உயிர்மை நவம்பர் 2003 இதழிலிருந்து

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன்


நவம்பர் 2003 இதழிலிருந்து

மனுஷ்ய புத்திரனின் தலையங்கத்திலிருந்து…

கலைஞரின் மீதான மறுப்பைப்பற்றி இவ்வளவு ஆவேசப்படும் அவரது அன்பர்களுக்கு கலைஞர் நவீன இலக்கியத்தின் மேல் காட்டிவந்திருக்கும் இந்த அலட்சியம் பற்றி எந்த அபிப்ராயமும் இல்லை. எல்லாவற்றையும்விட கலைஞரின் இலக்கியத் தகுதி கேள்விக்கு அப்பாற்பட்ட ஒன்றா என்ன ?

அஞ்சலி-புரிசை கண்ணப்ப தம்பிரான்

வெளி ரெங்கராஜனின் கட்டுரையிலிருந்து…

கண்ணப்ப தம்பிரான் போன்ற கூத்து மரபில் ஊறிய முதிய கலைஞன் தன்னுடைய 65 வயதுக்குப் பிறகு நாடக வெளிப் பாட்டில் புதிய கண்ணோட்டங்களுக்கான சாத்தியங்களை ஏற்று அவைகளைச் செயல்படுத்தும் விதமாக தன் மீதி வாழ்நாளை செலவிட்டதை ஒரு முதிர்ந்த கலை மனத்தின் வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும்.

எட்வர்வட் செயித்

ரிச்சர்ட் பெர்ன்ஸ்டான் கட்டுரையிலிருந்து…

“மேற்குக்கும் கிழக்குக்கும் உள்ள உறவு அதிகாரத்தைப் பற்றியது; பல் வேறு அளவுகளிலான ஒரு சிக்கலான ஆதிக்க முறைமை பற்றியது,” என்று ‘கீழைத்தேயவாத’த்தில் எழுதுகிறார் செயித். காலனீய அடிமைகளின் மீதுள்ள தனது காலனீய ஆதிக்க அதிகாரத்தை வலுப்படுத்தும் வகையாகக் கிழக்கின் பிம்பத்தை மேற்கு உருவாக்கியது என்னும் செயித்தின் பார்வை, எல்லாவற்றையும் இழந்த ஒரு மக்களின் ஓர் அங்கமாய்த் தன்னைப் பார்க்கும் அவரது உணர்விலிருந்து உதிப்பதாய்த் தோன்றுகிறது. ஃப்ரான்ஸ் ஃபானன், மிஷெல் ஃபூக்கோ, க்ளாட் லீவை – ஸ்ட்ரெளஸ் போன்ற ஃப்ரெஞ்சுச் சிந்தனையாளர்களின் பாதிப்புள்ள செயித், கலாச்சாரமும் அதிகாரமும் பற்றியான இத்தகைய சிந்தனைகளை முதன்முறையாக அமெரிக்கப் பல்கலைக்கழக அறிவுலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர்.

பெரிய அணைகளும் எளிய மக்களும்

சு. தியடோர் பாஸ்கரன் கட்டுரையிலிருந்து…

நூற்றுக்கணக்கான அணைத் திட்டங்களால் வெளியேற்றப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு என்ன நேர்ந்தது ? மாற்று இடங்களில் எத்தகைய மறுவாழ்வு அளிக்கப்பட்டது ? அவர்களில் எத்தனை பேர் இன்று சூழியல் அகதிகளாக நகரத்தின் சேரிகளின் தவிக்கின்றார்கள் ? இதுபோன்ற விவரங்கள் எதுவுமே பதிவு செய்யப்படவில்லை.

தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம்

எஸ். ராமகிருஷ்ணன் நாடகத்திலிருந்து…

தஸ்தாயெவ்ஸ்கி: மிகையில். . .

உனக்கு நினைவிருக்கிறதா. நம் பால்ய நாட்களை. நேசிப்பார் எவரு மின்றி, நோய்மையால் பீடிக்கப்பட்டு, தனக்குள்ள ஒரே நண்பனாக நம் தகப்பனை மட்டுமே ப்ரியம் செய்தபடி, அவமானத்தையும் கசப்பையும் தாங்கிக்கொண்டு, வெற்றுக் கோப்பையென உலர்ந்து போயிருந்த அம்மாவின் கடைசி நாட்களை மறந்துவிட முடியுமா என்ன ? ஒவ்வொரு நாளும் அவள் நம் ஐவரையும் அழைத்துப் படுக்கையின் விளிம்பில் உட்காரச் சொல்லி இமைக்காது பார்த்தபடியிருந்தாளே . . . அது எதற்காக ?

அந்த கண்கள் உலர்ந்த தானியத்தைப் போலயிருந்தன. அவளது பெருமூச்சு உஷ்ணம்மிக்கது எதையோ பேச விரும்பினாள். ஆனால் வார்த்தைகள் துளிர்க்கவேயில்லை. எத்தனை இரவுகள் தகப்பனின் காலைக்கட்டிக்கொண்டு தன்னை நேசிக்கக்கூடாதா என்று கண்ணீர் விட்டிருக்கிறாள்.

தாயின் பார்வைக்குள் நம்முடைய பால்யகாலம் குவளையில் அடுக்கப்பட்ட மலர் போல ஒன்றாகக் கூடியிருந்தது நினைவிருக்கிறதா ?

யாருமற்றவர்களாக வளர்க்கப்பட்டவர்கள் என்ற நினைவே நம்மைக் கொல்கிறதல்லவா.

மிகையில்,

பச்சைச் சாராயம் ஊற்றித் தகப்பன் கொல்லப்பட்ட தாகச் சேதி வந்த உடன் எனது உடல் நடுங்கி, வாயில் நுரை தள்ளி, வலிப்பு வந்து விழுந்தபோது பல்வெட்டி ஏற்பட்ட காயம் இன்னமும் என் உதட்டில் உள்ளது.

தாயும் தகப்பனும் இல்லாதவர்கள் துயரத்தைத் தவிர வேறு எதையும் கொண்டிராதவர்கள் என்று அன்று இரவில் நீ கூறியது இப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

மிகையில், உயிர் வாழ்வதே நமக்குப் பெரிய அதிர்ஷ் டம் என்பதுபோலாகிவிட்டதே.

இப்போது தனிமையில் எரியும் மெழுகுவர்த்திகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அம்மாவின் நினைவுகள் சுவரில் ஊர்ந்து நகர்கின்றன.

சைபீரியாவின் பனியில் சூரியன் ஒளிர்வதைப் பார்க்கும்போது அம்மா இறந்து போன துக்கம்தான் மேலிடுகிறது.

மிகையில், நான் ஏன் எழுத்தாளனாக மாறினேன்.

தனிமை மிக மோசமானது.

மனதில் வார்த்தைகள் மட்டும் இல்லாமல் போய் விட்டால் மனிதர்களால் வாழமுடியாமல் போய் விடும்.

பால் ஸெலான் கவிதைகள்

பிரம்மராஜனின் முன்குறிப்பிலிருந்து…

போருக்குப் பிற்பட்ட ஜெர்மானியக் கவிஞர்களில் தலை சிறந்தவராகக் கருதப்படும் பால் ஸெலான் உணர்ச்சியியல் கவிதைகளில் பெரும் சாத னைகளின் உச்சத்தினை எட்டியவர். ஆனால் ஸெலான் தன் கவிதையில் அடைந்த உச்சங்களை எப்படி வாசகன் அடைவது என்பதற்கு எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பொருள்கோளியல் வழி என்னவென்பது பற்றி எவருக்கும் ஒருமித்தக் கருத்து நிலவுவதில்லை. சமகால ஜெர்மானியக் கவிஞரும் மொழி பெயர்ப்பாளருமான மைக்கேல் ஹேம்பர்கர் குறிப்பிட்டது மாதிரி வாசகன் எந்த அளவுக்கு ஸெலானை நெருங்கு கிறானோ அந்த அளவு ஸெலான் சிக்கலானவராகத் தெரியத் தொடங்குகிறார்.

அமைதிக்கான நோபல் பரிசு-ஷிரின் இபாதி

அம்பையின் கட்டுரையிலிருந்து…

பாரீசில் நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசிய ஷிரின் இபாதி, “பேச்சுரிமை பறிக்கப்பட்டிருப்பதுதான் இரானின் தற்போதைய பெரும் மனித உரிமை பாதிப்பு. தங்கள் கருத்துக்களை வெளியிட்டதால் சிறையில் உள்ள எல்லோரையும் இரானிய அரசு விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறினார். “இஸ்லாத்துக்கும் மனித உரிமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை” என்று கூறிய ஷிரின், இரானியப் பெண்கள் தங்கள் தலையை மறைக்க அணியும் போர்வையைத் தன் தலை மேல் அணிந்திருக்கவில்லை.

பண்பாட்டின் மறைபிரதி

ஜெயமோகன் கட்டுரையிலிருந்து…

செவ்விலக்கியங்கள் ஒரு சமூகத்தின் போதமனம் என்றால் பழங்குடி மரபே ஆழ்மனம். ஆன்மீகம், கலைகள், இலக்கியம் ஆகியவற்றின் அடிப்படைத்தளமாக அமைவது அது தான். பொன்னார்மேனியனின் உடலில் புலித்தோலா கவும் உடுக்கையாகவும் அதுதான் உள்ளது. ஆழிவண்ணனின் மார்பில் கெளஸ்துபம் அதுவே. நமது நாட்டி யத்தில், இசையில் அதன் கூறுகளே உள்ளன. தாண்டவம் இன்றி பரதநாட்டியம் முழுமையடைய முடியாது. நமது சிற்பவெற்றிகளில் பெரும்பகுதி ரெளத்ர பாவத்தின் வெளிப்பாடுகள் – மதுரை ஊர்த்துவ வீரபத்ரரைப்போல. அந்த பழங்குடித் தன்மை நம் ஒவ்வொரு எண்ணத்திலும் நம்மை அறியாமலேயே ஊடாடியுள்ளது. நம் மனதை திருவண்ணாமலை கோவில் போல உருவகிக்கலாம். ஓங்கிய கோபுரங்கள், விரிந்தகன்ற பிரகாரங்கள், தடாகங்கள் பலவிதமான மண்டபங்கள், பலநூறு சிற்பங்கள், முடிவற்ற அலங்காரங்கள் என தாண்டிச்சென்று நாம் காணும் இருண்ட ஆழமான கருவறை சற்றும் பண்படாத கரங்களால் கட்டப்பட்டது. உள்ளே கோயில்கொண்ட லிங்கம் வடிவமற்ற ஒரு கல்மட்டுமே. அறியமுடியா பழங்காலத்தில் ஏதோ ஆதிபிதாமகன் தன் பிரபஞ்ச தரிசனத்தின் சாரத்தை வெளிப்படுத்த ஒருகல்மீது மறுகல்லைத் தூக்கிவைத்து உருவாக்கிய அடையாளம்.

ஜென் கவிதைகள

யுவன் சந்திரசேகரின் மொழிபெயர்ப்பில்…

அவன்

வனத்தில் நுழையும்போது

புற்கள் நசுங்குவதில்லை.

நீரில் இறங்குகையில்

சிற்றலையும் எழுவதில்லை.

(பெயர் தெரியவில்லை)

விக்கிரமாதித்யன்

ந. முருகேச பாண்டியன் கட்டுரையிலிருந்து…

நம்பிக்குப் பார்ப்பனர் சாதியைச் சார்ந்த எழுத்தாளர்கள் மீது எப்பவும் எரிச்சல், பேச்சுப் போக்கில் ‘பார்ப்பான்’ என்று கோபமாகத் திட்டுவார். அதற்கான காரணங்கள் என்னவென்று ஸ்தூலமாகத் தெரியவில்லை. சிலரைப் பிடிக்கவில்லையென்றால் சாதி அடிப்படையில் விமர்சிப்பது எதற்கு என்பது புரியாத விஷயம். அவருக்கு எப்படித்தான் எழுத்தாளர்களின் சாதி தெரியுமோ தெரியாது. எப்படியோ எல்லோரின் சாதியையும் தெரிந்து வைத்திருப்பார். அவருக்குப் பிடிக்காத எழுத்தாளரின்மீது சாதியைச் சொல்லி ஏவுகணைகளை ஏவிவிடுவார்.

ஒரு சிசுவின் மரணமும் சில எதிர்வினைகளும்

சாரு நிவேதிதா கட்டுரையிலிருந்து…

சமீபத்தில் நடந்த ஒரு விஷயம். இலக்கியக் கூட்டம் ஒன்றில் ஓர் எழுத்தாளர் இரவு உணவுக்குப் பின் தலைவலிக்காக ஸாரிடான் மாத்திரையைப் போட்டிருக்கிறார். உடனே அவருக்கு ஆகாத ஒருத்தர் ‘அந்த எழுத்தாளருக்குக் கொடிய மனநோய். தினமும் அதற்கான மாத்திரையை உட்கொள்ளாவிட்டால் அவருக்கு உறக்கம் வராது’ என்று எழுதிவிட்டார். (சிறுபத்திரிகையில்தான் என்ன வேண்டுமானாலும் எழுதலாமே ?) இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படி ஓர் அபாண்டத்துக்கு ஆளான அதே எழுத்தாளர்தான் கோபி கிருஷ்ணனுக்கு மனநோய் என்று எழுதியுள்ளார்.

பாய்ஸ் : பண்பாடும் பாசாங்கும்

வெளி ரெங்கராஜன் கட்டுரையிலிருந்து…

உண்மையில் eroticism என்பது ஆபத்தானது அல்ல. அது தீங்குகள் அற்றது. ஒரு வெகுளித்தனமான பாலியல் குறுகுறுப்பு ஒரு காலகட்டத்தில் செயலூக்கத்துக்கான உந்து சக்தியாக விளங்குவது மனித இயல்புக்கு விரோதமானது அல்ல. நம்முடைய புராதனக் கலைகளும், ஓவியங்களும், சிற்பங்களும் erotic தன்மையை ஒரு பிரிக்க முடியாத அம்ச மாகப் பிரதிபலித்தவை. நம்முடைய கூத்து மற்றும் நாட்டுப் புறக் கலையின் பல வெளிப்பாடுகளில் eroticism வெளிப் படையாகவே கையாளப்படுகிறது,

அமராவதியின் பூனை

ஜே.பி.சாணக்யா சிறுகதையிலிருந்து…

ஊருக்குத் திரும்பிவந்த ஒரு நாளில் ரசாக் தன் வீட்டில் பூனைகளைக் காணாமல் பக்கத்து வீடுகளில் கேட்டான். அவர்கள் தயக்கமற்று காசிநாதனின் வீட்டைச் சுட்டினார்கள். தன் வீட்டைவிட்டு அவை கள் அங்கு சோறுண்ணச் செல்வது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. என்ன செய்வது என்று பலமாக யோசித்துக்கொண்டிருந்தான். அவன் வந்த வாசனை அறிந்ததும் பூனைகள் வீடு திரும்பி அவனைக் கொஞ்சின. அதன் வாஞ்சையில் அவன் கோபம் மெல்ல உள் தள்ளப்பட்டது. ஊடலாக கோபித்துக் கொண்டான். அவைகளுக்கு இன்னும் நன்றாக பராமரிப்பும் உணவும் வழங்கப்பட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அப்பூனைகளின் அழகில் வேறு வழியின்றி மீண்டும் மயங்க ஆரம்பித்தான்.

அமெரிக்காவில் இந்திய இலக்கிய மாநாடு

காஞ்சனா தாமோதரன் கட்டுரையிலிருந்து…

வன்முறை பற்றிய கே. சச்சிதானந்தனின் இன்றைய பார்வை முக்கியமானது. இவர் வன்முறை என்பதை ஒரு பரந்த அர்த்தத்தில் பார்க்கிறார். கேரளத்தில் எல்லாத் தரப்பு அடிப்படைவாதங்களும் உண்டாக்கும் வன்முறை குறித்து ஆழமாய் வேதனைப்படுகிறார். ஆனால், மனிதருக்கு மனிதர் இழைக்கும் வன்முறை மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் முதலானவற்றுக்கு நம் மனித இனம் இழைக்கும் கொடூரமும் இவர் வன்முறை என்று சொல்லுவதில் அடங்கும்.

கலைப்பொருளாகும் காமிக்ஸ்

டிராட்ஸ்கி மருதுவின் கட்டுரையிலிருந்து…

“என் வாழ்வின் மாபெரும் துயரம்

நான் காமிக்ஸ்கள் வரையாததே.”

என்று பிக்காஸோ எழுதியிருக்கிறார்.

தனது 93வது வயதுவரை அயராது உழைத்த மாபெரும் கலைஞனான பிக்காஸோ சிற்பம், ஓவியம், புகைப்படம், திரைப்படம், நாடகம் என பல்வேறு கலை வடிவங்களை வெவ்வேறு ஊடகங்களிலும் பாணிகளிலும் நிகழ்த்திப் பார்த்தவர். ஆனால் காமிக்ஸ் களில் ஈடுபடாதது அவருக்கு எவ்வளவு பெரிய மனக்குறையாக இருந்தது என்பதை மேற்கண்ட கூற்றி லிருந்து என் ஓவியக் கல்லூரி நாட்களில் தெரிந்து கொண்டேன்.

கண்ணீரில்லாமல் யாப்பு

சுஜாதாவின் கட்டுரையிலிருந்து…

எமிலி டிக்கின்சனின் ஒரு கவிதையைப் பார்ப்போம்.

A word is dead when it is said some say

I say

It just begins to live that day

(வார்த்தை சொன்ன உடன் இறக்கிறது என்கிறார்கள் சிலர், நான் சொல்கிறேன் வார்த்தை அப்போதுதான் பிறக்கிறது)

படர்க்கையின் இடம

ஞானக்கூத்தன் கட்டுரையிலிருந்து…

‘கவிஞனுக்கு’ என்ற கவிதையில் அலெக்ஸாண்டர் புஷ்கின் எழுதுகிறார்.

கவிஞனே!

மக்களின் அபிமானத்தை மதித்துவிடாதே.

அவர்களின் கைதட்டல் ஓசை விரைவில் மடியும்.

மூடர்களின் தீர்ப்புகளையும்

பன்மைப்பட்டவற்றின் நடுங்கச் செய்யும் சிரிப்பையும்

நீ கேட்பாய். ஆனால் நிமிர்ந்து நில்,

இடர்ப்பாடற்றும், சீலத்தோடும்

நீதான் வேந்தன்.

வேந்தர்கள் தனிமையில்தான் வாழவேண்டும்.

சமகாலத்துப் படர்க்கையின் அமைப்பு ஜாக்ரதையாகக் கட்டப்பட்டதாகவும் அதன் எதிர் மெய்ப்பாடு கள் புகட்டப்பட்டதாகவும் இருக்கக்கூடும். புஷ்கின் கவிஞன் புறக்கணிக்க வேண்டியதில் கைதட்டலையும் சேர்த்துக்கொண்டிருப்பது கவனிக்கத் தகுந்தது. இந்தக் கைதட்டல் இயல்பான எதிர் மெய்ப்பாடாக இராது என்பது புஷ்கினின் கருத்து

உயிர்மைக்கு சந்தா செலுத்துங்கள்.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பாதைகளைத் தொடும் ஒரு புதிய முயற்சி

சந்தா விபரம்

இந்தியாவில்

ஆண்டுச் சந்தா ரூ. 180

இரண்டாண்டுச் சந்தா ரூ. 300

ஆயுள் சந்தா ரூ. 2000

வெளிநாடுகளில்

ஆண்டுச் சந்தா $ 20

இரண்டாண்டுச் சந்தா $ 35

ஆயுள் சந்தா $ 100

சந்தா தொகையை cheque அல்லது DD ஆக UYIRMMAI என்ற பெயருக்கு அனுப்பலாம்.

படைப்புகள் அனுப்புவோர் Inamathi, Inaimathi TSCI, Bamini எழுத்துருக்களில் மின்னஞ்சல் செய்யலாம்.

முகவரி:

UYIRMMAI

11/29 SUBRAMANIYAM STREET

ABIRAMAPURAM

CHENNAI-600 018

TAMIL NADU

INDIA

TELE/FAX 91-44-24993448

MOBILE 9840271561

E-MAIL uyirmmai@yahoo.co.in

Series Navigation

ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன்

ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன்