அறிவியல் துளிகள்

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

முனைவர் இரா விஜயராகவன்


29. ஓடும் பேருந்தில் பயணம் செய்யும்போது பின்புறம் இருப்பவர்கள், முன்புறம் அமர்ந்திருப்பவர்களை விட மிகுந்த குலுக்கலுக்கு ஆட்படுவதேன் ?

பேருந்தின் உடற்பகுதி வலிமையும் உறுதியும் கொண்ட சட்டத்தின் (frame) மீது அமைக்கப் படுகிறது. இச்சட்டம் பாதையின் நிலைமைகட்கு ஏற்றாற்போல், கடுமையான வளைவு (bending) மற்றும் முறுக்கு (twisting) விசைகளுக்கு (forces) உள்ளாகிறது. பேருந்தின் முன்புறமும், பின்புறமும் அமைந்துள்ள இரு சக்கரத் தாங்கி இருசுகளும் (wheel bearing axles) சட்டத்திற்கான நெம்பு மையங்களாகப் (fulcrums) பணியாற்றுகின்றன எனலாம். பாதையில் அமைந்துள்ள மேடு பள்ளங்களின் மேல் முன் சக்கரங்கள் ஓடும்போது பின் சக்கரங்கள் நெம்பு மையமாகப் பணியாற்றுகிறது. அதனால் பேருந்தின் சட்டம் பின் இருசினை மையப்படுத்தி நகர்கிறது. இது இரண்டாம் வகை நெம்புகோலின் கையைப் (arm of the second class lever) போன்று அமைகிறது எனலாம். இந்நிலையில் பேருந்தின் சட்டம் அல்லது நெம்புகோலின் கை இயல்பான கிடை நிலையில் இருந்து மேலும் கீழும் அதிகமாக அசைவதில்லை. இதே மாதிரி பின் சக்கரங்கள் மேடு பள்ளங்களின் மீது விரைந்து ஓடும்போது முன் சக்கரங்கள் நெம்புமையமாகப் பணியாற்றுகிறது. ஆனால் பேருந்தில், பின்புற பயணியர் இருக்கைகள் பெரும்பாலானவை இருசுக்குப் பின்னால் அமைந்துள்ளன. இந்நிலையில் பேருந்துச் சட்டம் மூன்றாம் வகை நெம்புகோலின் கை போல் அமைந்து விடுகிறது. இதன் விளைவாக பின்புறச் சட்டமும், பின்புற இருக்கைகளும் அதிகமான மேல்-கீழ் இடப்பெயர்ச்சிக்கு (vertical displacement) உட்படுகின்றன. எனவே பின்புறம் அமர்ந்துள்ள பயணிகள் முன்புறம் அமர்ந்திருப்போரைவிட அதிகமான குலுக்கலுக்கு ஆட்படுகின்றனர். மேலும் பயணிகளின் குலுக்கல் ஓரளவுக்கு பேருந்து ஓடும் வேகத்தையும் பொறுத்தது. பேருந்து விரைந்து ஓடினால் அதிகமான குலுக்கலும், மெதுவாக ஓடினால் குறைவான குலுக்கலும் உண்டாகும். வேகத்தடையின் (speed breaker) மீது பேருந்து ஓடும்போதும் இந்நிலை உண்டாவதை நாம் அறிவோம்

30. கைக்கடிகாரத்திலுள்ள மணிக்கற்கள் (jewels) என்பவற்றின் பயன் யாது ?

சாதாரணக் கைக்கடிகாரத்தில் (wrist watch) நூறுக்கும் மேற்பட்ட நுண்பகுதிகள் உள்ளன. அவற்றின் நீண்ட உழைப்பும், உறுதித்தன்மையும் ஒன்றோடொன்று உராயாமல் பணியாற்றுவதில்தான் அமைந்துள்ளன. உராய்வு, தேய்மானம் ஆகியவற்றைத் தடுப்பதற்கு, முக்கியமான பாகங்கள் தாங்கிகளில் (bearings) பொருத்தப்பட்டிருக்கும். இத்தாங்கிகள் செயற்கைச் சேர்மானத்தாலான (synthetic) மாணிக்கக் கற்கள் (rubies), நீல மணிக் கற்கள் (sapphires) வகையைச் சேர்ந்தவை. கைக்கடிகாரத்தில் சாதாரணமாக 17 முதல் 25 வரை மணிக் கற்கள் அமைந்திருக்கும்.

31. கெட்டித்தன்மை வாய்ந்த காய்கறிகள் வெந்தவுடன் எப்படி மென்மையாகி விடுகின்றன ?

பழுக்காத காய்கள் மிகவும் கெட்டித்தன்மை வாய்ந்தவை; அதன் உயிரணுக்கள் (cells) உறுதியாக ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருப்பதே அதற்குக் காரணம். உயிரணுக்களின் புறப் பகுதிகளிலுள்ள செல்லுலோஸ் (cellulose) என்ற மாவுப்பொருளும், பெக்டின் (Pectin) என்ற மாவுப்பொருளும் சேர்ந்து உயிரணுக்களைக் கெட்டியாக இணைக்கின்றன. வெப்பத்தினால் காய்கள் வேகும்போது, பெக்டின் நெகிழ்வடைந்து சேல்லுலோஸுடன் ஏற்பட்டிருந்த இணைப்பு முறிவடைந்து விடுகிறது. எனவே உறுதியாக பிணைக்கப்பட்டிருந்த உயிரணுக்கள் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து போகின்றன. பெரும்பாலான காய்கறிகள் வெந்தபின் மென்மைத்தன்மை அடைவதற்கு இதுவே காரணம். உர்ளைக்கிழங்கைப் பொறுத்தவரை, வேகவைத்த பின்னர் அதன் உள்ளிருக்கும் ஸ்டார்ச்சுத் துகள்கள் நெகிழ்வடைந்துவிடும். இந்த ஸ்டார்ச்சுத் துகள்கள் வெந்நீரின் தொடர்பால் விரிவடைவதுடன் மென்மைத் தன்மையும் பெறுகின்றன.

பழங்களில் மென்மைத்தன்மை எவ்வாறு உண்டாகிறது ? காய்கள் பழுக்கும்போது, உயிரணுக்களில் உள்ள நொதிகள் (enzymes) கெட்டித்தன்மைக்குக் காரணமான பெக்டின் பொருளைச் செரித்துவிடுவதால் மென்மைத் தன்மை ஏற்படுகிறது.

32. சூடு படுத்தப்படும் துறுவேறா எஃகுப் (stainless steel) பத்திரங்களில் திட்டுத் திட்டாக வண்ணப் பூச்சுகள்(Color patches) தோன்றுவது ஏன் ?

துறுவேறா எஃகு என்பது ஒரு உலோகக் கலவை (alloy). இக் கலப்பு உலோகத்தில் இரும்பைத் தவிர்த்து குரோமியம், கரி, நிக்கல், மாலிபிடானம் போன்றவையும் கலந்துள்ளன. இப்பாத்திரம் சூடாக்கப்படும் போது காற்றில் கலந்துள்ள உயிர்வளி (oxygen) வினைபுரிந்து பாத்திரத்தில் கலந்துள்ள உலோகங்களின் ஆக்சைடுகள் உருவாகின்றன. இந்த ஆக்சைடுகள் ஒளியின் குறுக்கீட்டினால் பாத்திரப் பரப்பில் திட்டுத்திட்டான பல்வேறு வண்ணப் பூச்சுகளாகப் பரவுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் வண்ணம், பாத்திரம் சூடாக்கப்படும் வெப்ப நிலையையும், அதனால் உண்டாகும் ஆக்சைடு படலங்களின் தடிமனையும் பொறுத்ததாகும். எடுத்துக்காட்டாக பாத்திரத்தின் மீது படியும் வண்ணப்பூச்சு, வெப்பநிலை 145 செ.கி.யில் இருக்கும்போது மஞ்சள் நிறமும், 230 செ.கி.யில் பழுப்பு நிறமும், 260 செ.கி.யில் ஊதா நிறமும், 300 செ.கி.யில் நீல நிறமும், 350 செ.கி.யில் நீலம் கலந்த பச்சை நிறமும் கொண்டிருக்கும்.

Dr R Vijayaraghavan முனைவர் இரா விஜயராகவன்

2193 V Cross K Block 2193 5ஆவது கிராஸ் கே பிளாக்

Kuvempu Nagar, Mysore 570023 குவெம்பு நகர், மைசூர் 570023

Email ragha2193van@yahoo.com தொ.பேசி 91-0821-561863

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

அறிவியல் துளிகள்

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


அதிர்ச்சிக்கும், உணர்ச்சிக்கும் உள்ளாகும்போது நாம் வியர்ப்பது ஏன் ?

வியர்வை வருவதற்குக் காரணம் நம் தோலில் அமைந்துள்ள நுண்ணிய வியர்வைச் சுரப்பிகளே (sweat glands). இவற்றின் எண்ணிக்கை பல மில்லியன்களாகும். இவ்வியர்வைச் சுரப்பிகள் இருவகைப்படும். அவை முறையே, எக்ரின் (eccrine) சுரப்பிகள், அபோக்ரின் (apocrine) சுரப்பிகள் என்பன. இச்சுரப்பிகள் மனித உணர்ச்சிகளின் தூண்டுதல்களுக்கு (stimuli) உட்படக்கூடியவை. முதலில் கூறப்பட்ட எக்ரின் வியர்வைச் சுரப்பிகள் மனித உடல் முழுதும் இருப்பவை. உடலின் வெப்ப நிலைக்குத் தகுந்தவாறு மிகுதியாகவோ, குறைவாகவோ வியர்வையை வெளியேற்றுபவை. அடுத்துக் கூறப்பட்ட அபோக்ரின் வியர்வைச் சுரப்பிகள் அக்குள், தொடையிடுக்கு ஆகிய உடற்பகுதிகளில் அமைந்திருப்பவை. இச்சுரப்பிகள் பேரச்சம், கடுஞ்சினம் முதலிய தீவிரமான உணர்ச்சிகளுக்கு உட்பட்டு வியர்வையை வெளிக்கொணர்பவை. நாம் அதிர்ச்சிக்கும், ஆழ்ந்த உணர்ச்சிக்கும் ஆட்படும்போது இச்சுரப்பிகள் வியர்வையைச் சுரக்கும். மழை நாட்களிலும், குளிர்காலத்திலும் கூட நாம் வியர்ப்பதற்குக் காரணம் இதுவே.

மரபுப் பொறியியல் (genetic engineering) என்றால் என்ன ?

தங்களுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தைகள் மரபுவழிக் குறைபாடின்றி உருவாக, பல பெற்றோர்கள் மருத்துவ ஆலோசனையும், உதவியும் பெறுவது தற்போது பெருகி வருகின்றது. அரிவாள் செல் சோகை (sickle cell anemia) போன்ற நோய்கள் மரபுவழிக் குறைபாட்டினால் உண்டாவதாக அறிஞர்கள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் மரபுவழி நோய்கள் உண்டாகாமல் தடுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத்துறையே மரபுப் பொறியியலாகும். குறையுடைய மரபணுக்களை (genes), குரோமோசோம்களில் (chromosomes) இருந்து நீக்கி இயல்பான மரபணுக்களை பதிலுக்குப் பொருத்த முடியும் என்று அறிஞர்கள் நம்புகின்றனர்.

எண்ணெய்த் தொட்டிகளில் தீப்பிடித்துக் கொண்டால் அணைப்பதற்கு ஏன் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது ?

எளிதில் தீப்பிடிக்கக்கூடிய எண்ணெய், எரி சாராயம் (spirit) போன்ற திரவங்களில் உண்டாகும் தீயை அணைக்க தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது. மாறாக, சோப்பு நுரை போன்ற, திரவங்களில் மிதக்கக்கூடிய ஒருவகை நுரையைப் பயன்படுத்துவர். இத்தகைய நுரையைத் தீப்பிடித்துள்ள பகுதி முழுவதும் மறையுமளவுக்குச் செலுத்தி, தீயைக் கட்டுப்படுத்தி அணைக்க வேண்டும். அவ்வாறின்றி தண்ணீரைப் பயன்படுத்தி அணைக்க முயன்றால், எண்ணெய் எல்லா பக்கங்களிலும் சிதறி, தீ மேலும் பரவ வழிவகுத்துவிடும்

கண்ணாடிப் பொருட்கள் நொறுங்கும் பண்பைப் (brittleness) பெற்றிருப்பதற்கு என்ன காரணம் ?

ஒரு பொருள் மென்மை அல்லது கெட்டித்தன்மை பெற்றிருப்பதும், நொறுங்கும் தன்மை அல்லது கடினத் தன்மை பெற்றிருப்பதும் அப்பொருளின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வாறு அமைந்துள்ளன மற்றும் பிணைக்கப்பட்டுள்ளன என்பவற்றைப் பொறுத்ததாகும். ஒரு பொருளின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் தமக்குள்ளே இருக்கும் பிணைப்புகளைத் துண்டித்துக் கொள்ளாமல் இடம் பெயரும் தன்மை பெற்றிருக்குமானால், அப்பொருள் தன் மீது செலுத்தப்படும் விசையைத் தாங்கிக் கொண்டு உடையாமாலிருக்கும். எடுத்துக்காட்டாக, உலோகத்தின் ஒரு பகுதி தகைவுக்கு (stress) உட்படும்போது, அப்பகுதியிலுள்ள அணுக்கள் வேறிடத்திற்கு இடம் பெயர்ந்து அங்குள்ள அணுக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். இந்நிகழ்ச்சி உருத்திரிவு (deformation) எனப்படுகிறது. மூலக்கூறுகளுக்கு இடையேயுள்ள பிணைப்பு நெகிழ்ச்சித் தன்மையுடனிருந்தால் மட்டுமே இஃது இயலும்.

கண்ணடியைப் பொறுத்தவரை அதில் பலவகைப்பட்ட அணுக்கள் — அதாவது சிலிகான், உயிர்வளி, போரான், சில உலோகங்கள் ஆகியவற்றின் அணுக்கள் – மிகவும் உறுதியுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இவ்வணுப் பிணைப்புகள் ஏதேனும் அழுத்ததின் காரணமாக சிதைந்து போனால், அவ்வணுக்கள் இடம் பெயர்ந்து மற்ற அணுக்களுடன் இணைந்து மீண்டும் பிணைப்பைப் பெறமுடிவதில்லை. எனவேதான் கண்ணாடிப் பொருள் எளிதில் உடைந்து விடுகிறது. ஆனால் உலோகங்களையோ தகடுகளாகவும், கம்பிகளாகவும் மாற்ற முடிகிறது.

***

Dr R Vijayaraghavan முனைவர் இரா விஜயராகவன்

BTech MIE MA MEd PhD பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

2193 V Cross K Block 2193 5ஆவது கிராஸ் கே பிளாக்

Kuvempu Nagar குவெம்பு நகர்

Mysore 570023. India மைசூர் 570023 இந்தியா

Email: ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

அறிவியல் துளிகள்

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


இனிப்பு மாத்திரைகள் சர்க்கரையைப் போன்ற இனிப்பையே தந்தாலும் குறைவான கலோரி (calorie) ஆற்றலையே பெற்றிருப்பது எவ்வாறு ?

இனிப்பு மாத்திரைகளுக்கு மட்டுமின்றி வேறு பல கூட்டுப்பொருள்களுக்கும் (compounds) கூட சர்க்கரையைப் போன்றும், அதை விடக் கூடுதலாகவும் இனிப்புச் சுவை இருப்பதுண்டு. சர்க்கரைப் பொருள்களை உணவில் சேர்த்துக் கொண்டால் வளர்சிதை மாற்றத்தின்போது (metabolism) கூடுதலான கலோரி ஆற்றலைத் தந்து அவை உடலில் கூடுதலான கொழுப்பு சேர்வதற்கு வழி வகுத்துவிடும். அதிகக் கொழுப்பு சேர்வது உடல் நலத்திற்குத் தீங்கானது என்பது நாம் அறிந்ததே. சாக்கரின் (saccharine) போன்ற கூட்டுப்பொருள்கள் சர்க்கரையைவிடக் கூடுதலான இனிப்புச் சுவையைத் தந்தாலும் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படாததால் அவை பூஜ்யம் கலோரி ஆற்றலையே தரும். பெரும்பாலும் இத்தகைய சாக்கரின் கலந்த இனிப்பு மாத்திரைகளையே நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்துகின்றனர். குறைந்த கலோரி ஆற்றலுள்ள அதே நேரத்தில் தேவையான இனிப்புச் சுவையும் கொண்ட வேறு சில இனிப்பு மாத்திரைகளும் உள்ளன. அசெஸுல்ஃபாம்-கே (acesulfam-K) போன்றவை வளர்சிதை மாற்றத்திற்கு உள்ளாகாமல் அதே நேரத்தில் தேவையான இனிப்புச் சுவையையும் தரும்.

நீரினால் கண்ணாடி ஈரமாவதுபோல் பாதரசத்தால் ஏன் ஈரமாவதில்லை ?

ஈரமாதல் நிகழ்ச்சியானது திரவம் மற்றும் அது தொட்ர்புகொள்ளும் பரப்பு ஆகியவற்றிடையே நிலவும் ஒட்டு விசை (adhesive force) மற்றும் ஈரமாகும் திரவத்தின் மூலக்கூறுகளுக்கிடையே நிலவும் பிணைப்பு விசை (cohesive force) ஆகியவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டையே பெரிதும் பொறுத்துள்ளது. திரவத்தின் மூலக்க்கூறுகட்கிடையே நிலவும் பிணைப்பு விசையே அதன் பரப்பு இழுவிசையின் (surface tension) அளவுக்கும் காரணம் எனலாம். பாதரசம் கண்ணாடிப் பரப்பை ஈரமாக்க இயலாமைக்கு முக்கிய காரணம் அதன் பரப்பு இழுவிசை மிக அதிகமாக இருப்பதே; தண்ணீரின் பரப்பு இழுவிசயைவிட பாதரசத்தின் பரப்பு இழுவிசை ஆறு மடங்கு அதிகம். மேலும் பாதரசத்தின் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள பிணைப்பு விசை பாதரசத்திற்கும் கண்ணாடிக்கும் இடையே நிலவும் ஒட்டு விசையைவிட மிகவும் வலிமை வாய்ந்ததாகும். இதன் காரணமாகவே பாதரசம் கண்ணாடியின் மீது பரவுவதும் இல்லை, அதன் பரப்பில் ஒட்டுவதுமில்லை. அதே நேரத்தில் தண்ணீருக்கும் கண்ணாடிப் பரப்புக்கும் இடையே நிலவும் ஒட்டு விசையானது தண்ணீர் மூலக்கூறுகளுக்கிடையே நிலவும் பிணைப்பு விசையைவிட மிக வலிமையானது; இதன் விளைவாகவே நீர் கண்ணாடியுடன் ஒட்டிக்கொள்வதோடு, அதன் பரப்பின் மீது விரைந்தும் பரவுகிறது.

ஊற்றுப் பேனாவின் (fountain pen) முள்ளில் (nib) பிளவு இருப்பது ஏன் ?

ஊற்றுப் பேனாவைக் கொண்டு எழுதும்போது அதன் மை, முள்ளின் வழியாக வெளியேறி தாளில் கோடுகளாகவும், எழுத்துக் குறிகளாகவும் பரவி உலர்ந்து போகிறது. மை சீராகவும், மென்மையாகவும் வெளியேறுவதால் எழுத்துக் குறிகளும் ஒரே சீராக அமைகின்றன. பரப்பு இழுவிசை (surface tension) மற்றும் ஈர்ப்பு விசை ஆகியவை காரணமாக வெளியேறும் மை பேனாவின் முன் பகுதியுலுள்ள பிளாஸ்டிக் நாக்கிற்கு மேல் வந்து, பேனா முள்ளின் நடுவேயுள்ள சிறு துளையருகே சேர்கிறது. எழுதும்போது பேனாவைச் சற்று அழுத்தவேண்டியுள்ளது; அப்போது முள் இரண்டாகப் பிளவுபட்டு சிறு குழாய்/நுண் புழை (capillary) போன்ற அமைப்பு உருவாகி அதன் வழியே மை வெளியேறுகிறது. இவ்வெளியேற்றத்திற்கான விசை நுண்புழை விசை எனப்படும். முள்ளிலுள்ள பிளவு, குழாய் போன்றும் குழாயினுள் இருக்கும் தடுக்கிதழ் (valve) போன்றும் பணிபுரிந்து மை ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. இப்பிளவு மட்டும் இல்லாவிடில் வெளியேறும் வாய்ப்பே உண்டாகாமல், மை, பேனாவிற்கு உள்ளேயேதான் தங்கி இருக்கும்.

சோடியம் உலோகத்தை நீரில் இடால் தீப்பற்றிக் கொள்வது ஏன் ?

சோடியம் உலோகம், நீருடன் சேரும்போது வேதியியல் வினையின் மூலம் ஹைடிரஜன் வாயுவும் பெருமளவு வெப்பமும் வெளி வருகின்றன. இவ்வினையைக் கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் அறியலாம். இதற்கு வெப்ப உமிழ் வினை (exothermic reaction) என்று பெயர்.

2Na + 2H2 O H2 + 2NaOH

சோடியம் + நீர் ஹைடிரஜன் + சோடியம் ஹைடிராக்ஸைடு

இவ்வேதியியல் வினையின் மூலம் வெளிவரும் பெரும் வெப்பம், எளிதில் தீப்பிடித்துக் கொள்ளும் இயல்புடைய ஹைடிரஜன் வாயுவை எரியூட்டிவிடும். இதைத் தவிர்க்கும் பொருட்டு சோடியம் உலோகத்தை மண்ணெண்ணெய், பென்சீன் போன்ற கரைப்பான்களில் (solvents) வைப்பது வழக்கம். இவற்றில் சோடியம் நீருடன் சேர்ந்து வினைபுரியும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. எனவே தீப்பிடித்துக் கொள்ளும் வாய்ப்பும் இல்லை.

Email: ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

அறிவியல் துளிகள்

This entry is part [part not set] of 15 in the series 20010430_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


ஆற்றின் நடுப்பகுதியில் செல்லும் நீரின் விரைவுத்தன்மை (speed) கூடுதலாகவும், இரு கரைகளின் அருகே செல்லும் நீரின் விரைவுத்தன்மை மிகக் குறைவாகவும் இருப்பது ஏன் ?

தண்ணீர் ஒட்டுந் தன்மை/பசைத் தன்மையுடைய ஒரு நீர்மப் பொருள். இதன் குண நலன்கள் மிகவும் தெளிவானவை. ஆற்றின் இரு கரைகளை ஒட்டி இருக்கும் தண்ணீர், கரைகளுடன் ஏற்படும் உராய்வின் காரணமாக இயக்கம் குறைந்து ஏறக்குறைய நிலையான தன்மையில் இருப்பதாகக் கருதலாம். மாறாக ஆற்றின் இரு கரைகளை விட்டு விலகி இருக்கும் நீரில் மேற்கூறிய உராய்வு ஏதுமில்லை என்பதால் ஆற்றின் நடுப்பகுதியில் ஓடும் நீர் விரைந்து செல்லுகிறது. எனவேதான் ஆற்றின் கரைகளின் அருகே செல்லும் நீரைவிட, நடுப்பகுதியில் செல்லும் நீர் விரைந்து ஓடுகிறது.

இருக்கையில் இருந்து எழும்போது, நாம் முன்பக்கம் சாய்ந்தவாறு காலை உந்திக்கொண்டு எழுந்திருப்பது ஏன் ?

ஒரு பொருளின் ஈர்ப்பு மையம் (center of gravity) அதன் அடிப்பகுதியிலேயே விழும்போது அப்பொருள் நிலையாக இருக்கும். எனவேதான் ஒரு பொருள் பரந்த அடிப்பகுதியும், அதனால் அதன் ஈர்ப்பு மையம் புவிக்கு அருகிலும் இருக்கும்போது, அப்பொருள் நிலையாக இருக்கிறது.

இருக்கையில் அமர்ந்து இருக்கும் மனிதனின் ஈர்ப்பு மையம் அவன் நெஞ்சுப் பகுதியில் இருக்கும். அதனால் அவன் முன்பக்கம் சாய்ந்து, காலை உந்தி எழும்போது ஈர்ப்பு மையம் காலின் அடிப்பகுதியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. எனவேதான் மனிதனால் கீழே விழாமல் எழுந்திருக்க இயலுகிறது. மேற்கூறிய அச்செயல் தன்னியக்கமாக, அனிச்சையாக, எவ்வித முயற்சியுமின்றி, மிகவும் இயல்பாக நடைபெறுகிறது என்பதனை நாம் அறிவோம்.

தொலைக்காட்சித் திரையில் ‘சினிமாஸ்கோப் ‘ படங்களைத் திரையிடும்போது அவற்றின் அகலம் குறைந்து காணப்படுவதேன் ?

சினிமாஸ்கோப் படங்களை எடுப்பதற்கு உருளை வடிவிலமைந்த கண்ணாடி வில்லை (lens) பொருத்தப்பட்ட தனிவகையான ஒளிப்படப் பெட்டியைப் (camera) பயன்படுத்துவர். இதில் எடுக்கப்படும் படம் அல்லது உரு (image) நீளம் மிகுந்தும், அகலம் குறைந்தும் அமையும். இதனால் உருவின் மிகுதியான பரப்பு படத்தில் பதிவாகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட சினிமாஸ்கோப் படங்களை அரங்குகளில் திரையிடுவதற்கு உருளை வடிவிலமைந்த மற்றொரு வில்லை பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் நீளவாட்டில் அமைந்த பகுதி, உயரவாட்டில் அமைந்த பகுதியைவிட மிகுதியாக உருப்பெருக்கம் (magnify) செய்யப்படுகிறது. படத்தின் நீளவாட்டப் பகுதி, உயரவாட்டப் பகுதியை விட இரண்டரை மடங்கு அதிகமாக அமைந்துள்ளது. எனவே சினிமாஸ்கோப் படத்தை திரையரங்குகளில் திரையிடுவதற்கும் நீள அகல விகிதங்கள் 2.5: 1 என்ற வகையில் அமைந்த சிறப்புத் திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தொலைக்காட்சித் திரையில் நீள அகல விகிதங்கள் மேற்கண்ட விகிதத்தில் இல்லாமல் இருப்பதால் சினிமாஸ்கோப் படத்தின் அகலம், முழுத் திரையிலும் கொண்டுவர இயலாமல், குறைவாகக் காட்சியளிக்கிறது.

வளி அடுப்பைப் (gas stove) பற்றவைக்கும்போது உருளைகளில் அடைக்கப்பட்டுள்ள நீர்மப் பெட்ரோலிய வளி (liquefied petroleum gas-LPG) எவ்வாறு தீப்பற்றிக்கொள்ளாமல் இருக்கிறது ?

வளி அடுப்பைப் பற்றவைத்தவுடனே, அதிலுள்ள வளிப்பொருள், உலையைச் (burner) சுற்றியுள்ள காற்றுடன் கலப்பதால் உடனே தீப்பிடித்து எரியத் தொடங்குகிறது. தேவையான அளவு காற்று கலக்காவிட்டால் தீப்பிடிப்பது தவிர்க்கப்பட்டு எரியும் நிகழ்ச்சியும் நடைபெறாது. உருளையின் (cylinder) வாய்ப்பகுதி மிகவும் குறுகி இருப்பதாலும், உருளையையும் அடுப்பையும் இணைக்கும் குழாயினுள் காற்று நுழையும் வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதாலும் நீர்மப் பெட்ரோலிய வளி தீப் பிடித்துக்கொள்வது பெருமளவு தவிர்க்கப்பட்டு விடுகிறது. அடுத்து உருளையின் வாய்ப்பகுதியில் உள்ள சீரியக்கி (regulator) நீர்மப் பெட்ரோலிய வளியை வெளியே செல்ல அனுமதிக்குமே ஒழிய வெளியே உள்ள காற்றை உருளையின் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. இதனால்தான் உருளையில் அடைக்கப்பட்டுள்ள வளி தீப்பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்கமுடிகிறது. மேலும் வளி தீப்பிடிப்பதற்கு அதன் சில மூலக்கூறுகளின் வெப்ப நிலையை மிகுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காகவே தீக்குச்சி அல்லது தீக்கொளுவியினால் (lighter) தீப்பொறிகளை உண்டாக்கி வளியை விரைந்து தீப்பிடிக்கச் செய்யவேண்டியுள்ளது.

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

மைசூர் 570023 இந்தியா

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

அறிவியல் துளிகள்

This entry is part [part not set] of 13 in the series 20010408_Issue

டாக்டர் ரா விஜயராகவன் பிடெக் எம்ஐ எம்ஏ எம்எட் பிஎச் டி


மனிதனால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் எது ?

பொன், வெள்ளி, ஈயம், செம்பு, இரும்பு, தகரம், பாதரசம் ஆகியன மக்களால் பழங்காலத்தில் இருந்து பயன் படுத்தப்பட்டு வரும் உலோகங்கள். இருப்பினும் மனித இனத்தால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகமாகக் கருதப்படுவது தங்கமே. ஆற்றுப்படுகைகளில் பொன் தாதுக்கள் பாள வடிவில் அறியப்பட்டன. கற்காலத்தின் இறுதிப் பகுதியில் இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அப்போதிருந்தே நகையும் அணிகலன்களும் செய்ய இவ்வுலோகம் பயன்பட்டு வருகின்றது.

பண்பலை ஒலிபரப்பு (F M Transmission) என்பது என்ன ?

வானொலியின் ஒலிபரப்பிலும், தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், உயர் அதிர்வெண் (high fequency) கொண்ட மின் காந்த அலைகள் (electro magnetic waves) குறை அதிர்வெண் கொண்ட ஒலி, ஒளி சமிக்கைகளைச் (audio, video signals) சுமந்து செல்லும் சுமப்பான்களாகப் (carriers) பணி புரிகின்றன. அவ்வாறு சுமந்து செல்லும்போது, மின்காந்த அலைகள், ஒலி, ஒளி அலைகளால் பண்பாக்கம் பெறுகின்றன.

இப்பண்பாக்கம் இரு வழிகளில் செய்யப்படலாம். அதிர்வெண் (frequency) மாற்றத்தின் மூலமும், அலையின் வீச்சை (amplititude) மாற்றுவதன் மூலமும் செய்யலாம். முதலில் குறிப்பிட்ட முறையில் செய்யப்படுவது அதிர்வெண் பண்பாக்கம் (FM – Frequency Modulation) எனப்படும். அடுத்ததை அலைவீச்சு பண்பாக்கம் (AM – Amplitude Modulation) என்பர். மின்னல், இடி போன்றவற்றால் AM ஒலிபரப்பில் கர கர ஒலி, ஒலி இடையூறுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. ஆனால் FM ஒலி பரப்பில் இத்தகைய இடையூறுகள் ஏதுமின்றி துல்லியமான ஒலியைக் கேட்கலாம். தொலைக்காட்சியில் FM மூலம் ஒலியும், AM மூலம் ஒளியும் பரப்பப்படுகின்றன. FM மூலம் இயங்கும் வானொலியின் ஒலிபரப்பு பண்பலை ஒலிபரப்பாகும்.

ஊற்றுப்பேனாவில் (Fountain pen) உள்ள மை, ஏறக்குறைய தீர்ந்து விட்ட நிலையில், அதிகமாக வெளியே கொட்டுவது ஏன் ?

பேனா முள் (nib), மையைத் தேக்கிவைக்குமிடம், மையை முள்ளுக்குச் செலுத்தும் வழி ஆகிய மூன்றும் பேனாவின் முக்கியமான பகுதிகளாகும். பேனாவைப் பயன்படுத்தி எழுதும் போது, கூர்மையான பேனா முள்ளின் பிளவு வழியாக மை கசிந்து தாளில் எழுதும் வாய்ப்பு உண்டாகிறது. மை தேங்கியுள்ள இடத்திலிருந்து மை வெளியேறுவதனால் உண்டாகும் காலி இடத்தில் காற்று நிரம்பிவிடும். இதனால் மை தேக்ககத்திலும், வெளியேயுள்ள வளி மண்டலத்திலும் ஏற்படும் காற்றழுத்த வேறுபாடு சமன் செய்யப்படுகிறது. காற்று உள்ளே செல்வதற்கு வசதியாக பேனா முள்ளின் நடுவில் ஒரு சிறு துளை இருப்பதையும் காணலாம். மை தேக்ககத்திலிருந்து மை வெளியேற வெளியேற, அவ்விடத்தில் நிரம்பும் காற்றின் கொள்ளளவும் மிகுதியாகிக்கொண்டே செல்லும். ஒருவர் பேனாவைப் பிடித்து எழுதிக் கொண்டே இருக்கும்போது, அவர் கை விரல்களின் சூடு உள்ளே இருக்கும் காற்றையும் சூடுபடுத்தும். மை தேக்ககத்தில் பெருமளவு மையும், ஓரளவு காலி இடமும் அவ்விடத்தில் காற்றும் இருக்கும்போது மேற்கூறிய வெப்பத்தினால் உண்டாகும் விளைவு மிக மிகக் குறைவே. ஆனால் சிறிதளவு மையும் பெருமளவு காலி இடமும் அவ்விடத்தில் பெருமளவு காற்றும் நிரம்பி இருக்கும்போது, வெப்பத்தினால் காற்று விரிவடையும். தன் விளைவாக, மை உந்தித் தள்ளப்பட்டு பேனா முள்ளின் வழியாக சிந்திக் கொட்டத் துவங்கும். மிகச் சிரிதளவே மை இருக்கும்போது அதிகமாக மை கொட்டுவது தன் காரணமாகவே.

பச்சை மிளகாயைத் தின்ற வாயில் உண்டாகும் காரத்தை இனிப்புப் பண்டம் எவ்வாறு தணிக்கிறது ?

பச்சை மிளகாயை ஒருவர் கடித்துத் தின்றவுடனே, அவர் நாவில் அமைந்திருக்கும் சுவையரும்புகள் (taste buds) கிளர்ச்சியடைகின்றன; கார உணவைத் தின்ற செய்தி நரம்புத் துடிப்புகள் (nerve impulses) மூலம் மூளைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் ஏற்படும் கார உணர்ச்சி இனிப்பைத் தின்பதன் மூலமோ அல்லது குளிர்ந்த பானங்களை அருந்துவதன் மூலமோ நீக்கப்படுகிறது அல்லது குறைக்கப்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், காரத்தைத் தின்ற வாயில் சர்க்கரை போன்ற இனிப்புப் பண்டங்கள் பட்டவுடனே, ஏற்கனவே குறிப்பிட்டவாறு சுவையரும்புகள் கிளர்ச்சியுற்று, நரம்புத்துடிப்புகள் மூலம் இனிப்பு தின்ற செய்தி மூளைக்கு அனுப்பப் படுகிறது; எனவே இனிப்புச் சுவையுணர்வு கார உணர்வை மங்கவைத்து விடுகிறது. அடுத்த காரணம், பால், தயிர் போன்ற நீர்மப் பொருட்களை உண்டவுடனே, நாவில் உண்டாகும் ஊற்றுநீரிலுள்ள வேதிப்பொருட்கள், சுவையரும்புகளை கிளர்ச்சியடையச் செய்து முன்பு சொன்ன முறைப்படி கார உணர்வைத் தணிக்கின்றன.

டாக்டர் ரா விஜயராகவன்

பிடெக் எம்ஐ எம்ஏ எம்எட் பிஎச் டி

வட்டாரக் கல்வியியல் கல்லூரி

மைசூர் 570006 ந்தியா

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

அறிவியல் துளிகள்

This entry is part [part not set] of 13 in the series 20010101_Issue

டாக்டர் இரா விஜயராகவன்


ஒரே நிலையில் நாம் கைகளையோ அல்லது கால்களையோ வைத்துக் கொண்டிருந்தால் சிறிது நேரம் கழித்து அவை மரத்துப் போவது ஏன் ?

நாம் நமது கைகளையோ அல்லது கால்களையோ சிறிது நேரம் ஒரே நிலையில், குறிப்பாக எதன் மீதாவது அழுத்திய நிலயில் – வைத்துக்கொண்டிருந்தால், அப்பகுதி மரத்துப்போவது உண்மையே. இதற்குக் காரணம் என்னெவென்றால், அவ்வாறு நீண்ட நேரம் அழுத்தப்பெறும் குறிப்பிட்ட அப்பகுதியில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, நரம்புகள் செயற்பாட்டைத் தற்காலிமாக இழந்து விடுகின்றன. இதன் விளைவாக தொடு உணர்ச்சி இழக்கப்பெற்று மரத்துப்போகும் நிலை அப்பகுதிகளில் உண்டாகிறது. இத்தகைய நிலை தற்காலிகமானதுதான். அப்பகுதிகளில் அழுத்தம் நீங்கப்பெற்றவுடன், அதாவது கை கால்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தவுடன், ரத்த ஓட்டம் சீரடைந்து சிறிது நேரத்தில் சாதாரண உணர்வைப் பெறமுடிகிறது.


பிஸ்கட் சூடான பாலை விநை¢து உறிஞ்சுவதும், குளிர்ந்த பாலை அவ்வாறின்றி மெதுவாக உறிஞ்சுவதும் ஏன் ?

அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கிடையே கவர்ச்சி விசையினாலுண்டாகும் பிணைப்பை வேண்டர் வால் (Vander Wall ‘s) பிணைப்பு என்பர். பிஸ்கட்டைப் பொறுத்த வரையில் அதன் துகள்களுக்கிடையே (particles) நிலவும் மேற்கூறிய அப்பிணைப்பு வலிமை குன்றியதாக உள்ளது. இதனால் பிஸ்கட் மென்மையாக இருப்பதுடன் எளிதில் தூளாகியும் விடுகிறது. அடுத்து பிஸ்கட் தண்ணீரை எளிதில் உறிஞ்சி விடுவதைக் காணலாம். இதற்குக் காரணம் அதன் துகள்களுக்கிடையேயுள்ள வேண்டர் வால் பிணைப்பு தண்ணீரின் தொடர்பால் சிதைக்கப்பெற்று மிகவும் மிருதுத் தன்மை அடைந்துவிடுவதேயாகும்.பாலைப் பொறுத்தவரை, அது தண்ணீர் மற்றும் பாகுத்தன்மை (viscous) கொண்ட புரதம், கொழுப்பு ஆகியவற்றின் கலவையாகும். பிஸ்கட்டைப் பாலில் தோய்த்தவுடன், அதிலுள்ள தண்ணீர் ஏற்கனவே குறிப்பிட்டவாறு பிஸ்கட் துகள்களுடன் வினைபுரிந்து பிஸ்கட்டை மிருதுத்தன்மை அடையச்செய்துவிடும். மேலும் சூடான பாலில் புரதம் கொழுப்பு ஆகியவற்றின் பாகுத்தன்மை மிகவும் குறைந்து போய்விடுகிறது. பிஸ்கட் சூடானஅந்நிலையில் சூடான பால் மிகவும் விரைந்து பிஸ்கட் துகள்களுக்கிடையே பரவுகிறது. இதன் காரணமாக பாலை விரைந்து உறிஞ்சிக்கொள்கிறது. இவ்விரைவுத்தன்மை ஆறிய பாலில் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அதிலுள்ள பாகுத்தன்மை குறைவின்றி இயல்பு நிலையில் இருப்பதேயாகும்.


பம்பைப் (pump) பயன்படுத்தி மிதிவண்டிச் சக்கரத்திற்குக் காற்றடிக்கும்போது, பம்ப் குழாய் சூடாவது ஏன் ?

அடிப்படையில் பம்ப் என்பது காற்றை அழுத்துவதற்குப் பயன்படும் ஒரு சாதனம். மிதிவண்டிச் சக்கரத்திற்குக் காற்றை ஏற்றும்போது பம்பின் நடுப்பகுதியில் உள்ள தண்டானது(rod) மேலும் கீழும் மாறி மாறி விரைந்து செல்வதைக் காண்கிறோம்; கீழ்நோக்கிச் செல்லும்போது காற்று அதிகமான அழுத்ததிற்கு உட்பட்டு அதன் வெப்பநிலை (temperarure) மிகுதியாகிறது. மேலும் பம்ப் விரைந்து செயல்படுவதால் காற்றில் அழுத்தம் மிகுதியாக ஏற்பட்டு கூடுதல் வெப்பமும் உண்டாகிறது. இவ்வாறு விரைவாக உற்பத்தியாகும் வெப்பம் அதற்கு ஏற்ற வகையில் விரைந்து வெளியேற முடிவதில்லை. இதன் விளைவாக பம்பின் வெளிப்புறப் பகுதிக்கு வெப்பம் பரவி குழாய் சூடாகிறது.


மோட்டார் சைக்கிளில் உள்ள சக்கரங்களில் ஆரைக் கம்பிகள் (spokes) இருப்பதும் ஸ்கூட்டர் சக்கரங்களில் அவை இல்லாமல் இருப்பதும் ஏன் ?

மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றின் சக்கரங்களில் ஒன்றில் ஆரைக்கம்பிகள் இருப்பதற்கும் மற்றவற்றில் அவை இல்லாமல் இருப்பதற்கும் பெரிய அறிவியல் காரணம் ஏதுமில்லை. மோட்டார் சைக்கிளின் சக்கரங்கள், ஸ்கூட்டர் சக்கரங்களை விட அளவில் அதாவது விட்டத்தில் பெரியவை; எனவே மோட்டார் சைக்கிளின் சக்கரங்களைக் கம்பிகளின்றி திண்ணிய (solid) பொருளாக அமைத்தால் எடை மிகுதியாகி அவற்றை விரைந்து செலுத்துவதற்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படும். மாறாக ஸ்கூட்டர் சக்கரங்கள் சிறியவை; எனவே முழுமையான திண்ம நிலையிலும் அவற்றின் எடை மிகுதியாவதில்லை. அதே நேரத்தில் கம்பிகளுடன் கூடிய சக்கரங்கள் விபத்து அல்லது வேறு காரணங்களால் எளிதில் தமது சீரான வட்ட வடிவத்தை இழந்து விடும் வாய்ப்பு உண்டு. எனவே எடை மிகுதி என்ற ஒரு குறையைத் தவிர்த்துப் பார்த்தால் கம்பிகளின்றி ஒரே திண்மத் தன்மையுடன் கூடிய சக்கரங்களைப் பயன் படுத்துவது சிறந்தது எனலாம். தற்போது பந்தைய மோட்டார் சைக்கிள்களில் கார்பன் இழைக்கலவையுடன் கூடிய பொருளைக் கொண்டு செய்யப்பட்ட, எடை குறைந்த, ஆரைக்கம்பிகளற்ற, திண்மமான பெரிய சக்கரங்களைப் பயன் படுத்துவதைக் காணலாம்.


சோடா போன்ற மென்பானங்களில் (soft drinks) சிறிதளவு உப்பைச் சேர்த்தவுடன், அவை நுரையுடன் வெளியே பொங்கிவழிவது ஏன் ?

மென்பானம் என்பது கரிமவாக்கம் (carbonated) செய்யப்பட்ட, மணம்/நெடி சேர்ந்த வெறும் தண்ணீர்தான். அதாவது தண்ணீர் எந்த அளவு கரியமில வாயுவை (carbon-di-oxide) ஏற்றுக் கொள்ளுமோ அதைவிடக் கூடுதலான வாயுவை மீவுயர் (supersaturated)அழுத்தத்தில் கலந்து உண்டாக்கப்பட்டவையே இத்தகைய மென்பானங்களாகும். இவை மிக உயர்ந்த அழுத்தத்திலும், குறைந்த வெப்ப நிலையிலும் (temperature) தயாரிக்கப்படுகின்றன. அப்போது வாயுவுக்கும் தண்ணீருக்கும் இடையே ஒரு வகைச் சமநிலை (equilibrium) உருவாகிறது. பானம் நிரம்பியுள்ள கொள்கலனின் மூடியைத் திறக்கும்போது அழுத்தம் குறைந்து மேற்கூறிய சமனிலை பாதிக்கப்படுகிறது. இதனால் கூடுதலாக அடைக்கப்பட்டிருக்கும் வாயுவானது குமிழ்களாக வெளியேறத் துவங்குகிறது. அந்நிலையில் பானத்தில் சுற்றுப்புற அழுத்தத்திற்கும், வெப்ப நிலைக்கும் ஏற்ற வகையில் புதிய சமநிலை உருவாகும். அப்போது உப்பைச் சேர்த்தால் சமனிலை மீண்டும் பாதிக்கப்பட்டு மீவுயர் அழுத்தத்தில் அடைக்கப்பட்ட வாயுவானது நுரைத்துக்கொண்டு குமிழ்களாக வெளியேறுகின்றது. சேர்க்கப்படும் உப்பின் அளவுக்கேற்ப இந்நிகழ்ச்சி விரைந்தும் தீவிரமாகவும் நடைபெறும். கூடுதல் வாயு வெளியேறும் வரை இந்நிகழ்ச்சி தொடரும். பானம் நிரம்பிய கொள்கலனைத் திறக்காமலே, சற்று வேகமாக ஆட்டினால் கூட சமநிலை பாதிக்கப்பட்டு பானத்தில் நுரையுடன் கூடிய குமிழ்கள் உண்டாவதைக் காணலாம்.


குளிர் காலக் காலை நேரங்களில் மோட்டார் கார்களை ஓட்டத்துவக்குவதற்கு சிரமப்பட வேண்டியிருப்பது ஏன் ?

மோட்டார் கார் போன்ற தானியங்கிகள்(automobiles) ஓடுவதற்கு, உள் எரிப் பொறிகள் (internal combustion engines) இன்றியமையதவை. இப்பொறியில் உள்ள மூடிய கொள்கலனுள் (chamber) பெட்ரோல், டாசல் போன்ற எரி பொருளும் காற்றும் கலந்த கலவையானது மிகுந்த அழுத்தத்தில் வெடிப்பொலியுடன் பற்றவைத்து எரியூட்டப்படுகிறது. இதனால் உள்ளேயிருக்கும் உந்துதண்டானது (piston) கீழே தள்ளப்படும். இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியாக பல கொள்கலன்களுள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அங்குள்ள சுழல் தண்டானது(shaft) சுழல்வதுடன், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சக்கரங்களும் சுழல ஆரம்பித்து, அதனால் காரும் ஓடத்துவங்குகிறது. எரிபொருளும் காற்றும் கலந்த கலவையானது எரியூடப்படுவதற்குப் பல காரணங்களிருப்பினும் அவற்றுள் வெப்பநிலை முக்கியமான ஒன்றாகும். குளிர்காலக் காலைப்பொழுதில் காரின் எஞ்சின் பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் உள்ளே எரிபொருளைப் பற்றவைப்பதற்குத் தேவையான வெப்பநிலையை அடையச் சிறிது நேரம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக காரை ஓட்டத்துவங்குவதற்குச் சற்று சிரமப் படவேண்டியுள்ளது. இந்நிலை குளிர்ப்பகுதிகளில் மிகச் சாதாரணமாகக் காணக்கூடியதாகும். மிகவும் குளிர்ந்த பகுதிகளில் இந்நிலையைச் சமாளிக்கும் பொருட்டு குறைந்த வெப்பநிலையில் எரியூட்டப்படக்கூடிய ஹைட்ரோகார்பன் சேர்ந்த பெட்ரோலைப் பயன் படுத்தி குறைவான வெப்பநிலையில் காரை ஓடத்துவங்கும்படிச் செய்கின்றனர்.


பச்சிளங்குழந்தைகள் கைசூப்பும் பழக்கத்தைக் கொண்டிருப்பதேன் ?

இப்பழக்கம் இளங்குழந்தைகளுக்கு இயற்கையாகவே வருவதாகும். குழந்தைகள் பிறந்தவுடனே தாய்ப்பால் அருந்துகின்றன; பின்னர் புட்டிப்பால் குடிக்கின்றன. அப்போது வாயினால் பாலை உறிஞ்சிக் குடிக்கும்போதும், தொடர்ந்து அவ்வப்போது கை விரல்களைச் சூப்பும் போதும் இப்பழக்கம் குழந்தைகளுக்கு வந்துவிடுகிறதெனலாம். மேலும் கைவைிரல்களைச் சூப்புவதால் குழந்தைகளுக்கு ஒருவகைப் பாதுகாப்பு உணர்வு உண்டாவதாகக் கருதப்படுகிறது. மருத்துவ வல்லுனர்கள் கருத்துப்படி, குழந்தைகளின் இப்பழக்கத்தைப் பற்றி அநாவசியமான கவலை கொள்ளத்தேவையில்லை. அச்சம், கவலை, துக்கம் ஆகியவை காரணமாக பெரிய சிறுவர்களும் அவ்வப்போது கைசூப்புவதுண்டு. இதற்குக் காரணம் இப்பழக்கத்தினால் அவர்கட்கு ஒருவகை உணர்வுபூர்வமான ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றன. இருப்பினும் வளர்ந்த குழந்தைகள் இப்பழக்கத்தை மேற்கொள்ளும்போது அதனைக் கண்டிப்பாகத் தடுத்திட வேண்டும்.


உலர்ந்த மணற்பகுதியை விட, ஈரமான மணற்பகுதியில் எளிதாக நடக்க முடிவது ஏன் ?

எந்த ஒரு குறிப்பிட்ட பொருளின் மூலக்கூறுகட்கிடையேயும் ஒரு வகையான கவர்ச்சி விசை நிலவுகிறது. இவ்விசையினை பிணைப்பு விசை (cohesive force) என்பர். ஆனால் இருவேறு பொருள்கள் ஒன்றோடொன்று சேரும்போது, அவற்றின் மூலக்கூறுகட்கிடையேயும் ஒரு வகையான கவர்ச்சி விசை உண்டாகிறது. அதனை ஒட்டுவிசை (adhesive force) எனக்கூறுவர். மணலும் தண்ணீரும் கலந்த ஈரமணலின் மூலக்கூறுகட்கிடையே உண்டாகும் ஒட்டுவிசையானது, உலர்ந்த மணலின் மூலக்கூறுகட்கிடையே நிலவும் பிணைப்பு விசையைவிட மிகவும் வலிமையானதாகும். தண்ணீரும் மணலும் கலந்த கலவையின் மூலக்கூறுகட்கிடையே உண்டாகும் இத்தகைய வலிமையான ஒட்டு விசையின் காரணமாக ஈர மணற்பரப்பில் போதுமான கெட்டித்தன்மை ஏற்பட்டு அதன் மீது எளிதாக ஓடவும், நடக்கவும் முடிகிறது. ஆனால் உலர்ந்த மணலின் மூலக்கூறுகட்கிடையே நிலவும் பிணைப்பு விசையானது மணலின் துகள்களை ஒன்றோடொன்று இறுக்கமாக ஒட்டவைப்பதற்குப் போதுமானதாக இல்லாத காரணத்தால் மணற்பரப்பானது கெட்டித்தன்மை குறைந்து தளர்ச்சியாக இருக்கும். இந்நிலையில் யாரேனும் நடந்தால், உடலழுத்தம் காரணமாக அவரது கால்கள் உலர்மணலில் ஆழமாகப் பதிந்து, மணற்பரப்பில் எளிதாக நடக்க இயலாமற்போகிறது.


விறகுக் கரியை எரிக்கும்போது உண்டாகும் புகையைவிட, விறகை எரிக்கும்போது

உண்டாகும் புகை மிகுதியாக இருப்பது ஏன் ?

சாம்பல், ஆவியாகும் பிசுபிசுப்பான எண்ணெய் போன்ற நீர்மப் பொருள் அல்லது கரிமப் பொருள் ஆகியவற்றை உள்ளடக்கிய சூடான, இலேசான கர்பன் – டை-ஆக்சைடு தான் புகை எனப்படுகிறது. மேற்கூறிய பொருட்களில் ஒளிச்சிதறல் ஏற்படுவதாலும், பொதுவாகக் கார்பன் – டை – ஆக்சைடில் ஒளி ஊடுருவ முடிவதாலும் புகையின் தோற்றத்தை நாம் காண இயலுகிறது. சாதாரணமாக எரிபொருள் ஒன்று முழுமையாக எரிந்து விட்டால் கார்பன் – டை – ஆக்சைடும், நீராவியும்தான் வெளிப்படும். எரிவதற்குப் போதுமான வெப்பம் அல்லது தேவையான அளவு உயிர்வளி (oxygen) இல்லாமையால் சில நேரங்களில் எரிபொருட்கள் முழுமையாக எரிவதில்லை. இவ்வாறு அரை குறையாக எரிந்த எரிபொருட்கள் கார்பன் – டை – ஆக்சைடுடன் சேர்ந்து புகையாக மாறுகிறது. விறகில் கலந்துள்ள செல்லுலோஸ் எனப்படும் மாவிய இழைகள், மெழுகு, ஆவியாகும் தைலப்பொருட்கள் ஆகியன முன்பு சொன்ன காரணங்களால் முழுமையாக எரியாமற் போவதுண்டு. அப்போது அவை புகையாக வெளிப்படும். விறகுக் கரி மேற்கூறிய பொருட்கள் எதுவும் இல்லாத முழுமையான கரிமப் பொருளாகும். எனவே இதனை எரிக்கும்போது அதிகப் புகை உண்டாவதில்லை.


வண்ணத் தூரிகையின் (paint brush) இழைகள் நீருக்கு வெளியே ஒன்றோடொன்று

ஒட்டிக்கொண்டும், நீரினுள் ஒன்றோடொன்று ஒட்டமல் பிரிந்தும் இருப்பதும் ஏன் ?

வண்ணத்தூரிகையிலுள்ள இழைகளின் அடர்த்தியும் (density), நீரின் அடர்த்தியும் ஏறக்குறைய சமமாகும். எனவே தூரிகையை நீரினுள் வைத்திருக்கும்போது நீரின் மிதப்பாற்றல் (buyoncy) காரணமாக தூரிகையின் இழைகள் மேலெழும்புகின்றன. இதன் விளைவாக இழைகள் தனித்தனியே பிரிந்து நிற்கும். தண்ணீரால் நனைக்கப்பெற்ற நிலையில், தூரிகையை நீருக்கு வெளியே எடுக்கும்போது இழைகளின் மூலக்கூறுகளுக்கும் (molecules) தண்ணீரின் மூலக்கூறுகளுக்கும் இடையே உண்டாகும் ஒட்டுவிசையின் (cohesive force) காரணமாக இழைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு பிரியாமல் இருக்கும்.


பருக்கள் உடலின் பிற பகுதிகளில் வராமல், முகத்தில் மட்டுமே மிகுதியாக வருவது ஏன் ?

முகத்தின் தோற்பரப்பில் சிவந்த நிறத்தில் தோன்றும் மிகச் சிறு கட்டிகளை முகப்பரு என்கிறோம். இப்பருக்களுள் சீழ்த்துளிகளும் (pus) இருக்கும். பெரும்பாலும் 13 முதல் 20 வயதுவரை உள்ள இளைஞர்கட்கே முகப்பரு மிகுதியாக வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள. பருவ முதிற்சியினால் தோற்சுரப்பிகளில் எண்ணெய்ப் பிசுப்புடைய ஒருவகைக் லொழுப்புப் பொருள் மிகுதியாகச் சுரக்கிறது. இது தோற்பரப்பின் மிக நுண்ணிய துளைகள் வழியே வெளியேறும்போது தோலின் அடிப்புறமுள்ள திசுக்கள் (tissues) சிவந்து வீங்கி பருக்களாகக் காட்சியளிக்கின்றன. பாக்டாரியா எனப்படும் நுண்ணுயிரிகளினால் விளையும் தொற்றல் (infection) காரணமாகவும் நமைச்சல் ஏற்பட்டு மேற்கூறிய பிசுபிசுப்பான கொழுப்பு எண்ணெய் சீழாக மாறி சிவந்து பருக்களாவதுண்டு. ஊட்டமான உணவு உட்கொள்ளமை, கவலைப்படுதல், நல்ல காற்றோட்டமில்லாத அசுத்தமான சூழலில் வசித்தல் ஆகிவையும் பருக்கள் தோன்றக் காரணம் எனலாம். உடற்பகுதியிலேயே முகம்தான் நுட்பமான உணர்ச்சிகளுக்கும், தூண்டல்களுக்கும் உட்படும் பகுதியாகும். எனவேதான் பருக்கள் அதிகமாக முகத்தில் தோன்றுகின்றன. பருக்கள் மேலும் பரவாமல் தடுக்க நல்ல நீரையும், சோப்பையும் பயன்படுத்தி அவ்வப்போது முகத்தைக் கழுவி தூய்மையான துண்டினால் துடைக்க வேண்டும்.


புதைமணற்பரப்பில் எடைகூடிய பொருட்கள் புதையுண்டு போவதும் சாதாரண மணற்பரப்பில்

அவ்வாறு நிகழாததும் ஏன் ?

மணல் துகள்களுக்கிடையே நிலவும் பிணைப்பு விசையினால் (cohesive force) உண்டாகும் உராய்வின் (friction) காரணமாக எடைகூடிய பொருட்கள் கீழ்ப்புறம் செல்வது தவிர்க்கப்படுகிரது. ஆனால் புதைமணல் என்பது மணல்துகள்களும் ஏராளமான நீரும் கலந்த ஒரு கலவை. மணலுடன் கலந்துள்ள தண்ணீரின் மூலக்கூறுகள் மணல் துகள்களுக்கிடையே நிலவும் மேற்கூறிய உராய்வைக் குறைத்துவிடுகிறது. எனவே இத்தகைய உதிர்மணற்பரப்பில் எடை கூடிய பொருட்கள் கீழே செல்வதற்கு எவ்விதத் தடையும் உண்டாவதில்லை. இதனால் கனமான பொருட்கள் புதைமணலில் எளிதாகப் புதையுண்டு போகின்றன.

***

டாக்டர் இரா விஜயராகவன், மண்டலக் கல்வியியல் கல்லூரி, மைசூர் 570006, இந்தியா

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர