அதிசய மனைவி லட்சுமியும், மோகன்லாலின் இரு படங்களும்

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

க சண்முகேஸ்வரி



மோகன்லால் சமீபத்தில் மேஜிக் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருக்க பல பிரார்த்தனைகள் நடைபெற்றன. பிரார்த்தனைகள்
வெற்றியும் பெற்றன. அவர் வெற்றிப்படங்கள் தந்து சில வருடங்கள் ஆகின்றன.கடைசியாக ஆறுதல் வெற்றி தந்த அவரது படங்கள்: தன்மந்தரா, பரதேசி. இதற்கு முன் வெற்றி பெற்ற இரு படங்களின் மூலத்திற்கு உரியவர்தான் இக்கட்டுரை லட்சுமி.

கணவருக்கு டைபாய்டு, மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் வந்தாலே, ‘ஒரு கடைக்குக் கூட போக முடியலை, எந்நேரமும் அவர் கூடவே இருக்க வேண்டியதா இருக்கு’ என்று அலுத்துக் கொள்கிற மனைவிகள், லட்சுமியின் கதையைக் கேட்டால் வியப்பில் உறைந்து போய் விடுவார்கள்.

படித்த, புத்திசாலியான, ஆசிரியையாக வேலை பார்த்த ஒரு பெண், நோயில் விழுந்த தன் கணவனுக்காக ஒன்றல்ல… இரண்டல்ல.. 26வருடங்கள் வீட்டுக்குள்ளேயே வாழ்ந்து தீர்த்த ஆச்சரியம் லட்சுமியினுடையது.

கணவர் ராஜகோபாலுடனான இவரது வாழ்க்கையைத் தழுவி ‘தேவாசுரம், ‘ராவணப்பிரபு’ என்று மலையாளத்தில் இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இரண்டிலுமே மோகன்லால்- ரேவதி ஜோடிதான்! ரசிகர்களுக்கு வியப்பூட்டிய கதை அம்சம், இரண்டு படங்களையுமே சூப்பர் ஹ’ட் ஆக்கியது.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் வசிக்கிறார் லட்சுமி. இரண்டாண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட, ஒருவித சோகத்தோடுதான் கழிகிறது அவரது வாழ்க்கை.

லட்சுமியைச் சந்தித்து, ‘இப்படியும் ஒரு மனைவியா? என்ற நம் ஆச்சரியத்தை பகிர்ந்து கொண்டபோது, “பேபி…பேபி..னு வாய் நிறைய அந்த மனுஷன் கூப்பிட்டதுக்கும் என்மேல அவர் காட்டின பிரியத்துக்கும் முன்னால நான் ரொம்ப சாதாரணம்!” என்று இயல்பாக சொன்னார் லட்சுமி.

அடிதடி, பிரச்சனைகள், காதல்,அன்பு, உக்கிரம், நோய், பிரிவு என்று ஒரு திரைப்படத்துக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் இவர்களின் வாழ்க்கையில் உண்டு. அந்தக் கதை, லட்சுமியின் வார்த்தைகளிலேயே!

” ‘ராஜூவேட்டன்’ (கணவரைத்தான் சொல்கிறார்) எங்க உறவுக்காரர்தான். பிரதாபமான பணக்கார குடும்பத்துல பொறந்தவர். கையில கண்டபடி பணம் புரண்டதாலவோ என்னவோ, எல்லா கெட்ட பழக்கங்களும் அவர்கிட்ட இருந்தது. அடிதடி, அடாவடினு வம்பு பிடிச்ச ஆள்.

ஆனா, அவர் பிரமாதமான பாடகர். பாட்டுக் கச்சேரி செய்ற கலைஞர்கள்கிட்ட மட்டும் வம்பே வெச்சுக்கமாட்டார். அவங்க மேல அவ்ளோ பிரியம். பிரபலமான பாடகர்கள் பல பேர் இவரோட ‘அவுட் ஹவுஸ்’ல் வந்து பாடியிருக்காங்க! கோழிக்கோட்டுல எங்கே கச்சேரி நடந்தாலும், அதுக்கான ரிகர்சல் இந்த முல்லசேரியிலதான்(வீட்டின் பெயர்) நடக்கும்.

நண்பர்களை அவுட்ஹவுஸ”க்கு கூட்டிட்டு வந்து, பாட்டு, போதை, பொண்ணுங்கன்னு கும்மாளம் போட்டுக்கிட்டு இருப்பார்.

அப்படிப்பட்டவருக்கு பொண்ணு கேட்டு எங்க வீட்டுக்கு வந்தாங்க. அப்ப நான் இன்டர்மீடியட் படிச்சுக்கிட்டு இருந்தேன். விஷயம் தெரிஞ்சதும் எங்க வீட்டுல ‘ நீங்க யாரை வேணா காமிங்க. கண்ணை மூடிட்டு கழுத்தை நீட்டுறேன். ஆனா, இந்த ராஜூவேட்டனை கட்டிக்க முடியாது’னு அழுது தீர்த்துட்டேன். வீட்டுலயும் சரினுட்டாங்க.

அப்பதான் திடீர்னு விதி எங்க வாழ்க்கையில விளையாடுச்சு. ‘விதியோட அந்த விளையாட்டு நல்லதுக்கா? கெட்டதுக்கா?’னு யோசிச்சுப் பார்த்தா, நல்லதுக்குனுதான் இப்பபடுது. இல்லன்னா, ராஜுவேட்டனோட அற்புதமான மனசு எனக்குப் புரியாமலே போயிருக்கும்!” என்று நீண்ட பெருமூச்சுடன் சில வினாடிகள் நிறுத்தியவர், தொடர்ந்தார்.

“அப்ப எங்க வீட்டுல ரொம்ப கஷ்டம். வாங்கின கடனை கட்ட முடியாததால, வங்கிக்காரங்க எங்க வீட்டை ஜப்தி பண்ணிட்டாங்க. இருக்க வீடில்லாம நாங்க நிராதரவா நின்னப்ப, ராஜுவேட்டன்தான் தன்னோட ‘அவுட் ஹவுஸ்’ல அடைக்கலம் கொடுத்தார்.

நாங்க அந்த ‘அவுட் ஹவுஸ”’க்குப் போனதும் அவரோட குணமே மாறிடுச்சு. அதுவரைக்கும் போதயும், பொண்ணுங்களுமா கும்மாளம் போட்டவர், எங்களுக்காக அதையெல்லாம் குறைச்சுக்கிட்டார். நல்ல பிள்ளையா வந்து போனார். சக்கப்பழம்(பலா) மாதிரி வெள்யில கரடுமுரடாகவும் உள்ளுக்குள்ள இனிப்பாகவும் இருக்குற மனுஷன் அவர்னு புரிஞ்சது. அன்பைக் காட்டினோம்னா கசிஞ்சு உருகுற மனுஷன்!

அவரோட இயல்பு பிடிச்சுப்போய், பழக ஆரம்பிச்சேன். அது அப்படியே காதலாச்சு. அப்புறம், ‘அவர் இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை’ங்கிற அளவுக்கு எங்க நெருக்கம் அதிகமாச்சு. இதுல ஒரு சோகம் என்னன்னா, நான் அவரை காதலிக்க ஆரம்பிச்சப்ப, உடல் தளர்ந்து படுத்த படுக்கையா இருந்தார் அவர்.

காலேஜ்ல படிக்கும்போது பைக்கிலிருந்து விழுந்து முதுகெலும்புல அடிபட்டிருக்கு. அதுக்கப்புறமும் அடுத்தடுத்து விழுந்ததுல உடம்பு பலம் குறைஞ்சு, ஒரு பக்கமா தளர்ந்து அவர் கட்டில்லயே காலத்தைக் கழிக்கவேண்டிய கட்டாயம்.

இந்த நிலைமையில ‘நான் அவரைக் காதலிக்கிறேன்’னு சொன்னதும், எங்க அப்பா- அம்மா உட்பட எல்லா உறவுக்காரங்களும் எதிர்த்தாங்க. ‘உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்காதே’னு ஆளாளுக்கு புத்திமதி சொன்னாங்க.

ஆனா, அவரோட நல்ல மனசு எனக்கு மட்டுந்தான் தெரியும். முணு வருஷக் காதலுக்குப் பிறகு, குருவாயூர்ல நாங்க ரெஜுஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். அவரால நடக்க முடியாதுங்கிறதால அவர் இருந்த காருக்கே வந்து அதிகாரிகள் கையெழுத்து வாங்கினாங்க”- லட்சுமியின் விவரிப்பில் அத்தனை இயல்பு.

” கல்யாணத்துக்கு அப்புறம் எனக்காக அவர் எவ்வளவு மாறினார் தெரியுமா? குடிக்கறதை சுத்தமாகவே நிறுத்திட்டார். ‘ அசுரன் மாதிரி இருந்தேன், தேவன் மாதிரி மாத்திட்டா என் பேபி’னு வர்றவங்ககிட்டயெல்லாம் என்னைப் பாராட்டிச் சொல்லுவாரு” என்று சிலாகித்தவர், ஒரு வனவாசம் மாதிரி, தான் வீட்டுக்குள்ளேயே இருந்த அந்தக் காலம் பற்றிச் சொன்னார்.

” என் கணவர் இருக்கற இடம்தான் என்னைப் பொறுத்தவரை சொர்க்கமாக இருந்தது. வீட்டுக்குள்ளயே அவர் இருந்ததால நானும் அவர்கூட வீட்டுக்குள்ளயே இருந்தேன். அவரை விட்டுட்டு, நான் தனியா போன ஒரே இடம், எங்களோட ஒரே பொண்ணு நாராயணியோட வீடுதான். அதுவும் கூட, அவளுக்கு கல்யாணமாகி ஏழு வருஷத்துக்குப் பிறகுதான் போனேன்.

அவர் படுத்த படுக்கையா இருந்தாலும் வீட்டுக்குள்ள தினம் தினம் இசை கச்சேரிதான். அவருக்குப் பணிவிடை செய்யறதுலயும் அவரோடு சேர்ந்து பாட்டு கேக்கற்துலயுமே ஒவ்வொரு நாளும் ஆனந்தமா இருந்தது…” என்றவரிடம், சில விநாடிகள் மௌனம்!

பிறகு, ” விதிதான் அவருக்கு ஒரே வில்லன். விடாம அவரை துரத்திக்கிட்டே இருந்தது. யூரினரி ட்றாக் இன்பெக்ஷன், அது இதுனு ஒரு வேளைக்கே எட்டு, ஒன்பது மாத்திரை சாப்பிடுவார். அத்தனை அவஸ்தையிலும் சிரிச்சுக்கிட்டு, ஜோக் சொல்லிக்கிட்டு, ஜாலியா இருப்பார். ‘நான் எனக்காக அழவே மாட்டேன்’னு அடிக்கடி சொல்வார்” என்கிறார், கைக்குட்டையால் கண்களைத் துடைத்தபடி.

தன் கணவர் இருந்த காலத்தில் வீடு தேடி வந்த நண்பர்கள் இப்போதும் ஆதரவாக இருப்பது, லட்சுமிக்கு ஒரு ஆறுதல். அவரது கணவர் பெயரில் சங்கீத டிரஸ்ட் ஒன்றையும் உருவாக்கி இருக்கிறார்கள் அவர்கள். சிறந்த அறிமுக இசைக் கலைஞருக்கு விருது தருகிறது இந்த டிரஸ்ட்.

” இப்பவும் அவரோட நட்பின் இதம் விடாத நல்ல நண்பர்கள் என்மேல பாசமும் பரிவும் காட்டி என் தனிமையை மறக்கச் செய்றாங்க. ‘தேவாசுரம்’, ‘ராவணப்பிரபு’ படங்கள்ல என் கேரக்டர்ல நடிச்ச ரேவதி, ஒரு விதத்துல எனக்கு தூரத்து உறவும்கூட.

என் கணவர் மறைந்த பின்னும் அவர் விட்டுட்டுப் போன அன்பு, பாசம், பாட்டு எல்லாமே இப்பவும் என்னை சந்தோஷப்படுத்து, வாழ வெச்சுக்கிட்டு இருக்கு.எங்களைப் போல இத்தனை அன்னியோனியமா வாழ எத்தனை தம்பதிகளுக்குக் கொடுத்து வச்சிருக்குமோ” என்கிறார் லட்சுமி, பெருமிதம் வழியும் குரலில்.

“தேவாசுரம் “படத்தின் கதை இதுதான்..
——————————————————-

பணக்கார, பெரிய மனிதரின் பிள்ளை நீலகண்டன். மது, மாது, அடிதடி, கொலை என்று ரவுடியாக வாழ்கிற நீலகண்டனை ஒழித்துக் கட்ட நிற்கிறான் இன்னொரு ரௌடி சங்கரன்.

அபாரமாகப் பாடும் திறமையுடைய நீலகண்டன், குடிகார கூட்டாளிகளுடன் தினமும் தன் வீட்டில் விருந்து நடத்திகிறான். ஒரு முறை அவன் பானுமதி என்ற நாட்டிய பெண்ணை தன் வீட்டில் நாட்டியமாட அழைக்கிறான். அவள் மறுக்கவும், தன் பலத்தை பிரயோகித்து மிரட்டி, ஆட வைக்கிறான்.

இந்த நேரத்தில், விதியின் விபரீதத்தால் பானுமதியும் அவள் குடும்பமும் நடுத்தெருவுக்கு வருகிறார்கள். அவர்களை காப்பாற்ற முன்வருகிற நீலகண்டன், அவர்கள் தங்க,தன் வீட்டைக் கொடுக்கிறான். வேறு வழியின்றி அந்த அடைக்கலத்தை ஏற்கிறார் அவள் தந்தை.

வீட்டில் பெண்கள் இருப்பதால், தன் பழைய பழக்கங்களை விட்டொழொக்கிறான் நீலகண்டன். அரக்கனின் உள்ளே ஒளிந்திருந்த அன்பைப் புரிந்து கொள்கிற பானுமதி, அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்.

இந்த நேரத்தில், தான் பணக்கார மனிதர் பெற்ற மகன் இல்லை என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. தந்து தந்தையின் பெயரைச் சொல்லாமலே தாய் இறந்துபோக, சோகமாகிறான் நீலகண்டன். அவனுக்கு அந்த நேரத்தில் ஆறுதலாகவும் உறுதுணையாகவும் இருக்கிறாள் பானுமதி… என்று தொடர்கிறது கதை.

இதன் இரண்டாம் பாகமாக வந்த ‘ராவணப் பிரபு’வில் வயதான நீலகண்டன்-பானுமதி பற்றியதான வாழ்க்கை விரிகிறது. இரண்டும் வெற்றிப்படங்கள் மோகன்லாலுக்கு.


sham_crist@yahoo.co.in

Series Navigation

க சண்முகேஸ்வரி

க சண்முகேஸ்வரி