வள்ளுவர்கோட்டத்துத்தேர்

This entry is part 1 of 1 in the series 19991120_Issue

விக்ரமாதித்யன்


மேல்வானில்
முக்கால்நிலா

மிச்சம்மிஞ்சாடியாய்
நட்சத்திரங்கள் சிதறித்தெறித்து

இருளோ சமுத்ரமோ
என்றிருக்கும் மரநிழல்

தன்னந்தனியே நிற்கும் தேர் அம்சமாய் அழகாய்

திருவாரூர்விட்டு வந்ததுபோல
திராவிடர்நாகரிகத்தின் சாட்சியமாக

சாலையில் வேகவேகமாய் கார்கள் ஆட்டோக்கள்
சற்றேனும் நின்றுபார்க்க யார்தான் ஆள்

கட்டியவனுக்கே அழைப்பில்லை அன்று
காலச்சுழற்சியில் மீண்டுமவன் ஆண்டான்

கால்பரப்பி நிற்குமது கட்டளையிடுது
கவியெழுதச் சொல்லி

பார்வைக்குப் பெண்ணின் வடிவம்
பார்க்கப் பார்க்க பரவசம்

நின்றநிலையிலேயே நின்றால் எப்படி
நெடுகவும் ரதவீதி சுற்றிவர வேண்டும்

உற்சவர் இல்லை ஐயர் இல்லை
ஒருவடமுமில்லை ஓட்டமுமில்லை

இது மட்டும் வீம்புக்கு இருந்த இடத்திலேயே
இருக்கும் என்றென்றைக்கும்

***

(வித்யாஷங்கருக்கு)

***

கிரகயுத்தம் – விக்ரமாதித்யன் கவிதைகள்

***

திண்ணை நவம்பர் 20, 1999

Thinnai 1999 December 3

திண்ணை


  • வள்ளுவர்கோட்டத்துத்தேர்

விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன்