கவிதையின் புதிய உலகங்கள்

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

விக்ரமாதித்யன் நம்பி


நமது தமிழ்மொழி உலகிலுள்ள செவ்வியல் மொழிகளில் ஒன்று. நீண்ட நெடிய கவிதை மரபு கொண்டது. அகிலத்தின் சிறந்த கவிதைகளுக்கு ஈடு இணையான கவிதை வளம் நிரம்பியது. காலத்தாலும் அழிக்க முடியாத இலக்கியப் பின்புலம் உடையது.

சங்கக்கவிதைகளில் தலைவன் – தலைவியின் நுட்பமான காதல் உணர்வுகளும் அனுபவங்களும் அகப்பாடல்களாய் வடிவு கொண்டிருக்கையில், அன்றைய வாழ்வின் இயல்பான வீரம் செறிந்த வாழ்வனுபவங்களும் எதார்த்தமான உணர்வலைகளும் புறப்பாடல்களாய் உருக்கொண்டிருப்பதுதான் நம்முடைய கவிதையின் ஆதிஉலகம்.

கதையும் கருத்துமாக விரிவுகொள்கிறது காவியகால உலகம். பக்திக்காலத்தில், சிவனும் விஷ்ணுவும் வழிபாட்டு நாயகர்களாய்ப் போற்றிப் பாடப்படுகிறார்கள். சிற்றிலக்கியம் எல்லாமே இறைவனையோ அரசனையோ கொண்டாடுகின்றன. காலம்தோறும் கவிதையின் உலகம், பாடுபொருள், சொல்லும்விதம், பாவகைகள் (வடிவம்), உத்திமுறைகள் எல்லாமும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. வாழ்வின் கதியும் சுதியும் மாறுவதுக்கு ஏற்ப கவிதையின் முகமும் மாறுகிறது, நதி ஒன்றுதான் என்றாலும் செல்லும் இடத்துக்குத்தக சாயல்மாறுவதுபோல.

இவற்றிற்குப் பிற்பாடு, ஏறத்தாழ, நான்கு நூற்றாண்டுகளில் எழுதப்பட்டுத் தொகுக்கப் பெற்ற தனிப்பாடல்கள். தமிழின் மிகமேலான இன்னொரு செல்வக்களஞ்சியம், தனிப்பாடல் திரட்டு. இதில் பல்வேறு உலகங்கள், வேறு வேறு வாழ்க்கைகள், மானுடத்தின் அநேக ஜாடைகள் எல்லாம் குடிகொண்டிருப்பதுதாம் அந்தத் தொகைநூலை விசேஷமாக்கி வைத்திருக்கிறது. கவிதையின் புதிய உலகங்கள் என்றதுமே தனிப்பாடல் திரட்டுதான் உள்ளத்தில் தோன்றுகிறது. அந்த அளவுக்குப் புது விஷயங்கள் கொண்டிருப்பது அது.

அடுத்து, புதிய திறம்பாட வந்த புலவன் பாரதி. அன்றையதினம், கவிதையின் எல்லைகளை, பரப்பளவை, விரிவுசெய்த மேதை அவன். இன்றைக்கும், ‘பிழைத்த தென்னந்தோப்பு ‘, ‘மறவன்பாட்டு ‘, ‘அக்கினிக்குஞ்சு ‘, ‘மழை ‘, ‘புயற்காற்று ‘, ‘சிட்டுக்குருவியைப் போலே ‘, வண்டிக்காரன் பாட்டு ‘, ‘நிலாவும் வான்மீனும் காற்றும் ‘ முதலான கவிதைகள் கவிதையின் புதிய உலகங்களைக் காட்டி ஒவ்வொரு கவிஞனுக்கும் பொறுப்புணர்வை நினைவூட்டிக் கொண்டிருப்பன.

நவீன கவிதையில் இதைத் தொடங்கிவைத்த பெருமை ந.பிச்சமூர்த்தியையே சேரும். எடுத்துக்காட்டு, ‘பெட்டிக்கடை நாரணன். ‘ க.நா.சு., கு.ப.ரா., புதுமைப்பித்தன் ஆகியோரைத் தொடர்ந்து, நகுலன், பசுவய்யா, எஸ். வைதீஸ்வரன், தி.சோ. வேணுகோபாலன், சி.மணி, கே.ராஜகோபால் முதலானோரும், எழுபதுகளில், ஞானக்கூத்தன், நாரணோ ஜெயராமன், கலாப்ரியா, தேவதேவன், கல்யாண்ஜி, ஆத்மாநாம், பிற்பாடு சுகுமாரன் முதலானோரும் கவிதையில் புதிய உலகங்களைப் படைத்துக் கணிசமான பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.

சமீபகாலமாய், நிறையப் புதியவர்கள், இதுவரை கவிதைக்குள் வராத உலகங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். பழைய உலகம் என்றபோதும், புதியபார்வையில் சொல்கிறார்கள் இன்னும் சிலர். நவீன கவிதை மெய்யாலுமே புதுமைபெற்று விளங்குகிறது. விஷயம், வடிவம், சொல்முறை, கவிதைமொழி இப்படி இப்படி புதுக்கோலம் கொண்டு துலங்குகின்றன சமகாலக்கவிதைகள்.

சங்கிலிகளுக்கு மதம்பிடித்தபோது

நண்பனின் அறையின்

படிக்கட்டுகளில் படிந்துறைந்த

இரத்தத்தின்மீது கொஞ்சம் மழைத்துளிகள்பட்டு

சலிக்கும் இரத்தம்

கவிழ்ந்து கிடக்கும்

இடதுகால் செருப்பு

அரசு ஏவல்நாய்கள் சவுட்டிப்பொழிந்த

ஜன்னலும் கதவும் அறையினுள் சிதறிக்கிடக்கும்

ஊசிப்போன கஞ்சியும் பயறும்

தாறுமாறாகக் கலைத்தெறியப்பட்ட

புத்தகங்கள்

பின்புறத்து அசையில்

மழையிலும் வெயிலிலும்

அநாதையாய்க் காயும்

கைலியும் சட்டையும்

மழை பெய்துபெய்து

பச்சைப்பாசி பிடித்த பின்சுவரில்

பற்றிப் பிடித்த விரல்தடம்

சறுக்கிய கால்கள் வழித்தெடுத்த

பாசியழிந்த தடம்

அப்புறம்

என் சுற்றுப்புறம் மொத்தம்

ஒரு மரணத்தின் நிழல்

–டி.வி.பாலசுப்ரமணியம்

( ‘குதிரைவீரன்பயணம் ‘ ஏப்ரல் ’94 பக்கம் : 8)

Series Navigation

விக்ரமாதித்யன் நம்பி

விக்ரமாதித்யன் நம்பி