இட்லி ஆராய்ச்சி

This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue

எழிலரசி பழனிவேல், நெதர்லாந்து.


நானும் இங்கு வந்தபுதிதில் இட்லிக்கு ஏங்கிவிட்டேன். பல்வேறு விதங்களில் இட்லி செய்துப் பார்த்தேன். நீங்கள்(கோமதி நடராஜன்) சொன்னது போல் கல்குண்டுகளாக தான்(கல்கண்டுகள் இல்லை) வந்தன. கார்கில் போருக்கு நாம் குண்டு அனுப்பும் கான்ட்ராக்ட் எடுத்துவிடுவோமா என்று இவரின் கிண்டல் வேறு. ரிசர்ச் &டெவலப்மெண்ட் முறையில் தினந்தோறும் விதவித அரிசி,பருப்பு விகிதம், ஊறவைக்கும் நேரம், அரைக்கும் நேரம், மூடிய அறையில் மாவை புளிக்கவைத்தல், அறையின் வெப்பநிலையை அதிகரித்தல் என என்னென்னவோ செய்து பார்த்தேன். அம்மாவுடன் தொலைபேசும் போது சாதம் சேர்த்து அரைத்தால் இட்லி மெத்தென வரும் என்று சொன்னதயும் தாய் சொல்லை தட்டாமல் செய்து பார்த்தேன்.ஓரளவு பரவாயில்லை, ஆனால் இட்லி கோடைக்கால உணவாகிவிட்டது. தட்பவெப்பநிலையைப் பொறுத்தே இட்லியின் மிருதுதன்மை இருந்தது. இங்கு கோடைவெப்பம் ஆண்டுக்கு 3 மாதம் இருந்தால் அதிகம்.இது எதுவுமே திருப்தியளிக்கவில்லை என இவர் சலிப்படையும் நேரத்தில் கிரைண்டரில் அரைத்தால் மிருதுவான இட்லி கிடைக்கும் என உறுதியளித்தேன். இதுவரை எல்லாமே மிக்சியில் அரைத்து செய்த சோதனைகள் தான்.எப்படியோ பந்தை அவர் பக்கம் தள்ளி விட்டாயிற்று. கிரைண்டர் ‘லக்ஸம்பர்கில் ‘ தான் கிடைப்பதாக தகவல். எப்படியோ தேடியலைந்து உள் நாட்டிலேயே அல்ட்ரா கிரைண்டர் விற்பனை செய்யும் புண்ணியவதியைக் கண்டுபிடித்தோம். கிரைண்டர் வந்துவிட்டது. அடுத்த வாரஇறுதியில் புழுங்கல் அரிசி&உளுந்து வாங்கும் வரை கனவெல்லாம் மிருதுவான இட்லிகளுடன்,பொன்னிறவடைகளும் சட்னி,சாம்பாருடன் அணிவகுத்தன.

புழுங்கல் அரிசி என நான் வாங்கியது ஊறவைத்தால் சாதம் போல மெத்தென ஆகிவிட்டதுடன் கிரைண்டரில் சரியாக அரைபடவும் இல்லை. எனக்கு இப்போது மிருதுவான இட்லி செய்யாமல் விடுவதில்லை என்ற ஆவேசம்( ?) வந்துவிட்டது.இங்குள்ள அரிசியில் சரியாக வராது, நான் இந்தியாவிலிருந்து எடுத்து வந்துவிடுவேன் என்றார் ஒரு தோழி. என்னால் அதை உடனே செயல்படுத்த முடியாது என்பதுடன் எவ்வளவு எடுத்து வரமுடியுமென்றும் யோசனையாக இருந்தது.ஆனால் அவர் சொன்ன யோசனைகளின் படி முன்பு மிக்சியில் செய்த முயற்சியில் சிலவற்றை கம்பைன் செய்து பார்த்தேன்.ஹ ‘ர்ரே! மிருதுவான இட்லி வந்தேவிட்டது.

ஆனால் இந்த நீண்டநாள் சாதனையை நான் எட்டும் போது என் கணவரும் மகனும் பல்வேறு வகையான(!) இட்லி,தோசையை சாப்பிட்டதன் விளைவாக இட்லி,தோசைப் பற்றையே விட்டொழித்திருந்தனர்.பத்தோடு பதினொன்றாக தான் நூடுல்ஸ்,பஸ்தா,டாக்கோஸ் போன்றவற்றுடன் சேர்ந்துவிட்டது இட்லியும் தோசையும்.

இன்றைய இட்லி ஆராய்ச்சியாளர்களுக்கு உடனடிவெற்றிக்கான வழி இதோ:

அரிசி &உளுந்து 3:1 விகிதத்தில் ஊறவைக்கவும். அரிசி குறைந்தது 4 மணிநேரம் ஊறவேண்டும்.புழுங்கல் அரிசி கிடைக்காதவர்கள் சாதம் 1 கைப்பிடியளவு சேர்த்துக் காள்ளலாம்.அரிசியின் தன்மையைப் பொறுத்து 4:1 விகிதத்திலும் ஊறவைக்கலாம்.

1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக்கொள்வது உங்கள் விருப்பம்.வெந்தயத்தையும் 4மணிநேரம் ஊறவைக்கவும். வெந்தயத்தை சேர்த்து உளுந்தை நன்கு பந்து போல வரும்வரை அரைக்கவும்.அரிசியை மெல்லிய ரவையாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்துவைக்கவும்.

24 மணிநேரம் புளிக்கவிடவும்.

சமையலறை மூடிய அலமாரியில் வைத்து புளிக்கவிடவும். வெளியே டெம்ப்ரேச்சர் மிகவும் குறைவாக இருந்தால் அறையின் டெம்ப்ரேச்சரை அதிகப்படுத்தவும்.(20 லிருந்து 23 C வரை) இப்போது வழக்கம் போல் இட்லி செய்து சுவையுங்கள்.வாழ்த்துக்கள்!

Series Navigation

எழிலரசி பழனிவேல், நெதர்லாந்து.

எழிலரசி பழனிவேல், நெதர்லாந்து.