அஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

வெங்கட்ரமணன்


இந்தியாவின் மிகப்பெரிய அறிவியல் நிலையமான பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் சிவராஜன் ராமசேஷன் சென்ற வாரம் தனது எண்பதாவது வயதில் காலமானார்.

கிட்டத்தட்ட அறுபது வருட நீண்ட ஆராய்ச்சி வாழ்வு ராமசேஷனுடையது. 1923 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்த ராமசேஷன், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி, எம்.எஸ்.ஸி பட்டங்களைப் பெற்றவர். தொடர்ந்து பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் அவருடைய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். பின்னர் இந்திய அறிவியல் கழகம் (பெங்களூர்), இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை), ராமன் ஆய்வுக் கழகம் (பெங்களூர்) போன்ற இந்தியாவின் முன்னனி அறிவியல்/தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்களில் ஆராய்ச்சியாளர், ஆய்வாளர், நிர்வாகி என்ற பல நிலைகளைல் பணியாற்றியிருக்கிறார். குறிப்பாக இந்திய அறிவியல் கழகத்தில் 1981-1984 இயக்குநர், தேசிய விண்வெளி ஆய்வகம், பெங்களூரில் (National Aerospace Laboratories) 1966-1979 வரை இயக்குநர் நிலை விஞ்ஞானி, ராமன் ஆய்வுக்கூடத்தில் 1984-2003-ல் வாழ்நாள் பேராசிரியர் போன்ற உயர்ந்த பதவிகளை வகித்திருக்கிறார். ஸாந்தி ஸொரூப் பட்நாகர் விருது (இந்தியாவின் தலைசிறந்த அறிவியல் விருது), இந்திய தேசிய அறிவியல் அமைப்பின் ஆர்யப்பட்டா பதக்கம், இந்திய அரசின் பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகள் இவருடைய சேவைக்காக வழங்கப்பட்டிருக்கின்றன. 1983-85ல் இந்திய அறிவியல் பேராயத்தின் (Indian Academy of Science) தலைவராக இருந்தார்.

எக்ஸ்-கதிர் படிகவியல், ஒளியியல், ஒருங்குநிலை இயற்பியல் உள்ளிட்ட பலதுறைகளில் ராமசேஷன் உலகத்தர ஆய்வுகளைச் செய்திருக்கிறார். இவற்றில் பல இந்தியாவில் முதன்முறையாக முயற்சிக்கப்பட்டவை. உதாரணமாக, அசாதாரண நியூட்ரான் கதிர்களின் சிதறலைக் (anomalous neutron scattering) கொண்டு மாபெரும் மூலக்கூறுகளின் அமைப்பை ஆராய்தல், எக்ஸ்-கதிர்களின் அலை முகப்பைக் கொண்டு படிகங்களின் அமைப்பை ஆராய்தல், படிகங்கள் பிளக்கும் விதத்தை (Crystal Cleavage) தெளிதல், கோளங்களில் ப்ரெனெல் முனைவிலகல் (Fresnel Diffraction in Spheres), பான்கரே கோளத்தைக் கொண்டு படிகங்களின் ஒளியியல் விதிகளை விளக்குதல் (Poincare sphere formulation of Crystal Optics), போன்ற பல சோதனைகள் அந்தத் துறைகளை முன்னெடுத்துச் செல்ல உதவின. இந்தியாவில் பல சோதனைத் துறைகளின் முன்னோடி ஆய்வுகள் ராமசேஷனால் துவக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, குறை வெப்பநிலைகளில் படிகவியல் (Low Temperature Crystallography), உயர் அழுத்தச் சோதனைகள், அழுத்தத்தினால் தூண்டப்படும் ஒளியியல் விளைவுகள் (Pressure Induced Optical Effects), அழுத்தம் தூண்டப்பட்ட திரவப்படிகத்தன்மை (Pressure Induced Liquid Crystallinity). இந்தச் சோதனைகள் ஒவ்வொன்றும் இன்றைக்கு முக்கியமான பெரிய ஆய்வுத்துறைகளாக உருவெடுத்திருக்கின்றன. அடிப்படை ஆய்வுகளைத் தவிர, இந்தியாவின் முதன் விண்கலமான ஆர்யப்பட்டவிற்கு சுழற்ச்சித் தள்ளாட்டத் தடுப்புக் கருவியை (nutation damper) வடிவமைத்தது, இந்தியாவில் முதன் முறையாக இதய வால்வுகளுக்கு உதவிக்கட்டுகளை (Heart valve prosthesis) வடிவமைத்தது போன்ற பல தொழில்நுட்ப சாதனைகளையும் முன்னின்று நடத்தியவர் பேராசிரியர் ராமசேஷன்.

ராமசேஷன் மிகச் சிறந்த ஆசிரியரும்கூட. 1994ல் ராமன் ஆய்வுக்கூடத்தில் நடந்த தொடர் சொற்பொழிவுகளில் அவரிடமிருந்து நான் படிக ஒளியியலை (Crystal Optics) நேரடியாகக் கற்றிருக்கிறேன். மிகவும் தெளிவாக, அழகாகச், சிக்கலான அறிவியல் கோட்பாடுகளை விளக்க வல்லவர்.

மிகச் சிறந்த விஞ்ஞானியாக இருந்ததோடல்லாமல், தலைசிறந்த அறிவியல் நிர்வாகியாகவும் விளங்கியவர் ராமசேஷன். ஐஐடி சென்னையில் இயற்பியல் துறைத் தலைவராகவும், ஐஐஎஸ்ஸி பெங்களூரில் இயக்குநராகவும், ராமன் ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாகியாகவும் மிகவும் திறமையாக மாபெரும் ஆய்வகங்களை நிர்வகித்தவர். இந்த ஆய்வகங்கள் ஒவ்வொன்றிலும் திறமையான இளைஞர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்தவர். தேசிய விண்வெளி ஆய்வகத்தில் இந்தியாவின் முதல் பொருளறிவியல் (Material Science) ஆய்வகத்தைத் துவக்கிய பெருமையும் ராமசேஷனுக்கு உண்டு.

பேராசிரியர் ராமசேஷனின் இன்னொரு முகம் அறிவுசார் நேர்மை. குற்றவியல் வழக்கில் இருப்பவர்கள், குற்றவியல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கவேண்டும் என்பதில் அவர் தெளிவான கருத்துக்களைப் பயமின்றி வெளியிட்டார். 2001 ஆம் ஆண்டு, பிஜெபி அரசில், முரளி மனோகர் ஜோஷின் உந்துதலால் ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம் போன்ற ஏமாற்று விஷயங்களை அறிவியல் போர்வைக்குள் திணித்து அவற்றைப் பல்கலைக் கழகப் பட்டத்திற்குத் தகுதியான படிப்புகளாக அறிவிக்க முயன்றது. அந்த சமயத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission) தலைவராக இருந்த பேராசிரியர் ஹரி கெளதம், ஜோதிடத்தை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சி.வி. ராமன் முழுமையான அறிவியல் என்று சொல்லியிருப்பதாகத் திரித்துக் கூறினார். அந்த நேரத்தில் பேராசிரியர் ராமசேஷன், ராமன் ஒருபோதும் அப்படிச் சொன்னதில்லை. சொல்லப்போனால் அவருக்கு ஜோதிடம், வாஸ்து போன்ற விஷயங்களைப் பற்றி மோசமான கருத்துதான் இருந்தது என்று அறிவித்தார். மேலும், இதை ராமனின் வாழ்க்கை வரலாற்றில் தான் முன்னரே பதிவு செய்திருப்பதாகவும் அறிவித்தார். ராமசேஷனின் தாய்மாமன் சி.வி. ராமன் என்பது இவ்விடத்தில் குறிப்பிட வேண்டிய விஷயம். இன்னும் தீர்க்கமாக, ராமனின் உறவினரும் இன்னொரு நோபல் பரிசு விஞ்ஞானியுமாகிய பேராசிரியர் சந்திரசேகர் ஜோதிடத்தை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவதைத் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது என்று கூறி உலகெங்கிலுமுள்ள பிரபல அறிவியல் அறிஞர்களின் துணையுடன் ஜோதிடத்தை எதிர்த்தவர் என்பதையும் சுட்டிக் காட்டினார். ராமனின் பெயரை வைத்துக் கொண்டு ஏமாற்ற முயன்றதற்காகப் பேராசிரியர் கெளதம் மானியக் குழுத்தலைமைப் பதவியைவிட்டு விலக வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினார். அறிவியல் காவிமயமாக்கப்படுவதையும், அரசியல் சாயம் பெறுவதையும் அவர் தீர்க்கமாக வெறுத்தார்.

பேராசிரியர் ராமசேஷனின் மறைவில், இந்தியா அறிவியலை வாழ்முறையாகக் கொண்டு உயிர்த்திருந்த ஒரு மேதையை இழந்திருக்கிறது.

(வெங்கட்ரமணன் வலைக்குறிப்பு http://www.tamillinux.org/venkat/myblog/ )

–:–

Series Navigation

வெங்கட்ரமணன்

வெங்கட்ரமணன்