நர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம்! இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


சொந்த சகோதரர்கள்

துன்பத்தில் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடி – கிளியே

செம்மை மறந்தாரடி!

நாட்டில் அவ மதிப்பும்

நாணின்றி இழி செல்வத்

தேட்டில் விருப்பங் கொண்டே- கிளியே

சிறுமை அடைவாரடி! … (நடிப்புச் சுதேசிகள்)

மகாகவி பாரதியார்

ஒரு தலைமுறை ஓடி விட்டது!

மறு தலைமுறை வந்து விட்டது!

எனினும் பூமி

அப்படியே உள்ளது

எப்போதும் போல்!

உலக நதிகள் அனைத்தும்

கடலை நோக்கியே

ஓடினாலும்

கடல் நிறைய வில்லை

இன்னும்!

‘உலக சமூகத்தார் தமது நிதியிருப்பு, சூழ்மண்டலக் காப்பு, சமூகப் பாதிப்பு ஆகியவற்றை வெளிப்படையாய் வாதித்து, மனித பலாபலன்கள், நிதிச்சிக்கனம் இரண்டையும் எடைபோட்டுத் திட்டங்களைத் தீர்மானித்து மெய்யான முடிவுக்கு வர வேண்டும் ‘

டேவிட் மெக்டூவல் [David McDowell, Director General, World Conservation Union (IUCN)]

‘உலக வங்கியும், இந்தியாவும் நர்மதாவில் கட்டப்படும் சர்தார் சரோவர் திட்டங்களால் நேரும் மக்களின் பாதிப்புகளை ஆழ்ந்து அலசிப் போதிய மதிப்பீடுகள் செய்யத் தவறி விட்டன. பாதிக்கப்படும் மக்களுடன் கலந்தாய்வுகள் புரியாததாலும், அடிப்படை நியதிகள் கையாளப் படாததாலும், திட்டங்களின் டிசைனில் சூழ்மண்டலப் சிதைவுகளை எதிர்பார்க்கவும் இல்லை. அவற்றைக் குறைக்கும் முறையான வழிகளும் முன்னதாகக் கருதப்பட வில்லை.

சர்தார் சரோவர் திட்டங்கள் குறைபாடுகள் கொண்டுள்ளதால், தற்போதைய சூழ்நிலைகளில் இடப்பெயர்ச்சி ஆகும் மக்களுக்குப் புதுக் குடியேற்ற ஈடுபாடுகள் கொடுக்க முடியாது என்று கருதுகிறோம். திட்டங்களை ஒப்பாத அடக்கு முறைகளில் நிறைவேற்றுவதைத் தவிர, கட்டுமான வேலைகள் முன்னேறும் இனி என்று சொல்ல முடியாது! நர்மதா ஸாகரைச் சேர்த்துக் கொண்டாலும், சேர்க்கா விட்டாலும், சர்தார் சரோவர் திட்டத்தில் நீரோட்டப் பண்பியல் [Hydrology] நெறிகள் எவையும் புரிந்து கொள்ளப்பட வில்லை.

இந்தியாவில் அரசியல் போக்கு, நிதிச் செல்வாக்கு நெறிகளின் அழுத்தத்தின் பேரில் எதுவும் மீறப்பட்டு முடிவுகள் தீர்மானிக்கப் படுவதால், சர்தார் சரோவர் திட்டங்களின் இயக்க முறைகள் ஒவ்வாத வழியில் செல்வதைக் கருத்தில் கொண்டு, உலக வங்கி நிதியளிப்பு செய்வதில் உறுதி செய்ய வேண்டும்.

