பட்டுப்பூச்சி

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

Dr.இரா.சீனிவாசன், Ph.D, தைவான்


பட்டுச் சேலையும், பட்டுச் வேஷ்டியும் இல்லாமல், நம்மில் நிறைய பேருக்குத் திருமணமே நடந்திருக்காது. அது சரி, இந்த பட்டு வஸ்திரங்கள் எங்கு உருவாகிறது தொியுமா ? உடனே கண்ணை

மூடிக்கொண்டு, காஞ்சிபுரம், ஆரணி, பனாரஸ் என்று ஆரம்பித்து விடுவோம். ஆனால் அதுதான் இல்லை. எல்லாவற்றுக்கும் மூலாதாரமான பட்டு இழைகள் உருவாகும் இடம் பட்டுப் புழுக்கள்!

பட்டுப் புழுக்களின் வரலாறும் கூட சுவாரசியமானதுதான். பழங்காலத்தில் சீனாவில் ஹ்வாங் ட்டி (Huang-Ti) என்றொரு பேரரசன் இருந்தான். அவனது பட்டத்து இராணி சி லிங் ச்சி (Si Ling-Chi). இந்த இராணி ஒரு நாள் அரண்மனைத் தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தாள். அப்போது, அங்கிருந்த ஒரு முசுக்கொட்டை (Mulberry) செடியிலிருந்த ஒரு புழு, நல்ல பளபளப்பான முட்டை போன்ற கூடு ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். உடனே, ஆச்சரியப்பட்ட அவள், அதனருகில் சென்று, அந்த கூட்டை கையிலெடுத்தாள். கூட்டிலிருந்து ஒரு இழையைப் பிடித்திழுக்க…. என்ன ஆச்சரியம்…. அந்த ஒரு இழை, ஒரேயொரு இழை மட்டும் மீட்டர் கணக்கில் நீண்டது. ஆக அந்த கூடு முழுவதுமே ஒரே இழையால் ஆனது என்பதை அறிந்தாள். அவ்வளவுதான்!! உடனே, பல கூடுகளைச் சேகரித்து, இழைகளை உருவி, ஒரு ஆடை தயாரித்தாள். ஆக உலகிலேயே முதல் பட்டு வஸ்திரம் ரெடி !!! ஆனால் பல நூறு ஆண்டுகள் பட்டு, அரண்மனையில் மட்டுமே உலாவரும், அரச வஸ்திரமாகத்தான் இருந்தது. சாதாரண மக்களுக்கு எல்லாம் கட்டுப்படியாகாது. (இப்போது மட்டும் என்ன வாழுதாக்கும் ?) அது மட்டுமல்ல…. பட்டின் தொழில்நுட்பத்தை சீனர்கள் யாருக்குமே சொல்லவில்லை. பரம ரகசியமாக வைத்திருந்தனர். தப்பித்தவறி யாராவது ரகசியத்தை வெளியிட்டுவிட்டால், மரண தண்டனைதான். இப்படியே சுமார் 2500 ஆண்டுகள் ரகசியம் காத்தனர். ஆனால் கடைசியில் குட்டு வெளிப்பட்டுவிட்டது. ஒருசில, பட்டின் ரகசியம் தொிந்த சீனப்பெண்களை, ஜப்பானியர்கள் பணிப்பெண்களாக அழைத்துச் சென்றனர். அவர்களுடன் முசுக்கொட்டை செடியையும், பட்டுப் புழுக்களின் முட்டையையும் ரகசியமாக எடுத்துக்கொண்டுி சென்று விட்டனர். இன்னும் ஒரு சிலரோ, சீன இளவரசியை, இந்திய இளவரசன் ஒருவன் திருமணம் செய்தான் என்றும், அப்போது, அந்த இளவரசி தன்னுடன் முசுக்கொட்டை செடியையும், பட்டுப் புழுக்களின் முட்டையையும் ரகசியமாக புகுந்த வீ(நா)ட்டுக்கு எடுத்துக்கொண்டுி சென்று விட்டாள் என்றும் சொல்வர். எது எப்படியோ, இன்று இந்தியா, ஜப்பான், சீனா ஆகியனதான் உலகின் பட்டு உற்பத்தியில் முன்னணி நாடுகள்.

பொதுவாக, பட்டு உற்பத்தியில் முசுக்கொட்டை பட்டுப் புழுதான் (Mulberry Silkworm) முதலிடம் வகிக்கிறது. இந்த பட்டு, வெளிர்மஞ்சள் (Cream colour) நிறத்தில், பளபளப்பாக இருக்கும். இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இழைகளிலிருந்துதான், பல்வேறு வண்ணங்களில் பட்டுச் சேலைகள் உருவாகின்றன. முசுக்கொட்டை பட்டுப்புழுவின் அறிவியல் பெயர் Bombyx mori ஆகும். இதன் புழுப்பருவத்தில் 6 நிலைகள் உண்டுி. முதல்நிலை புழு கருமை நிறத்தில் இருக்கும். இரண்டு மற்றும் மூன்றாம்நிலை புழுக்களின் உடல் சாம்பல் நிறத்திலும், தலை கருமை நிறத்திலும் இருக்கும். ஆனால் ஐந்து மற்றும் ஆறாம்நிலை புழுக்களின் தலை வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த இறுதி நிலைகளில்தான், தன் வாழ்க்கையின் 80 சத உணவை (முசுக்கொட்டை இலைகள்) உண்ணும். அப்போது, அதன் நீளம் சுமார் 3 அங்குலம் (7.5 செ.மீ) வரை இருக்கும். இந்த புழுக்கள், பிறக்கும்போது இருப்பதைப் போல் சுமார் 10000 மடங்கு பெரியதாக இருக்கும். மொத்த உடல் எடையில் சுமார் 25 சதம் பட்டு சுரப்பிகள் (Silk Glands) ஆகும். பட்டு சுரப்பிகள் என்பது சிறப்பு உமிழ்நீர் சுரப்பிகள் (Specialized Salivary Glands) ஆகும். இதிலுள்ள உட்புற பட்டு சுரப்பிகள் (Posterior Silk Glands) பைப்ராயின் (Fibroin) என்ற புரதத்தையும், நடுப்புற பட்டு சுரப்பிகள் (Middle Silk Glands) செரிசின் (Sericin) என்ற புரதத்தையும் சுரக்கும். இந்த பைப்ராயினை மையக்கருவாக வைத்து, அதைச் சுற்றிலும் செரிசினை மெழுகி, மிக மிக வலிவான பட்டு இழைகளை உமிழ்நீர் வடிவில் துப்பும். இந்த உமிழ்நீர், வெளிக்காற்றுடன் சேர்ந்து இறுகி, பட்டு இழைகளாக மாறும். இதைக்கொண்டுி கூடு ஒன்றைக் கட்டி, அதனுள் கூட்டுப்புழுவாகிவிடும். இந்த கூட்டுப்புழுவிலிருந்து பட்டுப்பூச்சி வெளியில் வரும் முன்பே, கூட்டுப்புழுக்களைக் கொன்று, இழைகளை உருவி விட வேண்டும். பட்டுப்பூச்சி வெளியில் வரும்வரை விட்டுவிட்டால், இழைகள் அறுந்து, அவற்றின் மதிப்பு குறைந்துவிடும்.

முசுக்கொட்டை பட்டுப் புழுக்களை மட்டுமே, நம்மால் செயற்கையாக வீடுகளில் வளர்க்க இயலும். எனவே, தொழில்முறை பட்டு உற்பத்தியில் (Sericulture) இந்த முசுக்கொட்டை பட்டுதான் (Mulberry Silk) முதலிடம் வகிக்கிறது. இருந்தபோதிலும், இந்தியாவில் ஜார்க்கன்ட், சட்டிஸ்கர், உத்திரபிரதேசம், ஒரிஸ்ஸா, மராட்டியம், ஆந்திரம், மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியினர், காடுகளில் இயற்கையாக வளரும், ஒருசில முசுக்கொட்டை அல்லாத பட்டுப் புழுக்களையும் (Non-mulberry Silkworms) தொழில்முறையில் வளர்க்கின்றனர்.

ட்டசார் பட்டு (Tussor Silk) புழுவின் அறிவியல் பெயர் Antheraea mylitta ஆகும். இது வெள்ளை மருது மற்றும் மற்ற மருத மரங்களின் இலைகளை உண்டு வாழும். ட்டசார் பட்டு தாமிர நீல நிறத்தில் இருக்கும். இது முசுக்கொட்டை பட்டினைக் காட்டிலும் சற்று கடினமாக இருக்கும். எனவே, இது விரிப்புகளுக்கும், திரைச் சீலைகளுக்கும் பயன்படும். எரிப்பட்டு (Eri Silk) புழுவின் அறிவியல் பெயர் Philosamia ricini ஆகும். இது ஆமணக்கு (Castor) இலைகளை உண்டு வாழும். இதன் கூடு, முசுக்கொட்டை பட்டுப் புழுவின் கூட்டைப் போலன்றி, திறந்தே இருக்கும். எரிப்பட்டு பொதுவாக, வெள்ளை நிறத்திலோ, சிவப்பு நிறத்திலோ இருக்கும். மூகாபட்டு (Muga Silk) பொன்மஞ்சள் நிறத்தில், மிகவும் பளபளப்பாக இருக்கும். மூகாபட்டுபுழுவின் அறிவியல் பெயர் Antheraea assamensis ஆகும். இது அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே காணப்படும். இது மிக மிக விலையுயர்ந்த பட்டு ஆகும்.

சிலந்தி கூட பட்டு உற்பத்தி செய்யும்!!!அட ஆமாங்க…. சிலந்தி வலை பட்டு இழைகளால்தான் ஆனது. அது சரி, சிலந்தி வலையில் எல்லா பூச்சிகளும் மாட்டிக்கொள்ளுதே ! ஆனால் சிலந்தி மட்டும் ஏன் மாட்டுவதில்லை ?

அதைப்பற்றிி…. அடுத்த வாரம்!!

—-

amrasca@yahoo.com

Dr.R.Srinivasan

Post Doctoral Fellow – Entomology

AVRDC – The World Vegetable Center, 60 Yi Min Liao

Shanhua, Tainan 741, Taiwan

Ph: +886 6 583 7801 Ext.426 (O); 642 (R)

Fax:+886 6 583 0009

amrasca@avrdc.org

amrasca@yahoo.com

Please visit my webpage: http://amrasca.tripod.com/sreemaal

Series Navigation

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்