கழிவு நீர் பாசனம் ! நல்லா சாப்பிடுங்க சார் !

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

கிருஷ்ணகுமார்


கழிவு நீர் உலகின் பத்தில் ஒரு பங்கு பயிர்களின் பாசனமாகிறது. தக்காளி, முட்டைகோஸ், மாங்கனிகள், தேங்காய் முதலிய பல்வேறு வேளாண்மைப் பொருட்களுக்குப் பயன்படுத்தும் பாசன நீர் எதுவென்று தெரியுமா ? கழிவு நீர். திகைக்காதீர். உண்மை. மேலும் அக்கழிவு நீர் நகரக் கழிவுகளிலிருந்து வரும் பதப்படாத நீரேயாகும். வளரும் நாடுகளில் இருக்கும் சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்வேறு நகரங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இருக்கும்; பேசப்படாத பாசன நீர்முறை கழிவு

நீர்ப் பாசனமாகும்.

நுகர்வாளர்களாகியப் பொதுமக்கள் எவ்வளவு கொதித்து ஆர்பரித்தாலும், விவசாயிகள் பயன்படுத்துவதென்பது அவர்களுக்குக் கிடைப்பதை வைத்து தான். நாற்றமடிக்கும், கிருமிகள், இரசாயனங்கள்மிக்க தடியக் கழிவுகளில் இருக்கும் பாஸ்பேட்டுக்களும், நைட்ரேட்டுக்களும் காய்கறிகளை வளப்படுத்த உதவுகின்றன. ஸ்டாக்ஹோமில் நீர் பற்றிய கருத்தரங்கில் எடுத்து வைக்கப்பட்ட கருத்து இது.

இலங்கையில் இருக்கும் நீராண்மை நிலையத்தில் கிரிஸ் ஸ்காட் சொல்லுகிறார் ‘நீீர், சுகாதார, வேளாண்மை அமைச்சரகங்களில் பல்வேறு நாடுகளிலும் கழிவுநீர்ப்பாசனம் பெயரளவில் தடைச் செய்யப்பட்டாலும் நடைமுறையில் அதிகமாகக் கழிவுநீர்ப் பாசனம் அதிகமாகக் கையாளப் படுகின்றது. ‘.

சுமார் 20 மில்லியன் (200 லட்சங்கள்) ஹெக்டேர்கள் உலகமெங்கிலும் கழிவுநீர்ப் பாசனம் வேளாண்மைக்குப் பயன்படுத்தப் படுகின்றன எனத் தோராயமாக அவர் கூறுகின்றார். பாகிஸ்தானில் நாலில் ஒரு பகுதி காய்கறிகள், இலைத்தாவரங்கள் இங்ஙனம் கழிவுநீர்ப் பாசனம் கொண்டு வளர்க்கப்படுவது கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றது. இதைத் தின்றால் தான் ஷாயப் அக்தர் போன்று

கிரிக்கெட் பந்து வேகமாக வீசலாம் போல இருக்கின்றது.

கழிவு நீரினால் வியாபாரமோ பெருகின்றது. ஒரு மேற்கு ஆப்ரிக்க நகரத்தில் ஒரு விவசாயி 12 சாகுபடி கழிவு நீர்ப்பாசனம் கொண்டு Lettuce (லெட்யூஸ்) என்ற இலைத்தாவரம்தனை விளைத்து லாபம் அடைகின்றானாம். வளரும் நாடுகளில் கழிவுநீர்மட்டும் கிடைக்கும் இடங்களில் தூயக் குடிநீர்

கிடைப்பது துர்பலம். எவ்வளவு கரும்பு, மது தாயாரிக்கும் தொழிற்சாலைகளில் அருகே இருக்கும்

வீடுகளில் கிணற்றைப் பாருங்கள்! இதன் உண்மை விளங்கும். கோடையிலோ, கழிவு நீர் தான் நீர். இந்த நீரில் விளைந்தக் கீரையை ஆய்ந்து இதே நீரில் நனைத்து கூட்டு வைத்தால் அதன் ருசியே தனி தான்.

உலகச் சுகாதார நிறுவனத்தின் 2004 ரிப்போர்ட் படி 180000 மக்கள் வருடந்தோறும் டயோரியாவினால் தான் இற்க்கின்றனராம். பாகிஸ்தானில் கழிவுநீர் நிலத்தின் விலை, சாதாரண நிலைத்தை விட விலை அதிகம். முப்போகம் விளையும் பூமி அல்லவா ? மெக்ஸிகோ, ஜார்டான், இஸ்ரேல், டுனீஸியாவில் கூட கழிவுநீரைப் பதப்படுத்தி, வடிகட்டிப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தானில் இதை கடைப்பிடிப்பது அரிது. மக்களுக்கும் மிக தடித்த வயிற்றுத் தோல் என்றால் அது மிகையாகாது. மார்க்கெட்டில் விற்றால் எதையும் வாங்கும் மக்கள் இருக்கும் வரை ஒன்றும் நடக்காது. சொத்தைக் காய்கறிகள் இருந்தால் அதை வாங்குபவனும் நம்மிடம் உண்டே! எதையும் தின்றுத் தொலையும் மன்ப்பாங்கு நம்மிடையே நன்கு இருக்கின்றது.

வியாதிகளை அள்ளித்தாங்கி வரும் நுரையுடன் வரும் நீர், ஆலைகளிடமிருந்துப் பிரவாகமாய்ப் பாய்ந்து வரும் இரசாயன நீர் வரும் அதிஅற்புத இயற்கை காட்சிகளை வண்டியில் அமர்ந்து நம் நகர்ப்புறங்களில் எளிதேக் காணலாம். விலைகொடுக்காத அந்த இலவச உரத்தினை அன்புடன் வாரி அணைத்து வயல்களில் பாய்ச்சுவதையும் கண்ணால் காணலாம். கரும்புச் சாலைகளிலிருந்து, ஆடைகளுக்குச் சாயம்பூசும் தொழிற்பட்டைகளிலிருந்து, சிறுத் தொழிற்சாலைகளிலிருந்து வரும் நீரோடைகளை வைத்து ஒரு கவிதையே எழுதி விடலாம். அவ்வளவு ஒய்யாரமாக வரும் அந்த நீரில் பச்சைக் காய்கறிகளைப் பயிரிட்டு, விருந்து வைத்தால், என்றும் நலமாக இருக்கப் பிரார்த்தனை செய்யலாம்.

நமது நீர் வாரியங்கள் எதைப் பற்றிக் கவலைப் படும் ?. எவ்வளவு நீர் கொடுக்க வேண்டும் ? எவ்வளவு மின்சாரம் எடுக்கலாம் ?. என்பதைப் பற்றிய பிரச்சினைகளில் அவை மூழ்கி இருக்கும். தம்மால் பகிர்ந்து கொடுக்கப் படும் நீரினால் எவ்வளவு பாதிப்பு எங்கு நடந்தது ? என்ன வியாதிக்கிருமிகள் இருக்கின்றன ? என்பதெல்லாம் சுகாதாரத் துறைக் கவலைப்படும் கேள்விகள். நமக்கு அதற்கு நேரம் இல்லை என்று வாரியங்கள் நினைக்கலாம். ஆனால், யாரும் பொங்கி வரும் கழிவு நீரை பாசந்த்திற்கு உபயோகப் படுத்தினால் கேள்வி கேட்பார்களா என்று சந்தேகமே !

உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகள் கோக் ஐப் பூச்சிக் கொல்லியாகத் தெளித்தது நமக்கு ஞாபகம் இருக்கின்றது. உலகின் ஐந்தில் ஒரு பகுதி விளைபொருட்கள் இவ்வாறு நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களில் விளைவிக்கப் படுகின்றன. ஹைதராபாத் நகர்ப்புறங்களில் விளையும் பயிர்களுக்கு இந்தக் கழிவு நீர் தான் பாசன நீர். ஏழு கொண்டலப் பெருமாளே! தனக்குக் கேடுகள் வராமல் இருக்க இந்த விவசாயிகள் வெளி ஊர்களுக்கு லாரிகளில் காய்கறிகளை அனுப்புகின்றனர். அது சரி! நமக்கு இருக்கும் மக்கள் தொகைக்கு அடுத்த வேளை தயிர் சாதத்திற்கு கத்திரிக்காய் பொரியல் இருந்தால் போதுமே ! அது எப்படி வந்தால் நமக்கென்ன ? சாப்பிடுவது வெளியூர் மக்களாக இருந்தால் நாம் தப்பித்தோம்.!

இதைத் தடைப்படுத்துவது நடக்காத காரியம். விவசாயிகள் இதைப் பயன்படுத்தும்போது வடிகட்டும் முறைகளைப் பற்றியும், நன்மை, தீமைகளை விளக்கிப் பயன்படுத்தும்படி அரசாங்கங்கள் வேளாண்மைத்துறை எடுத்துணர வைக்க வேண்டும். அது சரி ! வயலும் வாழ்வு எப்படி பார்ப்பது ?. யார் தூர்தர்ஷன் பார்க்கிறார்கள் ?. சன் டிவியில் அதைக் காண்பிக்க மாட்டார்களே ! பொதுமக்களும் மொத்த காய்கறி கொள்முதல் வியாபாரிகளிடம் கேள்வி கேட்கத் தயங்கக் கூடாது.

வெவ்வேறு இடங்களில் இருந்து வரும் காய்கறிகளை இறக்கி வைப்பதை விட்டு இப்படி தத்து, பித்துவென்று கேள்வி கேட்பவங்ககிட்டே பதில் சொல்ல நம்ம ஊர் வியாபாரிகள் முட்டாள்களா ?

கோயம்பேடு காய்கறித் தங்கங்களே, நம்ம வயிற்றைக் கொஞ்சம் கவனியுங்க ! காய்கறிகளை நல்லாக் கழுவுங்க ! நாம வாழா விட்டாலும் ! நம்ம ஊருக் கழுதை, நாய், பசு எல்லாம் வாழ வேண்டாமா ?. நாம் வளர்வது கழிவுநீர்! குடிப்பது கழிவுநீர். சாப்பிடுவதும் கழிவு நீரில் விளைந்தவை. நம் பேரக் குழந்தைகள் கூட இதையே அனுபவிக்கணுமா ?.

நடிகர் விஜய் ஒரு படத்தில் தோன்றியதுபோல கலெக்டராக இருந்து பின் காய்கறி கடை வைத்தால் தான் நமக்கு விமோசனமோ ?

– கிருஷ்ணகுமார்

Reference

www.newscientist.com dt. 18, Aug 2004

பிரெட் பியர்ஸ், ஸ்டாக்ஹோம்

http://www.iwmi.cgiar.org/about/stratplan/themes/theme5.htm

Jan 18, 2004

Series Navigation

கிருஷ்ணகுமார்

கிருஷ்ணகுமார்