மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றி பாரிஸ் கருத்தரங்கு-3 (IPCC)

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


நீர், நிலம், நெருப்பு,
வாயு, வான மாகிய பஞ்ச பூதங்கள்
ஆயுதங் களாய் மாறிக்
கோரப் புயல் வடிவத்தில்
பேரழிவு செய்யும்
தாரணி முழுவதும்!
அங்கு மிங்கும் கண்ணீர்
பொங்கும் புகை மூட்டம்!
வடதுருவப் பனிமலை உருகிக்,
கடல் மட்டம் ஏறும்!
தென்துருவப் பனிப்புயல்
தென்ற லாகும்!
பருவத் தராசு ஏறி யிறங்கிப்
பெருமழை பெய்யும்,
நிலப் பகுதி நீர்மய மாகி மாந்தர்
புலப்பெயர்ச்சி செய்ய நேரும்!
மனிதக் குணம், உயிரினம், பயிர்வளப்
புனிதம் சிதைக்கும்,
சூட்டு யுகப் பிரளயம்,
சிரிப்புடன்
வீட்டு முன் நிற்குதடா!

****************

“கடந்த 1000 ஆண்டுகளில் எந்த நூற்றாண்டிலும் காணாத வெப்ப ஏற்றம் சென்ற 50 வருடங்களில் காணப்பட்டது! தென் அமெரிக்கவாவில் பெரு நாட்டின் உலகப் பெரும் மலைச்சிகரப் பனிக்கிரீடம், வருடத்திற்கு 200 அடி வீதத்தில் குறைந்து, கடந்த 20 ஆண்டுகளாக 22% நிறையளவு உருகிப் போயுள்ளது.”

லோனி தாம்ஸன், பூதளவியல் பேராசிரியர், ஓஹையோ பல்கலைக் கழகம்

2005 ஆண்டு இதுவரைப் பதிவான உச்ச வெப்ப வருடமாகக் கருதப் படுகிறது! 1990 ஆண்டு முதல் 13 உச்ச வெப்ப ஆண்டுகள் பதிவாகி யுள்ளன! 1980 ஆண்டு முதல் 23 ஆண்டுகள் உச்ச உஷ்ண வருடங்கள் தொடர்ந்துள்ளன! 2003 ஆண்டு வேனிற் காலத்தில் ஐரோப்பாவில் மட்டும் வெப்ப அலைகளால் 35,000 பேர் மாண்டதாக அறியப் படுகிறது!

டாக்டர் ஜான் ஹோல்டிரன்

10,000 ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றி முடிந்து போன பனியுகத்தின் போதிருந்த உஷ்ணம் தற்போதைய உஷ்ணத்தை விட 6 டிகிரி C தணிவாகத்தான் இருந்தது. உயிரினக் கோரச் சிதைவுகளைத் [Biodiversity Holocaust] தூண்டி விட 3 டிகிரி C கூடுமான சூடேற்றம் போதுமானது!

பேராசியர் ஸ்டீ·பன் ஸ்னைடர், ஸ்டான்·போர்டு பல்கலைக் கழகம்

பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகின்றன! கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது! கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அன்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர். அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது. காரணம் மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது. அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் கட்டுரை

1950 ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் வட துருவத்துக்கு அடியில் குறுக்கிடும் சமயங்களில் முதன்முதலாகக் கடற்பனி ஆழத்தைத் துல்லியமாகக் கண்டறிந்த போது, பனிப்பாறைத் தடிப்பு கணிக்கப் பட்டது! ஆர்க்டிக் துருவ வட்டாரத்தில் கடந்த 50 ஆண்டுகளாகப் பனியுருகும் காலம் ஒவ்வொரு பத்தாண்டுகளில் 5 நாட்கள் அதிகமாகிப் பனித்தளங்கள் படிப்படியாய் நலிந்து, பனித்தேய்வு வீதம் விரைவாகி வருகின்றது என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார்கள்! (1958-1976) ஆண்டுகள் அமெரிக்க இராணுவம் கடற் பனித் தடிப்புகளையும், (1993-1997) ஆண்டுகள் தடிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், ஆர்க்டிக் பனிப்பாறை 42% உருகி நலிந்து விட்டதென்று அறியப்படுகிறது! அதே போன்று 1976, 1996 ஆண்டுகளில் ஆர்க்டிக் வட்டாரத்தை உளவிய பிரிட்டீஷ் நீர்மூழ்கிக் கப்பல் குழுவினர், 20 ஆண்டு இடைக்காலத்தில் பனித்தடிப்பு 43% குன்றியுள்ள தென்றும் கண்டிருக்கிறார்கள்! கடந்த 30 ஆண்டுகளில் செய்த மேற்பட்ட உளவுகளும், கணிப்புகளும் சராசரி கடற்பனித் தடிப்பு 4 மீடரிலிந்து ஒரு மீடர் உருகிச் சராசரி 3 மீடராக மெலிந்து போனது தெரிய வருகிறது. பூகோளக் கண்காணிப்புத் துணைக் கோள்கள் 10 ஆண்டுகளில் ஆர்க்டிக் கடற்பனி 4% தேய்ந்து விட்டது என்று கணித்துள்ளன!

ஸ்டீவ் கான்னர், ஆர்க்டிக் துருவப் பனியுருக்கம் (நவம்பர் 11, 2004)

“ஐயமின்றி பூகோளம் சூடாகிறது என்பது நமது காலத்தில் எல்லாவற்றுக்கும் மேலாக முதன்மைச் சவாலாகத் தெளிவாகி உறுதியாகி விட்டது. அதனால் உலக நாடுகள் விழித்துக் கொண்டு, புதிய அரசியல் விதி முறைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆயினும் அவை மட்டும் போதா. மேலும் செய்யத் வேண்டியவை யின்னும் மிகையாக உள்ளன. நல்ல செய்தி என்ன வென்றால், அதிகமான மாற்றங்கள் அடுத்து அடுத்து வரப் போவதற்கு அறிகுறிகள் தெரிகின்றன.”

அல் கோர் [Al Gore, Former US Vice President & Environmentalist]

உலக உடல்நலக் கண்காணிப்புப் பேரவையின் கூற்று

21 ஆம் நூற்றாண்டின் முடிவில் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் பெருக்கத்தால், பூகோளத்தின் உஷ்ணம் 6 டிகிரி F ஏறிவிடும் என்று உலக உடல்நலப் பேரவை மதிப்பிடுகிறது! அதனால் பேரளவு வெள்ளங்கள், பஞ்சம், வெப்ப அலைகள் [Heat Waves] எழுலாம் என்றும் பேரவை கூறுகிறது. உலக உடல்நலக் கண்காணிப்புப் பேரவை [World Heath Organization (WHO)] சமீபத்தில் உளவறிந்து வெளியான ஓர் அறிவிப்பின்படி, மனிதத் தூண்டல் மாறுதல்களால் ஏற்பட்டச் சூழ்வெளிக் காலநிலைப் பாதிப்புகளால் மாந்தருக்கு நேரும் 5 மில்லியன் மாறுபட்ட நோய்களில் 150,000 நபர் ஒவ்வோர் ஆண்டும் மரணம் அடைகிறார் என்னும் அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது! சூடேறிய சூழ்வெளியின் வெப்ப அலைகளாலும், நாட்டில் புயலடித்துப் பேய்மழைகள் பெய்து வெள்ளக்காடாய் ஆவதாலும் மாந்தருக்குத் துர்நீரால் பல்வேறு தொற்று நோய்கள் பீடிக்கின்றன வென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்!

சூழ்வெளி மாறுதல் பற்றி உலக நிபுணர்களின் எச்சரிக்கை

2007 பிப்ரவரி 18 ஆம் தேதி அமெரிக்காவின் ஸான் ·பிரான்ஸிஸ்கோவில் [American Association for the Advancement of Science (AAAS)] உலக விஞ்ஞான நிபுணர்கள் பெருத்த எண்ணிக்கையில் ஏகோபித்த குரலில் ஓர் அவசிய எச்சரிக்கையை விடுத்தார்கள், “சூடேறும் பூகோளம் என்பது மனிதரின் ஒரு கோட்பாடில்லை! மெய்யான விளைவுகளைச் சேர்த்து வெளியிடும் ஓர் உண்மை எச்சரிப்பு! சூழ்வெளியின் கிரீன்ஹவுஸ் வாயுக்களில் அதி முக்கிய கார்பன் டையாக்ஸைடு வாயு, 650,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை விட மிகையாகப் பெருகி வருகிறது! பூகோளத்தின் சராசரி உஷ்ணம் பல மில்லியன் ஆண்டுகளாய் உணரப்படாத நிலையை நோக்கிச் செல்கிறது! அநேக நிபுணர்கள் ஒருமித்து ஆண்டு நிறைவு விழா உரையில் உலகுக்கு விடுத்த முதல் எச்சரிக்கை இதுவே!

கடந்த 20 ஆண்டுகளில் ஆர்க்டிக் அரங்கத்தின் பெரும்பகுதியில் உஷ்ணம் 4 டிகிரி C [7 டிகிரி F] ஏறி விட்டதென்று அமெரிக்கக் பூர்வப் புதை விலங்கின வல்லுநர் [Paleontologist of the American Musium] மால்கம் மெக்கென்னா கூறுகிறார். அதே காலத்தில் வடகோளப் பனிப்பரப்பு 6% குருகி விட்டதென்றும், கடந்த 30 ஆண்டுகளில் பனித்தளத்தின் தடிப்பு 42% ஆகக் குறைந்து போனதாகவும் கூறுகிறார். பூகோளம் சூடேறும் போக்கு இதே ரீதியில் பெருகினால், 2100 ஆண்டுக்குள் கனடா, ரஷ்யா, ஸ்காண்டிநேவியாவைச் சேர்ந்துள்ள வடகோளப் பகுதியில் வாழும் உயிரினங்கள் 20% குன்றிவிடும் என்று கனடாவின் டேவிட் சுஸ¥க்கி ஆய்வக [David Suzuki Institute of Canada] அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுக்கிறது. அத்துடன் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட சராசரிக் குளிர்கால மாதங்கள் 18 நாட்கள் குறைந்திவிட்டன என்றும் அறியப் படுகிறது!

