கண்டு கொண்டேன் !

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

பி.டி. ஸ்மித்


தமிழில் : ராமன் ராஜா

(John Waller எழுதிய Leaps in the Dark: The making of Scientific Reputations புத்தகம் பற்றி கார்டியன் இதழில் வந்த மதிப்புரை)

பெர்டோல்ட் பிரெஹ்ட் இத்தாலிய இயற்பியலாளரான கலீலியோவைப் பற்றி எழுதிய மிகச் சிறப்பான ஒரு நாடகத்தில் கலீலியோ சொல்வார்: ‘பெரும் நாயகர்கள் இல்லாமல் வாழ முடியாததா ஒரு நாடு! என்ன பரிதாபம் அதன் நிலை! ‘ ஜான் வாலர் இதை அப்படியே ஒத்துக் கொள்வார். 2002-ல் அவர் எழுதிய ‘அதி அற்புதமான அறிவியல் ‘ (Fabulous Science) என்ற நூலில் வாலர், எப்படி அறிவியல் என்பதே ஒரு சக்தி மிக்க தொடர் நாடகம் போன்றது, அதில் தொழில் திறமையை எல்லாம் தாண்டி முக்கியமாக இருப்பது தனி மனிதரின் அப்பட்டமான பேராசை என்று காட்டினார். வாலரின், இருட்டுக்குள் நீண்ட தாவல்கள் (Leaps in the Dark) என்ற புதிய புத்தகமும் அதைப் போலவே பழைய கட்டுக் கதையை எல்லாம் போட்டுடைக்கும் புத்தகம்தான்.

மறுபடியும் பல பெரிய விஞ்ஞானிகளைக் குறி வைக்கும் வாலர், ஒரே கதையைத் திரும்பத் திரும்ப அரைத்திருக்கிறார்கள் என்று அறிவியலாளர்கள் பற்றி சமீபத்தில் வந்த பல ஜனரஞ்சக வரலாறுகளை சகட்டு மேனிக்குத் தாக்குகிறார். ‘(காட்சி 1): ஹீரோவுக்குத் திடாரென்று ஒரு அருமையான ஐடியா உதிக்கிறது. (காட்சி 2): அவருக்கெதிராக ஒரே பொறாமை, புகைச்சல், எதிர்ப்பு !.. (காட்சி 3): எல்லாவற்றையும் சமாளித்துக் கடைசியாக வெற்றிக் கொடி நாட்டுகிறார் கதாநாயகன்… ஒரே ஆரவாரம், கைதட்டல்! ‘

வாலரைப் பொறுத்தவரை உண்மையில் அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் பல மூளைகளின் கூட்டு முயற்சியாகத்தான் இருக்குமே தவிர, தன்னந்தனிக் கதாநாயகர்களின் தீரச்செயலாக இராது. யோசித்துக் கொண்டே இருந்தாராம், ‘யுரேகா ‘ என்று ஒரு ஐடியா தோன்றியதாம் என்பதெல்லாம் விஞ்ஞானம் பற்றி எழுதும் எழுத்தாளர்களின் பீலா! கீழே விழுந்த ஆப்பிள் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கத் தூண்டிய கதையும் இப்படித்தான், ஒரு கட்டுக் கதை. நியூட்டன்தான் கில்லாடியாயிற்றே, தன் சக விஞ்ஞானிகளின் பங்களிப்பை இருட்டடிப்பதற்காகவே இப்படி ஒரு கட்டுக் கதையை ஜோடித்திருக்கக் கூடும் என்கிறார் வாலர். திடார் கண்டுபிடிப்புகள் படிக்க சுவையாக இருக்கலாம், ஆனால் வரலாறா என்று பார்த்தால் இதெல்லாம் படு மோசடி.

வெகுஜன எழுத்தாளர்கள் அறிவியலை எளிமைப் படுத்துகிறேன் பேர்வழி என்று உண்மைகளைத் திரிப்பதைக் கண்டு பொங்கி எழுகிறார் வாலர். ‘முன்னணி விஞ்ஞானம் என்பது சிக்கலான, சொதப்பலான, நிச்சயமில்லாத பங்காட்டம். எல்லாம் நடந்து முடித்து, திரும்பிப் பார்க்கும்போதுதான் எல்லாம் தெளிவாக இருப்பது போலத் தெரியும். ‘அப்போது ஜெயித்த கட்சியில் இருப்பவர்கள் ஹீரோ ஆகிவிடுகிறார்கள், மற்றவர்களுக்கெல்லாம் வெறும் சுயநலக்காரர்கள் என்று கரும்புள்ளி செம்புள்ளி குத்தப் படுகிறது ‘. இப்படி நடந்த சில சொதப்பல்களை சீர் செய்யும் பொருட்டு வாலர், பல உதாரணங்களின் மூலம் சில புகழ் பெற்ற விஞ்ஞானிகளைக் கையைப் பிடித்துப் பீடத்திலிருந்து இறக்கிவிட்டு, தோற்றுப்போய் ஓரம் கட்டப்பட்ட சிலரை அப்பீடத்தில் அமர்த்துகிறார்.

தப்பான குதிரை மேல் பந்தயம் கட்டித் தோற்றவராகக் கருதப்பட்ட பல விஞ்ஞானிகள், அப்பழுக்கு சொல்ல முடியாத அறிவியல் முறைப்படிதான் பிரச்னையை அணுகியிருக்கிறார்கள். 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோஸப் க்லான்வில் அப்போதைய விஞ்ஞானப் புரட்சியில் ஒரு முக்கியப் புள்ளி. ராயல் சொசைட்டியில் உறுப்பினரும் கூட. ஆனால் அவருக்குப் பேய் பிசாசுகளில் நம்பிக்கை. அவரைப் பொறுத்தவரை பேயைப் பார்த்தேன், கேட்டேன் என்று ஆயிரக் கணக்கானவர்கள் சத்தியம் செய்வதால் அது புள்ளியியல்படி உண்மை. இப்போதைய சிந்தனையை வைத்துக் கொண்டு இதெல்லாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கித் தள்ளுவது சுலபம்; ஆனால் அந்தக் கால கட்டத்தில் பேய் பிசாசு நம்பிக்கைகள் சமுதாயத்தின் ஒரு பிரிக்கமுடியாத அங்கம். ஆகவே வாலரைப் பொறுத்தவரை, அவர்களின் அறிவியல் (அன்று அதற்கு இயற்கைத் தத்துவம் என்று பெயர்) – கோணத்தில் பார்த்தால் அதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டியிருக்கும். க்லான்வில் இந்தப் பிரச்னையை விஞ்ஞானிக்கே உரிய சந்தேகக் கண்ணோடுதான் எச்சரிக்கையாக அணுகினார். ஆனால் 1600 வாக்கில் இருந்த உலகம், விநோதமான உலகம். விவரிக்க முடியாத (பில்லி சூனியம் போன்ற) இருண்மையான சக்திகள் நிறைந்த உலகம். நியூட்டனாலேயே கூடப் புவியீர்ப்பு விசையின் மர்ம சக்தியை விளக்க முடியவில்லை; இருந்தும் புவியீர்ப்பு விசை ஒன்று உண்டு என்பதை அப்போது யாரும் சந்தேகித்துக் கேள்வி கேட்கவில்லை. க்லான்வில் அடைந்த ஆராய்ச்சி முடிவுகள், அவருக்கு முன்னாலும் பின்னாலும் வாழ்ந்த பல அங்கீகாரம் பெற்ற விஞ்ஞானிகளின் முடிவுகளைவிட சற்றும் மோசமில்லை.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எப்படி நிகழ்கின்றன என்ற நுணுக்கங்களை ‘இருட்டுக்குள் நீண்ட தாவல்கள் ‘ புத்தகம் அபாரமாக வெளிப்படுத்துகிறது. அறிவியல் ஏதோ ராஜபாட்டையில் சொகுசாகப் பயணித்து நேரடியாக உண்மைகளை அடைவதில்லை. வளைந்து நெளிந்து போகும் நதியை வேண்டுமானால் அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். விஞ்ஞானத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால், அது ஏதோ பெரும் உண்மையைக் கண்டு பிடிப்பதைப் பற்றிச் சொல்வதை விட, நம்மைப் பற்றியும், இந்த உலகத்துடன் நமது தொடர்பைப் பற்றியும்தான் ஏராளமான கதைகளைச் சொல்லும். வரலாற்றின் கவர்ச்சியே இதுதான் !

வாலரின் புத்தகத்தில் ஹீரோ என்று யாருமில்லை; ஆனால் வில்லன்கள் நிறைய உண்டு. விஞ்ஞானத் தேடலை விடத் தன்னுடைய பெயரிலும் புகழிலுமே முனைப்பாக இருந்த அறிவியலாளார்களே இவர்கள். வாலர் சொல்கிறார் : ‘அறிவியலிலும், அரசியலைப் போலவே, சுய தம்பட்டமடிப்பவர்கள் உண்டு ‘.

அந்தக் கால மனநோய் மருத்துவ மனைகளில் நோயாளிகளைச் சங்கிலியால் கட்டி வைப்பது வழக்கம். மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் பிலிப் பைனல், 1793ல் சங்கிலிகளையெல்லாம் அறுத்தெறிந்து மனநோயாளிகளை விடுவித்து புரட்சி செய்த விடுதலை வீரர் என்று என்று பல ஓவியங்களாலும், சிலைகளாலும் புகழாரம் சூட்டப்பட்டவர். ஆனால் இதில் ஒரே ஒரு பிரச்சினை. என்னவென்றால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று போட்டு உடைக்கிறார் வாலர்.

மற்ற கட்டுக் கதைகளோ இன்னும் சுய நலத்தில் ஊறியவை. ‘ராடாரின் தந்தை ‘ ராபர்ட் வாட்ஸனின் கதை இதை விட கேவலம். தன்னுடைய கண்டு பிடிப்பினால் பிரிட்டன் ஹிட்லரின் விமானப் படைக்கு இரையாகாமல் தப்பித்ததாகவும், தான் ஒரு அறிவியல் ஹீரோ என்றும் தன்னைத் தானே பிரபலப் படுத்திக் கொண்டவர் வாட்சன். அவருடைய குழு உலகப் போரின் போது ஓர் எளிய ஆனால் உருப்படியான ராடாரைக் கண்டுபிடித்ததனால் ஜெர்மனியின் விமானங்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகாமல் தப்பித்தது பிரிட்டன். ஆனால் போர் முடிந்த பிறகு வாட்ஸன் செய்ததுதான் அக்கிரமம்: இந்த சுயநலக்கார மனிதன் திட்டம் போட்டு எல்லாப் பதிவேடுகளையும் அழித்தும் கலைத்தும் தன் சகாக்களின் பெயர்கள் எங்கும் வெளிவராமல் அமுக்கிவிட்டார். ’20ம் நூற்றாண்டின் இணையற்ற பொறியியல் கண்டுபிடிப்பு முழுவதும் என்னுடையதே ‘ என்று அவர் பின்னால் அடித்துப் பேச வசதியாகிவிட்டது. (உள்ளபடி பார்த்தால் முதல் ராடார் 1904-லேயே கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது.)

‘எந்த ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் ஒரு தனி மூளையின் சாதனை அல்ல, அல்ல ‘ என்ற வாலரின் பொன்மொழியை, அறிவியல் பற்றி எழுத முன்வரும் ஒவ்வொரு எழுத்தாளனும் பிரேம் போட்டு தன் எழுத்து மேஜையின் முன்னால் மாட்டி வைத்துக் கொள்வது அவசியம்.

(Leaps in the Dark: The Making of Scientific Reputations by John Waller 291pp, Oxford. கட்டுரை ஆசிரியர் P.D.Smith, படங்களால் ஆன வரலாறாக ஐன்ஸ்டைனின் வாழ்வைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். ஹவுஸ் (Haus) பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.)

r_for_raja@rediffmail.com

Series Navigation

பி.டி. ஸ்மித்

பி.டி. ஸ்மித்