அறிவியல் மேதைகள் – கெக்குலே வான் ஸ்ட்ரெடோனிட்ஜ் ஃபிரெடரிக் ஆகஸ்ட் (Kekule Von Stradonitz Friedrich August)
முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி
வேதியியல் மாணவர் அனைவருக்கும் கெக்குலேவின் பெயர் மிகவும் அறிமுகமான ஒன்று எனக் கூறினால் அதில் மிகையேதுமில்லை. முதலில் அவருடைய பெயர் ஃபிரெடரிக் ஆகஸ்ட் கெக்குலே என்பதாகும்; வான் ஸ்ட்ரெடோனிட்ஜ் என்ற பெயர் பின்னாளில் சேர்ந்து கொண்டது. கரிம வேதியியலில் பல முக்கியமான கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இருந்தவர் கெக்குலே அவர்கள். ஒரு மூலக்கூறின் அணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதைப் படம் வரைந்து காட்டியவர் அவரே. இம்முறையைப் பயன்படுத்தியே கரி (carbon) அணுக்களின் இணைதிறன் நான்கு எனக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கரி அணுக்கள் ஒன்றோடொன்று மூன்று வெவ்வேறு வழிகளில் இணைகின்றன என்பதையும் அவர் கண்டறிந்தார். அவை முறையே திறந்த தொடர்கள் (open chains), மூடிய தொடர்கள் (closed chains) மற்றும் வளையத் தொடர்கள் (ring chains) என்பனவாகும். புதிய மூலக்கூறுகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதற்கான வழிமுறையை மற்ற வேதியியல் அறிஞர்கள் வகுப்பதற்கு கெக்குலேயின் மேற்கூறிய கண்டுபிடிப்பு பெரிதும் துணைபுரிந்ததெனலாம். இன்று சுமார் 7 லட்சம் கரிக் கூட்டுப்பொருள்களை (carbon compounds) விஞ்ஞானிகள் வெளியிடுவதற்கு அக்கண்டுபிடிப்பே அடிப்படையாய் அமைந்தது.
கெக்குலேயின் பென்சீன் அமைப்பு (benzene structure) பற்றிய கண்டுபிடிப்பு மிகவும் புகழ் வாய்ந்ததாகும். தொழிற்கூடங்களில் முக்கியமான கரிக் கூட்டுப்பொருளாகப் பயன்படுவது பென்சீன். இக்கூட்டுப்பொருளின் அமைப்பு பற்றிய ஆய்வை கெக்குலே 1865இல் மேற்கொண்டார். பென்சீன் மூலக்கூறு 6 கரி அணுக்களைக் கொண்டது என்பதை அவர் அறிந்திருந்தபோதும், அவர் வரைந்த வரைபடம் அல்லது தொடர்கள் அம்மூலக்கூறுக்கு ஏற்றதாக அமையவில்லை. இச்சிக்கல் அவருக்குப் பெரும் குழப்பத்தை விளைவித்தது. ஒரு நாள் இரவு கெக்குலே உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவு ஒன்று கண்டார். தனது வாலை வாயில் செருகிய வண்ணம் வட்டமாக வளைந்திருந்த பாம்பு ஒன்று அவரது கனவில் வந்தது. பென்சீன் மூலக்கூறின் அணுக்களும் இவ்வமைப்பிலேயே இருக்கலாம் என்று முடிவெடுத்தார்; எனவே ஆறு அணுக்கள் கொண்ட பென்சீன் வளைய அமைப்பு உருவாக கெக்குலே கண்ட அக்கனவே அடிப்படையாக அமைந்ததெனலாம்.
இதைப்பற்றி வேறு வகையாகக் கூறுவதும் உண்டு. ஒரு நாள் பிற்பகலில் தமது ஆய்வுக்கூடத்தில் இருந்த கனல் அடுப்புக்கு முன்னர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடியவாறு கெக்குலே ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அடுப்புத் தீபிழம்பைச் சுற்றி ஆறு கரி அணுக்கள் நடனமாடியவாறு இருந்ததையும், அவை உடனே ஒரு வளையமாக வடிவெடுத்ததையும் கெக்குலே தனது கற்பனைக் கண்களால் கண்டார். இக்கற்பனைக் காட்சியிலிருந்து பென்சீன் மூலக்கூறின் அணுக்களது வளையத்தை அவர் உருவாக்கினார் என்றும் கூறப்படுகிறது. பின்னர் பென்சீன் கட்டமைப்பின் புதிர்களை விடுவிப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். பல்வேறு ஆய்வுகட்குப் பின் பென்சீன் மூலக்கூறில் ஆறு அணுக்கள் வளைய அமைப்பில் உள்ளன என்பதை நிரூபித்தார். இவ்வாறு பென்சீன் அமைப்பைப் பற்றி கெக்குலே விளக்கினார்; அதிலிருந்து நறுமணக் கூட்டுப் பொருள்கள் உருவாகுவதற்கும் அவரது விளக்கம் வழிகோலியது.
