றும் அவன் வாதிடுகிறான். இப்படித்தான், சமுதாயத்தில் போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றன — வெறும் பேராசையால் அல்ல! (பார்க்க: வாழ்க்கையின் கேள்விகள், பக்.197, 227.)

ஜ்ஸார் குடும்பத்தினரை ருஷ்யப் படையினர் கொன்று இருக்கக் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால், இங்குதான் பழிக்குப் பழி வாங்குகின்ற மனிதனின் அறம், ஒரு நீதியின் மறமாக — ஒரு கொலை வெறியாக

— வெளிப் படுகிறது.

மனிதர்கள் கூடி வாழ்பவர்கள்; ஒருவரோடு ஒருவர் உறவு கொண்டு இருப்பவர்கள்; எனவே, அன்பானவர்கள்; அறமானவர்கள். (பார்க்க: மனத்தின் விடுதலை, அதிகாரங்கள்-7,11.)

இந்த அடிப்படையில்தான், எங்கள் சிறிய தந்தையே என்று விளித்து ஜ்ஸார் மன்னனைத் தேடி ருஷ்ய மக்கள் ஊர்வலமாகச் சென்றார்கள். ஜ்ஸார் மன்னனோ அவர்களைச் சுட்டுத் தள்ளினான். தெருவெங்கும் அரத்த ஆறு ஓடியது. இது மறம் இல்லையா ? இந்த மறத்திற்குத் தண்டனை அளித்திட வேண்டாமா ? அரசாங்கத்திற்குத் தண்டனை வழங்கிடும் அதிகாரம் தேவை என்று கூறுகிறாரே ராமசாமி. அப்படி என்றால், ஜ்ஸாரின் குற்றத்திற்குத் தண்டனை அளிக்கும் உரிமை மக்களுக்கு இல்லையா ? இந்த உரிமைதான் — இந்தத் தீர்ப்புதான் — ருஷ்யாவில் அன்று வழங்கப் பட்டது. இதற்காக நாம் மகிழ்ந்து கொள்ள முடியாது என்பது

வேறு விசயம்!

அதே நேரத்தில், அற உணர்மை மிக்க ராமசாமி கூட தண்டம் வழங்கும் உரிமை அரசாங்கத்திற்கு வேண்டும் என்று கூறுகிறாரே, அப்படி என்றால், அவர்தம் அறம், நீதி, என்பன எல்லாம் என்ன ஆயிற்று ? என்று கேட்க முடியும். ஆனால், சில நிகழ்வுகளில் எல்லா நேரங்களிலும் வன்முறையை மனிதர்கள் தவிர்த்து விட முடிவது

இல்லை. (அரசு பற்றிப் பார்க்க: வாழ்க்கையின் கேள்விகள், பக்.241.)

தன் கண் எதிரில், தன் தாய் கற்பழிக்கப் படுவதை — தனது தந்தை சுட்டுக் கொல்லப் படுவதை — தனது தங்கைகள் அம்மணம் ஆக்கப் படுவதை — பார்த்துக் கொண்டு எந்த இளைஞனாவது சும்மாய் இருந்து விட முடியுமா ? இந்தக் குற்றங்களுக்குக் காரணம் ஆனவன் தண்டிக்கப் பட வேண்டாமா ?

இந்தத் தண்டனையைத் தருவதற்கு என்று முறையான அமைப்பு எதுவும் சமுதாயத்தில் இல்லாத — அப்படி ஏற்படுத்திக் கொள்ளவும் முடியாத — ஒரு சூழ் நிலையில், தன்னை அழித்தேனும் அந்தக் குற்றவாளிக்கு அந்த இளைஞன் தண்டனை தருகின்ற பொழுதுதான், மானுட அறம் உண்மையில் உயர்த்தி வைக்கப் படுகிறது — நல் எண்ணப் புலம்பல்களினால் அல்ல! இதற்காக நாம் மகிழ்ந்து கொள்ள முடியாததுதான் என்ற போதிலும், இது போன்ற கதைகள்தாம் பொது மக்களால் சுவனிக்கப் பட்டும் வருகின்றன.

பழைமையின் ஞாயங்களும் புதுமையின் ஞாயங்களும் மோதுகின்ற பொழுது, புதுமைக்கு வழி விட்டுப் பழைமை ஒதுங்கி நின்று விடுவது இல்லை; வரலாற்றின் முரண் இயக்கத்தினை அது புரிந்து கொள்வதும் இல்லை. ஏனென்றால், பழைமைதான் நிலையானது என்னும் நம்பிக்கையில் வளர்ந்து வந்து இருக்கிறது அது! ஆனால், புதுமையோ இந்த நம்பிக்கைகளை முரட்டுத் தனமாக உடைத்துக் கொண்டு புறப் பட்டு வருகிறது! புதுமைக்குப் பழைமை தானாக வழி விடாத பொழுது அதனைத் தாக்கித் தகர்த்து எறிந்து முன்னேறுவது புதுமைக்குத் தவிர்த்திட

முடியாதது ஆகி விடுகிறது.

அதாவது, பழைமையின் தொடர்ச்சியான முரண் வளர்ச்சிதான் புதுமை என்கின்ற பொழுது — எடுத்துக் காட்டாக, பண்ணையத்தின் வயிற்றுக்குள் கருவாகி

உருவாகி வருவதுதான் முதலாண்மை என்கின்ற பொழுது — முதலாண்மையின் வளர்ச்சியினைப் பண்ணையம் அனுமதிக்காத பொழுது — பண்ணையத்தைப் பலவந்தமாக வீழ்த்துவது முதலாண்மைக்குத் தவிர்க்க முடியாதது ஆகி விடுகிறது. இதில், பழைமையை ஆதரித்துப் புதுமையை எதிர்ப்பவர்கள், பிற்போக்குக் காரர்களாக மாறி விடுகிறார்கள், அவ்வளவுதான்!

சமுதாயத்தில் இப்படி உருவாகி வருகின்ற புதிய நீதிகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் வன்முறையைத் தவிர்த்து மென்முறையில் சமுதாயத்தை மாற்றி அமைத்திட வழி விடுங்கள் என்றும் பழைமை வாதிகளிடம் போதகம் புரிவதனால் என்ன பயன் ஏற்பட்டு விடக் கூடும் ? என்பது பெரியது ஒரு கேள்விக் குறி! இங்கிலாந்து மன்னர்களைப் போல, கொஞ்சம் கொஞ்சமாகத் தமது அதிகாரங்களை விட்டுக் கொடுத்துக் கொண்டு வந்து, ஜ்ஸார் மன்னரும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டு இருந்து இருக்கலாம். ஆனால், இங்கிலாந்தில் ஏற்பட்டு இருந்த அளவுக்கு ருஷ்யாவில் அன்று தொழில் வளர்ச்சி ஏற்பட்டு இருக்க வில்லை.

இப்படி, பழைமையின் கருத்துகள், பழைய பருமைச் சூழ் நிலைகளினாலும் புதுமையின் கருத்துகள் புதிய பருமைச் சூழ் நிலைகளினாலும் தீர்மானிக்கப் படுகின்றன. எனவேதான், கண்ணீருக்கும் கம்பலைக்கும் வரலாற்றில் வழி

இல்லாமல் போய் விடுகிறது. பழைமையின் அழிவிற்காக இன்று நாம் கண்ணீர் வடிப்பதால் மட்டும் பழைமையைப் புதுப்பித்து விடவோ அல்லது புதுமையைத் தவிர்த்து விடவோ நம்மால் முடியுமா, என்ன!

எனவேதான், ராமசாமி போன்றவர்கள் வடிக்கின்ற கண்ணீர், பொய்க் கண்ணீராக — அவர்கள் பேசுகின்ற அறம், பொய் அறமாக — மாறிப் போய் விடுகின்றன. இறுதியில், யார் மீதாவது பழியைப் போட்டு விட வேண்டும் என்கின்ற நெருக்கடியில் மார்க்ஸின் மேல் பழியைப் போட்டு விடுகிறார்கள் — மார்க்ஸியத்தைப் புரிந்து கொள்ள முயலாமல்!

மார்க்ஸியம் என்பதுதான் என்ன ? அது என்ன, துப்பாக்கியா ? வெடி மருந்தா ? ஒரு கருத்து; மனித விடுதலை பற்றிய வாதமாக வெளிப் படுகின்ற ஒரு கருத்து! சொல்லப் போனால், உழைப்பாளர் வருக்கத்திற்கோ முதலாளர் வருக்கத்திற்கோ இப்படி ஒரு கருத்து இருப்பது கூட தெரியாமல் இருக்கலாம். எனவே, அறிவாளர்களில் சிலருக்கு மட்டும் தெரிந்து இருக்கின்ற ஒரு கருத்து இது. ஆனால், ராமசாமி போன்ற அறிவாளர்களோ ஸ்தாலினிசமாக அதனைக் காட்டி அதைக் கொச்சைப் படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

இந்தச் சமுதாயத்தை நான் மாற்றி அமைப்பேன் என்று கார்ல் மார்க்ஸ் என்றைக்கும் கூறியது இல்லை. தமது சிந்தனைக்குள்ளும் வாதத் திறமைக்குள்ளும் அடங்கி இருக்கின்ற ஒரு பொருளாகச் சமுதாயம் என்பதனை என்றைக்கும் அவர் கருதியதும் இல்லை.

மனித விடுதலை என்னும் கருத்தை மனிதர்களின் மண்டையில் புகுத்தி விட்டால், மனித விடுதலை என்பது மலர்ந்து விடும் என்று அவர் எண்ணி இருந்தது போலவும் அவரது வாதத் திறமையை எல்லோரும் கடை பிடித்து விட்டால், தாம் விரும்புகின்ற மாதிரி எல்லாம் சமுதாயத்தை அவர்கள் மாற்றி அமைத்து விட முடியும்

என்று அவர் நம்பியது போலவும், அவர் மேல் ராமசாமி குறை பட்டுக் கொள்கிறார்.

மக்களுக்கு வழி காட்ட வந்தவராகத் தம்மை என்றைக்கும் மார்க்ஸ் கருதியது இல்லை. சமுதாயம் என்னவாக இருக்கிறது ? அது இருக்கின்ற நிலையில், என்னவாக அது மாறிடக் கூடும் ? என்பதைச் சொல்வது மட்டும்தான் தமது கடமை என்று கருதியவர் அவர். மேலும், புதிய சமுதாயத்தின் பிறப்பு வேதனைகளைத் தமது கருத்துகள் குறைத்திடலாம் என்றுதான் அவர் கருதினார்.

பொதுமைக் கட்சியின் அறிக்கையைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தாலே போதும், ஆட்சியைப் பிடிக்கின்ற கட்சிகளாகப் பொதுமைக் கட்சிகளை மார்க்ஸும்

ஏங்கெல்ஸும் கருதியது இல்லை என்பது யாருக்கும் தெளிவு ஆகி விடும்!

ஸ்தாலினிசம், ஸ்தாலினிசம்! என்று இன்று நாம் தாக்குதல் தொடுக்கிறோமே, அதுதான் என்ன ? ஸ்தாலினின் மீசையா ? அவரது உடலா ? அவரது மூளையா ? அவரது குண நலன்களா ? இப்படி எல்லாம் பாகுபடுத்திப் பார்த்து ஸ்தாலினிசத்தை நம்மால் புரிந்து கொள்ளத்தான் முடியுமா ?

உழைப்பாளர் வருக்கத்தின் விடுதலையில்தான் மனித விடுதலை அடங்கிக் கிடக்கிறது என்றும் முதலாண்மை வளர்ச்சியின் இறுதியில் அது நடந்தே தீரும் என்றும் கார்ல் மார்க்ஸ் கூறிய பொழுது, உழைப்பாளர் வருக்கத்தின் ஒரு மறுநிகரியாகத் தம்மை அவர் கருதிக் கொள்ள வேண்டியது ஏற்பட்டது.

முதலாண்மை அறிவாளர்களால், மெய்மையைக் காண முடியாத ஒரு சிக்கலில்,

முதலாண்மை மாட்டிக் கொண்டு இருந்ததால் மட்டும்தான், எனவே, உழைப்பாளர் வருக்கத்தின் மறுநிகரியாக நின்று, தமது ஆய்வினை அவர் வளர்த்துச் சென்றதனால்

மட்டும்தான், மெய்மையை அவரால் புரிந்து கொள்ளவும் முடிந்தது. ‘முதல் ‘ என்னும் நூலுக்கு மார்க்ஸ் எழுதி இருக்கின்ற முன்னுரை-பின்னுரைகளைப் படித்துப் பார்த்தால் போதும், யாரும் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

இப்படி, உழைப்பாளர் வருக்கத்தின் மறுநிகரியாக நின்று, மனித விடுதலை வாதத்தினை மார்க்ஸ் பேசினார் என்றால், ஸ்தாலினோ அதிகார வருக்கத்தின் மறுநிகரியாக நின்று, அரசு-முதலாண்மை வாதத்தைப் பேசினார்.

எனவே, ஸ்தாலினிசம் என்கின்ற பொழுது, அரசு-முதலாண்மை வாதத்தினை மட்டும்தான் நாம் குறிப்பிடுகிறோம். ஸ்தாலினிச அடக்குமுறை என்கின்ற பொழுது, அதிகார வருக்கத்தின் அடக்குமுறையை மட்டும்தான் நாம் குறிப்பிடுகிறோம். வேளாண்மையில் வளர்ந்து வந்து கொண்டு இருந்த சிறு முதலாளர்களை ஸ்தாலின் ஒழித்துக் கட்டினார் என்றால், அரசு-முதலாண்மை அவர்களை ஒழித்துக் கட்டியது என்றுதான் அதற்குப் பொருள் கூறுகிறோம். கட்டாயப் படுத்தி உழைப்பாளர்கள் வேலை வாங்கப் பட்டார்கள் என்றால், அரசு-முதலாண்மையின் வல்லாண்மைக் கூறு அது என்றுதான் அதனை நாம் புரிந்து கொள்ளுகிறோம். இறுதியில், நாம் முடிவு எடுக்கிறோம் — அரசு-முதலாண்மை கொடுமையானது என்று!

எனவே, ஸ்தாலினிசத்திற்கு எதிர்ப்பு என்பது அரசு-முதலாண்மைக்குத் தெரிவிக்கப் படுகின்ற எதிர்ப்பு; ஸ்தாலினிசத்தின் வீழ்ச்சி என்பது அரசு-முதலாண்மையின் வீழ்ச்சி!

வரலாற்று நிகழ்வுகளுக்கு இப்படித் திண்மையாகப் பொருள் காண்பதை விட்டு விட்டு, ராமசாமியைப் போல் நாமும் கண்ணீர் வடிப்போம் என்றால், வெறும் நல் எண்ணப் புலம்பலாக மட்டும்தாம் அது இருந்திட முடியும். நான் நல்லவன் என்று நாம் மார் தட்டிக் கொள்வதற்கு வேண்டும் என்றால் நமக்கு அது பயன் படலாமே

ஒழிய, மெய்மையிலே நல்லவர்களாக நாம் செயலாற்றுவதற்கு அது பயன் பட முடியாது. உண்மையிலே நல்லவர்தாமா, ஜெ.எம்.மின் ராமசாமி ?

அப்படி என்றால், தருக்கங்களையும் சித்தாந்தங்களையும் கண்டு பின் வாங்கி ஓடுகின்ற மூளைச் சோம்பலை விட்டு விட்டு, மார்க்ஸியத்திற்குள் அவர் நுழைந்து பார்க்கட்டும்! மார்க்ஸியத்தை ஸ்தாலினிசமாகக் காட்டுகின்ற பொய்மையை அவர் விட்டு ஒழிக்கட்டும்! பொய் சொல்ல வேண்டும் என்றும் பொய்மையாகப் புலம்பித் தீர்க்க வேண்டும் என்றும் இவர் தலையில் எதுவும் விதிக்கப் பட்டு இருக்கிறதா, என்ன!

பல லட்சம் கோடி விதிகளால் சமுதாயம் உருவாகி இயங்கிக் கொண்டு இருக்கிறது என்று நமது அறிவை மயக்கிட முற்படுகிறார் ராமசாமி. ஆனால், கார்ல்

மார்க்ஸோ உற்பத்தி உறவுகளின் விதியான ‘மதிப்பு ‘ என்பதுதான் பிற அனைத்து உறவுகளிலும் ஊடாடி நிற்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறார். இந்த உறவுகளோ

விரல் விட்டு எண்ணிடக் கூடியவை; கோடிக் கணக்கான முடிச்சுகளைக் கொண்டவை அல்ல வாழ்க்கையின் கேள்விகளில் இது பற்றி விரிவாக வாசகர்கள் காணலாம்.

இறுதியாக, சோவியத் யூனியனில் ஏற்பட்டு இருந்த அரசு-முதலாண்மை மாற்றத்தை ஒரு பரிசோதனை என்று ராமசாமி கூறுவது ஏன் ? என்பதுதான் நமக்குப்

புரிய வில்லை.

அப்படி என்றால், ருஷ்ய மக்களைத் தமது கருவிகளாகக் கொண்டு, லெனினும்

திரோத்ஸ்கியும் நடத்திப் பார்த்த ஒரு பரிசோதனை என்றுதான் ருஷ்யப் புரட்சியை இவர் கருதுகிறாரா ? அப்படி என்றால், இந்திய ஒன்றியத்து மக்களைத் தமது கருவிகளாகக் கொண்டு, தமக்குப் பிடித்தமான ஒரு பரிசோதனையை இவரும் நடத்திப் பார்த்திட வேண்டியதுதானே! ஆனால், சமுதாயங்களின் வரலாற்றில் பரிசோதனைகளுக்கு இடம் இல்லை என்பதுதான் நமக்கு வரலாறு காட்டுகின்ற முரண் இயக்கம்!

இனி, கந்தசாமி என்னும் கதை-மாந்தருக்கு நாம் வருவோம்.

கந்தசாமி : இச்சையின் நிகழ்ப்பாடு

‘வரலாற்றுக்கு ஒரு இலக்கு இருக்கு. மேலான சமூகத்தையும் மேலான மானுடனையும் நோக்கி அது முன்னேறிட்டிருக்குன்னு சொன்னார். இதுதான் ஹெகலோட வரலாற்றுப் பொருள்முதல் வாதம்ங்கிற கருத்து முதல் வாத தரிசனம். ‘ (பக்.599.)

‘ஆனா லெனின் அதை மாத்தினார். கலாச்சார, அரசியல் அமைப்புகளின் முயற்சியினால் மேற்கட்டுமானத்தில வரக் கூடிய மாற்றத்தினாலேயே சமூகத்தை மாத்த முடியும்னு சொன்னார். மார்க்ஸின் தத்துவப் படி பொருளாதாரக் காரணிகளினால் இயல்பா புரட்சி வரணும். லெனின், அரசியல் நடவடிக்கை மூலம் புரட்சியைக் கொண்டு வந்தார். ரஷ்யாவில் லெனின் நடத்தினது அதுதான். விழிப்புற்ற ஒரு சிறுபான்மையினர் அரசியல் நடவடிக்கை மூலமாக புரட்சியைக் கொண்டு வந்து, பொதுவுடைமைச் சமூகத்தை உருவாக்க ஆரம்பிச்சாங்க. ‘ (பக். 600.)

‘நாம் சொல்லற தீர்ப்புக்குத் தலைவணங்க வரலாறு நம்ம முன்னாடி வந்து நிக்கலை. ‘ (பக்.602.)

‘எல்லாச் சித்தாந்தங்களும் மனுஷனுடைய எல்லைக்குட்பட்ட ஞானத்தில இருந்தே பிறந்து வருது. மார்க்ஸா இருந்தாலும் கூட மனித சிந்தனை மிகமிகப் பலவீனமானதுதான், வரலாற்றின் ஒரு துளியை மட்டும்தான் அதால பார்க்க முடியும். அறிய முடியும். மறு பக்கம் ஒண்ணு உண்டு. அந்த முனை வரலாற்றுக்கு உள்ளே இருக்கு. அது வழியா வரலாறு இச்சைப் படுது. தன்னை நிகழ்த்திக்குது. ‘ (பக்.603-604.)

மார்க்ஸிய அறிஞர் கந்தசாமியின் கருத்துகள் இவை; அல்லது ஜெ.எம்.மின் கருவிக் கருத்துகள் எனலாம்.

வரலாற்றின் உள் முனையைத் தம்மால் காண முடிய வில்லை என்று தமது அறியாமையை வெளிப்படையாக எடுத்துக் கூறி, மார்க்ஸின் நூல்களைப் படித்துப் பார்த்து அதனைத் தெரிந்து கொள்வதற்கு முயலுமாறு அருணாசலத்துக்கு இவர் அறிவுரை கூறி இருந்து இருக்கலாம். வீர பத்ர பிள்ளையின் கதை-கவிதைகளைக் கொஞ்சம் மூட்டை கட்டி வைத்து விட்டு, மார்க்ஸின் நூல்களைப் படிப்பதற்கு அருணாசலமும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருந்து இருப்பான்; அவனுக்குப் பைத்தியமும் பிடித்து இருந்து இருக்காது.

ஆனால், பொய் பேசா விட்டால், மார்க்ஸிய அறிஞர் என்று தம் தலையில் இவர் சூட்டி வைத்து இருக்கின்ற ஒளி வட்டம் உடனே கலைந்து போய் விடும் என்னும் ஓர் அச்சத்தில், அருணாசலத்தைக் கந்தசாமி குழப்புகிறார் — வரலாறு இச்சைப் படுகிறது என்று; தன்னைத்தானே அது நிகழ்த்திக் கொள்கிறது என்று!

வரலாறு என்பது என்ன, வானத்திலே ஊடாடி நிற்கின்ற ஒரு கடவுளா ? மனித உறவுகளின் வரலாறுதான் மனித வரலாறு என்கின்ற பொழுது, மனிதனுக்கு எட்டாத ஓர் உயரத்தில் வரலாற்றை வைத்திட இவர் ஏன் முற்பட வேண்டும் ? அறிஞர்களின் ‘ஞானக் கூத்து ‘ என்பது இதுதான் போலும்! இல்லை என்றால், நமது தீர்ப்புக்குத் தலை வணங்குவதற்காக நம் முன்னால் வரலாறு வந்து நிற்க வில்லை என்று இவர் கூறி இருப்பாரா ?

மார்க்ஸியச் சிந்தனையில் பலவீனம் இருக்கிறது என்றால், அந்தப் பலவீனத்தைச் சுட்டிக் காட்டுவதை விட்டு விட்டு, மார்க்ஸியம் பலவீனமானது என்று நம்மிடம் இவர் கூறுகின்ற பொழுது, இவரது பலவீனம்தான் நமக்குத் தெரிகிறதே ஒழிய மார்க்ஸியத்தின் பலவீனம் அல்ல. மார்க்ஸியச் சிந்தனை கூட ஒரு மனிதச் சிந்தனைதானாம்! எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு!

மார்க்ஸியம் என்பது ஒரு கருத்து முதல் வாதத் தெரிசனமாம். அதாவது, கருத்து வாதமாம்; அதுதான் ஹே:கலின் வரலாற்றுப் பொருள் முதல் வாதமும் ஆகுமாம், அதாவது, பருமை வாதமாம்! ஹே:கலைத் தலைகீழாக மார்க்ஸ் மாற்றினார் என்றால், கந்தசாமியோ மார்க்ஸைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டு விடுகிறார். ஆனால், ஹே:கலின் வாதம்தான் கருத்து முதல் வாதம், அதாவது, கருத்து வாதம்; மார்க்ஸின் வாதமோ பருமை வாதம். எனவே, பருமை வாதம் என்கின்ற கருத்து வாதத் தெரிசனம் என்பது முரணான ஒரு கருத்தாக்கம் ஆகிறது!

அரசியல் நடவடிக்கை மூலம் புரட்சியை லெனின் கொண்டு வந்தார் என்று கந்தசாமி கூறுவதில் இருந்து, மார்க்ஸை மட்டும் அல்ல, லெனினையும் படித்துப் பார்க்க வில்லை என்பது நமக்குத் தெரிய வருகிறது.

ருஷ்யாவின் ஆட்சியை லெனின் பிடித்த பொழுது, தமது ஆட்சியின் மூலம் சமுகாண்மைச் சமுதாயத்தைச் சமைத்து விடப் போவதாக அவர் கூறிட வில்லை. ருஷ்யாவில் மட்டும் சமுகாண்மையைச் சமைப்பது என்பது கற்பனை செய்து கூட பார்த்திட முடியாதது என்றும் ஜெர்மனியிலும் பிற ஈரோப்பிய நாடுகளிலும் புரட்சி வெடிக்கும் என்றும், எனவே, காலம் கடத்துகின்ற ஓர் உத்தியாக ருஷ்யாவில் புரட்சியைத் தொடங்கி வைத்து இருப்பதாகவும்தாம் அவர் குறிப்பிட்டார்.

பின்னர், ஜெர்மனியுடன் தலைகுனிவான ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்ட

பொழுதும் புதிய பொருளாதாரக் கொள்கை வகுக்கப் பட்ட பொழுதும் கூட, ஈரோப்பியப் புரட்சியை எதிர் பார்த்து ருஷ்ய மக்கள் காத்து இருந்துதான் ஆக வேண்டும் என்றுதான் லெனின் குறிப்பிட்டார். ஈரோப்பியப் புரட்சி முடியாதது என்பதைத் தெரிந்து கொண்டதன் பின்னர் ருஷ்யச் சமுதாயத்தை ஆய்ந்து பார்த்த அவர், ஓர் அரசு-முதலாண்மைச் சமுதாயம் என்று அதனை வரையறுத்தார்.

எனவே, இந்தக் கந்தசாமி என்னும் கதை-மாந்தருக்கு மார்க்ஸின் நூல்களை மட்டும் இன்றி லெனினின் நூல்களையும் உடனடியாக ஜெ.எம். வாங்கிக் கொடுக்க வேண்டும்.

பின்-புதின வாதம்

பின்-புதின வாதம், அதாவது, பின்-நவீனத்துவம் என்றால் என்ன ? என்று அடிப்படையான எந்த ஒரு விளக்கமும் இந்தக் கதையில் இல்லை.

னால், ஒரு கூட்டத்தில் தாம் பேசிய பொழுது கவிஞர் இன்குலாப் குறிப்பிட்டார் — அதிகாரத்தை பின்-புதின வாதம் கேள்வி கேட்கிறது என்று! அவசர

நிலைக் காலத்தில் மு.கருணாநிதியாரின் ட்சி கவிழ்க்கப் பட்ட ‘பொது நாயகப் படு கொலை ‘தான் உடனே என் நினைவுக்கு வந்தது. அவசர நிலையைப் பிரகடனப்

படுத்திய ஒன்றிய அரசின் அதிகாரத்தை எதிர்த்து நின்று இருந்த காரணத்தினால்தானே, மு.கருணாநிதியாரின் ட்சி அன்று கவிழ்க்கப் பட்டது! எனவே, மு.கருணாநிதியாரும் ஒரு பின்-புதின வாதிதான் போலும் என்று நான் நினைத்துக் கொண்டேன்.

மனிதச் சமுதாயங்களின் வரலாற்றில், ண்டையின் அதிகாரத்தை எதிர்த்திடாமல் அடிமைகள் இருந்து இருக்கலாம். னால், ஓர் ண்டையின் அதிகாரத்தை இன்னோர் ண்டை எதிர்க்காமல் இருந்து இருக்க முடியாது. பண்ணையக் கிழார்களின் அதிகாரத்தைக் கேள்வி கேட்டுக் கொண்டுதான் வந்து இருக்கிறார்கள். பெற்றவர்களின் அதிகாரத்தைக் கேள்வி கேட்கின்ற பிள்ளைகள்

— கணவர்களின் அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்ற மனைவியர்கள் — மந்திரிகளின் அதிகாரங்களை எதிர்த்து நிற்கின்ற குடிமக்கள் — என அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்காதவர் யாரும் இன்று இல்லை எனலாம்.

அப்படி என்றால், பின்-புதின வாதம் என்பது பின்னதும் அல்ல; அல்லது புதியதும் அல்ல; என்று நமக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், அந்தக் காலத்தில் இருந்தே —சொல்லப் போனால், மனித இனம் தோன்றுவதற்கு முன்னரே கடவுளின்

அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கி இருந்த சாத்தானின் காலத்தில் இருந்தே

— நிலவி வந்து இருக்கின்ற ஒரு வாதம்தான் இந்தப் பின்-புதின, மன்னிக்கவும், முன் தொன்மைய வாதமாக இருந்திட வேண்டும்.

எனவேதான், இந்த முன்-தொன்மைய, அதாவது, பின்-புதின (மன்னிக்கவும், அருத்தங்களை வரையறுப்பதில் உள்ள சிக்கல் இது; ஏனென்றால், எந்த அருத்தமும்

‘முற்றானது ‘ இல்லை. எனவே, முன்னது என்பது பின்னது கவும் தொன்மையது என்பது புதினமானது கவும் இளகி விடலாம்; அல்லது இறுகி விடலாம் — ஓர் எரிமலையைப் போல! அல்லது ஒரு பாறையைப் போல!) வாதத்தின் தோற்றத்திற்கு முன்னர், வேறு எந்த ஒரு வாதமும் அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியது இல்லை என்று பின்-புதின வாதிகள் கருதுகிறார்கள் போலும்!

எனினும், கடவுளையும் சாத்தானையும் வம்புக்கு இழுத்து, பின்-புதின வாதம் பற்றி நாம் பேசிட நேர்ந்ததற்காகக் கடவுளிடம் மட்டும் அல்ல, சாத்தானிடமும்

நாம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாக வேண்டும் — மன்னிப்பு அளிக்கக் கூடியவர் இவர்களில் யார் ? என்பது நமக்குத் தெரிய வில்லை என்பதால்! ஏனென்றால், கடவுள் என்பதற்கும் சாத்தான் என்பதற்கும் என்ன அருத்தம் என்பதைப் பின்-புதின வாதிகள் இன்னமும் ‘வரையறுத்து ‘ முடிக்க வில்லை.

இதற்காக, பின்-புதின வாதம் என்றால் அது என்னவாக இருந்திடக் கூடும் ? என்று எண்ணி யாரும் குழம்பிக் கொள்ளத் தேவை இல்லை. ஏனென்றால், ‘எந்த

வரையறையும் முற்றானது இல்லை ‘ (பக்.594.) என்று கூறி, பின்-புதின வாதத்தின் ஒரு கூறினை இந்தக் கதையில் நமக்கு அறிமுகம் செய்கிறார் ஜெ.எம்.!

எனினும், ‘காரணம் ‘ என்பது தந்திரம் வாய்ந்தது என்று ஹே:கல் கூறியது போல, ‘முற்று அல்ல ‘ என்னும் இந்தப் பதமும் மிகவும் தந்திரம் நிறைந்தது கும். ஏனென்றால், எல்லா வரையறைகளும் அரை-குறை னவை என்று வலியுறுத்துகின்ற

அதே நேரத்தில், எல்லா வரையறைகளும் இதனால் பிழை கி விடுகின்றன என்பதையும் இந்தப் பதம், அதாவது, ‘முற்றானது அல்ல ‘ என்னும் ‘வரையறை ‘ வலியுறுத்துகிறது.

அப்படி என்றால், இது வரை நாம் தெரிந்து கொண்டு வந்து இருக்கின்ற அத்தனை விசயங்களையும் நாம் மறந்து விட வேண்டுமா ? இது வரை எழுதப் பட்டு

வந்து இருக்கின்ற அத்தனை நூல்களையும் எரித்து விட்டு, முற்றான புதிய நூல்களை

நாம் எழுதி க வேண்டுமா ? என்று எல்லாம் பலவாறாக யாரும் கவலைப் பட்டுக் கொள்ளத் தேவை இல்லை.

ஏன், ‘அசோக வனம் ‘ கதையை எழுதுவதை விட்டு விட்டு, ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ கதையை முற்றாகத் தாம் மாற்றி அமைத்திட வேண்டுமா ? என்று

ஜெ.எம்.மும் கவலைப் படத் தேவை இல்லை. வேண்டும் என்றால், மார்க்ஸின் நூல்களைப் படித்துப் பார்த்ததன் பின்னர், வேறு நூல்களை இப்படி அவர் எழுதிக் கொள்ளலாம்.

ஏனென்றால், அரை-குறையான ஒரு வரையறையில் இருந்து, முழுமையான ஒரு வரையறையினை நோக்கி, நமது அறிவு இயங்கிச் செல்கின்ற நமது சிந்தனை

நிகழ்ப்பாட்டின் தொடர்ச்சியினைக் குறிப்பதுதான் ‘முற்றானது அல்ல ‘ என்னும் கருத்தாக்கமே ஒழிய, நமது அரை-குறை அறிவு எல்லாம் பிழை னவை என்பதைக்

குறிக்கின்ற ஒரு கருத்தாக்கம் அல்ல.

அம்மா என்று தாயை விளிக்கின்ற பொழுது, அந்த ‘வரையறை ‘யை ஒரு குழந்தை அருத்தப் படுத்திக் கொள்வதற்கும் இப் பொழுது தாயாகி விட்ட ஒரு நங்கை அருத்தப் படுத்திக் கொள்வதற்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது அல்லவா ? எனினும், இந்த இருவரின் வரையறைகளும் சரியான ஒரு வரையறைகளே கும். (மேலும் பார்க்க: மனத்தின் விடுதலை, அதிகாரம்-7.)

உலக வரலாற்றின் முக் காலங்களுக்கும் வழங்கப் படுகின்ற ஒரு வரையறை வேண்டும் என்றால், முற்றானது ஒரு வரையறையாக இல்லாமல் போகலாம். மதங்களில் தவிர வேறு எந்த இயலிலும் இம் மாதிரியான வரையறைகள் வகுக்கப் படுவதும் இல்லை. னால், வரையறைக்கப் பட்ட ஒரு சமுதாயத்திற்கு வழங்கப் படுகின்ற எந்த ஒரு விளக்கமும் முற்றானது ஒரு வரையறையாகத்தான் இருந்திட முடியும்.

மற்ற படி, ஓடுகின்ற ற்றின் கரையில் நின்று கொண்டு, இந்தக் கணத்தில் நான் பார்க்கின்ற று வேறு, முந்திய கணத்தில் நான் பார்த்துக் கொண்டு இருந்த று வேறு, என்று கூறிப் பல றுகளாக ஒரே ற்றைக் காட்டுகின்ற வித்தைகள் எல்லாம் சமுதாயங்களின் ய்வுக்கு ஒத்து வராது! ஏனென்றால், சமுதாயங்களின் முரண் இயக்கம் என்பது ஒரு சில கணங்களின் இயக்கம் அல்ல; பலப் பல் ண்டுகளின் இயக்கம்!

அன்று முதல் இன்று வரை மனித இனம் உயிர் வாழ்ந்து கொண்டு வந்து இருக்கிறது என்னும் மெய்மை போதும், ஜெ.எம்.மின் ‘வரையறை ‘யினை அடித்து வீழ்த்துவதற்கு! உலகே மாயம் என்று சில அரைவேக்காடுகள் புலம்பிக் கொள்வதால்

மட்டும் மாயம் கி விடுமா என்ன, உலகம்!

எனினும், பின்-புதின வாதத்தின் அடிப்படைகள் பற்றிய வேறு எந்த விளக்கமும் இந்தக் கதையில் இல்லை என்பதால், அது பற்றி ஈண்டு நாம் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. அப்படி என்றால், மார்க்ஸியம் மட்டும் இதில் இருக்கிறதா ? என்று

நமக்குக் கேட்கத் தோன்றலாம் என்ற போதிலும், கொச்சைப் படுத்தப் பட்டாவது இதில் அது இருக்கிறது அல்லவா!

ஏசு வழங்கும் மீட்சி

ஏசுவின் உயிர்ப்பு மற்றும் மனிதர்களின் மீட்புப் பற்றிய ஒரு கதையும் இந்தக் கதையின் ஒரு கதைப் பொருள் என்பதால், அது பற்றியும் சற்று நாம் பேசி க வேண்டும். (மனித மீட்சி பற்றிப் பார்க்க: வாழ்க்கையின் கேள்விகள், அதிகாரம்-16, பக்.231.)

பாரம் சுமப்பவர்களின் பாவங்களைத் தமது அரத்தத்தால் கழுவியவர் ஏசு என்றும் பாவிகளின் மீட்புக்காகத் தம்மையே பலியாக அவர் ஒப்புக் கொடுத்தார் என்றும் :பை:பிளில் கூறப் பட்டு இருப்பது உண்மைதான்! அதே நேரத்தில், வரலாற்று நாயகர்களைப் பற்றி இது போன்ற மாய்மையான கருத்துகள் வளர்க்கப் பட்டு, இறுதியில், மத நாயகர்களாக அவர்கள் மாற்றப் பட்டு விடுகிறார்கள் என்பதும்

அந்த அளவுக்கு உண்மை.

எனவே, ஏசுவின் வரலாற்றுக் காலத்திற்குள் சற்று நாம் உற்றுப் பார்ப்போம். மத்திய சியா எங்கும் ரோம் நாட்டின் திக்கம் கொடுங்கோல் ஓச்சிக் கொண்டு இருந்த காலம் அது. ஒரு புறம், ரோம் நாட்டின் மேலாதிக்க ட்சியை எதிர்க்கின்ற ஏசு, மறு புறம், தம் நாட்டில் நிலவி வந்து கொண்டு இருந்த அடிமை முறையையும் எதிர்க்கிறார்.

‘கடவுளின் குழந்தைகள் ‘ என்று ண்டைகள் மற்றும் ட்சியாளர்களும், ‘கடவுளால் சபிக்கப் பட்ட பாவிகள் ‘ என்று அடிமைகள் மற்றும் ஒடுக்கப் பட்ட

சாதியினரும், கருதப் பட்டு வந்து இருந்த காலம் அது! எனவேதான், ஒடுக்கப் பட்டோரின் பாவங்கள் தமது அரத்தத்தால் கழுவப் படும் என்றும் எல்லா மனிதர்களும் கடவுளின் குழந்தைகள்தாம் என்றும் அவர்களுக்கு றுதல் கூறி, விடுதலையில் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார் ஏசு. தண்ணீராலோ அல்லது கண்ணீராலோ பாவங்களைக் கழுவுவதை விட, அரத்தத்தால் அவற்றைக் கழுவுவது மாய்மை னது அல்லவா ? — கடவுளின் சாபத்தைப் போல!

இதனால்தான், ஏசுவும் யூதாஸும் செய்து கொண்டு இருந்த ஒப்பந்தத்தின் படிதான், ஏசுவின் கிளர்ச்சித் தோழனான யூதாஸ் ஏசுவைக் காட்டிக் கொடுத்தான் என்று நிக்கோஸ் கஜ்ஸன்சாக்கிஸ் கூறுகிறார். இப்படி, நேரடியான போராட்டங்களின் மூலம் மக்களுக்கு விடுதலை கிடைத்திட முடியாத ஒரு சூழ் நிலையில்தான், ஒரு பலியாகத் தம்மை ஒப்புக் கொடுத்திட வேண்டிய அவசியம் ஏசுவுக்கு ஏற்பட்டது — அதன் பின்னராவது மக்கள் இடையே ஒரு விழிப்பு ஏற்படாதா ? என்னும் தங்கத்தில்!

இறந்து போன லாசருக்கு ஏசு உயிர் கொடுத்தார் என்பது கூட, காலப் போக்கில் மாய்மைப் படுத்தப் பட்டு விட்ட ஒரு நிகழ்ச்சிதான் கும்.

ஏசுவின் ஒரு நண்பர் லாசர். அரசுக்கு எதிராகச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப் பட்டுச் சாவுக் குகையில் அல்லது அது போன்ற ஓர் இடத்தில் லாசர் அடைக்கப் படுகிறான். அப்படி அடைக்கப் பட்டவர்களுக்கு உணவு எதுவும் கிடைத்திட முடியாது என்பதால், அவர்கள் யாரும் உயிர் வாழ்ந்து விட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, அந்த இடத்திற்குள் தள்ளப் பட்டு அதன் பாறாங்கல் கதவு மூடப் பட்ட உடன், மக்கள் முடிவு செய்து விடுவார்கள் — அதில் அடைக்கப் பட்டவன் இறந்து போய் விட்டான் என்று! இப்படித்தான் லாசரும் இறந்து போய் விட்டவனாகக் கருதப் பட்டு இருந்தான்.

ஏசுவோ துணிச்சல் மிக்கவர்; மதக் குருக்கள் என்னும் போர்வையில் மக்களை ஏய்த்துக் கொண்டு வந்த ண்டைச் சாதிக் காரர்களைச் சவுக்கால் அடித்து விரட்டியவர்; ஏன், கேடுகளின் மையமாகிப் போய் விட்டு இருந்த ஜெருசலேம் கோவிலையே இடித்துத் தள்ளி விடுவேன் என்று வீதியில் நின்று அவர் முழக்கமிட வில்லையா ?

இப்படித்தான், தம்மைப் பின் தொடர்ந்த மக்களுடன் கூட்டமாகச் சென்று, லாசர் அடைக்கப் பட்டு இருந்த இடத்தின் பாறாங்கல் கதவை ஏசு அகற்றுகிறார்; அடை பட்டுக் கிடந்த லாசரை விடுவித்து அவனுக்கு உயிர்ப் பிச்சை அளிக்கிறார். விளைவாக, உயிர் கொடுத்தவர் ஏசு என்று அவரை மக்கள் பாராட்டுகிறார்கள்.

குறுக்கத்தில் அறைந்து கொல்லப் பட்டவர்கள் அனைவரும், பெரும்பாலும் கிளர்ச்சி யாளர்களாகத்தாம் அன்று இருந்தார்கள். குறுக்கத்தில் அப்படி அறையப் படுபவர்கள், இறுதி வரை குறுக்கத்தில் தொங்கிக் கொண்டுதான் உயிர் விட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் அன்று இல்லை.

தாங்க முடியாத வேதனையில், தாங்கள் தாகமாக இருப்பதாக அவர்கள் கூறினால், உடனே அவர்களுக்கு நஞ்சு ஊட்டப் படும். னால், தாம் தாகமாக இருப்பதாக ஏசு கூறிய பொழுது, அவருக்கு நஞ்சு ஊட்டப் பட வில்லை; மாறாக, புளிப்பான காடி ஊட்டப் பட்டது. அவர் மயங்கிச் சோர்ந்ததும், அவர் இறந்து விட்டதாகக் கூறி அவரை எடுத்துச் சென்று, அவரது தரவாளர்கள் அவரைக் குணப் படுத்தி விட்டார்கள். எனவே, குறுக்கத்தில் ஏசு இறந்து போனார் என்பது ஒரு மாய்மையே அன்றி மெய்மை அல்ல.

பர மண்டலத்திற்கு மக்களை அழைத்துச் செல்லப் போவதாக ஏசு கூறியதாகப்

:பை:பிளில் கூட செய்தி எதுவும் இல்லை. பர மண்டலத்தின் ட்சி, பூமிக்கு இறங்கி வர வேண்டும் என்பதுதான் மக்களுக்கு அவர் கற்பித்த மந்திரமும் கும்.

ஒரு மனித குமாரனான ஏசுவை, ஒரு தேவ குமாரனாகக் காட்டுவதால், ஏசுவுக்கு அப்படி என்னதான் பெரிய சிறப்பு ஏற்பட்டு விட முடியும் ? ஒரு கடவுளாக இருப்பது யாருக்கும் எளிது. ஒரு மனிதனாக, அதுவும் ஒரு கிளர்ச்சிக் காரனாக, இருப்பதுதான் மிகவும் கடினம்!

கவிஞர் இன்குலாப்பின் பிரமிடுகள்

செத்த பின்னர்தான் மனிதர்களுக்கு மீட்சி கிடைத்திட முடியும் என்கின்ற பாணியில், மடிந்து போனவர்களின் பிணங்களைக் காட்டி ஒரு மாயத்திலும் பெரும் சோகத்திலும் நம்மை ழ்த்திட முயல்கின்ற ஜெ.எம்.மின் நிழல்களை விட கவிஞர் இன்குலாப்பின் பிரமிடுகள் மிகவும் உயர்ந்து நிற்கின்றன என்றால் அது மிகை காது.

நிறைவேறாத சைகளுடன் பிணமாகிக் கொண்டு இருந்த அடிமைப் பெண் ஒருத்தி, அவளது காதலனின் மூச்சுப் பட்டதும் உயிர் பெற்று எழுகிறாள். நான் மோட்சத்திற்குச் சென்று விட்டேன்; என்னுடன் நீயும் வந்து விடு! என்று தனது காதலனிடம் அவள் கூற வில்லை. மாறாக, அவளிடம் அவள் காதலன் கூறுகிறான்

— அடிமை வாழ்வுக்கு ஒரு முடிவு கட்டி நாம் விடுதலை பெறுவோம் என்று!

‘நம் விடுதலைக் கீதத்தின் காற்று வெளிகளில் நாய்கள் குரைத்தால் என்ன செய்வீர்கள் ? நம் சிறகு விரிப்பில் மலரும் வண்ணங்களை அவர்கள் காயப் படுத்தினால் என்ன செய்வீர்கள் ? ‘ — அவள் கேட்கிறாள்.

‘இந்தப் பிரமிட் உலையில் நம் இதயங்களோ இரும்பாகி விட்டன. . . அடிமை வாழ்வுக்கு அடி பணியவே மாட்டோம். . . வீரர்களாய்ச் சுதந்திர வெளிகளில் உலாவுவோம். . . ‘ — அவன் முழங்குகிறான்.

இந்த விடுதலை முழக்கத்தின் வரலாற்று நீட்சிதான் மார்க்ஸியம்; மனித விடுதலை பற்றிய மனித வாதத் தேற்றம்!

முடிவாக

முடிவாக, ஸ்தாலினிசத்தின் கேடுகளை இந்த நூலில் மிகவும் அழுத்தமாக ஜெய மோகன் அம்பலப் படுத்தி இருக்கிறார். நாராயணன், கதிர், ராமசாமி, கந்தசாமி, ஜெய மோகன், முதலிய அவரது புனைவுகள் மெய்மையிசத்தின் பாற்பட்டவை. இவர்கள் மூலமாக ஜெய மோகன் எழுப்பி இருக்கின்ற கேள்விகள், யாரும் புறக் கணித்து விடக் கூடிய கேள்விகள் அல்ல.

மார்க்ஸியத்தின் பெயரில் இதில் வெளியிடப் பட்டு இருக்கின்ற கருத்துகள் எவையும் மார்க்ஸின் கருத்துகள் இல்லை என்ற போதிலும், வெறும் கதைகளிலும் கவிதைகளிலும் மூழ்கித் தத்தளித்துக் கொண்டு இருக்கின்ற சிந்தனை யாளர்கள், மார்க்ஸியத்தின் ழத்திற்குள் நுழைந்து பார்ப்பதற்கு உரிய அடித் தளத்தினைக் ‘கதை இடை யிட்ட இந்தக் கட்டுரை ‘ உருவாக்கிடக் கூடும் என்று நான் நம்புகிறேன்.

க, ஜெய மோகனும் அவரது கதை-மாந்தர்களும் மார்க்ஸைப் படித்து விட்டு மார்க்ஸியத்தைத் திறனாய்வு செய்வார்களாக!

அதே நேரத்தில், ஸ்தாலினிசமாகவும் அடக்கு முறை வாதமாகவும், திரோத்ஸ்கியிசமாகவும் அரசு-முதலாண்மை வாதமாகவும், மாவோயிசமாகவும் வறட்டு வாதமாகவும், மார்க்ஸியம் கொச்சைப் படுத்தப் பட்டு வந்து இருப்பதற்கு, புரட்சிக் கவிஞர்களாகவும் புரட்சிப் பேச்சாளர்களாகவும், மிகவும் மலிவாகத் தங்களை விற்பனை செய்து கொண்டு வந்து இருக்கின்ற புரட்சிக் கலைஞர்களும் ஒரு காரணம் என்பதையும் நாம் நினைவில் கொள்வோம்!

அனுபவ அறிவு நிலையின் உச்சக் கட்டமான அறிவுதான் ‘பகுத்தறிவு ‘ என்ற போதிலும், முரணியக்க அறிவு மற்றும் காரண அறிவு நிலைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது மிகவும் மேலோட்டமான ஓர் அறிவு நிலைதான் இந்தப் பகுத்தறிவு நிலை கும். இந்தப் பகுத்தறிவு நிலையில் எழுதப் படுவனதாம் கதை-கவிதைகள்!

எனினும், பகுத்தறிவு நிலையில் எழுதப் பட்டு வருகின்ற தங்கள் கதை-கவிதைகளைக் காரண நிலையில் எழுதப் பட்டு இருப்பன போலக் காட்டிச் சில எழுத்தாளர்கள் பெருமைப் பட்டுக் கொண்டு வருகிறார்கள். அறிவியல் ய்வுகளுக்கு இவர்கள் அளித்து வருகின்ற பங்கு என்ன ? என்பதுதான் இறுதியான கேள்வி!

6-1-2001 சோதிப் பிரகாசம்

sothipiragasam@lycos.com

திண்ணை பக்கங்களில் சோதிப் பிரகாசம்

  • கதைஞர்களும் கவிஞர்களும்
  • தமிழ் ஒழிக

    திண்ணை பக்கங்களில் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ பற்றி

  • க மோகனரங்கன் – ‘பின் தொடரும் நிழல் ‘ பற்றி

    Series Navigation

  • சோதிப் பிரகாசம்

    சோதிப் பிரகாசம்