விழி மூடித் திறக்கையில்!

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

கௌரி



விழி மூடித் திறக்கையில்
வெகு தூரம் சென்று வந்த
வித்தியாச உணர்வெனக்கு…

தூரத்தில் நடந்தவை
துல்லியமாய் நினைவிருக்க
நேற்றென்னை நலம் கேட்ட
நபர் யாரும் நினைவில்லை…

புது வித அன்னியம் அகப்பட்டு
அழக் கூட தோன்றாமல்
வெகு தூர வெளிகளையே
வெறித்திருக்கிறது கரு விழிகள்!

நிகழாத நிகழ்காலம்
இறந்தது போல் இருப்பதனால்
இறந்தகாலம் என்றதற்கு
அர்த்தப்பெயர் வைத்துவிட்டேன்!

கனவெல்லாம் கருகியதா
அல்லது
கனவென்னை கருக்கியதா?
இதை சொல்லும் தெளிவின்று
துளி கூட எனிலில்லை!

விழி மூடித் திறக்கையில்
வெகு தூரம் சென்று வந்த
வித்தியாச உணர்வெனக்கு…!

– கௌரி

Series Navigation

கௌரி

கௌரி