கெக்குலே 1829ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் நாள் ஜெர்மனியில் டார்ம்ஸ்டாட் (Darmstadt) எனும் ஊரில் தோன்றினார். கட்டடவியல் (architecture) படிக்கும் நோக்கத்தோடு ஜீசன் (Giessen) பல்கலைக் கழகத்தில் சேர்ந்த அவரை, வேதியியல் துறைக்கு மாற்றியவர் ஜஸ்டஸ் வான் லெய்பிக் (Justus Von Liebig) என்பவராவார். 1852இல் முனைவர் பட்டம் பெற்ற கெக்குலே பாரீஸ் சென்றார்; அங்கு சார்லஸ்-ஃபிரெடெரிக் கெர்ஹார்ட் (Charles-Frederic Gerhardt) என்பவரைச் சந்தித்து அவரது கரிமக் கட்டமைப்பு (organic structure) பற்றி அறிந்துகொண்டதோடு, அதைப் பற்றிய தமது கோட்பாடுகளையும் வெளியிட்டார். பின்னர் ஹீடெல்பர்க் (Heidelberg) பல்கலைக் கழகத்தில் 1856இல் கெக்குலே விரிவுரையாளராகச் சேர்ந்தார். தொடர்ந்து பெல்ஜியம் நாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்றில் 1858ஆம் ஆண்டு வேதியியல் பேராசிரியராக நியமிக்கப் பெற்றார். பின்னர் 1865இல் பான் (Bonn) நகரில் குடியேறினார்.
கட்டடவியலில் கெக்குலே பெற்ற துவக்க காலப் பயிற்சி கட்டமைப்புக் கொள்கைகளிலும் (structural theories) அவருக்கு ஓரளவு உதவி புரிந்ததெனலாம். பல கூட்டுப் பொருள்களின் கட்டமைப்பைப் பற்றி அவர் தெளிவுபடுத்தினார். கரியின் இணைதிறன் நான்கு என நிறுவினார். மெர்குரி ஃபல்மினேட், நிறைவுறா அமிலங்கள் (unsaturated acids), தையோ அமிலங்கள் (Thio acids) ஆகியன பற்றிச் சிறந்த நூல்களை வெளியிட்டார். கரிம வேதியியல் பற்றி நான்கு தொகுதிகளில் நூல் ஒன்றை எழுதினார். தம் பெயரோடு வான் ஸ்ட்ரெடோனிட்ஜ் (Von Stradonitz) என்னும் சிறப்புப் பெயரையும் இணைத்துக் கொண்டார். வேதியியலில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட கெக்குலே 1896 ஜூலை 13இல் இயற்கை எய்தினார்; ஆனால் அவர் அறிவியல் துறையில் மேற்கொண்ட ஆய்வுகள் இறவாத புகழுடையன.
முனைவர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan
பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD
Email: ragha2193van@yahoo.com
- நாற்காலி
- அய்யா
- பக்கத்து வீட்டு ப்ளாண்டும், பத்மாவும் :
- ஒரு மெளனத்தின் குரல்
- நீ ஒரு சரியான முட்டாள்!
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பத்து
- பறவைப்பாதம் – 5 (முடிவுப்பகுதி)
- கடிதங்கள்
- சில குறிப்புகள் 14 ஜூன் 2003 (சண்டியர்-இண்டெக்ஸ் ஆன் சென்சார்ஷிப்-நேர்,சமூக அறிவியல்-பல்கலைக் கழகங்கள், அறிவுசார் சொத்துரிமை )
- வாரபலன் – 6 சுற்றம் சுகம்(ஜூன் 7, 2003)
- மனம் உயர வழி!
- பன்னீர்த் துளிகள்
- குருடு, செவிடு, சனநாயகம்!
- அலைகள்
- நகர் வெண்பா இரண்டு
- உரை வெண்பா – வீதி
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 7
- நாளை நாடக அரங்கப்பட்டறை வழங்கும்
- குழாயடியில் ஆண்கள்
- குப்பைத் தொட்டியில் ‘குவா குவா ‘
- சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்
- பிடிவாதம் (கடிதங்கள்)
- உடலும் பிரபஞ்சமும் -தாந்திாீக கோட்பாடு பற்றி சில குறிப்புகள்
- என்னைக் கவர்ந்த என் படைப்பு
- அமெரிக்காவும் ஐரோப்பாவும் செவ்வாய் கிரகத்துக்குப் போட்டி
- 1,60,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரது எலும்பு கண்டுபிடிப்பு.
- அமெரிக்காவின் அலபாமா பிரெளன்ஸ் ஃபெர்ரி கொதி அணுமின் உலையில் ஏற்பட்ட தீச் சிதைவுகள் [Browns Ferry Boiling Water Reactor Fire Disa
- அறிவியல் மேதைகள் – கெக்குலே வான் ஸ்ட்ரெடோனிட்ஜ் ஃபிரெடரிக் ஆகஸ்ட் (Kekule Von Stradonitz Friedrich August)
- திராவிடக்கனவுகள்
- மனமொழி
- சிசு வதைப் படலம்!
- தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்
- பிறழ்வு
- சித்தும் சித்தமும்!
- தவம்
- சார்ஸ் பிசாசே!
- காலி இருக்கைகள்
- ஏழையின் தேசிய கீதம்
- இந்தியர்கள் – 5 கவிதைகள்
- தொலைந்து போனவன்
- சபலம்