மோர்ஸ் கமிஷன் ஆய்வு அறிவிப்பு (1992)

பாரதத்தின் பேரணைகள் இந்தியரால் கட்டப்பட்டு, இந்தியருக்குப் பலனளிக்கும், இந்தியருடைய நீர்வளச் சொத்துக்கள்! இடப்பெயர்ச்சி, நில ஒதுக்கம், நிதியீடு, குடியேற்றப் பிரச்சனைகளைக் குறிவைத்துக் கொண்டு, பேரணைகள் தேவையில்லை என்று வட இந்தியாவில் போரிடும் அருந்ததி ராய், மேதா பட்கர் போன்ற அறிவாளிகள், நீர்வளப் பற்றாக்குறை பற்றிய எதிர்காலச் சிந்தனை இன்றி எளிய மக்களை தெளிவு படுத்தாமல் இழுத்துக் கொண்டு அரசாங்கம் மீது, ஆவேசமாகப் படையெடுத்து வருவது நீதி நெறியற்ற செயல்! அதே சமயத்தில் பேரணைகள் கட்டி மின்சக்தியும், குடிநீரும், நீர்ப்பாசான வசதித் திட்டங்களை நிறுவகம் செய்வதில், மக்கள் இடப்பெயர்ச்சி ஆகும் போது நிதி ஈடு அளிப்பில் இன்னல்கள் இழைப்பதும், புதுக் குடியேற்ற அமைப்புகளில் கோளாறுகள் நிகழ்வதும், கடந்த 50 கால இந்திய வரலாறுகளில் காணத் தவறாத சம்பவங்களாகும்! இந்திய அரசும், மாநில அரசுகளும் பண்பு நெறியுள்ள, தேசப் பற்றுள்ள அரசியல் வர்க்கத்தால் கையாளப்பட்டு நதியிணைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படா விட்டால், நாள் தோறும் பாதிக்கப்படும் பொது மக்களின் எதிர்ப்புக் கலகங்கள் பரம்பரையாய், அலையலையாய் எழுந்து கொண்டேதான் இருக்கும்!

கட்டுரை ஆசிரியர்

நர்மதா நதித் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம்

இந்தியாவில் கங்கா நதிக்கு அடுத்தபடியாக இந்துக்களால் புனித நதியாகப் போற்றப்படுவது, நர்மதா நதி!

மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி 1300 கி.மீ. (780 மைல்) மிகையான நீளத்தில் ஓடி அரபிக் கடலில் இறுதியாகச் சங்கமம் அடைகிறது. நாற்பத்தி ஒன்று கிளைநதிகளைப் பிணைக்கும், பெரு நதியான நர்மதா மட்டும் 20 மில்லியன் மக்களுக்கு நீர்வளமும், சுமார் 100,000 சதுர கி.மீ. நீர் வடிகால் பரப்பும் கொண்டது. 1930 இல் நர்மதா நதியின் நீர்வளத்தைக் கறந்தெடுக்கப் பிரிட்டிஷ் இந்தியாவே திட்ட மிட்டிருந்தது. 1986 ஆண்டு அறிக்கைப்படி, நர்மதா நதித் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டால் 350,000 ஹெக்டா ஏக்கர் கானகங்களும், 200,000 ஹெக்டா ஏக்கர் வேளாண்மை வயல்களும், நீர்த் தேக்கத்தால் மூழ்கிவிடும் என்று அஞ்சப்பட்டது!

உலக நதிகளில் இந்தியாவின் நர்மதா நதிபோல் 30 பேரணைகளும், 135 நடுத்தர அணைகளும், மற்றும் 3000 சிற்றணைகளும் கிளை நதிகளில் கட்டப்பட்டு மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மாநில மக்களுக்குக் குடிநீர் வளமும், நீர்ப்பாசான வசதியும் அளித்து வரும் வேறொரு நதி இணையாக இருக்கிறதா வென்று தெரியவில்லை! குடிநீர் அளிப்பதோடு, முக்கியமாக நீர்ப்பாசான வளர்ச்சிக்கும், நீர்மின்சார உற்பத்திக்கும் ஏதுவாக 455 அடி உயரத்தில் அதன் புதுப் பேரணை சர்தார் சரோவர் திட்டம் உதயம் ஆனது. ஆனால் அதன் தற்போதைய உயரம் 340 அடியாகக் குன்றித்தான் இருக்கிறது. தனியார் துறைகளின் அறிவிப்பின்படி 400,000 பழங்குடியினர் இடப்பெயர்ச்சியில் கடத்தப்படுவர் என்றும், 50,000 குடும்பங்கள் புதுக் குடியேற்ற அமைப்பில் அடைக்கப்படுவர் என்றும் தெரிய வந்தது.