இமாலய மலைத்தொடரின் தசோப்புப் பனிப்பீடத்தில் [Dasuopu Glacier] ஆராய்ச்சியாளர்கள் குழிகளை யிட்டுக் காலநிலை மாறுபாடுகள் தற்போது கண்காணிக்கப் பட்டு வருகின்றன. காலநிலைப் பலூன்களைப் மேலே பறக்க விடப்பட்டு 23,500 அடி உயரத்தில் சூழ்வெளியின் மாறுபாடுகள் பதிவு செய்யப் படுகின்றன. அமெரிக்காவில் உள்ள ஓஹையோ பல்கலைக் கழகத்தின் பூதளவியல் பேராசிரியர், லோனி தாம்ஸன் அத்திட்ட அதிபராய்ப் பணியாற்றிக் கூறியது: “கடந்த 1000 ஆண்டுகளில் எந்தக் காலத்திலும் காணாத வெப்ப ஏற்றம் சென்ற 50 வருடங்களில் காணப்பட்டது! தென்னமெரிக்கவாவில் பெரு நாட்டின் உகலப் பெரும் மலைச் சிகரப் பனிக்கிரீடம், வருடத்திற்கு 200 அடி வீதத்தில் குறைந்து, கடந்த 20 ஆண்டுகாளாக 22% நிறை யளவு உருகிப் போயுள்ளது.” “10,000 ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றி முடிந்து போன பனியுகத்தின் போதிருந்த உஷ்ணம் தற்போதைய உஷ்ணத்தை விட 6 டிகிரி C தணிவாக இருந்தது,” என்று ஸ்டான்·போர்டு பல்கலைக் கழகப் பேராசியர் ஸ்டீ·பன் ஸ்னைடர் கூறுகிறார்.


கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை. அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2]. மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas]. அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது. அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692. அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது! பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது. அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது!

************************

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines. CBC.ca Website, Canadian Geographic.

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]
2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]
3. What is Happening to our Climate? By Samuel Matthews, National Geographic [Nov 1976]
4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]
5. Global Warming from Wikipedia.
6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]
7. Climate Change: Projected Changes in CO2 & Climate
8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.
9. Evidence of Human-caused Global Warming Unequivocal [Paris Report (Feb 2, 2007)]
10 An Unequivocal Truth, Global Warming is Man-made Canadian CBC News in Depth: Climate Change [Feb 2, 2007]
11 In Depth Climate Change, Global Warming CBC News (March 24, 2005)
12 Discover Magazine: Earth Science Global Warming Leaves Its Marks By: Josie Glausiuz (Jan 2007)
13 Earth Science And The Environment By: Graham Thompson Ph.D. & Jonathan Turk Ph.D [1993]
14 Canadian Geographic – Annual Environment Issue [May-June 2006]
15 Discover: More Than 50 Discoveries in Science, Genetics, Space, Medicine, Environment, Evolution, Physics & Geology [Jan 2001]
16 Summary on Climate Change & Global Warming [www.greenfacts.org/studies/climate_change]
17 Understanding The Global Carbon Cycle [www.whrc.org/carbon/index.htm]
18 Emminent Scientists Warn of Disastrous, Permanent Global Warming (Feb 19, 2007)

(தொடரும்)
******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (Feb 22, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு-2 (IPCC)

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


தரணி எங்கும் தொழிற் துறைகள்
சூழ்வெளியில்
கரும் புகை ஊட்டுமடா!
கயவர் கூட்டம்
காட்டு மரங்களில் தீ மூட்டுமடா!
போரிலும் புகைதான்!
ஈராக் எண்ணைக் கேணிகளும்
எழுப்புதடா தீப்புகை!
தவறு செய்யும் மனிதர் கூட்டம்
தப்பிக் கொண்டு போகுமடா!
துப்புரவு செய்தி டாமல்
தொழிற் சாலைகளின்
கரிவாயு மூட்டம்
விரிவானில் நாள் தவறாது
அடுக்க டுக்காய்ச் சேருதடா!
நிலவளம், நீர்வளம், கடல்வளம்,
மனித நலம், உயிர் நலம், பயிர்வளம்
புனிதம் யாவும்
இனி யுகத்தில்
சிதைந்து போகுதடா!
வெப்ப யுகப் பிரளயம்,
வீதிமுன் வந்து நிற்குதடா!

**************

“2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள். அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங்களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது! வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதி யாக்கப் பட்டது! அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

“வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை! மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

“1880 ஆண்டுக்குப் பிறகு நீண்ட காலப் பூகோளச் சூடேற்றத்தால் அட்லாண்டிக் கடல்நீர் உஷ்ணம் 0.5 C மிகையாகி யிருக்கிறது. அரை டிகிரி உஷ்ணம் உலகக் கடல் வெள்ளத்தில் ஏறினாலும், ஹரிக்கேன் பேராற்றல் அல்லது அழிவுக் குறியிலக்கம் [Hurricane Energy Index or Destructive Index] 0.97 யிலிருந்து 1.90 ஆகி 2003 ஆண்டில் ஏறக்குறைய இரட்டிப்பாகி [96% மிகை] விட்டது!”

“2001 ஆண்டில் பூகோள உஷ்ணம் (1880-2000) ஆண்டுகளின் சராசரி உஷ்ணத்தை விட 0.52 C ஏறுமென்று எதிர்பார்க்கப் பட்டது! எல்னினோ [El Nino] விளைவால் 1998 ஆண்டு சூடான வருட மானத்திற்குப் பிறகு, 2001 ஆண்டு அடுத்த சூடான ஆண்டாகக் கருதப் பட்டது. நிலப்பகுதியின் உஷ்ணம் அதே 120 ஆண்டுகளில் கடல் சராசரி உஷ்ணம் 0.41 C யிலிருந்து 0.77 C ஆக ஏறி யிருக்கிறது.

தேசீயக் கடல், சூழ்வெளி ஆணையகம் [(NOAA) US National Oceanic & Admospheric Administration]

“கிரீன்ஹௌஸ் விளைவின் வெப்பச் சீற்றத்தில் கரியமில வாயுவின் தீவிரத்தை விட, மீதேன் வாயு ஒவ்வொரு மூலக்கூறுக்கு ஒன்றாகப் பரிதியின் சூட்டை உறிஞ்சிச் சேமிக்கிறது! சூழ்வெளியில் மென்மேலும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் திணிக்கப்படுவதால், ஆர்க்டிக் வட்டாரத்தின் வெப்பம் மிகையாகிப் “பூகோளச் சூடேற்றப் புரட்சி” [Runaway Global Warming (RGW)] தூண்டப்படும் என்று விஞ்ஞானிகள் மிகவும் கவலைப் படுகின்றனர்! அடுத்து வரும் 100 ஆண்டுகளில் பூகோளக் காலநிலை பெருத்த அளவில் மாறிச் சமூக, நிதிவளம், உயிர்ப்பயிரின விருத்திகள் பாதிக்கப்படும். அதன் துவக்க விளைவுகள் ஏற்கனவே ஆரம்பாகி விட்டன!”

ஆர்க்டிக் காலநிலைப் பாதிப்பு உளவு [Arctic Climate Impact Assessment (ACIA)]

ஆர்க்டிக் வட்டாரத்தைத் துணைக்கோள் கண்காணித்த உளவுகள், பூகோளச் சூடேற்றம் மெய்யானது என்று நிரூபித்ததுடன், அடுத்து வரும் 100 ஆண்டுகளில் முந்தைய காலத்தை விட 8 மடங்கு வேகத்தில் வெப்பச் சீற்றம் ஏறி வரலாம் என்றும் எடுத்துக் காட்டியுள்ளன! கடற்பனி உருகுவதால் கடல் மட்டம் உயராது. காரணம், கடற்பனிக் குன்றுகள் கடலில் மிதக்கின்றன. ஆனால் கிரீன்லாந்தின் பனிக்குன்றுகள் முழுதும் உருகினால் கடல் மட்டம் 7 மீடர் வரை [சுமார் 25 அடி] ஏறிவிடலாம் என்று அஞ்சப் படுகிறது! ஆனால் அவ்விதம் பனிக்குன்றுகள் யாவும் கிரீன்லாந்தில் உருக 1000 ஆண்டுகள் ஆகலாம்!

மார்க் ஸெர்ரீஸ் [Mark Serreze, University of Colorodo]

“ஐயமின்றி பூகோளம் சூடாகிறது என்பது நமது காலத்தில் எல்லாவற்றுக்கும் மேலாக முதன்மைச் சவாலாகத் தெளிவாகி உறுதியாகி விட்டது. அதனால் உலக நாடுகள் விழித்துக் கொண்டு, புதிய அரசியல் விதி முறைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆயினும் அவை மட்டும் போதா. மேலும் செய்யத் வேண்டியவை யின்னும் மிகையாக உள்ளன. நல்ல செய்தி என்ன வென்றால், அதிகமான மாற்றங்கள் அடுத்து அடுத்து வரப் போவதற்கு அறிகுறிகள் தெரிகின்றன.”

அல் கோர் [Al Gore, Former US Vice President & Environmentalist]

காலநிலை மாறுதல் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு

“2007 பிப்ரவரி 2 ஆம் தேதி பாரிஸில் ஐக்கிய நாடுகளின் பேரவைச் சார்பில் நடந்த அகில அரசுகளின் காலநிலை மாற்ற ஆய்வு அரங்கத்தில் நாற்பது நாடுகளின் 600 காலநிலை வல்லுநர்கள் ஆராய்ந்து தயாரித்து, 113 நாடுகளின் 300 பிரதிநிதிகள் உளவிப் பிறகு 2000 காலநிலை வல்லுநர்கள் ஆய்வுகள் செய்து வெளியிட்ட முதல் அறிக்கை இது. அது ஓர் உன்னதத் தனித்துவச் சமூக விஞ்ஞானச் சாதனை அறிக்கை. காலநிலை வல்லுநர் ஆய்ந்து கூறியவற்றை மற்ற அறிஞர்கள் உளவி ஒப்புக் கொண்டதால் அந்த முடிவுகளுக்கு அடிப்படையும், பிடிப்பும், உறுதிப்பாடும் உள்ளன,” என்று IPCC [UN’s Intergovernmental Panel on Climate Change] தலைவர் இந்தியாவின் டாக்டர் பி.கே. பச்சௌரி கூறினார். முதன்முதலாக அண்டார்க்டிகா, கிரீன்லாந்து ஆகியவற்றின் பனித்தட்டுகள் பேரளவில் உருகி வருவதால், கடல் மட்டம் உயர்ந்து வருகிறது என்று தெளிவாகக் கூறப்பட்டது. வெளியிட்ட முதல் கருத்துரை, பூகோளச் சூடேற்றத்துக்கு மனிதப் பங்கீடுகளும் ஒரு காரணம் என்பது அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது. முதன்முதல் எவ்விதக் குழப்பமு மின்றித் தெளிவாக ஒரு மெய்ப்பாட்டு அறிக்கையை [Unequivocal Truth] உறுதியாகக் கூறியது: ” பூகோளம் சூடேறுவதாக எச்சரிப்பது ஓர் உறுதியான நிகழ்ச்சி! அதில், குறிப்பாகச் செயற்கைக் கார்பன் டையாக்ஸைடு வாயு வெளியேற்றத்தில் மனிதரின் கை முத்திரைகள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் படிந்துள்ளன.”

பாரிஸ் கருத்தரங்கின் முதற்குழு வெளியிட்ட முடிவுகள்

1. சூழ்மண்டலத்தில் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் திணிவு [Concentrations] தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவைப் போல் இரட்டித்தால், பூகோளத்தின் சராசரி உஷ்ணம் 3 டிகிரி C ஏறும், அதாவது உஷ்ண ஏற்ற நீட்சி [Temperature Range] 2 C முதல் 4.5 C வரை ஆகலாம் என்று கணிக்கப் பட்டது.

முதல் முறையாக விளக்கமான, துல்லிய காலநிலை மாற்றக் கணனி மாடல்களைத் தாயரித்து 21 ஆம் நூற்றாண்டில் நிகழ விருக்கும் உஷ்ண நீட்சி அளவுகள் கூறப்பட்டிருக்கின்றன.

2. கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அளவு நிலை 650 ppm. [parts per million (ppm)] ஆக இருந்தால், உஷ்ண ஏற்றம் சுமார் 3.6 C. இருக்கலாம். வாயுக்களின் அளவு 750 ppm ஆகக் கூடினால் உஷ்ண ஏற்றம் 4.3 C. அதற்கும் மேலாக 1000 ppm ஆக உயர்ந்தால் 5.5 C, முதல் அளவைப் போல் இரட்டிப்பானால் [1200 ppm] உஷ்ண வீக்கம் 6.3 C என்று கணிப்பானது.

எதிர்கால கிரீன்ஹவுஸ் வாயுக்களின் திணிவுகளை ஊகிப்பது கடினம். ஏனெனில் அவை எதிர்காலத்தில் தோன்றப் போகும் புதிய தொழிற்சாலைகளைப் பொருத்தும், நிறுத்தப்படும் பழைய தொழிற்துறைகளைப் பொருத்தும், அமைக்கப் போகும் புதுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியும் மாறுபடுவவை.

3. கடந்த 100 ஆண்டுகளாக (1906-2005) பூதள உஷ்ணம் 0.74 டிகிரி C ஏறி யுள்ளது. 2007 இல் வெளியிட்ட அந்த அளவு 2001 ஆம் ஆண்டில் IPCC வெளியிட்ட நூறாண்டு ஏற்ற அளவை விட [0.6 டிகிரி C] அதிகமாகக் கணிக்கப் பட்டுள்ளது. 1850 ஆம் ஆண்டு நவீனப் பதிவுகளின் துவக்கத்துக்குப் பிறகு இதுவரை 12 உச்ச உஷ்ண ஆண்டுகள் பதிவாகி யுள்ளன. மேலும் கடந்த 12 ஆண்டுகளில் 11 தடவை மித மிஞ்சிய வெப்ப வேனிற் காலத்தை அனுபவித்த விபரங்களும் புதிய கணிப்புக்கு எடுத்தாளப் பட்டன.

அடுத்த இரண்டு பத்தாண்டுகளுக்கு பூதளச் சூடேற்றக் கணிப்பு 0.2 டிகிரி C ஆகலாம் என்று தேர்வு செய்யப் பட்டிருக்கிறது.

4. 2007 பாரிஸ் அறிக்கையில் பனிக்களஞ்சியம், கீரின்லாந்து பனிப்பாறைகள், ஆர்க்டிக் வட்டாரப் பனித் தளங்கள் ஆகியவை உருகுவதால் 1999 ஆண்டு வரை உயரும் கடல் மட்ட ஏற்றம் (28-58 செ.மீ) (1-2 அடி) என்பதாகக் காணப்படுகிறது. ஆனால் 2001 அறிக்கையில் கடல் மட்ட ஏற்றம் (9-88 செ.மீ) (0.25-3.0 அடி) என்றுதான் கணிக்கப் பட்டது. காரணம் 2007 கணிப்பில் கடந்த 5 ஆண்டுகளில் கிடைத்த புதிய விபரங்கள் பயன்படுத்தப் பட்டன.

ஆனால் பூதளப் பனிக் கிடங்குகள் தொடர்ந்து உருகிக் கொண்டிருந்தால் 2100 ஆம் ஆண்டில் 1 மீடர் [3.3 அடி] உயரத்துக்கும் எழலாம் என்னும் கடல் மட்ட ஏற்றக் கணிப்புகளை ஒதுக்க முடியாது என்று எச்சரிக்கை விடுக்கிறது 2007 பாரிஸ் அறிக்கை. 125,000 ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பனிக் களஞ்சியங்கள் மிதமிஞ்சிச் சூடேறிய போது அவ்விதம் பேரளவில் உருகி கடல் மட்டம் (4-6 மீடர்) (12-20 அடி) உயர்ந்திருக்கிறது.

5. ஆர்க்டிக், அண்டார்க்டிக் துருவங்களில் சேமிப்பான பனித் தளங்கள் எந்த வீதத்தில் சுருங்கலாம் என்பதும் கணிக்கப் பட்டிருக்கிறது. மனிதர் அமைத்த தொழிற்சாலைகளின் வாயுக்கள் சூழ்வெளியில் சேர்வதால் பெரும் பகுதிப் பனிப் பரப்புகள் 21 ஆம் நூற்றாண்டு முடிவில் உருகிப் போகலாம்.

ஆர்க்டிக் பனிக்கடல் ஏற்கனவே 1978 ஆண்டு முதல் பத்தாண்டுக்கு 2.7% வீதமாகச் சுருங்கிக் கொண்டு வருகிறது.

6. ஆண்டு தோறும் குளிர்காலப் பனித்தளப் படைப்பு வசந்த காலத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், சற்று சுருங்கியதாகவே தெரிகிறது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிப் பாதிக் காலத்தில் வட கோளக் பனிக்களப் படைப்பு உச்சப் பரப்பில் 7% அளவு சிறுத்து விட்டதாக அறியப்படுகிறது.

கடந்த 150 ஆண்டுகளாக வட கோளத்தில் உள்ள ஏரிகள், ஆறுகளின் நீர் வெள்ளம் குளிர்ந்து பனியாகும் நாட்கள் ஒரு நூறாண்டுக்குச் சுமார் 6 நாட்கள் குன்றிவிட்டன. அதே சமயம் பனித்திட்டுகள் உடைந்து உருகும் நாட்கள் ஒரு நூறாண்டுக்கு 6.5 நாட்கள் முன்னதாக ஆரம்பித்து விட்டது.

7. 20 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது போலவே, 21 ஆம் நூற்றாண்டிலும் மலைச் சிகரங்களில் நீர்மைப் பொழிவு [Precipitation (Moisture)] மிகையாகும். ஆனால் வேனிற் தளங்களுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் நீர்மைப் பொழிவு குறையும்.

8. வெப்பச் சூடேற்றம், வெப்ப அலை வீச்சுகள் [Global Warming & Heat Waves] 21 ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து தாக்கும். அவ்விதத் தாக்கல்களின் தருணம், வரட்சி உக்கிரம் முன்னைவிட மிகையாகும். 20 ஆம் நூற்றாண்டில் தெற்கு ஆ·பிரிக்கா, தென்னாசியா, மத்தியதரைக் கடற் பகுதிகள் வரட்சி மிக்க பரப்புகளாக மாறி வருகின்றன.

9. சூழ்வெளியில் கார்பன் டையாக்ஸைடு [CO2] மீதேன் [CH4] வாயுக்களின் கொள்ளளவுகள் தொழிற்புரட்சிக் காலத்தை விட அதிகமாகி யுள்ளன. தொழிற்புரட்சிக் காலத்தில் CO2 வாயுவின் திணிவு [280 ppm] அறியப்பட்டு, 2005 ஆம் ஆண்டில் அதன் அளவு 379 ppm ஆக மிகையானது. மீதேன் திணிவு 715 ppm அளவிலிருந்து 2005 ஆண்டில் 1774 ppm ஆனது.

10. உறுதியாக்கப் படாத குழப்பப் பிரச்சனைகள் முடிவில் தெளிவாக்கப்பட்டு அழுத்தம் அடைந்தன. துணைக் கோள்கள் பூகோளத்தைக் கண்காணித்துப் பதிவான உஷ்ண எண்ணிக்கை, பூதளத்தில் அமைக்கப்பட்ட கருவிகள் பதிவு செய்த எண்ணைக்கையுடன் ஒத்துப் பார்க்கப்பட்டுச் சீராக்கப் பட்டன. குறிப்பாக உறுதிப்பாடு ஆகாதவைகட்கு முகில், பனிக் களஞ்சியம், சிகரப் பனிக்கிரீடம் [Ice Cap], கடல், வன அழிப்பு மற்றும் காலநிலை ஏற்றத் தணிவு, உயிரியல், பூதள ரசாயனம் [Climate & Biogeochemical Cycles] போன்ற காரணிகள் மூலமாயின.

மேற்கூறிய IPCC முதற்குழு அறிக்கை பாரிஸில் பிப்ரவரி 2, 2007 இல் வெளியானது. இரண்டாம் குழு அறிக்கை பிரசெல்ஸில் ஏப்ரல் 6 தேதி வெளியாகும். முன்றாம் குழு அறிக்கை பாங்காக் நகரில் மே மாதம் 4 ஆம் தேதி வெளியிடப்படும். 2007 ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் IPCC பூகோளச் சூடேற்ற நூல் நான்காவது
வெளியீடு. ஏற்கனவே 1990, 1995, 2001 ஆண்டுகளில் IPCC யின் முதல் மூன்று அறிக்கை நூல்கள் வெளியாகியுள்ளன.

(தொடரும்)
************************

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines. CBC.ca Website, Canadian Geographic Magazine

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]
2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]
3. What is Happening to our Climate? By Samuel Matthews, National Geographic [Nov 1976]
4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]
5. Global Warming from Wikipedia.
6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]
7. Climate Change: Projected Changes in CO2 & Climate
8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.
9. Evidence of Human-caused Global Warming Unequivocal [Paris Report (Feb 2, 2007)]
10 An Unequivocal Truth, Global Warming is Man-made Canadian CBC News in Depth: Climate Change [Feb 2, 2007]
11 In Depth Climate Change, Global Warming CBC News (March 24, 2005)
12 Discover Magazine: Earth Science Global Warming Leaves Its Marks By: Josie Glausiuz (Jan 2007)
13 Earth Science And The Environment By: Graham Thompson Ph.D. & Jonathan Turk Ph.D [1993]
14 Canadian Geographic – Annual Environment Issue [May-June 2006]

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (Feb 15, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு-1 (IPCC)

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


சூடு காலம் வருகுது! பூமிக்கு
கேடு காலம் வருகுது!
நாடு, நகரம், வீடு, மக்கள்
நாச மாக்கப் போகுது!
புயல் அடிக்க வருகுது!
புரட்டி மழை கொட்டப் போகுது!
நீரை, நிலத்தை, குளத்தைச் சிதைத்து
ஊரை அழிக்க வருகுது!
பயிரை, விலங்கை, வயிறை நசுக்கி
உயிரை நோக வைப்பது!
கடல் சூடு, மட்டம் ஏறி
கரைகள் மூழ்கப் போகுது!
மெல்ல மெல்ல ஏறி வெப்பம்,
மேலே மீறிப் போகுது!
சூட்டு யுகப் பிரளயம், நமது
வீட்டு முன்னே நிற்குது!
உன்னை, என்னை, அவனை உலுக்கி
உலகின் தோலை
உரித்து விடப் போகுது!

**************

“நாற்பது உலக நாடுகளைச் சேர்ந்த 600 காலநிலை வல்லுநர்கள் ஆய்வுகள் செய்து தயாரித்த பாரிஸ் கருத்தறிக்கை (பிப்ரவரி 2007) சமூகத்துக்குச் செய்யும் ஓர் உன்னத, தனித்துவ உதாரண விஞ்ஞானப் பணியாகும்.”

டாக்டர். பி.கே. பச்சௌரி பாரிஸ் கருத்தரங்கத் தலைவர் [IPCC Chairman, Dr.P.K. Pachauri of India]

“ஐயமின்றி பூகோளம் சூடாகிறது என்பது நமது காலத்தில் எல்லாவற்றுக்கும் மேலாக முதன்மைச் சவாலாகத் தெளிவாகி உறுதியாகி விட்டது. அதனால் உலக நாடுகள் விழித்துக் கொண்டு, புதிய அரசியல் விதி முறைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆயினும் அவை மட்டும் போதா. மேலும் செய்யத் வேண்டியவை யின்னும் மிகையாக உள்ளன. நல்ல செய்தி என்ன வென்றால், அதிகமான மாற்றங்கள் அடுத்து அடுத்து வரப் போவதற்கு அறிகுறிகள் தெரிகின்றன.”

அல் கோர் [Al Gore, Former US Vice President & Environmentalist]

“பூகோளக் காலநிலைச் சீர்கேடுகள் பூதளத் துறைகளின் செம்மைப்பாடு நோக்கிச் செல்கின்றன! அதைப் பறைசாற்றும் எச்சரிக்கைச் சங்குகள் உலக நாடுகளின் தலைநகர் எங்கணும் ஒலிக்க வேண்டும்.”

ஜான் கம்மர் [John Gummer, British Environment Society (July 21, 1996)]

“பல்வேறு பணித்துறைக் காலநிலை கண்காணிப்பாளர் உலக நாடுகளில் ஒன்றுகூடித் தமது நிதிவளம், நேரம், ஆக்க உணர்வு அனைத்தையும் திரட்டி, எவ்விதத் தடையின்றி நீண்டகாலப் போராட்டத்தைத் துவக்க வேண்டும். ஏனென்றால் நாமெல்லாம் காலநிலைக் கோளாறு நரகத்தின் வாயிலை வெகு சீக்கிரத்தில் தொட நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.”

ராஸ் கெல்பிஸ்பான் [Ross Gelbspan (July 31, 2002)]

“20 நூற்றாண்டின் கடைசிக் கால வேளைகளில் விரைவாக ஏறிய வெப்பச் சூடேற்றத்துக்கு வேறெந்தக் காரணத்தைக் காட்டுவது? பூகோளச் சூழ்வெளியில் கண்ணாடி மாளிகை முறையால் [கிரீன்ஹௌஸ் வாயு விளைவு] வாயுச் சூடேற்றச் சேமிப்பால் உண்டான விளைவு என்றுதான் கூற வேண்டும்.”

பேராசிரியர் ·பிளிப்ஸ் ஜோன்ஸ் [Philip Jones Director, Climatic Research, University of East Anglia]

காலநிலை மாறுதல் பற்றிய பாரிஸ் கருத்தரங்கம் என்ன சொல்கிறது?

2007 பிப்ரவரி 2 ஆம் தேதி பாரிஸில் ஐக்கிய நாடுகளின் பேரவைச் சார்பில் நடந்த அகில அரசுகளின் காலநிலை மாற்ற ஆய்வு அரங்கத்தில் [UN’s Intergovernmental Panel on Climate Change (IPCC)] 113 நாடுகளின் 2000 காலநிலை வல்லுநர்கள் ஆய்வுகள் செய்து வெளியிட்ட முதல் கருத்துரை, பூகோளச் சூடேற்றத்துக்கு மனிதப் பங்கீடுகளும் ஒரு காரணம் என்பது அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக 11 தடவை பூகோளத்தில் உச்ச உஷ்ண எண்ணிக்கைகள் பதிவாகி யுள்ளன! IPCC அறிக்கை கூறுவது: கடல் மட்ட உயர்வுக்கும், கடல் நீர் உஷ்ண ஏற்றத்துக்கும், மனிதர் அமைத்த நிலக்கரி எருவாக எரிக்கப்படும் தொழிற்சாலைகள் போன்றவை பெரும்பான்மைக் [90%] காரணியாகின்றன. கருத்துரையின் சுருக்கம் ஓர் எளிய முடிவில் அறிவிக்கப் பட்டது. முதன்முதல் எவ்விதக் குழப்பமுமின்றித் தெளிவாக ஒரு மெய்ப்பாடை [Unequivocal Truth] அறிக்கை உறுதியாகக் கூறியது: “பூகோளம் சூடேறுவது ஓர் உறுதியான நிகழ்ச்சி! அதில், குறிப்பாகச் செயற்கைக் கார்பன் டையாக்ஸைடு வாயு வெளியேற்றத்தில் மனிதரின் கை முத்திரைகள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் படிந்துள்ளன.”

சூழ்மண்டலம், கடல், துருவப் பனிமண்டலம், உச்சிப் பனிக்கூரைகள் ஆக்கியவற்றின் மாறுபாடுகளுக்கு நிச்சயமாக பூகோளச் சூடேற்றமே காரணம் என்பது கடந்த ஆறு வருடங்களின் ஆய்வு முடிவாகக் கூறப் பட்டிருக்கிறது. 1750 ஆண்டுக்குப் பிறகு துவங்கிய தொழிற் புரட்சியின் விளைவுகளால் மனிதர் படைத்த தொழிற் துறைகள் வெளியாக்கிய கிரீன்ஹௌஸ் வாயுக்களின் [கார்பன் டையாக்ஸைடு, மீதேன், நைட்டிரஸ் ஆக்ஸைடு] கொள்ளளவுகள் சூழ்வெளியில் மிகுதியாகிக் கொண்டே வருகின்றன. அண்டார்க்டிக் ஓஸோன் துளை எவ்விதம் ஏற்பட்டதென விளக்கம் முதலில் அளித்த டாக்டர். சூஸன் சாலமன் [Dr.Susan Solomon] கூறுவது: பூகோளச் சூடேற்றத்துக்கு 90% பங்குக் காரணம், கிரீன்ஹௌஸ் வாயுக்களின் பெருக்கமே. 2001 ஆண்டில் மட்டும் காரணம் 66% பங்கெனக் குறிப்பிட முடிகிறது. சூஸன் சாலமன் கொலராடோ பல்கலைக் கழகத்தின் தேசீயக் கடல், சூழ்வெளி ஆணையகத்தில் [National Oceanic Atmospheric Administration (NOAA)] ரசாயனத் துறையில் பணி புரிபவர்.

பூகோள சூடேற்றம் பற்றி வல்லுநர்களின் முடிவு

IPCC தலைவர் இந்தியாவின் டாக்டர் பி.கே. பச்சௌரி கூறுவது: “நாற்பது நாடுகளின் 600 காலநிலை வல்லுநர்கள் ஆராய்ந்து தயாரித்து, 113 நாடுகளின் 300 பிரதிநிதிகள் உளவி வெளியிட்ட முதல் அறிக்கை இது. அது ஓர் உன்னதத் தனித்துவச் சமூக விஞ்ஞானச் சாதனை அறிக்கை. காலநிலை வல்லுநர் ஆய்ந்து கூறியவற்றை மற்ற அறிஞர்கள் உளவி ஒப்புக் கொண்டதால் அந்த முடிவுகளுக்கு அடிப்படையும், பிடிப்பும், உறுதிப்பாடும் உள்ளன.” முதன்முதலாக அண்டார்க்டிகா, கிரீன்லாந்து ஆகியவற்றின் பனித்தட்டுகள் பேரளவில் உருகி வருவதால், கடல் மட்டம் உயர்ந்து வருகிறது என்று தெளிவாகக் கூறப்பட்டது.

மைக்கேல் ஜெரார்டு [Secretary General World Meteorological Organization (WMO)] எடுத்துக் கூறுவது: “கடல் மட்டம் உயரும் வீதம் [Speed: Rate of Raise] இன்னும் உறுதியாக அறியப்பட வில்லை. IPCC கருத்துரை காட்டுவது, எதிர்வரும் நூற்றாண்டுகளில் கடல் மட்டம் நிச்சயம் உயரப் போகிறது என்பதுதான்.” ஐக்கிய நாடுகளின் சூழ்மண்டலத் திட்டத்துறை UNEP [UN Environmental Program], WMO ஆகிய இரண்டு துறைகளும் சேர்ந்துதான் IPCC கருத்தரங்கைப் பாரிஸில் ஏற்படுத்தி யுள்ளன. அசிம் ஸ்டைனர் [Achim Steiner, UNEP Executive Director] சொல்வது: “2007 பிப்ரவரி 2 ஆம் தேதி ஒரு முக்கிய தினம். அன்றுதான் பூகோளச் சூடேற்றத்துக்கு மனிதர் பங்கீடு பெருமளவில் [66%-90%] உள்ள தென்னும் முடிவு உறுதிப்பாடு பெற்றது.”

அடுத்த வாரம் IPCC கருத்தறிக்கையின் உறுதியான முடிவுகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

(தொடரும்)
************************

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines. CBC.ca Website

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]
2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]
3. What is Happening to our Climate? By Samuel Matthews, National Geographic [Nov 1976]
4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]
5. Global Warming from Wikipedia.
6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]
7. Climate Change: Projected Changes in CO2 & Climate
8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.
9. Evidence of Human-caused Global Warming Unequivocal [Paris Report (Feb 2, 2007)]
10 An Unequivocal Truth, Global Warming is Man-made Canadian CBC News in Depth: Climate Change [Feb 2, 2007]
11 In Depth Climate Change, Global Warming CBC News (March 24, 2005)
12 Discover Magazine: Earth Science Global Warming Leaves Its Marks By: Josie Glausiuz (Jan 2007)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (Feb 8, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா