அம்மா வந்தாள் பற்றி

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

மாலதி.


அன்பே ஆரமுதே செம்பருத்தி மோகமுள் நாவல்களில் பொிய மிக நீண்ட கான்வாசை வைத்துக்கொண்டு ஒவ்வொரு புள்ளியிலும் சிரமப்பட்ட தி.ஜானகிராமன், ‘அம்மா வந்தாள் ‘ நாவலில் மிக அடக்கமான ஓவியத்தூளியைப் பயன்படுத்தினார். மிகக்கச்சிதமான வடிவாக்கம்.ஆரம்பத்திலேயே ஒரு அதிர்வை வைத்தார்,இடையில் இன்னொன்று. கடைசியில் மூன்றாவது.

அம்மா வந்தாள் மீது எல்லாருக்குமே கிறக்கம். கிறக்கத்துக்குக் காரணமிது தான். நம் மனசின் பிசாசு ஏறி நின்று குதூகலிக்கிற மாதிாியில்,நமக்குள்ளிருக்கும் எதிர்ப்பாளி ,மரபுக்கெதிரான போராளி கெக்கெலி கொட்டும் விதத்தில்,வைதவ்யமும்,தாய்மையும், வைதீக மதமும் ஆன மூன்று புனிதங்கள் சுக்குநூறாகின்றன நாவலில்.

‘என் உடலுக்குத் திருமணமாயிற்று. அதற்கு என்னென்னவோ வந்தது போனது. எனக்கு எதுவும் நேரவேயில்லை. ‘ என்ற பரசுவின் விதவையைத் தவிர்க்க முடிந்தது அப்புவுக்கு. தன்னை அறியாமலே தான் கவனம் செலுத்தின ஒரு பெண்ணை அவளின் திருமண நலுங்கு முதல் சோபன அறை வரை அவளோடு தன்னை ஒட்டிப் பார்த்திருந்த மனப்பழக்கத்திலும் கூட உடலால் ஏற்பது முடியாததாயிருந்தது அப்புவுக்கு. வைதவ்யம் என்ற திணிக்கப்பட்ட துறவு நிறுவனத்திலிருந்து பாவப்பட்ட பெண்ணுக்கு வெளியே வர முடிந்தது.வெளியில் நின்ற ஆண் சிங்கத்தை மரபு வேலி மின் வேலியாகப் பயமுறுத்தியது.

மீண்டு வந்து குடும்பத்தை எதிர்கொள்ளும்போது தாய்மைப் படிமம் உடைந்தது அப்புவுக்கு. தாய் வேறு மூன்று குழந்தைகளுக்கு இன்னொரு வழியில் அம்மாவாகி யிருக்கிறாள். அவளின் பிராயச்சித்தத்துக்கு அவனைக் கருவியாகவும் எண்ணுகிறாள்.

அவ்வளவிலும் ‘பொிய கண்களும் அசாதாரணமாக நீண்டு வளைந்த இமைமயிரும் ‘ உடைய சேஷராமனின் சேட்டுப்பெண்ணை அப்புவுக்கு தேவதையாக்கிவிடக்கூடிய சந்தர்ப்பத்தையும் மறுதலிக்கிறாள். ‘அத்யயனம் பண்ணின குழந்தையைக் கசாப்புக்கடையிலே விட்டு விட முடியுமா என்ன ? ‘என்ற வியாக்கியானத்தோடு. தாயின் நுட்பமான அடிக்குப்பதிலடியாகத்தானோ என்னவோ மீண்டும் அப்பு சித்தன் குளம்[பவானியம்மாள்பாடசாலை] போவது!

கதை முழுக்கவும் அப்பு தன் காமத்தை உத்தாீயத்தில் முடிச்சு போட்டுக்கொண்டு எதையும் கேள்வி கேட்காத பேடியாகத் தோன்றினாலும் அதுவே மகா பெளருஷம். இந்துவும் அம்மாவும் இம்சித்த வாழ்வியலில் அப்புவுக்கு வேதம் அரணாயிருந்தது.கடைசியில் அப்பு அம்மா பிள்ளை ஆகிவிட வேதமும் உடைந்ததாகப் பெறப்பட்டது

உண்மையில் வைதவ்யமும் துறவும் ஒரு வாழ்நிலைதான். அது முன்பின் நகரலாம்.ஒரு கர்நாடகப்பாடகர்/துறவி திடாரென்று இல்லறம் மேற்கொண்டது போல. அதில் மீறல் என்னவந்தது ? புனிதம் எங்கு கெடுகிறது ?

அடுத்து அம்மா. அம்மா பெண்ணல்லவே! அவள் ஒரு உயிரும் அல்லவே! தாய்மையின் புனிதம் ஒரு கற்பிதம். வாழ்வின் பசி,ருசி, தாப தாகங்கள் எந்தக் கற்பிதத்துக்கும் அஞ்சுவதில்லை. அவை தம் போக்கில் பீறிட்டுப் பெருகிப் பிரவாகிக்கின்றன. அடுத்து வேதம். அதாவது இறுதியில் வேதம் உடைபட்டதாக ஆரம்பத்தில் சொன்னேன். வேதம் புனிதம் என்று யார் சொன்னது ? வேதம் பிரதிபலிப்பது எண்ணங்களை. கோட்பாடுகளை.

எண்ணங்கள் புனிதம்தான்.

கோட்பாடுகள் செழுமைதான்.

எழுத்துக்களின் பொளிவைத்தாங்கியதால் கல்வெட்டுகள் கவனம் பெறுகின்றன. எழுத்து அழிந்தபின் கல்வெட்டு வெறும் கல்.

அதுபோல வேதங்கள் அர்த்தம் இழக்காத வரை தான் கல்வெட்டுகள். பிறகு கற்கள். எண்ணங்களின் அலைவாிசை மாறினபோது பொடிபடப்போவதில்லை.வேதங்கள் மறு வாசிப்பில் மாறிப்போகின்றன,

ஆக ஒரு வகையில் எந்தப்புனிதமும் உடைபடவும் இல்லை. அம்மா வந்தாளில். கடைசியில் அப்பு மேனி கொதிக்க நின்றுகொண்டே இருக்கிறான். ‘இந்து உள்ளே ஓடி விட்டாளே என்றிருந்தது. அதே சமயம் தனியே நிற்கவேண்டும் பொலவும் இருந்தது, ‘ என்று கோடி காட்டுகிறார் ஜானகிராமன்.அதன்படி மரபுக்குகந்த வேறு ஒரு முடிவும் சாத்தியம்.

அப்பு தான் மனப்படிமம்.எவ்வளவு புனிதங்கள் உடைந்தாலும் அது நிற்கும். விழுந்ததாகச் சொல்லப்படவில்லையே! விழுவதற்கான எல்ல சாத்தியமும் உண்டு அவ்வளவே!

அல்லது மனம் விழும். அழகாக விழும். இயல்பாய் விழும். அதனால் என்ன ? புனிதங்கள் எல்லாமும் கற்பிதங்கள் தாமே! அடுத்தவகையானக் கற்பிதங்களைத் தயார் செய்தால் போதுமே!

**

மாலதி.

malti74@yahoo.com

Series Navigation

மாலதி

மாலதி