முதற்கட்ட அணைத் திட்டம் 2000 ஆண்டு முடிந்தது. ஆனால் அதன் கால்வாய்த் திட்டங்கள் அனைத்தும் 2020 ஆண்டில்தான் கட்டுமானம் அடையும் என்று தீர்மானிக்கப் பட்டது. அதன் நீர்மின்சார நிலையங்கள் 1450 மெகாவாட் ஆற்றல் உற்பத்தி செய்யும். கால்வாய்கள் நீர்ப்பாசானம் செய்யும் நிலப்பரப்பு: 1,912,150 ஹெக்டா ஏக்கர். அணைமட்டும் 37,000 ஹெக்டா ஏக்கர் நிலப்பரப்பையும், கால்வாய்கள் 117,000 ஹெக்டா ஏக்கர் நிலப்பரப்பையும் மூழ்கடிக்கும் என்று கணக்கிடப் பட்டுள்ளன. அணையை முன்னிட்டு 200,000 பேரும், கால்வாய்கள் தோண்டுதலால் 350,000 பேரும் இடப்பெயர்ச்சியில் பாதிக்கப்பட்டுப் புதுக் குடியேற்றத்தில் புகுத்தப்படுவர் என்றும் முதலில் மதிப்பீடுகள் செய்யப்பட்டன.

பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நர்மதா பள்ளத்தாக்குக் கிராம மக்கள், நதியில் அணைகள் கட்டக் கூடாதென்று மாநில அரசாங்கத்துடன் கடுமையான போராட்டம் செய்து வருகிறார்கள்! நர்மதா பெருநதியில் அமைக்க விருந்த சர்தார் சரோவர் திட்டங்களில் இடையூறுகளும், தகராறுகளும் மிகையாகி எதிர்ப்புக் கிளர்ச்சிகள் அலையலையாய் முளைத்து உலக இகழ்ச்சியைப் பெற்றது! நர்மதா கிளர்ச்சிப் போராட்ட வர்க்கத்தின் [Narmada Bachao Andolan (Save the Narmada Movement)] கீழ் கிராம மக்கள் பெரும் எதிர்ப்புக் கணைகளை விட்டு, 1990 ஆரம்ப காலத்தில் உலக வங்கியை [World Bank] வற்புறுத்திப் பின்வாங்கும்படி செய்தது வருந்தத் தக்கது! உச்சநீதி மன்றத்தில் புகார் மனுப் போட்டு, சர்தார் சரோவர் அணைத் திட்டம் நிறுத்தப்பட்டு ஆறாண்டுகள் கட்டப் படாமல் காலம் கடந்ததும் வருந்தத் தக்கது! ஆயினும் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 18 தேதி, உச்சநீதி மன்றம் கருத்து மாறுபட்ட தீர்ப்பை முடிவு செய்து, திட்டம் தொடர்ந்து நிறுவகமாக ஆணை யிட்டது, வரவேற்கத் தக்கது!

நர்மதா ஸாகர் அணைத் திட்டங்கள்

நர்மதா ஸாகர் அணை சர்தார் சரோவர் அணைக்கு மேலோட்ட நதியில் [Upstream River] அமைக்கப்பட இருப்பது. நர்மதா ஸாகர் திட்டங்களில் மூன்று அணைகள் [நர்மதா ஸாகர், மகேஷ்வர், ஓங்காரேஷ்வர்] கட்டப்படும். அவற்றில் நர்மதா ஸாகர் மூன்றிலும் பெரியதாய் சுமார் 60,000 சதுர கி.மீ. வடிகால் பரப்பைக் கொண்டது. அவை 1000 மெகாவாட் நீர்மின்சாரம் உற்பத்தியும், 123,000 ஹெக்டா ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசானமும் அளிக்க வல்லவை. அணைகள் அமைப்பால் சுமார் 130,000 பேர்கள் இடப்பெயர்ச்சியில் பாதிக்கப் படுவர் என்று எதிர்பார்க்கப் பட்டது. சூழ்மண்டலப் பாதகத் தவிர்ப்பைக் [Environmental Clearance] கேட்டு நர்மதா ஸாகர் அணைக்கும், சர்தார் சரோவர் அணைக்கும் 1987 இல் ஒரே சமயத்தில் விண்ணப்பம் அனுப்பப் பட்டது. உலக வங்கி ஒவ்வொன்றையும் தனித்து நோக்கி, 1985 இல் சர்தார் சரோவர் அணைக்குக் கடன்நிதியை உறுதிப் படுத்தியது. 1990 இல் நர்மதா ஸாகர் திட்டத்தின் நிதிச் செலவு, முதல் மதிப்பீடை விட 43% மிகையானது! 2000 ஆண்டில் நர்மதா ஸாகரின் நிதியிருப்பு சுண்டிப்போய் திட்டப் பணிகள் யாவும் தடைப்பட்டன! பிரம்மிக்கத் தக்க எதிர்ப்புக் கிளர்ச்சிகள் அடிக்கடி எழும்பித் திட்ட வேலைகளுக்கு இடையூறாய் முட்டுக் கட்டையும் இட்டன!

நர்மதா ஸாகர் கட்டி முடிக்கப் பட்டால், அது மக்களுக்குப் பலாபலன்களை அளிப்பதை விடச் சமூகப் பாதிப்புகளையும், பேரளவு சூழ்மண்டலத் தொல்லைகளையும் கொடுக்கும் என்று கருதப்படுகிறது. நர்மதா நதிப் பள்ளத்தாக்குத் திட்டங்களிலே நர்மதா ஸாகர் அணைதான் பிரச்சனைகள் மிகுந்த வாதத்துக்கு இடமளிக்கும் திட்டமாக எண்ணப் படுகிறது. 1981 இல் இடப்பெயர்ச்சி மக்களின் மதிப்பீடான 130,000 குன்றிய எண்ணிக்கை ஆனது. நர்மதா ஸாகர் அணைப் பேரளவு ‘நீர்வள முடக்கம் ‘ [Waterlogging] உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது! 1990 இல் தயாரிக்கப்பட்ட பராஞ்சிபையி அறிக்கையின் மூலம் [Paranjepye Report (1990)] நர்மதா ஸாகர் அணை, ஓங்காரேஷ்வர் அணை இரண்டும் 100,000 ஹெக்டா ஏக்கர் நிலப்பரப்புகளில் நீர்வள முடக்கங்களை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. மற்ற அணைப் பாதிப்புகள்: கானக அழிப்பு [Deforestation], தள அரிப்பு [Erosion], வேளாண்மை நிலங்களில் உப்பு உறிஞ்சல் [Salination] போன்றவை.

உலகப் பேரணைக் கூட்டவை ஆய்வு செய்த முடிவுகள்

2000 ஆண்டில் ‘உலக அணைகளின் தேர்வுப் பேரவை ‘ [World Commission on Dams] சார்பாக 52 நாடுகள் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் ஒன்று கூடி, உலகிலே உள்ள 125 பேரணைகளைப் பல கோணங்களில் நோக்கி ஆராய்ச்சி செய்து ஒரு பெரும் முடிவறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. அவற்றைக் கூர்ந்து உளவாய்வு செய்ய 100 பங்களிப்பார்கள் அணைகளைப் பற்றி முழுத் தகவல்களை உதவி இருக்கிறார்கள். உலக நாடுகள் அணைப் பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட தகவல்களை சுமார் 900 தலைப்புகளில் சமர்ப்பித்துள்ளன. மொத்தம் 154 பேரணைகளின் தகவல்கள் தேர்வுக்கு எடுத்துக் கொண்டதில் 80% பேரணைகளின் அறிக்கைகள் கிடைக்கப்பட்டு, ஒத்துப் பார்க்கப் பட்டன. உலகத் தேர்வுப் பேரவையின் பிரதம குறிக்கோள்: இதுவரை கட்டுப்பட்டு இயங்கிவரும் பூகோளப் பேரணைகளின் பூர்வீகப் பணி நிறைவேற்றம், பாதிப்புகள், பழுதுகள், உடைப்புகள் ஆகியவற்றைத் துருவி ஆராய்ச்சிகள் செய்து, அவற்றின் வார்ப்புப் பாங்குகளையும், போக்குத் திசைகளையும் [Patterns & Trends] கண்டறிவது. அந்தச் சுற்றாய்வு விளைவுகளில் [Survey Results] பாங்குகள், போக்குகள் இரண்டும் உலக அரங்குகளுடன் கொண்டிருக்கும் இணைப்பு முக்கியமாகத் தெரிந்தது!

