பட்டர் பிஸ்கட்

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

பாரதி மகேந்திரன்


பட்டர் பிஸ்கட்

தேவை

மைதா மாவு – 1 / 2 கிலோ
சர்க்கரை – 1 / 2 கிலோ
வெண்ணெய் – 150 கிராம்
சுத்தம் செய்யப்பட்ட கடலை எண்ணெய் / சூரியகாந்தி எண்ணெய் 450 கிராம்
நெய் – 200 கிராம்
சமையல் சோடா – 1 சிட்டிகை
சன்னமான ஏலக்காய்ப் பொடி – 1 மே. க.

முதலில், மைதா மாவு, 2 மேசைக் கரண்டி சர்க்கரை, வெண்ணெய், ஏலப்பொடி, சமையல் சோடா ஆகியவற்றை ஒன்றாய்க் கலந்து நன்றாகப் பிசைந்து கொள்ளபும்.

சர்க்கரையை ஒரு வாணலியில் 150 / 200 கிராம் தண்ணீருடன் கொட்டிக் கலந்து அடுப்பில் ஏற்றிப் பாகாய்க் காய்ச்சவும். கம்பிப் பாகு எனப்படும் பக்குவத்தில் சர்க்கரைப் பாகு இருக்க வேண்டும். சர்க்கரை கொதிக்கத் தொடங்கி இறுகும். சிறிதே நேரத்தில் பாகாக மாறத் தொடங்கும். கொதிக்கும் இந்தக் கூழை ஒரு சிறு கரண்டியால் எடுத்து ஒரு தட்டில் கொட்டி, சூடு சற்றே ஆறியதும் ஆள்காட்டி விரலால் எடுத்துக் கட்டைவிரலுடன் சேர்த்து வைத்துக்கொண்டு ஆள்காட்டி விரலை மேலே உயர்த்தினால்கம்பி போல் அந்தப் பாகு இழுபடும். அந்தப் பக்குவம் வந்தபின் இறக்கி வைக்கவும்.

ஏற்கெனவே பிசைந்துவைத்துள்ள மாவை மேலும் நன்றாய்ப் பிசைந்து திரட்டி ஒரு பெரிய உருண்டையாய்ச் செய்து கொள்ளவும். ஓர் அகலமான அப்பளப் பலகையில் நெய்யைத் தடவிய பின், இவ்வாறு பிசைந்த மாவை அதில் வைத்துச் சப்பாத்திக் குழவியால் அரை அங்குஅங்குலக் கனத்துக்கு அதை நசுக்கிச் சப்பாத்தியாக இட்டுக் கொள்ளவும்.

இந்தச் சப்பத்தியை உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் கத்தியால் துண்டுபோடவும். வட்டமாகவோ அல்லது சதுரமாகவோ அல்லது நீள் சதுரமாகவோ அவை இருக்கலாம். வட்ட வடிவத்துக்குச் சிறிய கண்ணாடிக் குப்பிகளின் மூடியைப் பயன் படுத்தலாம். சதுரம். நீண்ட சதுரம் ஆகியவற்றுக்குக் கத்தியைப் பயன் படுத்தலாம். ஓரங்களில் வீணாகும் மாவை ஒன்று திரட்டி அப்பளம் இட்டு மீண்டும் துண்டுபோடலாம்.

இந்த பிஸ்கட்டுகளைத் தோசைத் திருப்பியால் நெம்பி எடுத்து, நெய் தவிய தட்டு ஒன்றில் பரப்பி வைக்கவும். பின்னர், அடுப்பில் கடாயை ஏற்றி, எண்ணெய்யை முதலில் ஊற்றிக் காய வைக்கவும். அது காய்ந்த பின் நெய்யை அத்துடன் சேர்க்கவும். நெய் மிகவும் காய்ந்து விடக் கூடாது என்பதாலேயே அதைப் பின்னர் ஊற்றச் சொன்னோம். நெய் உருகிக் கலந்த பின், பிஸ்கட்டுகளை அவை மூழ்கும் அளவுக்கு எடுத்துப் போட்டு அவ்வப்போது திருப்பி விட்டுக்கொண்டிருக்கவும். பிஸ்கட்டுகள் பொன்னிறத்துக்கு வந்த பின் ஒரு கண்ணகப்பையால் (ஜாரணிக் கரண்டி) அவற்றை வடித்து எடுத்து, தயாராக உள்ள சர்க்கரைப் பாகில் தோய்த்து எடுத்து ஒன்றோடொன்று ஒட்டாமல் பரப்பி வைக்கவும். சர்க்கரைப் பாகு நீர்த்துப் போகாமல் சரியான கம்பிப் பாகுப் பதத்தில் இறுகி இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். சரியான பக்குவத்தில் பாகு இருப்பின், பிஸ்கட்டுகள் வாயில் போட்டதும் கரையும். ஒன்றோடொன்று ஒட்டாது. எண்ணெய்-நெய்க் கலவை மிதமான சூட்டில் காய வேண்டும் என்பதால் அடுப்பைப் பந்தம் போல் எரியவிடக் கூடாது.

குண்டாக இருப்பவர்கள் தவிர்க்கவும்! சதை போட வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அடிக்கடி செய்து சாப்பிடவும்.

mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்