தெற்காசிய இந்து மாக்கடல் நாடுகளுக்குச் சுனாமி அபாய அறிவிப்பு -1

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


முடுக்கி விட்ட பம்பரக் கோளம்! கடற்தளம்

உடுக்க டித்துப் போடுமே தாளம்! சுனாமி

அடுத்த டுத்துச் சீறிடும் நாகம்! உயிர்களை

எடுத்துச் செல்லும் மீறிடும் வேகம்!

துடிக்க வைக்கும் மேளத்தின் ராகம்,

பிடிக்க வேண்டும் பிறக்கும் அந் நேரம்!

‘பசிபிக் அரங்கு சுனாமி எச்சரிக்கை ஏற்பாடுடன் சேர்க்கப்பட்ட இந்தியக் கண்காணிப்பு மையம் ஒன்றை நாம் அமைக்கலாம். அல்லது நில அதிர்ச்சி உளவிகள், அலை மானிகள், அலை உயர்ச்சி எச்சரிக்கை ஏற்பாடுகள் பின்னிக் கொண்ட ஓர் பொறியியல் துறைத் தொடர்பை நாம் நிறுவிக் கொள்ளலாம். கடற்தட்டில் பூகம்பம் ஏற்பட்டு 3 மணிநேரம் கழித்துத்தான், பூத அடிப்புச் சுனாமி அலைகள் வடிவெடுத்துக் கிளம்புகின்றன! அறிவிப்பு உடனே கிடைத்தால் நில அதிர்வு மையத்திலிருந்து பயணம் செய்யும் அந்த 3 மணி இடைவேளைக்குள், கரையோர மாந்தர் இடம் பெயர்ந்து பாதுகாப்புப் பகுதிகளுக்கு வெளியேறி விடலாம். ‘

பாரத ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் [ஹைதராபாத் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசியது (2005)]

‘ஆழ்கடல் சுனாமி உளவு அறிவிப்பு [Deep-Ocean Assessment & Recording of Tsunami (DART)] முறையில் பணிபுரியும் உலகளாவிய சுனாமி கண்காணிப்பு அறிவிப்பு மையம் ஒன்று நிறுவகமாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த ஏற்பாட்டில் பசிபிக், இந்து மாக்கடல், அட்லாண்டி கடல்களின் அடித்தளதில் புரண்டு வரும் முக்கியமான கீழ்நுழைவு அரங்கங்களில் [Major Subduction Zones] அலைக் கண்காணிப்பு மிதப்பிகள் [Tidal Buoys] அமைக்கப்படும். தற்போது அமெரிக்காவின் நோவா காலநிலை மையம் 60 உலக நாடுகளுடன் பூகோளத் தளநோக்கு ஏற்பாடு [Global Earth Observation System of Systems (GEOSS)] மூலமாய்த் தொடர்பு கொள்ளத் திட்ட மிட்டுள்ளது. அந்த பேரிணைப்பு ஏற்பாட்டில் பூகோளச் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பும் [Global Tsunami Warning System] சேர்ந்திருக்கிறது ‘

டேவிட் ஜான்ஸன், [Director, NOAA National Weather Service (March 30, 2005)]

‘சுனாமி எச்சரிக்கை அனுப்பச் சீரான, விரைவான ஒலிபரப்புச் சாதனத் துணை ஏற்பாடுகள், பயிற்சி முறைபாடுகள் நாடெங்கும் நிலவப்படாமல், ஏராளமான நிதியைச் செலவழித்து நவ நாகரீகக் கருவிகளும், புதுவித அதிர்வு உளவு அறிவிப்புகளும் நிறுவகம் செய்வதில் ஏது பயனுமில்லை! அவ்வித ஏற்பாடுகளை நாட்டில் அமைத்துக் கண்காணிப்பது மாபெரும் நெறிமுறைப் பணியாகும். சுனாமி வருகையை அறிவிக்கும் சமயத்தில், கடற்கரைப் பகுதியில் திரியும் ஒவ்வொரு தனி மனிதன் காதிலும் பலமாகத் தெளிவாக ஒலிக்க வேண்டும். அதுதான் மெய்யாக மிகவும் கடினமானது. ‘

பிரதம விஞ்ஞானி பிலிப்ஸ் மெக்ஃபாடன் [இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பாளர், பூதளவியல் கூடம், ஆஸ்திரேலியா]

‘125 கோடி ரூபாய்ச் செலவில் பாரதம் அமைக்கப் போகும் முற்போக்கான சுனாமி எச்சரிக்கை ஏற்பாடு, மற்ற தென் கிழக்காசிய நாடுகளுக்குச் சிறிதளவு பயனே அளிக்கும் என்று அறியப்படுகிறது! 75 தளங்களில் ஊன்றப் போகும் பூதள அதிர்ச்சி உளவிகள், மூன்று அல்லது நான்கு மையங்களுக்கு அனுப்பப்பட்டு, 10-15 நிமிடங்களில் தகவல் அறிவிக்கும் தகுதி உடையவை. அவற்றின் மூலம் அதிர்வு மையத்தை [Epicenter] அறிவது அதிக நேரம் ஆகாது. அத்தள உளவிகள் அணு ஆயுதச் சோதனையும் உணர்த்தும் தன்மை உடையதால், பாரதம் அந்த ஏற்பாட்டின் சமிக்கைகளைப் பிற தென்னாசிய நாடுகளுக்குப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை! 28 இந்து மாக்கடல் கரையோர நாடுகளில் பாரதம், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகியவை மட்டுமே தனித்தனியான எச்சரிக்கை ஏற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றன. ஆழ்கடல் உளவுத் தகவல் ஏற்பாடு [Deep-Ocean Assessment & Reporting System (DART)] அமைப்பில் நாடுகளின் பங்கீட்டு அளவு இன்னும் முடிவாக வில்லை. ‘

டாக்டர் ஹார்ஷ் குப்தா, முந்தைய செயலாளர் [Dept of Ocean Development]

முன்னுரை: 20 ஆம் நூற்றாண்டில் பசிபிக் கடலரங்கில் மட்டும் மொத்தம் 796 சுனாமிகள் நேர்ந்துள்ளதாக, ஸைபீரியாவின் சுனாமி ஆய்வகக் கூடம் [Tsunami Laboratory at Novosibirsk] ஒன்று அறிவிக்கிறது! அவற்றில் 17% ஜப்பானில், 15% தென்னமெரிக்காவில், 13% நியூ கினியா, சாலமன் தீவுகளில், 11% இந்தோனேசியாவில், 10% மெக்ஸிகோ, மத்திய அமெரிக்காவில், 9% பிலிப்பைன் தீவுகள், 7% நியூ ஸிலாந்து, 7% அலாஸ்கா, கனடாவின் மேற்குப் பகுதிகளில், 7% அமெரிக்காவில் மற்றும் 3% ஹவாயித் தீவுகளில் சுனாமிகள் நிகழ்ந்துள்ளன. அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தல் இந்தோனேசியா பகுதி நான்காம் [11% (88)] தரத்தில், சுனாமி பாதிப்புப் பரப்பாக உள்ளது! சுமாத்ரா-அந்தமான் அரங்கில் இந்து மாக்கடலில் உள்ள சுந்தா கடற்தட்டு ஊனம் [Sunda Plate Fault] ஓர் பரபரப்பான கொத்தளிப்புத் தட்டுப்பிழை கொண்டது! அடிக்கடி நில அதிர்ச்சியும், எப்போதாவது சுனாமி எழுச்சியும் உண்டாகும் ஓர் அபாயக் கடற்தட்டு அது! கடந்த 200 ஆண்டுகளாக எட்டுக்கு நெருங்கிய அல்லது எட்டுக்கு மேற்பட்ட ரிக்டர் அளவுப் பூகம்பங்கள் ஆறு நேர்ந்துள்ளன! 1797 இல் ரிக்கடர் அளவு 8.4; 1883 இல் ரிக்டர் 8.7; 1861 இல் ரிக்டர் 8.5; 2000 இல் ரிக்டர் 7.9; 2004 இல் ரிக்டர் 9.0; 2005 இல் ரிக்கட்ர் 8.7.

2004 டிசம்பர் 26 ஆம் தேதி சுந்தா கடற்தட்டு ஊனத்தில் [Sunda Plate Fault] 9.0 ரிக்டர் அளவு பூகம்பம் பூத வடிவில் தோன்றி அசுர நாசம் செய்த தெற்காசிய இந்து மாக்கடல் சுனாமிக்கு ஈடு இணை யில்லை என்பதை அழுத்தமாக முழக்கலாம்! அந்த கோர விளைவில் ஜனவரி 27, 2005 நாள்வரை அறிந்தது: 238,000 பேர் மாண்டதுடன், 40,000 நபர் காணப் படாமல் கடலில் மறைந்தார்கள். ஆனால் மரண மடைந்தோர் எண்ணிக்கை: 288,600 என்று மதிப்பிடப் படுகிறது! [Source Wikipedia]. அதற்குப் பிறகு மார்ச் 28, 2005 இல் மறுபடியும் இந்தோனேசியாவின் அருகே அதே சுந்தா கடற்தள ஊனத்தில் 8.7 ரிக்டர் அளவில் ஒரு பெரும் நில அதிர்ச்சி உண்டானது! நல்ல வேளையாக அந்த பூகம்பம் ஒரு சுனாமிப் பேரலையை உண்டாக்க வில்லை! உடனே நோவாவின் [NOAA (National Oceanic & Atmospheric Administration)] பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்திலிருந்து [Pacific Tsunami Warning Center (PTWC)] Hawaii] 11 நிமிடங்களுக்குள் நில அதிர்வுச் சமிக்கைகளை உளவி, தாய்லாந்து, மியான்மர் [பர்மா], ஜகார்டா, இந்தியா, பங்களா தேசம், சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, மால்தீவுகள், மெளரிஸியஸ் ஆகிய பகுதியில் உள்ள அமெரிக்கத் தூதரங்களுக்குத் தகவல் அனுப்பப் பட்டது!

பூகம்பம் ஏற்பட்ட 35 நிமிடங்களுக்குப் பிறகு நோவாவின் பசிபிக் அரங்கின் காலநிலை அறிவிப்புத் தலைமைத் தகவலகம், இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தகவலருக்குச் செய்தி அனுப்பி இந்து மாக்கடல் கடற்தளப் பகுதிகளுக்கு அபாயப் பாதுகாப்பு ஆட்சி வழிகளைப் பங்கிட்டுக் கொண்டது. PTWC அனுப்பிய முதல் அறிவிப்பின் சாரம்: பூகம்ப நிகழ்ச்சி 8.7 ரிக்டர் அளவு! பசிபிக் அரங்கில் சுனாமி எச்சரிக்கை யில்லை! பசிபிக் கடற்கரைகளில் சுனாமி அபாய மில்லை. ரிக்டர் அளவின் தீவிரத்தை நோக்கினால் நில அதிர்ச்சி மையத்தில் சுனாமி எழுந்து பரவுவதற்கு வாய்ப்புள்ளது! சுந்தா கடற்தட்டு பூகம்ப மையப் பகுதிக்கு அருகில் உள்ள நாடு நகரங்கள், ஊர்கள் போதிய பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளும்படி வேண்டுகிறோம். இந்து மாக்கடலில் தற்போது சுனாமிக் கண்காணிப்பு மிதப்பிகள், அலை மானிகள் [Buoys & Tidal Gauges] அமைக்கப் படாததால், மெய்யாக நேர்ந்த சுனாமியை உளவி அங்குள்ள கடற்கரைப் பகுதிகளுக்கு அறிவிக்க முடியாது. அவைகள் நிறுவப்பட்டு தயாராகும் வரையில் பசிபிக் கடலரங்கு சுனாமி எச்சரிக்கை மையத்தின் அறிவிப்பு உதவிகள், இந்து மாக்கடல் கடற்பகுதி நாடுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

ஆழ்கடல் சுனாமி உளவுப் பதிவு அறிவிப்பு (DART)

ஈரோப் நாடுகள் உள்பட மற்றும் ஏனைய 60 அகில நாடுகள் அமெரிக்கா செய்துவரும் ‘பூகோளத் தளநோக்கு ஏற்பாட்டின் ‘ [Global Earth Observation System] விருத்தித் திட்டத்தில் அடுத்த பத்தாண்டுகள் ஆர்வம் காட்டி உதவி பெறப் போகின்றன! அத்தகைய ஓர் உன்னத விரிவான பூகோள நோக்கு அமைப்பாடு ஒரு பெரும் புரட்சியை உண்டு பண்ணப் போகிறது என்று சூழ்வெளி அறிஞர்கள் கருதுகிறார்கள்! அந்த நுணுக்கப் பொறியியல் பூகோளத்தின் காலநிலை, நில அதிர்ச்சி, சுனாமி, சூறாவளி எழுச்சி, பரிதிக் கதிரொளி வீச்சு போன்ற அனைத்து மாறுதல்களையும் கண்காணித்து வரும்! நோவாவின் ஜியாஸ் ஏற்பாடு [GEOSS Managed By NOAA] பூகோளச் சூழ்வெளி, கடற்பகுதி, காலநிலை, அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] ஆகியவற்றை அனுதினமும் கண்காணித்துத் தகவல் மையங்களுக்கு மாறுபாடுகளை அனுப்பும். அவற்றைப் பெற்றுக் கொண்ட நாடுகள் மாறுபாடுகளை எவ்விதம் கையாளலாம் என்று தீர்மானம் செய்யும்.

தெற்காசிய கடற்கரை நாடுகளில் சுனாமி அறிவிப்பு அமைப்புகள்

ஐக்கிய நாடுகள் பேரவை [UNESCO] ஆணையின் கீழ் இந்தியாவின் ஹைதராபாத்தில் 25 நாடுகள் 2005

ஜூன் மாதத்தில் சுனாமி அறிவிப்பு ஏற்பாடு சம்பந்தமாகக் கூடியது! அக்கூட்டத்தில் சுனாமி அபாய அறிவிப்பு ஏற்பாட்டை அமைக்கும் பொறுப்பு அகில நாட்டரசுகளின் கடற்தளக் குழுவுக்கு [Intergovernmental Oceanographic Commission (IOC)] அளிக்கப்பட்டது.

1. இந்து மாக்கடல் நாடுகளின் சுனாமி அறிவிப்புச் சாதனங்களுக்காக ஜப்பான் ஒதுக்கீடு செய்துள்ள 500 மில்லியன் டாலர் தொகையில் இன்னும் மூன்றில் இரு பகுதி தொடப்பட வில்லை என்பது வருந்தத் தக்கது!

2. ஓராண்டு கடந்தும் இந்தோனேசியா, ஸ்ரீலங்கா, மால்தீவுகள் ஆகிய நாடுகளின் சுனாமி எச்சரிக்கை ஏற்பாடுக்காக ஜப்பான் ஒதுக்கிய 204 மில்லியன் டாலரில் இன்னும் 70% நிதி பயன்படுத்தப் படாமலே உள்ளது! எல்லா நாடுகளைக் காட்டிலும் பெரும் நிதி ஒதுக்கீடு பெற்ற இந்தோனேசியா 2005 நவம்பர் வரையில் ஜப்பான் அளித்த தொகையில் சுமார் 16% [121 மில்லியன் டாலர்] செலவழித்திருக்கிறது!

3. ஸ்ரீலங்காவில் சுனாமியால் பாதிக்கப் பட்ட சுமார் 500,000 பேர்களில் பெரும்பாலோர் இன்னும் குடியிருக்க

வீடுகளின்றித் தற்காலிய அகதிகளின் கூடாரங்களில் வசித்து வருகிறார்! அவர்கள் அனைவருக்கும் நிரந்தர இல்லங்கள் கிடைக்க மூன்று வருடங்கள் கூட ஆகலாம் என்று அறியப் படுகிறது! தற்போது 100,000 வீடுகள் இன்னும் கட்டப்பட வேண்டிய திருக்கும் என்று மதிப்பிடப் படுகிறது!

(தொடரும்)

தகவல்:

1. Chennai Online News Service [Dec. 8, 2005]

2. Relief Website [www.reliefweb.int/rw…./openDocument] (Dec.14, 2005)

3. The Slow Process of Rebuilding Lives By: Indrani Sen [www.Newstoday.com/news/nationworld] (Dec 26, 2005)

4. Tsunami Adalats get 1.88 lakhs Complaints By: G. Jagannath [www.newstodaynet.com] (Dec 24, 2005)

5. Buzz of Relief in Worst-hit Nagapattinam By Ganesh Nadar [www.rediff.com/cms] (Jan 5, 2005)

6. Nagapattinam Pays Homage to Tsunami Dead, Press Trust of India (Dec 26, 2005)

7. Shri Dasanudas Charies Activities- Tsunami Relief Efforts (Dec 30, 2004)

8. Tsunami Anniversary: Indians Remember Those Lost with Prayers & Vigil, DPA New Delhi [www.taipeitimes.com/News/World (Dec 27, 2005)

9. Tributes Mark Tsunami Anniversary in Tamil Nadu, Managing Tsunami – Lessons of Dec 26, 2004 [http://ww1.mid-day.com/news/nation/2005/december]

10 Tsunami Relief Works – Tsunami Relief & Rehabilitation in Progress, Order of Ramakrishna [www.sriramakrishanamath.org/news/tsunami.shtml]

11 Rebuilding The Lives & Livelihoods, Indian Tsunami Response- SEEDS Press Release, Reuters Alertnet.

12 Tamil Nadu Chief Minister Releases Booklet on Tsunami Relief, ‘Tiding over Tsunami ‘ [Dec 26, 2005]

13 Managing Tsunami Workshop – Lessons of December 26, 2004 Organised By: M.S. Swaminathan Research Foundation, Chennai (Dec 26, 200).

14 Indian Ocean Tsunami Warning System -BBC News [http://news.bbc.co.uk/go/] (Dec 23, 2005)

15 India Unlikely to Share Seismic Data By: Kalyan Ray, Deccan Herald (Dec 25, 2005)

16 Indian Ocean Tsunami Warning Group Meeting, Indian National Centre for Ocean Information Service (INCOIS), Hydrabad, India.

17 Deep Ocean Assessment & Reporting of Tsunami System (DART System)

18 UNICEF Releases Tsunami Relief Update, India Info News (Dec 22, 2005)

19 The Global Earth Observation Systems, NOAA National Weather Service.

20 Governments Struggle to Create Tsunamai Alert System By: Annie Schleicher (Dec 25, 2005)

21 Indian Tsunami Warning System Report from M.S. Swaminathan Research Foundation

22 Tsunami & After By: B. Raman, Director, Institute of Tropical Studies, Chennai & Convenor, Observer Research Foundation, Chennai [www.saag.org/papers13/paper1209.html] (March 1, 2005)

23 Most of Japan ‘s Bilateral Tsunami Aid Remains Untouched [Dec 6, 2005]

24 Sri Lanka Living in Transition After Tsunami BBC News [November 19, 2005]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (January 5, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா