நமது வசையிலக்கிய மரபு

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

கெ. கணேஷ்


காலச்சுவடு சொல்புதிது போர் உச்சத்தை அடைந்திருபது தெரிகிறது . தன் பங்குக்கு குமுதம் கலந்துகொண்டு தன்வேலையைக் காட்டியிருக்கிறது. இதிலே என் கருத்துக்கள் சில.

1] காலச்சுவடு ஆசிரியர் அரவிந்தன் உத்தியோகமுறையில் எழுதிய கடுமையான கடிதம் தமிழில் இதுகாறும் எழுதப்பட்ட எழுத்துக்களிலேயே இந்தக்கதைதான் பயங்கர ஆபாசம் என்று சொல்லியிருப்பதையிட்டு மிகுந்த ஆவலுடன் அக்கதையை தேடிப்படித்தேன்.அது சொறித்தனமான, கூடவே அப்பாவித்தனமான ஒரு கிசுகிசுக் கதை. நாய் ஊளையிடும்போது கவித்துவ எஃபக்டுக்காக மெளன இடைவெளி விடுவது போன்ற வரிகள் சற்றே நகைப்பூட்டுபவை. அதை பெரும்பாலோர் படிக்கமாட்டார்கள் என்ற நினைப்பில் ஆபாசக்கதை, சொல்லவே கூசும் கதை என்றெல்லாம் சொல்வதும் அவதூறுப்பிரச்சாரம்தான்.

2] அந்தக் கதையில் அது சுந்தர ராமசாமி என்று தெரியும் வெளிப்படையான அம்சம் ஏதும் என் அறிதலில் இல்லை. எனக்கு அவரது தனிப்பட்ட விவகாரமேதும் தெரியாது. அப்படி இருக்குமென்றால் மிகக் கடுமையாக கண்டிக்கத்தக்க கீழ்த்தர இதழியல் அது. எழுதியவர் பிரசுரித்தவர் அனைவருமே குற்றவாளிகள் மன்னிப்புகோரவேண்டியவர்கள்

3] அத்துடன் அதை எழுதியவர் தெளிவாகவே ஒத்துக் கொண்டபின்பும் கூட அது ஜெயமோகன் எழுதியது எனபெரும்பணசெலவில் காலச்சுவடு செய்யும் பிரச்சாரம், திண்ணை இதழிலேயே காலச்சுவடு ஆசிரியர் எழுதியமையும் அவதூறுதான்.

4] உலக இலக்கியத்தின் கொம்பர்கள் எல்லாம் சக எழுத்தாளர்களைப்பற்றி இதவிட மட்டமான கதைகளையும் கவிதைகளையும் எழுதியிருக்கிறார்கள். எழுதிவருகிறார்கள்.

5] தமிழில் இந்தப்போக்கை தொடங்கி வைத்த பெருமை சுந்தர ராமசாமி இன்னோரன்னரால் தூக்கி சுமக்கப்படும் புதுமைப்பித்தனைச்சாரும். ராஜாஜி பற்றிய அன்னாரின் எழுத்துக்கள் சொறித்தனத்துக்கு துவக்கமிட்டன.

6] ஆசானின் மரபை சிரமேற்கொண்டு சுந்தர ராமசாமி எழுதிய ஜெ ஜெ சில குறிப்புகள் இந்த வகை எழுத்தில் ஒரு முன்னோடி. முல்லைக்கல் மாதவன் நாயர் சிட்டுக்குருவி முதலியவை நம்முடைய இலக்கியபொடிகளால் சிலாகிக்கப்பட்டன. ‘அவன் விபச்சாரிகளைப்பற்றி எழுதுவது அவர்கள் மீதுள்ள கனிவினால் அல்ல , அவன் பிரக்ஞையில் அவர்களே முக்கியமானவர்கள் என்பதனால் ‘ ‘ போன்ற வரிகளும் மனைவி வட்டித்தொழில் செய்வது பற்றிய குறிப்பும் எப்படி புண்படுத்தியிருக்கும் என்பது ஊகிக்கதக்கது. அதில் முல்லக்கல் செய்யும் பல காரியங்கள் , வெள்ளம் வருணனை ஓர் உதாரணம் கம்யூனிஸ்டு வட்டாரத்தில் ஏற்கனவே பிரபலமாகிவிட்ட விஷயங்கள்

7] சுந்தர ராமசாமிக்கு எதிர்பாட்டு பாடிய தருமுசீவராமு மகத்துவ இலை என்ற பொது தலைப்பில் சுந்தர ராமசாமியை வைத்து குட்டிக் காவியமே பாடியுள்ளார். பிரசன்னம் என்ற குறுநாவலும் இத்தகையதேயாம்.

8] சு சமுத்திரமும் திலகவதியைப்பற்றி இப்படி எழுதியுள்ளதாக கேள்வி. நகுலன் கதைகளில் வரும் ‘கேசவ மாதவன் ‘ என்ற பணத்திமிர் கொண்ட கதாபாத்திரம் வேறு யாருமல்ல என்பது தெளிவு. நீல பத்மநாபனின் தேரோடும் வீதி இவ்வரிசையில் ஒருபெரிய ‘கிளாசிக் ‘ .அதில் பணமே குறியாகக் கொண்ட சமத்கார நாவலாசிரியரான ‘மந்திரமூர்த்தி ‘ யாரென்பதும் ரகசியமல்ல.

9] தருமுசீவராமு அம்பையைப்பற்றி பாடிய பாடலையும் சு சமுத்திரம் திலகவதியைப்பற்றி எழுதிய கதையையும் தனிநபர் அவதூறு மலினமானது என்றெல்லாம் ஜெயமோகன் கடுமையாக விமரிசனம் செய்துள்ளார். ஆனால் இந்த கதையை பிரசுரித்தமை மூலம் சறுக்கிவிட்டார். ஆனால் சுந்தர ராமசாமிக்கு நேர்ந்ததுபோல தான் தீட்டிய ஆயுதம் தனக்கெதிராக திரும்பலாம் என ஜெயமோகன் யோசிப்பது நல்லது.

10] இவ்வரிசையிலேயே கடுமையான வசைகளை தருமுசீவராமுக்கு சரிநிகராக எழுதியவர் சுந்தர ராமசாமி . அரை நூற்றாண்டுக்காலம் தமிழிலக்கிய சேவை இங்ஙனம் பூத்து மலர்ந்தது. அவர்கள் எழுதிக் கொண்ட கவிதைகளுடன் ஒப்பிடுகையில் ‘நாச்சார் மடம் ‘ பையன்கள் ஓடிப்பிடித்து விளையாடுவது போல சின்ன விசயம் . ஒப்பிடுகையில் சுந்தர ராமசாமி கவனமாக ஆடியிருக்கிறார். ஆனால் நாய்க்கு தலை நரைக்கும் இடமும் ஆந்தை லெவல் கிராசிங்கில் நிற்பதும் காட்டிக் கொடுத்துவிடுகின்றன. வேட்டிக்குள்ளிருந்து புசுபுசுவென வெளிப்படும் பொருளாக ஒருவரைப்பற்றி சுந்தர ராமசாமி கூறிய வசையே ‘எட்டேகால் லட்சணமே ‘ என்ற ஒளவையார் பாடலுடன் தொடங்கும் தமிழர்தம் தொன்று தொட்ட வசை நாகரீகத்தின் உச்சம் !

இருவருடைய கவிதைகளிலிருந்து சில சாம்பிள்களை அளிப்பது அடியேனுடைய கடமையாக உள்ளது.

இருவருடைய கவிதைகளிலிருந்து சில சாம்பிள்களை அளிப்பது அடியேனுடைய கடமையாக உள்ளது.

1 ]பின் திண்ணைக் காட்சி

=================

துளசி தன் மகத்துவ இலைகளுடன்

காற்றுக்கு குலுங்குகிறது

[பசுவய்யா கவிதைகள். ]

2] மகத்துவ இலை

==========

தூசி போக துடைத்து மந்திர பலம் ஏறிய தீர்த்ததை

வில்வ பத்திரங்களால் தெளித்துப்

பீடை போக்கிய வீட்டுக்குள்

மீண்டும் வட்டமிட்டுத்

தலைகீழாய் தொங்கி எச்சமிடுகின்றன

சிறகு முளைத்த சுண்டெலிகள்

………..

…….

அவற்றுக்கு முன்னால்

திண்ணையில் போட்டிருக்கும் திண்டில் ஈரம் பண்ணி

தொப்பென்று சரிந்திருக்கிறது

ஒரு பரமார்த்திக சுண்டெலி

………

……….

சிறகு முளைத்தாலும்

சுண்டெலி கழுகல்ல

பரிணாம வக்கிரம்

[பிரமிள் கவிதைகள்]

3] நடுநிசி நாய்கள்

=============

இந்த நடுநிசி நாய்கள்

இருள் விழுங்குகையில்

தொண்டையில் சிக்கி

கத்தி சாகின்றன

தலை வெளுத்ததும்

பாதையோரம்

குனிந்த தலை குனிந்தபடி

மோப்பக்காற்றில் தூசி பறக்க

சாபத்தின் ஏவல் போல

மனித மலங்கள்

தேடித்திரிகின்றன

கறுப்பு விதைகாட்டி

பிட்டி சிறுத்து குலுங்க

வெட்கம் கெட்டு த்ரியும்

இந்நடுநிசி நாய்களுக்கு

ஓய்வில்லை

உறக்கமும் ஓய்வாக இல்லை

……….

முற்பகலில்

நினைவுகளில் துக்கம் தேக்கி

சிறிது வலுச்சண்டை கிளப்பி

கடித்து குதறி

ரத்தம் கண்டு ஆசுவாசம் கொள்கின்றன

……….

மாலையில் கண்விழித்து

நால்திசையும் பார்வை திருப்பி

உறக்கத்தில் சுழன்ற உலகம் மதித்து

எழுந்து சோம்பல் முறித்து

தேக்கிய சிறு நீர்

கம்பம் தோறும் சிறுகக் கழித்து

ஈக்கள் மேல்வட்டமிட்டு பின் தொடர

மாலைநடை செல்கின்றன

அந்தியில் புணர்ச்சி இன்பம்

[ஒரு தடவை அல்லது இருதடவை]

மீண்டும் நடுநிசியில் இருள் விழுங்கி

தொண்டை சிக்க கத்தல்!

[பசுவய்யா கவிதைகள்]

4 சகுனம் பார்த்த சாமிகள்

===================

இடம் போவதா

இந்த நாய்க்கு

வலம் போவதா

என்று சகுனம் பார்த்தன சாமிகள் [பிரமிள்]

5] நான் கண்ட நாய்கள்

==================

சில நாய்கள்

வேளைகெட்ட வேளைகளில் உறங்கும்

சில நாய்கள்

பளுக் என கக்கி

அக்கக்கலை

அதி சுவாரஸியமாய் நக்கி உண்ணும்

சில நாய்கள்

புட்டிப் புண்களை ஈக்கள் லபக்காக்க

முக்கி முதுகு வளைத்து

வாய்க்கு எட்டாது நகர்ந்தோடும்

புட்டியின் ஜாலம் புரியாது சரியும்.

சில நாய்கள்

இருந்த இருப்பில்

கத்த தொடங்கி

நிறுத்த தெரியாமல்

அக்கத்தலில்

மாட்டிக் கொண்டு சுழலும்

கொடும் வெயிலில்

சில நாய்கள்

பெண்துவாரம் தேடி அலைந்து

ஏமாந்து

பள்ளி சிறுவர்களை விரட்டும்

இவ்வாறு

இவ்வாறு

இவ்வுலகில்

நன் கண்ட நாய்களில் சீலங்கள்

வாலுக்கு ஒருவிதம்

என்றாலும்

உண்ணும் உணவில் குறுக்கிட்டால்

பட்டென்று பிடுங்குவதில்

இவையெல்லாம்

நாய்கள்

[பசுவய்யா கவிதைகள் ]

6] நாய் ஜாக்ரதை

=============

……. ஜாதீய கிசு கிசு இதைக்கேட்ட நாயேன்

எவ்வளவு குரைத்தும் காகங்களுக்கு

அலகு திறக்கவில்லை..

……

………

அன்றுன்னை பறையன் என்றது இன்றைக்கு

குரங்கு நீ கிறுக்கு லூஸ் கல்லடிக்குரிய நாய்

எழுத்துவுக்கு பின்பு இன்றைய வரைக்கும்

குரைப்பதும் கடிப்பதும் இதனால்தான் ஓய்!

இன்றைய தமிழின் இலக்கிய கேந்திர

முகப்பிலே இருப்பதை படித்துப் பாரும்

எழுத்தியல் தர்மத்தை ஏமாற்றுவோருக்கு

எனது எச்சரிக்கை ‘நாய் ஜாக்ரதை!! ‘

[பிரமிள் கவிதைகள்]

7] நாய் குரைப்பின் காலங்கள்

====================

நாய்க்குரைப்பின் பொருள் எனக்கு தெரியும்போது

என் பொருள் சிக்கலும் விடுபட்டு போகும்

என்னை சுற்றி சதா இந்த நாய்க்குரைப்பு

என் குடியிருப்பு அப்படி

நாய்க்குரைப்பின் பொருள்பற்றி நான்

யோசிப்பது ஏனெனில்

வேறெங்குமிப்படி பொருளற்ற தீவிரம்

பீறிடுவதை நான் கண்டதில்லை

தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவையும் குவித்து

அடிவயிறை எக்கி

சூன்யத்தில் தலைதூக்கி

நாய்கள் குரைப்பதை நீங்களும் கவனித்திருப்பீர்கள்

நாய்களுக்கு அவற்றின் குரைப்பின் பொருளோ

பொருளின்மையோ தெரியும் போது அவை எப்படி குரைக்கும் ?

குரைக்குமா ?

ஒருசமயம் அவை குரைப்பதை விட்டுவிட்டு

வாலைமட்டும் ஆட்டிக் கொண்டிருக்கலாம்

அந்தக்காலம் இப்போதை விடவும் நன்றாக இருக்கும்!

[பசுவய்யா கவிதைகள்]

8] திருத்தி வாசிக்கவும்

================

தெருநாய்க் குரைப்புக்கு மழையா பொழியும் ?

இருந்தும் வானிருண்டு கரும்புயலுங்கூடி

முன்றில் பள்ளத்தில் மூடியது வெள்ளம்

நாய்க்குரைப்பா எனக்கு கேட்கலையே என்று

தீக்கோழி தலையை பள்ளத்து சேற்றில்

புதைத்தபடி கிடந்தார் ‘நானே பஸ்ட் ‘ வைரவர்.

…………

[பிரமிள் கவிதைகள்]

9] ஆந்தைகள்

=======

ஆந்தையை நான் பார்த்து

ரொம்ப நாளாச்சு

அந்த ஒரிஜினல் ஆந்தையை

இருந்தாலும் அடிக்கடி

அடிக்கடி இல்லையென்றாலும்

அவ்வப்போது இல்லை அடிக்கடியே

மண்ணாந்தைகள் எதிர் படுகின்றன

உண்மைதான் மறுப்பதற்கில்லை

சாலையை குறுக்காக தாண்ட

நான் விரையும்போது

குறுக்கிட்டுத்தண்டி

எதிர்படுகின்றன இம்மண்ணாந்தைகள்

குறுக்கிட்டுத்தாண்டும் இம்மாண்ணாந்தைகள்

என் கனவுகளில் உட்புகுந்து

கலாட்டா செய்து

எனது ஸ்கலிதத்தில் வெளிப்பட்டு

துடைகளை கடிப்பதனால்

இப்போதெல்லாம் நான்

கனவுகள் இன்றியே

காலம் கழிக்கிறேன்

…..

……..

இவ்வாறெல்லாம் நாட்களை

கடத்தி செல்கையிலும்

பொல்லாப்பு வேண்டாமென

நான் ஒதுங்கியும் உறங்கியும்

விதியினை தீர்க்கையிலும்

இம்மண்னாந்தைகள் அடிக்கடியும்

இல்லை எப்போதுமே என் முன் வந்து

ஈன சுரம் காட்டி

சிறிது நகைத்து

எச்சமிட்டு

தாராபோல கத்தி

வேகு வேகமாய் விரைந்து

டிராபிக் சிக்னலுக்கு நின்று

பச்சை விழுந்ததும் பாய்ந்து முன்னேறி

மலையடிவாரம் நகர

வேட்டியை உதறிக் கட்டுகையில்

புசுபுசுவென வெளிப்பட்டு

மீண்டும் என் முன் நகைத்து

எச்சமிட்டு நகர்கின்றன

எனினும் ஆந்தையை நான் பார்த்து

ரொம்ப நாளாச்சு

அந்த ஒரிஜினல் ஆந்தையை

[ பசுவய்யா கவிதைகள்]

10] பாரீஸில் அங்கே

================

பிரான்சிலிருந்து வந்தது அழைப்பு

ஆந்தைக்கு

அவர் அல்ல இவர்தான்

ஒரிஜினல் ஆந்தை என

நடுப்புறம் நின்ற

கலாச்சார தரகர்கள்

அனுப்பினார்கள் இவரை

பாரீஸில் அங்கே

ஒருபுறம் சிலர்

கஸரத்து எடுக்கக் கண்டார்

‘இது எதற்கு

கலாச்சாரமாக

மொசரத்து கேட்கலாமே ? ‘ என்றார்

வந்தது பதில் தமிழில்

‘மசிராச்சு போடா ‘

இலங்கைத்தமிழ்

அகதிகள் போல்

இருக்குதென்று

அவர்களைவிட்டு

மறுபுறம் பார்த்தார்

அங்கே சிலர்

விஸ்கி குடிக்கக் கண்டார்

‘இது எதற்கு

இலக்கியமாக டாஸ்டா

யவ்ஸ்கி படிக்கலாமே ‘ என்றார்

வந்தது பதில் ருஷ்ய மொழியில்

‘லுஸ்கியோவ்ஸ்கி ‘என்று

லுஸ்கியோவ்ஸ்கி என்றால்

‘மண்ணாந்தை ‘என்று பொருள்

[ பிரமிள் கவிதைகள்]

**

(கடிதத்தின் சில வரிகள் நீக்கப் பட்டுள்ளன. கேட்டுக் கொண்டதற்கிணங்க மின் அஞ்சல் முகவரி வெளியிடப்படவில்லை – திண்ணை குழு)

Series Navigation

கெ. கணேஷ்

கெ. கணேஷ்