உலகத் தேர்வுப் பேரவை கண்ட முடிவுகள்

1. தேர்வுக்கு எடுத்தாண்ட பெரும்பான்மையான பேரணைகள் டிசைன் செய்யப்பட்ட அளவுக்குக் கீழாகவே பணியாற்றி குன்றிய பலாபலன்களையே அளித்து வருகின்றன. ஆனால் சில பேரணைகள் எதிர்பார்த்த காலத்துக்கும் மேலாகப் பலாபலன்களைக் கொடுத்ததோடு, இன்னும் தொடர்ந்து அளிப்பதாக அறியப்பட்டன.

2. சூழகத்தின் உயிரினங்கள் [Ecosystems] சீர்கேடான பாதிப்புகளில் உட்பட்டன. இப்போதும் பெரும்பான்மையான அணைத் திட்ட அமைப்பு டிசைன்களில் அவற்றின் சிதைவுகள் எதிர்பார்க்கப் படுவதுமில்லை! தீர்மான முடிவுகளில் சூழக உயிரினச் சிதைவுகள் எடுத்துக் கொள்ளப் படுவதுமில்லை!

3. அணைத் திட்டங்களால் இடப்பெயர்ச்சிச் சிரமத்தில் சிக்கிக் கொள்ளும் மாந்தரின் எண்ணிக்கையும், புதுக் குடியேற்ற மனைகளில் புகுத்தப்படும் குடும்பத்தினரின் அனுமானங்களும், முறைமாறாத குறை மதிப்பீட்டிலேதான் [Systemic Underestimation] கணக்கிடப் பட்டிருந்தன! இவற்றை விண்ணப்பிக்கும் புகார் விதிகளும் சீராக இல்லாததால், அதுவும் திட்டங்களின் எதிர்ப்பு தீயிக்கு எண்ணை வார்த்தது!

4. கடந்த நூற்றாண்டில் திட்ட மிடப்பட்ட அணைகளைக் கட்ட முடிவு செய்யும் ‘தீர்மானக் கணுக்கள் ‘ [Deciding Parameters] காலம் செல்லச் செல்ல மாறிக் கொண்டு வருகின்றன! எளிதாக ஒருசிலர் இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகளில் சிந்தித்துத் தீர்மானித்து அணைகளை முடிவு செய்தது ஒரு காலம். இப்போது சமூக, கலாச்சார, சூழகக் காப்பு, நிதித்தேவை, பொறி நுணுக்கம் ஆகியவற்றை உளவு செய்து, பாதிக்கப்படும் மக்களின் உடன்பாடும், மாநில அரசாங்க ஒப்பந்தமும் பெற்றுத் தீர்மானிப்பதற்குப் பத்து அல்லது இருபது ஆண்டுகள் கூட எடுக்கலாம்!

சர்தார் சரோவர் அணைத் திட்டத்தில் ஏற்பட்ட தவறுகள்

உலகப் பேரணைக் கூட்டவை கண்ட கருத்துகளின் மூலம் நர்மதா திட்டங்களைத் திறனாய்வு செய்தால் கீழ்க்காணும் தவறுகள் தெளிவாகத் தெரிகின்றன. அந்த திட்டங்களில் சர்தார் சரோவர் அணை, நர்மதா ஸாகர், மகேஷ்வர் அணை ஆகிய மூன்றின் பிரச்சனைகளும் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன.

1. இடப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் மாந்தருக்கு ஏதுவாக இருக்க நிதியீடு அளிப்பு முறைகள், குடியேற்ற விருத்தி அமைப்புகள், வெகு முன்னதாகவே நிலைபெற வேண்டும்.

2. மக்களுக்குப் பெரும் பாதகம் இழைக்கும் சூழகச் சிதைவு, ஊதியத் தொழில் முறிவு, மாந்தர் உடல்நலக் கேடு போன்றவை மீள முடியாததால், நிச்சயமற்ற கணிப்புகளிலும், பற்றாத துறைகளிலும் மாநில அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

3. சர்தார் சரோவர் திட்டத்தில் ஆழ்ந்த முழுமையான சூழ்மண்டக் காப்பு உளவுகள் எதுவும் செய்யப்பட வில்லை. முறையான குடியேற்ற ஏற்பாடுகள் [Rehabilitation Plans] முன்பாகவே தயாரிக்கப் படவில்லை. நிலத்துக்கு நிலம் ஈடு அளிக்க வேண்டும் என்று சட்டம் இருந்தாலும், சமமாகப் பங்கிட்டுத் தர போதிய நிலங்கள் மாநில அரசாங்கத்திடம் இல்லாமல் போயின!

4. 1987 இல் மத்திய அரசு ‘நிபந்தனைச் சூழக உளவு நீக்கம் ‘ [Conitional Environmental Clearance] மாநிலத்துக்கு அளித்து அணைகட்ட அனுமதி கிடைத்தது. ஆனால் இந்திய அரசியல் சட்டப்படித் தேவையான அடிப்படைச் சூழகப் பாதிப்பு ஆய்வுகளைக் கூட, இன்றுவரை மாநில அரசாங்கம் செய்ய வில்லை.

5. நீர்மின்சார நிலையங்களின் இயக்கம் கூட குறிப்பிட்ட அளவுக்குக் குறைவாகவே இருந்து, பயன்பாடுகள் குன்றின. அணையின் டிசைன் உயரம் பின்னால் குறைக்கப்பட்ட காரணத்தாலும், மின்சார உற்பத்தி சற்று குன்றியது.

6. நீர்ப்பாசான நீர்வெள்ளம், குடிநீர் பரிமாற்றம் ஆகிய இரண்டுமே குறிப்பிட்ட அளவில் அனுப்பப்பட வில்லை. மேற்கூறிய (5,6) இரண்டு முக்கிய விளைவுகள், திட்டத்தின் நிதிச்செலவு மீட்சி [Cost Recovery], நிதிச்சிக்கன இயக்கத்திறம் [Economic Performance] ஆகிய இரண்டையும் குறைத்துக் காட்டின.

7. ஓரிடத்தில் குடியிருக்கும் பொதுமக்கள், பூர்வீகக் குடிகளின் திறந்த கருத்துப் பரிமாற்ற மின்றி, ஒருமித்த உடன்பாடு இன்றி, எந்தத் திட்டமும் அந்த இடத்தில் ஆரம்பிக்கப்படக் கூடாது. நர்மதா பள்ளத் தாக்கில் வாழும், ஆயிரக் கணக்கான பூர்வீகக் குடிகளும், கிராம மக்களும் காட்டிய கடுமையான எதிர்ப்புகளை மீறியே, சர்தார் சரோவர் அணைத் திட்டம் உருவாகி உள்ளது! பாதிக்கப் பட்ட மாந்தர் வீட்டை விட்டு வெளியேற மறுத்து, நீரில் மூழ்கி மடியத் தயாராகத் தர்ம யுத்தம் புரிந்தனர். தர்ம யுத்தத்தின் தலைவியாக மிஸ். மேதா பட்கர் முன்னின்று, அவரும் கழுத்தளவு நீரில் நின்று கடும் எதிர்ப்பைக் காட்டினார்! அவர்களின் போராட்டக் குரல் கேட்காமலே போயிற்று! இடத்தை விட்டு வெளியேற மறுத்த மாந்தர் அடிக்கப்பட்டுக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப் பட்டனர்!

8. உலகப் பேரணை கூட்டவை நதித் திட்ட நிதியீடு அளிப்பில் அணை நீர்த்தேக்கம், நீர் மேலோட்டம், நீர் கீழோட்டம் [Upstream & Downstream], கால்வாய் பாயும் பரப்புகள் ஆகிய அனைத்து மக்களும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் சர்தார் சரோவர் அணைத் திட்டத்தில் கால்வாய் பகுதிகளில் இடப்பெயர்ச்சியால் பாதிக்கப் பட்ட மக்கள், அணைத் தேக்கத்தில் பாதிக்கப் பட்ட மக்கள் போன்று நிதியீடு அளிக்கப்பட வில்லை. அதுபோல் கீழோட்ட நதியால் பாதிப்பானவரும், திட்டங்களின் சார்பான வளர்ச்சிகளால் பாதிப்பானவரும் எந்த நிதியீடும் கொடுக்கப்பட வில்லை!

சர்தார் சரோவர் அணைநீர் நிரம்பிக் கால்வாய்கள் உடைப்பு

2004 ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பலமுறை சர்தார் சரோவர் அணை நிறைந்து, நீர்வெள்ளம் மிகுந்து கீழோட்டத்தில் கால்வாய்கள் உடைந்தது, இந்தியாவில் பல வெளியீடுகளில் வந்துள்ளன! ஆகஸ்டு 3 இல் நர்மதா கால்வாய் இரண்டு இடங்களில் பெரிதாக உடைந்து வெள்ள அடிப்பு 6 கிராமங்களில் நீர் கட்டி வீடுகளை மூழ்க்கி பல கோடி ரூபாயை விரைய மாக்கியது. ஆகஸ்டு 6 ஆம் நாள் மழையில் அணையின் உயரம் 110 மீடர் எல்லையை மீறி 113 மீடராகி மூன்று மாவட்டங்கள் எச்சரிக்கை நிலையில் வைக்கப் பட்டன! ஆகஸ்டு 10 ஆம் தேதி கொட்டும் மழை வெள்ளத்தில் 2000 பேர் கடத்தப்பட வேண்டியதாயிற்று! ஆகஸ்டு 11 ஆம் தேதி மத்திய பிரதேச சோந்துவா நகரில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப் பட்டு சர்தார் சரோவர் அணையின் முழுமைப்பாடு [Integrity] சோதனைக்கு உட்பட்டது! ஆகஸ்டு 27 இல் மத்திய பிரதேசப் பெரு மழைகளால் சரோவர் அைணையின் உயரம் டிசையின் அளவைத் தாண்டி 117 மீடராகி, வெள்ளம் நிரம்பி வழிந்து, பல கிராமங்களில் வீடுகள் நீரில் மூழ்கின!

நீர்தேக்கத்தில் மூழ்குவோமே தவிர வீட்டை விட்டு வெளியேறோம்!

சர்தார் சரோவர் அணைத் திட்டத்தால் 200,000 பேர் இடப்பெயர்ச்சி நிலை ஏற்பட்டுப் பரிதவித்தனர். ஆயிரக் கணக்கான நபர் வேளாண்மை வயல்களை இழந்தனர். ஆயிரக் கணக்கான மாந்தர் புது விருத்திகளால் தமது ஊழியத்தைக் கைவிட்டனர். ஆயிரக் கணக்கான மக்கள் தமது இல்லங்களை நீரில் மூழ்க விட்டு, நிலமின்றி, வேலையின்றி, நெருக்கடியான தீப்பெட்டி வீடுகளில் ஒண்டிக் கொள்ள வேண்டியதாயிற்று! மாநில அதிகார வர்க்கத்தால் இவ்விதம் தள்ளப்பட்டு வேதனையில் மூழ்கிய மாந்தர் பலர், ஏழ்மையில் மடிவதை வெறுத்து, ஒருசில அடிகள் கட்டப்பட்ட அணையின் கழுத்தளவு நீரில் முங்கிக் கிடக்கும் பழைய வீடுகளில் தங்கி மூழ்கிவிடச் சபதம் எடுத்துக் கொண்டனர்! அவர்களில் போராட்டத் தலைவி மேதா பட்கரும் ஒருவர்!

[கட்டுரை தொடரும்]

தகவல்கள்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. Saravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 Linking Rivers: Vision or Mirage ? By R. Ramaswamy Iyer, Former Secretary Govt of India Water Resources, Member, Integrated Water Resource Planning, Vision 2020 Committee of Planning Commission (Dec 2002) [www.flonnet.com/].

15 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

16 Calamity, Chennai ‘s Thirst By: T.S. Subramanian [March 26, 2004]

17 Case Study of Telugu Ganga Project, India (Water Rights, Conflicts and Collective Action) By: Balaraju Nikku (Doctoral Fellow, Irrigation & Water Engineering Group, Wageningen University Research Centre, Netherlands) [May 2004]

18 California Canal [www.bsi.vt.edu/welbuam/pictures/irrigation.html]

19 All American Canal Boulder Canyon Project [www.usbr.gov/dataweb/html/allamcanal.html]

20 Colorado River Aqueduct, Parker Dam, Central Valley Project By: Cactus Jim [June 2002]

21 Indian Priest uses Engineering Training to clean up Ganges By Denise Brehm, MIT News, Mass (U.S.A) http://web.mit.edu/newsoffice/tt/1998/dec09/ganges.html [Dec 9, 1998]

22 India ‘s Ganges A Holy River of Pollution -Clean the Ganges Campaign (Project 130) [Jan 13, 2001]

23 Sacred Ganges Carries Toxic Pollution By E-Law U.S. Staff Scientist Mark Chernaik [www.elaw.org/news/ebulletin/] (2001)

24 The Ganges River By: Ashok Dutt M.A. Ph.D. Pofessor of Geography University of Akron, OHIO, U.S.A.

25 The Tehri Dam Project By: Sudha Mahalingam The Hindu (June 1998)

26 Tehri Dam, IRN Fact Sheet By: (Oct 2002)

27 Statement of Supreme Court Ruling on Tehri Dam (Sep 1, 2003)

28 Questions Surrounded Fatal Tunnel Collapse in Tehri Dam Project By: Saibal Dasgupta (Aug 10, 2004).

29 Large Dam Construction is a Controversial Issue in India, BBC By: Ram Dutt Tripathi, Lucknow [Dec 8, 2001]

30 The Greater Comman Good -Article on Gujarat ‘s Sardar Sarovar Dam in Narnada River By: Arundhathi Roy [April 1999].

31 Untapped Water Resources in Yamuna River Basin By: R.N. Malik (June 26, 2003) [www.tribuneindia.com/2003/20030626/science.htm]

32 Interlinking of Rivers – Opening the Floodgate of Contradictions By: Sudhirendar Sharma.

33 River-Linking Plan: India to Go Ahead By: Golap Monir (Sep 26, 2004).

34 India ‘s Gigantic River Linking Project: Think about the Oceans too! By: Sudhirender Sharma.

35 River Linking Projects The Need, Earlier Proposals, About the Plan, Financing, Benefits & Implementation.

36 River Linking Scheme, Central Chronicle By: Pradip Saha [www.centralchronicle.com] (Sep 25, 2004).

37 R. Rangachari, Nirmal Sengupta, R. Ramaswamy Iyer, Pranab Banerji, and Shekar Singh, – Large Dams: India ‘s Experience, a WCD case study prepared as an input to the World Commission on Dams, Cape Town, www.dams.org [November 2000]

38 Narmada River Dams, India -Evaluation Against World Commission on Dams Guidelines.

39 Proponents & Critics of Dams Agree to Work Together -World Conservation Union [Apr 11, 1997]

40 Sardar Sarovar Dam Overflows as Main Canal Ruptures. Earthquake also Registered near Reservoir By: Yogini Khanolkar & Ashish Mandloi [Aug 16, 2004]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [November 11, 2004] (Part VIII)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா