பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – அல்போஃன்ஸ் தெ லமர்த்தின் (Alphonse de LAMARTINE (1790 – 1869)

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘நாடென்பது எனக்கு எப்போதும் மனிதர்களன்றி வேறல்ல ‘ – லமர்த்தின் (-கிராஸியெல்லா)

லமர்த்தின் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சு நாட்டின் புகழ்பெற்ற கவிஞர், அரசியல்வாதி. ஆங்கிலக் கவிஞன் பைரன் பிரபுவின் சமகாலத்தவர். அக்டோபர் 21 1790ல் மாக்கோனில்( Macon) பிறந்து பிப்ரவரி 28 1869ல் பாரீஸில் இறந்தவர். லாமர்த்தீன் என்ற பெயருக்குப்பின்னே அழகன், வசீகரன், கண்ணில் நீர்ச்சுரக்க கவிதை பேசுபவன் என்கின்ற அடைமொழிகளுண்டு. அவரது கவிதைகள் கற்பனை வளமும், மயக்கும் செளந்தர்யமும் கொண்டவையெனவும், மனதிற் சலனமூட்டக் கூடியவையெனவும் கொள்வோருண்டு. அதற்கு மாறாக, நெகிழ்ச்சியுடன் கூடிய இணக்கமும், பிரவாகமெடுக்கும் உணர்வும், கண்களைக் குளமாக்கும் குணமும் உடையவையென கொண்டாடுவோருமுண்டு. தலைக்குக் கிரீடமோ ? கழுத்திற்கு மாலையோ ? எதுவென்றால் என்ன ? இரண்டிற்குமான தகுதிகள் ஏராளமாக இவரிடம் உள்ளன.

பிரபுக்கள் குடும்ப அடையாளம் பிறப்பிலிருந்ததால் வறுமை அறியா இளமை. ஆறு தங்கைகளுக்குச் சகோதரன். அன்னையின் முலைப்பாலில் மொழிப்பாலுமிருந்தது. இலக்கியக் கல்வியை இயேசு சபையிடமிருந்து (Jesuites) பெற்றார். பின்னர் முதன்முறையாகஇத்தாலிக்குச் சென்று பாரீஸுக்குத் திரும்பியவுடன் அக்காலத்தில் பிரஞ்சு நாடக உலகில் புகழ்பெற்றிருந்த ‘தல்மா ‘ என்கின்ற நாடகக் கலைஞருக்காக ஒரு துன்பவியல் நாடகமொன்றை எழுதினார். ஆனால் அந்நாடகம் இறுதிவரை மேடையேறவில்லை. மீண்டும் இத்தாலிக்குச் சென்றபோது, நப்போலித்தேன் நங்கையொருத்தியைச் சந்திக்க நேரிடுகின்றது, அவளையே நாயகியாக உருவகித்து ‘கிராஸியெல்லா ‘ (Graziella) என்கின்ற காதற்புதினத்தைப் படைக்கின்றார். மத்தியதரைக் கடற்பகுதி மீனவப் பெண் ‘கிராஸியெல்லா ‘ கதையின் நாயகி. கவிஞர்களுக்கேயுரிய முழுக்க முழுக்கக் கவித்துவமிக்க உரைநடை.. இங்கே பிரான்சில் அரசியல் மாற்றம். முதலாம் நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்களின் உதவியோடு பதவியேற்ற பதினெட்டாம் லூயியின் தொடக்கக் கால ஆட்சியான ‘முதலாவது ஆட்சி சீரமைப்பு ‘ (La Premiere Restauration) காலத்தின்போது இவருக்கு மெய்காப்பாளர் பணி. இலக்கியம் மீண்டும் அவரை ஈர்க்கிறது. மீண்டும் அரசியலுக்குள் நுழையும் முதலாம் நெப்போலியனின் இஇறுதி நூறுநாட்ககளில் (Cent-jours 20 mars 1815 – 22 juin 1815) தலைமறைவு வாழ்க்கை.. 1816 செப்டம்பரில் ‘நீராவிக் குளியலுக்காக ‘ சென்றவிடத்தில் ‘பூர்ழெ ஏரிக்கரையில் ‘ (Le lac du Bourget) சந்திக்க நேர்ந்த ழூலி ஷார்ல் (Julie Charles) என்கின்ற மணமான பெண்ணிடம் ‘லமர்த்தினுக்கு ‘ ஏற்பட்ட நெருக்கமான உறவு, அவளது எதிர்பாராத இறப்பின்காரணமாக முடிவுக்கு வந்துவிடுகிறது. இவ்வனுபவத்தின் வழித்தடமே ‘l ‘Elvire du Lac ‘ என்கின்ற கவிதை. அதனைத் தொடர்ந்து எழுதப்பட்டக் கவிதைகள் அனைத்துமே ‘லமர்த்தினின் ‘ சுய அனுபவங்கள். அப்படைப்புக்களில், கவிஞரின் மனத்துள் எழுந்த கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் அடர்த்தியாய் ஆக்ரமித்துள்ளன. உணவுர்கள் கவிதைகளுக்கான ஊற்றுகண்களாக உடைத்துக்கொண்டு பீரிடுகின்றன. 1817ல் எழுதப்பட்ட ‘ஏரி ‘ மற்றும் ‘ நித்யம் ‘ (le Lac et l ‘immortalite) 1818ல் வெளிவந்த ‘ஏகாந்தம் ‘ (l ‘Isolement), 1819ல் எழுதப்பட்ட ‘மாலை நேரம் ‘ (Le soir), ‘ஞாபகம் ‘ (le Souvenir), ‘பள்ளத்தாக்கு ‘ (le Vallon), இலையுதிர்காலம் (L ‘automne) ஆகியவை, செறிந்த உணர்வுகளின் ஆழத்தை வெளிப்படுத்தும் அவரது நேர்த்தியான கவிதைகளில் அதிமுக்கியத்துவம் பெற்றவை. ஆரம்பகாலத்தில், பாரீஸிலிருந்த அப்போதைய பிரபல பதிப்பகங்கள், அவரது பதிப்புகளை நிராகரிக்கின்றன.. பின்னர் 1820ல் முதலாவது கவிதைத் தொகுப்பான ‘தியானம் ‘ (Meditations Poetiques et religieuses) பதிப்பிக்கபடுகிறது. பதிப்பிக்கபட்ட நான்காண்டுகளில் 45000 பிரதிகள் விற்றதென்பது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஓர் இமாலயச் சாதனை. 1820 ஜூன் 5ல் ‘மேரி -ஆன் ‘ என்ற ஆங்கில நங்கையை மணம் புரிகிறார். 1823ல் ‘தியானம் ‘ இரண்டாவது தொகுதி வெளியீடு. பிறகு வெளிவந்த கவிதைகளில் அவரின் முதிர்ச்சியைக் குறிக்கும் ஆன்மீக வெளிப்பாடுகள் தெளிவாகவுள்ளன. அவற்றுள் ‘சாக்ரடாஸின் இறப்பு ‘, ‘ஷில்து ஹரோல்டின் புனித யாத்திரை இறுதிப் பாடல் ‘ (La Mort de Socrate, Le Dernier Chant du pelerinage de Child Harold – இக்கவிதை ‘கவிஞர் பைரனுக்கான ‘ அஞ்சலி)) முக்கியமானவை. இத்தாலிக்கும், புழுதிமனிதர்களுக்குமான ஒரு நிறுத்தற்குறி ( Une apostrophe a l ‘Italie et a la ‘Poussiere humaine ‘) என்கின்ற கவிதையினால் கோபமூண்ட இத்தாலிய தளபதி ஒருவனால் மோசமாகத் தாக்கப்பட, ஆபத்தான நிலையில் பிரான்சுக்குத் திரும்ப நேரிடுகிறது. பிரான்சு மன்னனான பத்தாம் சார்லஸ் ‘லமர்த்தினை கெளரவிக்கும் பொருட்டு, படைவீரர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய சிலுவைப் பதக்கத்தை ( La Croix de la Legion d ‘honneur) அளிக்கிறான். 1829 நவம்பரில் பிரபுவாக தேர்வு செய்யபட்டு அரசியற் பிரவேசம். இத்தொடர்பு 1848 வரை நீண்டது. தன்னுடைய அரசவை பிரநிதித்துவ காலத்தில் இவராற்றிய உரைகள் பிரசித்தி பெற்றவை. அவற்றுள் குறிப்பாக மரண தண்டனை ஒழிப்பு, கீழ்த்திசை நாடுகள் பிரச்சினை, இலக்கியக் கல்வியைப் பாதுகாக்கவேண்டிய அவசியம், சமூக நலன் உதவிகள் ஆகியவற்றுக்கான உரைகள் மெச்சத் தகுந்தவை. 1830ல் ‘இணக்கம் ‘ (Harmonies poetiques et religieuses – 2volumes) பதிப்பித்து வருகிறது. இத்தொகுதி ‘லமர்த்தினின் கவிதைகளில் மிகவும் உன்னதமானப் படைப்புகளென பாராட்டபடுபவை. 1832ல் தனது மனைவி மற்றும் ஒரே மகளுடன் மேற்கொண்ட பயணத்தில் மகளை இழக்க, கசந்த அனுபவங்கள் எழுத்துகளாக பரிணமிக்கின்றன. ‘கீழ்த்திசை பயணம்: ஞாபகங்கள், எண்ணங்கள், நினைவுகள்,காட்சிகள் ‘( Voyage en Orient: Souvenirs, Impressions, Pensees et paysages – 1835, 4volumes) 1836ல் வெளிவந்த ‘ஜோஸ்லன் ‘*(Jocelyn) மிகச் சிறப்பான மேலுமொரு கவிதைத் தொகுப்பு. இவற்றுள் உள்ள கவிதைகள் எக்காலத்துக்கும், எந்நாட்டவர்க்கும் பொருந்தக்கூடியவை. இவ்வரிசையில் தொடர்ந்து படைக்கப்பட்டதே ‘தேவதூதனின் வீழ்ட்சி ‘(La Chute d ‘un ange). 1839ல் மீண்டுமொரு கவிதைத் தொகுப்பு.. இத்தொகுப்புக்கான முன்னுரையில் கவிஞனின் சமூகக் கடமைகளை வெளிபடுத்தியிருந்தார். இந்த நேரத்தில் – அரசியலில், இவரது கவனம் மெல்லமெல்ல பழமைவாதிகளிடமிருந்து மீண்டு சோஷலிஸ்டுகள் பக்கம் திரும்புகிறது. 1847ல் படைத்த ‘ழிரோந்தன்களின் வரலாறு ‘ (l ‘Histoires des Girondins) அப்போதைய ஆட்சியை ஆட்டம் காண வைக்கிறது. அதேசமயம் அடுத்து உருவான புதிய குடியரசு நிருவாகத்தில் வெளிவிவகார அமைச்சருக்கானப் பதவி இவரைத் தேடி வருகிறது. எனினும் அடுத்துவந்த அதிபர் தேர்தலில் மிகக்குறைவான வாக்குகள் பெற அவரது அரசியல் வாழ்வு முடிவுக்கு வருகிறது. இந்தச் சூழலில் ஏராளமான கடனும் சேர்ந்துகொள்ள ஓய்வில்லாமல் உழைக்கவேண்டியிருக்கிறது. அவரது வாழ்க்கையிலேற்பட்ட இன்னலும், போராட்டமும் கவிதை அவதாரமெடுக்கின்றன. 1851ல் ‘ழேன்வியேவ் ‘ (Genevieve – ஒர் எளிய வேலைக்காரனின் தலைவிதி பற்றியதான படைப்பு) மற்றும் ‘கல்லுடைப்பவன் ‘ (Le tailleur de pierre de Saint-Point) அந்த வகையிலடங்கும் சில உதாரணங்கள். இது தவிர ஏராளமான வரலாற்று நூல்களும் இவற்றுள் அடங்கும். ஆனால் இறுதிக்காலத்தில் எழுதியவை அனைத்தும் பணத்தேவைக்காக எழுதபட்டவையேயொழிய, மனத்தேவைக்காக எழுதபட்டவை அல்ல என்பது இலக்கியவாதிகளின் விமர்சனம்.

* 1836ல் வெளிவந்த ஜோஸ்லன்(Jocelyn). ஜோஸ்லன் அவனது காதலி லொரான்ஸ்(Laurence) எனச் சுற்றிவரும் காதல் இலக்கியம். 8000 வரிகளைக்கொண்டு, ஒன்பது பகுதிகளாலானது.. ஆன்மீகத்தையும் காதலையும் உள்ளீடாகக் கொண்ட இக்கவிதைத் தொகுப்பு சமூகநலம் சார்ந்தவை.

நாடோடி மனிதர்கள் ( La Caravane humaine)

நீண்டுச் சரிந்த நதிக்கரையை

நெருங்கி நின்ற காடொன்றில்

முகாமிட்டிடும் நாடோடிக் கும்பலொன்று.,

கருவாலி மரங்கள்

பயணம் தொலைத்த மனிதரை

வாயுவும் ஞாயிறும் வாட்டாமற் காத்திடும்;

கயிற்றைக் கிளைகளிற் பிணைத்து

கட்டியெழுந்தக் கூடாரங்கள்,

சிற்றூர், பேரூராய் மரத்தடிகளில்

எட்டி பெருகிட,

நிழல்தேடி அடர்ந்த புல்வெளிகளில்

அமர்ந்து, உண்டு

அமைதியாய்ப் பேசிடும்மனிதர்.

கணத்தில், சினமென்னும் குன்றேறிநின்று

கோடரி வீசிட காலடிவீழும்

கூடுகள் நிறைந்த கதியற்றமரங்கள்;

மரவளை தோன்றும் விலங்கும்

மரக்கிளை நீங்கும் பறவையும்

அழிவைக்கான, அச்சம் விழிகளில்,

விளங்காச் செயலை இஇதயம் சபித்திடும்.

மூட மனிதர், அவரழிவைத் தேடும் மனிதர்

இருட்டில் மூழ்கிட வான்வரை அழிப்பர்!

இவர்களது இரவுக்காக மரங்களில்

உறைந்த உயிர்கள் இரக்கம்காட்டின

இயற்கை நியதியால் அமைதிகாத்தன

ஆழ்குழிமுழுக்க மரங்களையெறிந்து

அழிவுப் புனிதம் தொடர்ந்திடும் மனிதன்

வீழ்ந்துக் கிடக்கும் மரங்களினூடு

சூழ்ந்து கடக்கும் நதி,

அமைதியாய் தொடர்ந்திடும் நித்யப்பயணம்

நாடோடிமனிதர்களின் வெற்றியில்

மற்றுமொரு நதிக்கரை

– Alphonse de Lamartine, Jocelyn (Huiteme epoque)

—————-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிலன் குந்தெரா (Milan Kundera)

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘எழுத்தாளனின் பணி சத்தியத்தைப் போதிப்பதல்ல, சத்தியத்தை அறிவது ‘ – மிலன் குந்தெரா.

‘ குந்தெரா ‘ எனவழைக்கப்டும் ‘ மிலன் குந்தெரா ‘ அனிச்சமலர் ஜாதி. மிதமிஞ்சிய உணர்வாளி. இன்றைய தேதியில் பிரஞ்சு இலக்கியவாதி. பிறந்தது அன்றைய செக்கோசுலோவாக்கியா. புலம் பெயர்ந்து, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பது பிரான்சு நாட்டில். பிறந்த ஆண்டு 1929. கலை, இலக்கியம், சினிமா, அரசியலென அனைத்திலும் ஏட்டறிவும் பட்டறிவும் உண்டு. பேராசிரியர், பத்திரிகை ஆசிரியர், அரசியல்வாதி, எழுத்தாளெரென பஞ்சவதாரி. மேற்கு ஐரோப்பிய வாசகர்களுக்கு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் இலக்கிய கூறுகைளை அறிமுகப் படுத்திவரும் இன்றைய படைப்பாளி.

பெரும்பான்மையான இளஞர்கைளைப் போலவே, இளமையில் கம்யூனிஸத்தில் நாட்டம். இவரது தனி மனித உணர்வுகள் பொதுவுடமைவாதிகளைச் சீண்ட 1950ல் கட்சியிலிருந்து நீக்கம். இருந்தபோதிலும் இலக்கியப் பணியில் தொய்வில்லை. இங்கே அருபதுகளின் தொடக்கத்திலிருந்தே செக்கோஸ்லாவிய நாட்டு கம்யூனிஸ்டு கட்சியிலும் சரி, இலக்கியம், கலாச்சார அமைப்புகளிலும் சரி சுதந்திர போக்கு நிலவியதைக் கருத்திற் கொள்ளவேண்டும். சோஷலிச அரசியல் அமைப்பினையும், நிர்வாகத்தினையும் கண்டிப்பதற்குப் படைப்பாளிகள் தயங்கவில்லை. ‘ குந்தெராவும் ‘ சூழலுக்கேற்ப மூன்று தொகுதிகள் (1963 -65 -68) கொண்ட கதைகளாக ‘ Laughable Loves ‘ வெளியிட்டார். பரவலாகப் பேசப்பட்டது. இதற்கிடையில் தனது நியோ- ஸ்டாலினிஸ்ட் மனதை வெளிபடுத்துகின்ற வகையில் 1967ல் ‘ The Joke ‘ என்கின்ற முதல் நாவல். எதிரியை வீழ்த்த அவனது மனைவிக்குக் கடலை போடும் கதை. ஒருவாராக அவளைத் தன் வசப்படுத்த முயன்று, ஹீரோ வெ.ற்றிகொள்ள நேரும்போது, எதிரி இவள் தொலைந்தால் போதுமென்ற மனத்துடன் இருப்பது தெரியவருகிறது. ஹீரோ வில்லனுக்குக் கொடுத்தது உபத்திரவமல்ல உதவி என்று அறிகிறான். இறுதியில் கதைநாயகி புருஷன் வேண்டாமென்று ஹீரோ மீது காதல்கொள்ள அதனை அவன் மறுக்க, அவள் தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். சுபம்.

1968ல் Alexander Dubcek அதிபராகப் பொறுபேற்றவுடன் செக்கோசுலோவாகியா அரசியலில் மிகப்பெரிய மாற்றம். நம்ம கொர்பச்சேவுக்கு அண்ணன் அவர். மனித உரிமைகள், சுதந்திரம் என நிருவாகத்தில் நிறைய சீர்திருத்தங்கள் கொண்டுவருகிறார். Ludvic Vacucik, குந்தெரா பொறுப்பு வகிக்கும் இலக்கிய ஏடான ‘Literarin Noviny ‘ ல் ‘2000 சொற்கள் ‘ என்ற கட்டுரை அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது ‘ தீமையென்று கருதப்படுபவை போராட்டத்திற்குரியவை ‘, ‘ தங்கள் வாழ்வினை மக்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் ‘ என்பதான வாசகங்களைக்கண்டு பக்கதிலிருந்த கம்யூனிஸ நாடுகள் ‘ ஆபத்து ‘ என அலறின. ‘ பிராகு வசந்தம் (Prague Spring) ‘ என வருணிக்கபட்ட இவ்வியக்கத்தினை அடக்காவிட்டால் ஆபத்தென உணர்ந்த சோவியத் அரசுவின் தலமையிலான வார்சா உடன்படிக்கைப் படைகள், செக்கோசுலோவாக்கியாவை ஆக்ரமித்தன. சோவியத்யூனியன் தன் பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. ‘ பிராகு வசந்தம் ‘ இயக்கதிற்குக் காரணமானவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். ‘ குந்தெரா ‘ வின் அரசுப்பணி பறிபோனது. அவரது நூல்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. புதிய புத்தகங்கள் வெளியிடவும் தடை. இந்தச் சூழலில் பிரான்சு பல்கலைக்கழகமொன்றில் பகுதிநேர பேராசிரியர் பணி. எனவே 1970ல் குந்தெராவின் இரண்டாவது நாவல் ‘ La vie est ailleurs ‘ (Life is elsewhere) பிரான்சில் பதிக்கப்பட்டு வெளிவருகிறது. 1979ல் ‘ Le Livre du rire et de l ‘oublie ‘ ( Book of Laughter and forgetting) ‘பிராக் வசந்தம் ‘ முடிவு குறித்துப் பேசும் படைப்பு. ‘ Dubeck ‘ ற்குப் பிறகு பொம்மை அதிபராகப் பொறுப்பேற்கும் ‘ Gustav Husak ‘ன் கிரீடத்தில் எஞ்சியிருப்பதென்ன ? என்கின்ற கேள்வியை ‘குந்தெரா ‘ எழுப்புகிறார். நினவுகள்கூட தொலைந்துபோனதை வலியோடு சொல்கிறார். இந்நாவலின் வெளியீட்டிற்குப் பிறகு, செக்கோஸ்லோவாக்கிய அரசு அவரது குடியுரிமையை பறித்துவிட, நிரந்தரமாகப் பிரான்சுக்கு குடியேற்றம். 1984ல் பிரசுரமான ‘ L ‘Insoutenable legerete de l ‘etre ‘(The Unbearable Lightness of Being). 1988ல் பிரஞ்சு மொழியிலே எழுதிய அவரது முதல் நாவல் ‘ L ‘Immortalite ‘ ( ‘Immortality ‘). 1998ல் ‘ L ‘Identite ‘ (Identity). பின்னர் 2000ல் வெளிவந்த L ‘Ignorance. இவற்றைத் தவிர ‘ குந்தெரா ‘வின் கட்டுரைகளும் நாடகங்களும் புகழ்பெற்றவை. குறிப்பாக ‘ The Art of the Novel ‘, essay in 7 parts, 1985 (essay about literature and the tradition of the novel in European culture) Testaments Betrayed, essay in 9 parts, 1992

மிலன் குந்தெராவின் படைப்பில் ‘ அடையாளம் ‘ (Identity) மற்றும் பேதமை ( Ignorance) என்னை அதிகமாக ஈர்த்தவை எனக் கொள்ளலாம்.

அடையாளம்: (Identity): ழான்-மார்க் – ஷாந்த்தால் இருவரும் தம்பதிகள். தங்கள் அடையாளத்தைப் பற்றிய கேள்வியை இருவருமே எழுப்புகின்றனர். குறிப்பாக கணவன் ழான்-மார்க்கிர்க்குத் தன் மனைவியின் முகம் மறந்துபோய்விடுகிறது. தன்னிடமுள்ள மனைவியின் முகத்திற்கும், அயலில் தன் மனைவிக்குள்ள முகத்திற்குமுள்ள வேறுபாட்டினைக் காணநேரிடுகின்ற அடையாள பயம். எங்கே அவளை இழந்துவிடுவோமா என்கின்ற இன்றைய நகர ஆண்களின் அன்றாட பயம். கணவன் நிழலானபெயரில் மனைவிக்குக் காதற் கடிதங்கள் எழுதுகிறான். ஷாந்தால், ‘நல்ல தகப்பனாய் பட்டம் விடுவதில் காட்டுகின்ற ஆர்வத்தினை ஒரு பெண்ணை வளைத்துப்போடுவதில் இக்கால ஆண்கள் காட்டமறுக்கின்றார்களே என்கின்ற ஏக்கத்திலிருப்பவள். பிரியமாக எழுதப்படும் கடிதங்களை நம்பி, அக்கடிதம் எழுதியவனைத் தேடி அலைகிறாள். நிஜமென்று நிழலைத் தேடும் மனைவி. இறுதியில் நிஜக் கணவனின் நிழல் முகம் அடையாளம் காட்டப்படுகின்றது மேற்கத்திய தம்பதிகளின் சந்தேக வாழ்க்கைமுறையை கணவன் மனைவி இரு தரப்பிலிருந்தும் அணுகுகிறார். நிஜத்தினை நிழலென்றும், நிழலை நிஜமென்றும் நம்பியே இன்றைய தம்பதிகளின் வாழ்க்கை நகருகிறது என்பதை மேற்கத்திய வாசகன் மட்டுமல்ல மேல்தட்டு வாசகன் எந்த நாட்டவனாக இருப்பினும் ஏற்கின்ற நீதி. நட்பு, தம்பதிகளின் வாழ்வு முறை, வாழ்க்கைக்கான அடையாளம் என அனைத்தையும் தெளிவானச் சொற்களால் சுட்டுகிறார். ‘நாம் நேசிக்கப் படுகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றபோது நாம் நேசிக்கப்படுவதில்லை ‘ என்ற அவரது சொல்லாடலில் குழப்பங்களில்லை. வாழ்க்கையில் எதனைத் தேர்வு செய்கிறோம் ? ‘நமக்குள்ள ஒரே சுதந்திரம், சந்தோஷமோ ? துக்கமோ ? இரண்டிலொன்றை தேர்வு செய்வது. (Notre seule liberte est de choisir entre l ‘amertume et le plaisir) என்கின்ற அவரது கூற்றையும் மறுப்பதற்கில்லை.

பேதமை (Ignorance): சொந்தமண்ணைப் பிரிந்து வாழுகின்ற எவருக்கும் இப்படைப்புப் பொருந்தலாம். புலம்பெயர்ந்துவாழும் மனிதர்களுக்கான அனுபவங்கள் இது. சில இலக்கிய விமர்சகர்கள் ‘ குந்தெரா ‘வினது முந்தைய படைப்பான அடையாளத்தை (Identity) விமர்சித்தவர்கள், அவரது பிரஞ்சுமொழி ஞானத்தையும் குறைகூறியிருந்தார்கள். பிரஞ்சு மண்ணோடு ஒட்டாத குந்தெராவை இப்படைப்பில் சந்திக்கிறோம். கதாநாயகி ‘இரெனா ‘ 1969ல் ‘பிராகு ‘ (Prague) மீதான சோவியத் படையெடுப்பிற்குப் பிறகு தன் கணவனுடன் பாரிஸில் குடியேறி அவனது இறப்பிற்குப் பிறகு ஒரு சுவீடன் நாட்டவனோடு வசிப்பவள். அவளது பிரஞ்சுத் தோழி சில்வி ‘ஏன் இன்னும் இங்கே இருக்கிறாய் ? உங்கள் ஊர் பிரச்சினைதான் முடிந்துவிட்டதே! ‘ என்று கேட்பதில் உள்ள நியாயத்தைக் கருதி இன்றைய ‘செக் ‘ குடியரசுக்கு இருபது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு திரும்ப நினைக்கிறாள். இதேச் சூழலில் மனைவியை இழந்த ஜோசப் டென்மார்க்கிலிருந்து வருகிறான். இருவரும் விமான நிலையத்தில் சந்திக்க நேரிடுகிறது. அவனைமுதன்முதலில் சந்தித்த இனிய தருணங்களை நினைத்துப் பார்க்கிறாள். அவன் அவனது இறந்துபோன மனைவியின் நினைவில் வாழ்ப்வன். முந்தைய சந்திப்பு . அவனது கவனத்திலில்லை. ‘பிராகில் ‘ இருவரும் அவரவர் உறவினர், அவரவர் நண்பர்கள் எனச் சந்திக்க விழைய, எவரிடத்தும் இவர்களில்லாததை உணருகின்றார்கள். இவர்கள் மனதிலிருக்கும் பிராகு (Prague)

அங்கில்லை. சமூகம், கலாச்சாரம், மொழி அனைத்தும் தன் வழக்கொழிந்து போயிருந்தன. இம்முக்கிய கதை கருவோடு வேறு சிலபாத்திரங்களும் அவர்களது விருப்புகளும் கசப்புகளும், அவர்களது ஏமாற்றமும், நிறைவும் எளிமையான வாக்கியங்களில் சிக்கலில்லாமல் சொல்லபட்டிருக்கின்றன.

சொந்த மண்ணாகக்கூட இருக்கட்டும், காலம் கரைத்துவிட்ட நமது சுவடுகளை, நமது நினைவுகளை, நமது அடையாளங்களை எங்கே தேடுவது ? யாரிடம் கேட்பது ? புலம்பெயர்ந்துள்ள ஒவ்வொருவருக்கும் எழுகின்ற சந்தேகம் இது. படைப்பு முழுக்க குந்தெரா தன் புலம்பெயர்ந்த மனதின் அனுபவங்களை, துயர்களை, ஏக்கங்களை, இழப்பை ஓடும் நீராக உலவ விட்டிருக்கிறார்.

எளிமையான சொற்களை, தகுதியான இடங்களில் கையாளும் குணம். நீண்ட வாக்கியங்கள் இல்லை. கண்களை மூடிக்கொண்டு குந்தெராவின் படைப்புகளை நாம் வாங்கலாம்.. வாசிக்கவில்லையே என்கின்ற கவலைவேண்டாம். அவர் நம்மை வாசிக்க வைப்பவர். ஒரு முறை அல்ல பலமுறை. அவர்தான் ‘ குந்தெரா ‘. அதுதான் இலக்கியம்.

===========

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிஷெல் ஹூல்பெக் (Michel Houellebecq)

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘நீ வாழும் சமூகத்தின் நோக்கம் உன்னை அழிப்பது….. அப்படி அழிப்பதற்கு இச்சமூகம் கையிலெடுக்கும் ஆயுதம் உன்னை ஒரு பொருட்டாக கொள்ள மறுப்பது.. அதனை அனுமதித்துவிடாதே. எதிர் கொள் ‘.- ஹூல்பெக்

ஹூல்பெக் என்கின்ற இந்த வம்புக்காரரிடம் எல்லா திறனும் உண்டு.. கவிதை, இலக்கியம், புதினம், அறிவியல், இசை, சினிமா எனத் தோள்தட்டும் சகலாகலாவல்லவன்.

பிறந்த ஆண்டு 1958. பிறந்தவிடம் இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரஞ்சு அரசின் ஆட்சிகுட்பட்ட ‘La Reunion ‘ என்கின்ற தீவு. தந்தை மலையேறுவதற்கான பயிற்சியாளர். தாய் ஒரு மருத்துவர். பிள்ளைகளை அலட்சியப்படுத்துகின்ற சராசரி ஐரோப்பியர்கள். எனவே வளர்ந்ததனைத்தும் தந்தை வழி பாட்டியிடம். இருபது வயதில் பாட்டியையும் இழக்க,. ஹூல்பெக்கின் இளமைக்காலம் நாற்சந்தியானது. திசை தெரிந்தும், தெரியாமலும் பாய்மரக்கப்பலாக பயணித்தவர். உரிய வேலைகிடைக்காத துயரம். நண்பனின் சகோதரியை மணந்து ஓர் ஆண்குழந்தைக்கு தந்தையான நிலையில், மண வாழ்வில் குழப்பம், பின்னர் விவாகரத்து. முடிவாக மனநிலை பாதிக்கப்பட்டு, மனநல

காப்பகங்களில் தங்க நேரிடுகின்றது.

பிறப்பின்போது பெற்றோர்களாலும், இல்லறத்தின்போது மனைவியினாலும் அவரது இருப்புக் கேள்விக் குறியாக, மனித உறவுகள் மரித்துப்போனது. உறவுகள் மட்டுமல்ல அவற்றை உயிர்ப்பிப்பதாக நம்பப்படுகின்ற மதங்களும் அவற்றின் ஹீரோக்களும் கூட ஹூல்பெக்கிடம் மரியாதை இழந்து போனார்கள். .உலகத்தின் மீதான அவரது பார்வை, குரலாக வெளிப்பட்டு, எதிர்வினைகளைப் பற்றி அக்கறைகொள்ளாது எப்போதும் ஓங்கியே ஒலிக்கும். அவர் எண்ணங்கைளை ஓவியத்தில் கொண்டுவருபவரல்லர். பார்வைகளை எழுத்தில் கொண்டுவருபவர். அவரது எழுத்து அபிப்ராயங்களேயன்றி தீர்வாகாது என்பதை அவரது வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

‘தீர்வுகள் காண்பதைவிட வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச்சுவதில் தேர்ந்தவன் நான். இலக்கியமென்பது விடைகாண்பதல்ல, விளக்குவது ‘ (Je suis plus habile a retourner le couteau dans la plaie qu ‘a retouver des solutions. Cela n ‘aurai rien a voir avec la litterature. Litterature signifie pour moi decrire) என்பது அவரது வாதம்;

‘சீட்டுக்கட்டினேன் பணம் போய்விட்டது ‘ என்று புலம்பும் மனிதனிடம் ‘வீட்டையிடி தீர்வுகாணலாம் ‘ என்கின்ற வாஸ்து எழுத்தாளர்கள் மலிந்துவிட்ட இலக்கிய உலகில், வாசகனின் தோள்தொட்டு அக்கறையாய் பேசும் குணம்.. வாழ்க்கை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கரையொதுங்கியவர் என்பதாலோ என்னவோ உலகம் என்பது ‘ வேதனைகளால் விரிந்தது (une souffrance deployee) ‘ வாழ்க்கையென்பது ‘இதயத்தை சுக்குநூறாகுக்கும் (brise le Coeur) ‘ தன்மையதென அங்கலாய்க்கிறார்.

அவரது நூல்களைப் படித்துமுடிக்கும்போது முடிவான எந்த பதிலும் கிடைப்பதில்லை.. வாசிப்பின் முடிவில் ? முடிவில்லா உரையாடலையும், விவாதத்தையும், விமர்சனங்களையும் ஆரம்பித்துவைக்கின்ற வகையில் வாசகன் நெஞ்சில் வைக்கப்படும் அவரது அக்கினிக்குஞ்சு திடுமென்று நம்மிடம் பற்றிக்கொள்ளும்; அதில் சாம்பலாவது பெரும்பாலும் கோழைகுணங்களே.

சமீபத்தில் நான் வாசிக்க நேர்ந்தது Lanzarote. இந்நூலிலும், இலக்கியம், உறவுகள், அறிவியல் முன்னேற்றம், பத்திரிகைகள் என தனது அபிராயங்களை ஹூல்பெக் சொல்லிப் போகிறார். ஐரோப்பிய சுற்றுலாவாசியாக தன்னைத் சுவீகாரமெடுத்துக்கொண்டு, ஏற்படும் அனுபவங்கள்மூலம் இருபதாம்நூற்றாண்டு எப்படி முடிந்திருக்கிறது ? என்பதை பாடம் நடத்தும் முயற்சி.

சுவாரஸ்யமான ஆரம்பம், 1999ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிலவாரஙகள் உல்லாசபயணம் சென்றுவரலாம் என்ற எண்ணத்தில் நாயகன், ஒரு சுற்றுலா நிறுவனத்திற்குள் நுழைகிறான். வழக்கமான சம்பிரதாய உரையாடல்களுக்குப் பிறகு, சுற்றுலாநிறுவன பெண்மணி சில இடங்களைச் சொல்லிக்கொண்டேபோக, அதிலொன்று மொராக்கோவின் தென்பகுதி .நாயகன் அதை மறுக்க, அவள் ‘ஏன் ‘ என கேள்வியெழுப்புகிறாள். இவனிடம் எகத்தாளமான பதில். காரணம் இவனுக்கு அரபு நாடுகைளை பிடிக்காதாம். அத்துடன் நிறுத்தியிருக்கலாம். அரபு நாடுகள் பிடிக்கும் ஆனால் முஸ்லீம்கள் இருக்கக்கூடாது என உளறிவிட்டு ‘முஸ்லீம்கள் இல்லாத அரபு நாடு ஏதேனுமிருந்தால் சொல்லேன் ‘ என அவளைச் சீண்டுகிறான். படிக்கின்ற நமக்கும் கோபம் வருகிறது. இப்படித்தான் எதையாவது எழுதிவிட்டு, பேசிவிட்டு வம்பை விலை கொடுத்து வாங்கிவிடுவார். இவர்மீது வழக்குகளும் உள்ளன. இறுதியில் சுற்றுலா நிறுவனப் பெண்ணின் சிபாரிசின்படி ஸ்பெயின் ஆதிக்கத்தில் உள்ள Lanzarote தீவுக்கு வருகிறார். நிறைய எதிர்பார்ப்புகளுடன் தீவுக்கு வந்தால், ஏமாற்றம். எந்தத் தகுதியும் இல்லாத தீவு. ஐயோ பாவம் ரகம் ‘; கண்ணில் தென்பட்ட கொஞ்சூண்டு சுற்றுலாவாசிகளும் பல்போனதுகள். அதிர்ஷடவசமாக ரூடி என்கின்ற ‘லக்சம்பர்க் ‘ கில் பிறந்த பெல்ஜிய வாசி திடார் அறிமுகம், போதாதற்கு இரண்டு ஜெர்மானிய ஓரினச் சேர்க்கைப்பெண்கள். ஆபாசமென கூச்சல்போடுபவர்கள் படிக்கக் கூடாத பகுதிகள் நிறைய. பிறகு Religion Raelienne ‘ என்கின்ற சமயக் குழுமம் வருகிறது. இந்தக் கூட்டத்தில் சேர்ந்த ரூடி இளம்பிள்ளைகளுடனான பாலுறவிற்காகத் தண்டிக்கபடுவதாக கதை முடிகிறது. அப்படி இப்படியென சில பகுதிகளிருப்பினும் படித்து முடித்தபோதும் ஹூல்பெக் நம்மோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். வாழ்க்கைச்சுமைகளிலிருந்து தப்புவதற்குநினைக்கும் ஒரு சராசரி மனிதன் எவ்வளவுச் சுலபமாக இதுபோன்ற வலைகளிற் சிக்கிக் கொள்கிறான் என்பதை ஹூல் பெக் சரளமாக எழுதியிருக்கிறார், இடைக்கிடை அறிவியல், மதம், ஊடகம், போர், ஆண் பெண் உறவின் வக்கிரங்கள் இருபதாம் நூற்றாண்டின் எச்சமாக உமிழபப்படுகின்றன.

அவரது படைப்புகளில் முக்கியமானவை 1. Plateforme 2.Les particules Elementaires 3..Extension du domaine de la lutte 4.HP Lovecraft, contre le monde, contre la vie

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – Francois Rabelais

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞானஞ் சேரவு மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயமறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயி வலர்த்தேனே

உடம்பு அழிந்திடுமாயின் உயிர் அடையவேண்டிய பயனை அடைய முடியாது என்பது திருமந்திரம். இபிரான்சின் இஇடைக்கால எழுத்தாளன் ‘பிரான்சுவா ரபெலெஇ ‘ இதனை மறுக்கவில்லை. இப்பிரபஞ்சத்திற்கு ஈடாக உடலை நிறுத்துகிறான். உடலும் உலகமும் வெவ்வேறல்ல, இரண்டுமே ஏகநாயகனின் அடையாளங்கள். இவரது படைப்புக்கள் அங்கதத்திற்காக மட்டுமல்ல அதன் வளம் கொழிக்கும் வார்த்தையாடலுக்காகவும்கூட பாராட்டப்படவேண்டியவை. எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கியமென்பது சமுதாயம் சார்ந்தது என்கின்ற அவரது உள்ளம்.. பகடிகளின் பல்வேறு பரிமாணங்களை அவனது படைப்புகள் அறிமுகபடுத்துகின்றன. வார்த்தை சித்தனாக வசனம் பேசுகிறான். அடுக்குமொழிகள் தமிழுக்குமட்டும் சொந்தமல்ல என்பதை ‘ரபெலெ ‘ வின் எழுத்துக்களை ஒருமுறை வலம் வந்தால் உணரமுடியும்.

ரபெலே எனவழைக்கபடும் பிரான்சுவா ரபெலே(Francois Rabelais) இடைக்காலத்தில், பிரஞ்சு இலக்கியவுலகில் கோலோச்சியவன். சமூகப் பிரக்ஞையற்று எழுத்தாளன் இருப்பதற்கில்லை என்பதற்கான உதாரண புருஷன். தம்முன்னோர்களின் பிரபுத்துவ வாழ்கைக்கு முழுக்குப் போட்டுவிட்டு பாதிரியாரான பிரெஞ்சு பட்டினத்தார். இவர் தேடிய கரும்பு இலக்கியம். 16ம் நூற்றாண்டிற் கசந்த சமூக அவலங்களைச் சாடுகின்ற வகையில் ஹீரோக்களைப் படைத்து சிலேடை அங்கதத்துடன் தொடற்சியாக எழுதினார். 1533ல் ‘பந்தாக்ருயெல் ‘ (Pantagruel). இவன் எவ்வளவு உண்டாலும் திருப்தியுறாத நம்ம ஊர் குண்டோதரன் ரகம். இவனது பராக்கிரமங்கள் பகடியோடு சொல்லப்படுகின்றன. அத்தியாயங்கள்தோறும் சமூக நலன்களைக் கவனத்திற்கொள்ளாத சட்டமும் நீதியும் கிண்டலும் கேலியும் கலந்து சாடப்படுகின்றன. இப்படைப்பிற்குப் பலத்த எதிர்ப்பு, பின்னர் தண்டனை. எனினும் முதல்நூலுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆதரவினால் அதன் தொடர்ச்சியாக 1534ல் ‘கர்காந்த்துயா ‘ (Gargantua). ரபெலெ இவனை பந்த்தாகுரூயெலின் தந்தையென அறிமுகப்படுத்துகிறார். இங்கேயும் அக்காலத்தில் பிரான்சு அரசாங்கத்தின் கல்வி முறையிலுள்ள அவலங்கள், மதகுருமார்களின் பத்தாம்பசலி குணங்கள் ஆகியவைக் கேலிக்குள்ளாகின்றன. வீதியிலே பொதுமக்களின் கரகோஷம், ஆட்சியாளர்களோ, ‘இப்படிச் சொல்ல எப்படி ஆச்சுது ‘ என வெகுண்டெழ, நல்லவேைளை பொடா, தடா என்றேதுமில்லை. மேற்கூறிய இரண்டு படைப்புகளும் மேத்ர் அல்கோ ஃப்ரீபா நஸியே (Maitre Alcofribas Nasier) என்கின்ற புனை பெயரில் எழுதப்பட்டவை. பிறகு 1546ல் Tiers Livre, 1552ல் Quart Livre, 1564ல் Cinquieme Livre. எல்லா நூல்களுக்குமே தண்டிக்கபட்டிருக்கிறார். இறுதியாக கிரேக்க இலக்கியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது கூடுதல் தகவல்..

‘கர்காந்த்துயா ‘ முன்னுரையில் புத்தகப் வாசிப்பைப் பற்றிப் பேசும்போது அவர் ஒரு தான் ஒருமதபோதகர் என்பதைவிட எழுத்தாளர் என்பதையே சொல்லவருகிறார்.

ஊனின் உள்ளடக்கம் ( La substantifique moelle*)

‘போத்தலை ‘திருகு-கார்க்கைக் ‘ கொண்டு ஒரு போதும் திறந்ததில்லை ? அட கடவுளே! உங்களுக்குள் இருக்கும் திறனை நினைவு கூறு. சரிவிடு… ஊனுள்ள எலும்பைக் கண்டெடுக்கும் நாயை ஒருபோதும் பார்த்ததில்லையா ?. பிளாட்டோ வின் ‘குடியரசு ‘ நூலின் இரண்டாம் பாகத்தின் படி

‘நாய் ‘ அதிக தத்துவ விசாரமுள்ள ஒரு பிராணி. அப்படி ஏதேனும் ஒரு நாயைப் பார்க்க நேரிடும்போது, எலும்பின் வாடையைப் பிடிக்கவேண்டி, அதுத் தேடும் ஏகாந்தத்தை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். எலும்பைத் தன் வசப்படுத்துவதில் காட்டுகின்ற ஜாக்கிரதை, அதனைப் பத்திரமாகக் கவ்விப் பிடிப்பதில் காட்டுகின்ற கவனம்., சுவைக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக எடுத்துக்கொள்ளும் எச்சரிக்கை, உடைப்பதில் உள்ள வேட்கை; இறுதியில் எவ்வளவு பரபரப்புடன் உள்ளிருப்பதை உறிஞ்சுகிறது. இந்த நாயினை உந்தித் தள்ளும் உணர்வு எது ? இத்தகு காரியங்களில் அதன் எதிர்பார்ப்பு என்ன ? கிடைக்கக் கூடிய பலன் என்ன ? அனைத்துமே அந்தத் துண்டு எலும்புக்குள்ளிருக்கும் சிறிது ஊனிற்காக அல்லவா. உண்மைதான் அதிகமாகவிருக்கும் வேறுவகை உணவுகளைவிட எலும்பினுள் இருக்கும் இவ்வூனின் ருசி சற்று அலாதியானதுதான். கலிலீயோவின் கருத்துப்படி ‘ஊன் ‘(Moelle) இயற்கையாக சமைக்கப்பட்ட ஒரு முழுமையான உணவு.

நமக்கும், நாயை முன்மாதரியாகக்கொண்டு, வேட்டைப்பொருளைத் துரத்துகின்றவறை அலட்சியமிருப்பினும், நெருங்கி தாக்கும்போது திடமாயிருப்பது அவசியம். தேர்ந்த இலக்கியங்களை முகர்ந்து உண்ர்ந்து சந்தோஷிக்கும் குணம் வேண்டும். அலையாத மனமும் ஆழ்ந்த வாசிப்புமாக எலும்பை உடைத்து, உள்ளிருக்கும் ஊனை உறிஞ்சுதல் செய்து, வாசிப்பின் பலனாக விவேகியாகவும், குணவானாகவும் வருவோம் என்கின்ற உறுதியான நம்பிக்கைவேண்டும். வாசிப்பு அனுபவம் அமுமுதமாக இனிப்பதை அறிவீர்கள். நாம் இதுவரை அறிந்திராத தேவ ரகசியங்களையும் மெய்சிலிர்க்கும் மாயைகளையும் அங்கே புதைந்துள்ள ஞானம் அவிழ்க்கும்……

*- Francois Rabelais, Gargantua (Prologue).

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா