ப.மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

ப.மதியழகன்


மழை புஷ்பம்

பிரிவு பற்றிய அச்சமோ
அசெளகரியமோ
எதுவும் தென்படவில்லை
உன் முகத்தில்
அடிக்கடி உள்ளங்கையை
பார்த்துக் கொள்கிறாய்
மென் பஞ்சுக் கரங்களை
முத்தமிட விழைகிறேன் நான்
வெளிர் நீலநிற சுடிதாரில்
தேவதை போல் இருக்கிறாய்
எனக்குப் பிடித்த நிறத்தில்
சுடிதார் அணிந்து வந்து
ஏன் என்னை வதைக்கிறாய்
உனது கேசத்தை வருடிச்
செல்லும் காற்று
என்னைப் பார்த்து கண் சிமிட்டுகிறது
நான் கொடுத்து வைத்தவனென்று
தூறலில் நனைவது
உனக்குப் பிடிக்குமென்பதால்
அடிக்கடி வானிலை அறிக்கையை
பார்க்கிறேன் நான்.

மெளனம் உடைகிறது

உன் இதயச் சிறைக்குள்
எனை அடைத்துவிடு
முடிந்தால்
ஆயுள் தண்டனையையும்
அளித்துவிடு
உன் கூந்தலை
அலங்கரிக்கும் மலர்கள்
புண்ணியம் செய்தவை
முள் தைத்தது
உன் பாதத்தில்
குருதி வழிவதோ
எனது இதயத்தில்
நீ புன்னகை புரிந்தாய்
ஆயிரம் மலர்கள்
இதழ் விரித்தன
புத்தகத்தை தூர எறி
காதல் தீயில்
பற்றி எரியப் போகின்றது
திருவடியில் தாமரை மலர்கின்றது
கூந்தலிலிருந்து மல்லிகை உதிர்கின்றது
ஒரு பூந்தோட்டமே நடந்து வருகின்றது.

அந்தர முத்தம்

மழை நின்றாலும்
மரத்திலிருந்து துளித்துளியாய்
வடிந்து கொண்டிருந்தது
மழை நீர்
பரிதி இனி உதிக்குமா
எனப் பயப்பட வைத்தன
கரிய நிற மேகக் கூட்டங்கள்
பறவைகள் குழாம் ஒன்று
அந்தரத்தில் மழையை
முத்தமிட்டுச் சென்றன
மலர்கள் சாம்ராஜ்யத்தில்
என்னவளுக்கும் ஓர் இடம் உண்டு
சிட்டுக்குருவியின் காதல் செய்கைகள்
உன்னை கன்னம் சிவக்க வைக்கிறது
உனது காலில் முள் தைத்தது
எனக்கல்லவோ வலித்தது
வாழ்க்கைக் கடலில்
கரை சேர்வேன்
கலங்கரை விளக்கமாக
என் காதலி இருக்கும் வரை
நானே நீ என்றாய்
ஏதோ தத்துவம் போலிருந்தது
மலை முகட்டில் உட்கார்ந்து
யோசித்தேன், கத்திப்பார்த்தேன்
பதில் வந்தது
நானே நீ என்று.

நினைவலைகள்

உச்சிமுகர்ந்து
முத்தமிட்டேன்
தூரத்தில் மறையும் வரை
வாசலிலேயே நின்றிருந்தாய்
உனது இதய கல்வெட்டில்
செதுக்கி வைத்திருந்தாய்
எனது பெயரை
உன் அன்பைச் சுமந்து
வந்த கடிதத்தில்
உந்தன் கண்ணீர்த் துளிகளால்
எழுத்துக்கள் ஆங்காங்கே
அழிந்திருந்தது
அந்நிய நாட்டில்
உன்னை நினைத்துக் கொண்டு
வாழ்வதைவிட வேதனை
வேறெதுவுமில்லை
எந்திரத்துடன் ஒத்துப்போக
மனம் ஒப்பவில்லை
என் கண்மணியாள்
எனதுள்ளத்தில் கோவில்
கொண்டு இருப்பதால்
இளமைக் காலங்கள்
வீணாகக் கழிகிறது
உனது இசைவில் தான்
இருக்கிறது
இரு துருவங்கள்
ஒன்றாக இணைவது.

ப.மதியழகன்

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

ப.மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

ப.மதியழகன்


வேண்டுதல்

குதிரை வடிவ
பலூனுக்கு காற்றடித்துக்
கொண்டிருந்தான்
பலூன் வியாபாரி
விதவிதமான உருவமுடைய
பலூன்களைக் கண்டு
வியந்தது
திருவிழாவுக்கு வந்த
குழந்தையொன்று
அப்பாவிடம் பலூனைச்
சுட்டிக்காட்டி வாங்கித்தரச்
சொன்னது
வீட்டிற்குப் போகும் போது
வாங்கிக்கலாம் என்றார்
அப்பா
திருவிழாவில் எழுந்தருளிய
சாமியிடம்
அப்பா பொம்மை வாங்கித்
தர வேண்டுமென்று
வேண்டிக் கொண்டது
குழந்தை.

சந்திப்பு

கண்ணாடியில் பிரதிபலித்த
இளநரையால்
சிறிது வருத்தம்
முடிவுக்கு முன்னுரை
எழுதுவதல்லவா அது
மாசு கலந்த காற்றை
அன்றாடம் சுவாசிக்க
நேர்ந்தாலும்
வயிற்றுப் பிழைப்புக்காக
நகரத்தை விட்டு
நகர முடியவில்லை
நேற்று பார்த்த
அதே பிச்சைக்காரன்
நேற்று கால்களை இழந்தவன்
இன்று கரங்களை இழந்திருந்தான்
அவனுடைய போலித்தனத்துக்கும்
சில்லறைகள் விழத்தான் செய்தது
கழைக்கூத்தாடிச் சிறுமிக்கு
கயிற்றினில் நடக்கும் போது
இல்லாத பதட்டம்
தட்டை ஏந்தும் போது இருந்தது
ரயில்வே சநதிப்புகளில்
இருக்கைகள் நிரம்புகிறது
கையசைப்புகளுக்கு மத்தியில்
அசம்பாவிதம் ஏதுமின்றி
சென்றடைய வேண்டுமே என்ற
அக்கறை மிகுந்திருந்தது.

அடையாளம்

முட்டுச்சந்தில்
கொட்டிக் கிடந்த
குப்பைகளைக் கிளறிக் கொண்டிருந்தது
தெரு நாய்
மைதானத்தில்
வானம் பார்த்து கிடந்த
பைத்தியம்
சாலையைக் கடந்தது
வானிலிருந்து விழுந்த
நட்சத்திரம்
பூமியை அடையும் முன்பே
எரிந்து போனது
சருகுகள் போர்த்திய
வனப்பாதையில்
கால் வைத்து
அமைதியைக் குலைத்தனர்
சுற்றுலாப் பயணிகள்
அடுக்களையில் புலம்பினாள்
அஞ்சம்மாள்
ஆதரவற்றோர் உதவித்தொகையை
அரசாங்கம் உயர்த்தித் தரவில்லையென
நாட்கள், வாரங்கள்,
மாதங்கள், வருடங்கள்
உருண்டோடுகின்றன
என்றாலும் இவன்
மழைக்குப் பயந்து
பயணிகள் நிழற்குடையில்
ஒதுங்கிய போதே
வாலிபம் தொலைந்தது.

அந்திம காலம்

அவரவர்
உள்ளங்களுக்கே தெரியும்
அவரவர்
எப்படிபட்டவரென்று
சுடரும் தொட்டால் சுடும்
நண்பர்களை வலியச்சென்று
வரவேற்று கைகொடுக்கும் போது
இன்பமாய் இருக்கும்
மரணத்தை வலியச் சென்று
யாரும் அழைப்பதில்லை
கதவைத் தட்டினாலும்
திறப்பதில்லை
மூங்கிலும் புல் இனமே
சாகும் வேளையில்
ஒரு மிடறு தண்ணீர்
தொண்டைக்குள் இறங்காது
வளைகுடா நாடுகளில்
புரட்சி வெடித்தது
சந்தைக்கு வந்த மாங்காய்
சீந்துவாரின்றி கிடந்தது
எப்போதும் குடையுடனே
காணப்படும் எதிர் வீட்டுத் தாத்தா
இறந்த போது
மழை பெய்தது.

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

ப.மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

ப.மதியழகன்


சாகரம்

துயரப்பொதிகளை
தோணி சுமக்கும்
அலைகளை எதிர்த்து
பிழைத்தல் நடக்கும்
சீற்றங்கள்
படகுகளைச் சின்னாபின்னமாக்கும்
புசல் எச்சரிக்கை
கடலுக்குள் போவதைத் தடுக்கும்
எல்லைகளைத் தாண்டாத போதும்
தோட்டாக்கள் பரிசாகக் கிடைக்கும்
பலரின் கூக்குரலுக்கு
மெளனம் ஒன்றே
அரசாங்கத்திடமிருந்து
பதிலாகக் கிடைக்கும்
பொங்குவதும், உள்வாங்குவதும்
அடிக்கடி நடக்கும்
இவற்றை பொறுத்துக்கொண்டே
கட்டுமரம் கடலில்
வலை விரிக்கும்
கடலன்னையின் பேரிரைச்சல்
கண்ணுறக்கம் கெடுக்கும்
உயிரை கையில் பிடித்துக்கொண்டே
வாழ்க்கை ஓடம் மிதக்கும்.

பற்றுக்கோடு

நடைவண்டி
பயிலும் குழந்தை
வாழ்வின் முதல்படிக்கட்டை
தொட்டு நிற்கிறது

பால் வற்றிப்போன
பிச்சைக்காரி
என்ன செய்வாய்
அழும் குழந்தையை
வைத்துக் கொண்டு

குப்பை அள்ளவரும்
மூதாட்டி
சதா திட்டிக் கொண்டே
இருப்பாள்
தனது பீடை வாழ்வைக் குறித்து

காலைத் தீண்டும் நதிநீர்
ஓடித் தொலைகிறது
ஒளிந்து கொள்ள மறுத்து

பால்காரன் சிந்திய பாலை
நக்கிக் கொண்டே
வீதி வரை செல்லும்
வாகனம் மோதியதால்
தாயை இழந்து தவிக்கும்
நாய்க்குட்டி.

இடைவெளி

முத்தத்தின் ஈரம்
கூட காயவில்லை
கூந்தலில் சூடிய
மல்லிகைப்பூ வாடவில்லை
மனதில் பூத்த
நேசத்தில் விரிசலில்லை
உன்னைச் சுமந்து சென்ற
வாகனத்தின் தடம்
இன்னும் அழியவில்லை
உன் விழியோரம் அரும்பிய
கண்ணீர்த்துளிகள் காயவில்லை
உன் ஞாபகச் சுவடுகள்
துக்கத்தை ஏற்படுத்த
தவறவில்லை
பெண்ணினத்தில்
தேவதைகளுக்கு பஞ்சமில்லை
நீ ஏற்றி வைத்த
காதல் தீபம் அணையவில்லை
நேசமே சுவாசமானபோது
தூரத்தை எண்ணித் துயரமில்லை
உன் இசைவுக்காக
காத்திருந்த நாட்கள்
நெஞ்சைவிட்டு அகலவில்லை.

சாபவிமோசனம்

உனது வருகைக்குப்
பின்னால்
எனது அறை
வாசத்தில் மிதந்தது
உனது கண்ணீர்த்துளிகள்
எனது கல் மனதையும்
கரைத்தது
கோடையிலே
மழை வரக் கூடாது
மின்னல் உன்னை
புகைப்படம் எடுத்தால்
நான் என்ன செய்வது
கடவுளிடம்
உன் வேண்டுதல்
நிறைவேற வேண்டுமென்று
நான் வேண்டிக் கொண்டேன்
உனது புன்னகையில்
வழியும் மதுவைப் பருகி
தலை கிறுகிறுத்ததுப் போனேன்
கடலில் விழும்
சந்திரனின் பிம்பம்
உன்னைப் பெயர் சொல்லி
அழைக்கும்
உனது காலடியை
கற்களின் மீது வை
சாபவிமோசனம் பெற்று
அகலிகை உயிர்த்தெழலாம்.

காட்சி

ரயில்
லெவல் கிராஸிங்கைக்
கடக்கிறது
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த
பிச்சைக்காரன்
ரயிலைச் சபிக்கின்றான்.
பேருந்தில் ஏறி அமர்ந்தான்
பக்கத்திலிருந்தவன்
தூங்கி இவன் தோளில் சரிய
பேருந்துப் பயணம்
துர்சொப்பனமாய்க் கழிந்தது.
வண்டி பஞ்சராகி
இரவில்
தள்ளிக் கொண்டே
வீடு திரும்புகின்றான்
வழியில் நாய்கள் குரைக்க
அது வெறிக்கு
தனது கெண்டைக்கால் சதை
இரையாகிவிடுமோ
என்று வழிமுழுவதும்
உடல் வெலவெலத்து
வியர்வையில் நனைந்தது.
விசேஷத்திற்கு
போய்க் கொண்டிருக்கையில்
எதிர்வரும் பேருந்து
சட்டையில் சகதியை
வாரி இறைத்துச் செல்ல
சாலையை சரியாகப் பராமரிக்காத
சர்க்காரைச் சபித்தபடியே
வீடு வந்து சேர்ந்தான்.

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

ப.மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

ப.மதியழகன்


கறுப்பு வெள்ளி
====
மதம் கொண்டு தாக்கும் அலைகள்
விண்ணுயர எழும்பும்
விஸ்வரூபம் எடுக்கும்
ராட்சசனைப் போல்
நகரையே மென்று விழுங்கும்
பிணக்குவியல்களுக்கிடையே
அலை கோரத் தாண்டவமாடும்
சீற்றம் கொண்ட அலைகள்
கட்டிடங்களைச் சின்னாபின்னப்படுத்தும்
கருணை சிறிதுமின்றி
பச்சிளம் பிஞ்சுகளை
வெள்ளத்தில் அடித்துச் செல்லும்
ஊரையே தும்சம் செய்த பின்னும்
வெறி அடங்காது
நான்கு திசைகளிலும் அலையும்
கால்களை வருடிச் செல்லும்
அலைகள் கூட்டம்
இன்று காவு வாங்கத் துடிக்கும்
மக்கள் விரும்பிச் செல்லும்
கடல் பரப்பு
இன்று தனது வேஷத்தையே
கலைக்கும்
பாதிப்புகள் தெரிய வந்தால்
உலகே கண்ணீர் வடிக்கும்.

***
பறவையின் பாஷை
***

நிர்மாலியப்படாத பூக்கள்
பூசனைக்கென்று காத்திருக்கும்
கனவில் கண்ட பேயை
கண் முன் நிறுத்துவாள பாட்டி
ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருக்கையில்
நாய்கள் ஊளையிடும்
சாலவத்தில் உற்பத்தியாகும் கொசுக்கள்
நோய்களைப் பரப்பும்
திண்ணையுள்ள வீட்டைத்
தேடியலைவான் சந்நியாஸி
குயில் குஞ்சை கூட்டிலிருந்து
துரத்தும்
அடைகாத்த காகம்
வானம்பாடிகள் பாடி அழைக்கும்
வசந்த காலத்தை
புள்ளியாய் மறையும் வரையில்
பார்த்து ரசிக்க வைத்திடும்
படபடவென சிறகடித்துச் செல்லும்
வெண்புறாக்கள்
அக்காக் குருவி தனது துக்கத்தை
இயற்கையுடன் பகிர்ந்து கொள்ளும்
தேன் அருந்த வரும்
வண்டினத்தைக் கண்டு
கன்னம் சிவந்திடும்
தோட்டத்துப் பூக்கள்.

***

சுயம்வரம்

***
தரையில் கால் பாவாமல்
நடக்கும் யுவதி
கண் பார்வையிலேயே
நம்மைச் சுற்றி
சிறைக் கம்பிகள் முளைக்கும்
கவலை ரேகைகள்
காணாமல் போயின
நட்பு கிளைவிட்டு
வளரத் தொடங்கிய நாளிலிருந்து
பூக்களெல்லாம்
இதழ் விரித்து
அவளைப் பார்த்துச் சிரித்தன
காற்றரசன் ரதத்திலிருந்து
கீழிறங்கி அவளை
வணங்கி நின்றான்
மேகக் கூட்டங்கள்
அவள் மேனியில்
கதிர்கள் படாவண்ணம்
பரிதியை மறைத்து
நின்றன
புவியரசனின் ராஜ்யத்தில்
அவளொரு இளவரசியாக
வாழ்ந்து வந்தாள்
அவளுடைய சுயம்வரத்தில்
பங்கேற்க
நான் எந்த தேசத்தையும்
அரசாளவில்லை.

***

பிச்சை பாத்திரம்
***

கை நிறைய
சில்லறைக் காசுகள்
மெல்லிய சோகம்
இழைந்தோடும் கண்கள்
அங்கங்கே கிழிந்த
ஆடைகள்
குளித்து நாளானதால்
உடலில் கவுச்சி நாற்றம்
கத்தி கத்தி வரண்டு
போன தொண்டையிலிருந்து
கீச்சுக் குரல்
கண்ணைச் சுற்றிய கருவளையம்
உறக்கமின்மையை உணர்த்தும்
செருப்பில்லாத பாதங்களில்
வெடிப்பு
எல்லோரும் அவளை
அலட்சியப்படுத்துவதால்
யாரையும் அவள்
லட்சியம் செய்வதில்லை
வயிற்றைப் புறந்தள்ளி வாழ முடியுமா
மண்டபத்து வாயிலில்
எச்சில் இலை பொறுக்கிக் கொண்டிருந்தாள்
நூறு பேர் அமர்ந்திருக்கும்
பந்தியில்
ஒருத்திக்குக் கூடவா உணவில்லை.

***
சாத்தானின் கரங்கள்
***

சாத்தானின் கொடிய கரங்களில்
பூந்தளிர்கள் அகப்பட்டன
மனிதமற்ற மிருகத்தின் செய்கைகள்
மிகக் கொடியதாக இருந்தன
இன்னும் மலராத மொட்டுக்களை
காமுகர்கள் கசக்கி எறிந்தனர்
பால்யம் மாறாத முகங்களில்
பீதி குடிகொண்டது
கள்ளங் கபடமற்ற
வெள்ளை உள்ளத்தில்
உதிரத்தின் ரேகைகள் பதிந்தன
வேட்டையாடுதலைப் போலே
மனித உருவில் விலங்குக் கூட்டம்
விரும்பியே செய்யும் காரியமிது
பிள்ளைப் பிராயத்தில்
சித்ரவதை அனுபவிக்கும் வேதனை
அக்குழந்தையின் பால்யத்தை
பறித்துவிடும்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நிகழ்வின் சுவடு மட்டும்
வடுவாக மனதில் தங்கிவிடும்
குற்றவுணர்ச்சி சிறிதுமற்ற
ஈனப்பிறவியின் செய்கைகள்
சமுதாயத்தை முற்றிலுமாய்
சீரழித்துவிடும்
இனி என்றென்றும்
விழிப்போடு இருப்போம்
அவர்களுக்கு அன்றன்றே
தண்டணையைக் கொடுப்போம்.

(பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளுக்காக)

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

ப.மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

ப.மதியழகன்


சாயை

வெறுமை குடியிருக்கும்
கூடுகள்
அணுவுக்குள் ஒளிந்திருக்கும்
அண்டப்பேரண்ட ரகசியம்
கடலின் நீர்த்திவலைகளும்
கடல் தானா
அக்குரோணி படைகள்
மோதிக் கொள்வதைப் போல
வானத்தில் இடி
சோபிதத்தை
சொந்தம் கொண்டாடும்
பெண்ணினம்
பாதசாரிகள் நடக்கின்றனர்
வாகனங்கள் விரைகின்றன
இருளைக் கிழித்து ஒளியை பரப்பும்
மின்விளக்கு
குழந்தைகள் மிரளுகின்றன
பெரிய ஆகிருதி கொண்டவர்களெல்லாம்
பூச்சாண்டிகளென்று நினைத்து
பரிதி மறைந்தது
இருள் கவிந்தது
தூரத்துச் சந்திரன் ஏக்கத்தைக் கொடுத்தது
நிழலின் அளவு
ஒரே மாதிரி இருப்பதில்லை
எல்லா நேரங்களிலும்.

சாளரம்

ஜன்னல் கம்பிகள்
சிறைச்சாலையினுள்
இருப்பதைப் போன்று
தோற்றம் தருகின்றன
தென்றல் காற்று
தேடி வந்து தேகத்தில்
மோதும்
மழை வந்து
இருக்கின்றேனா என
எட்டிப் பார்க்கும்
சூரிய ஒளி
அனுமதியில்லாமல்
உள்ளே நுழையும்
தெருவில்
தள்ளுவண்டியில்
வந்து போகும்
கடலை, சுண்டல்
போன்ற தின்பண்டங்கள்
வாங்குவதற்கு
என்னை அழைக்கும்
மாலையில் கேட்கும்
குழந்தைகளின்
மழலைச் சத்தம் தான்
என்னை உயிர்ப்பிக்கும்.

குறளி வித்தை

உடுக்கை சத்தம்
காதடைக்க
உரக்க உரக்க கூவுகிறான்
காகிதங்களை
கரன்சி நோட்டுக்களாய்
மாற்றுவதாகவும்
செத்தவனை உயிர் பிழைக்க
வைப்பதாகவும்
பாம்பின் விஷத்தை
அரை நொடியில்
முறிப்பதாகவும்
சொல்லிக் கொண்டே
சட்டைப் பையின் கனத்தை
கண்களாலேயே அளக்கின்றான்
காசு போடாதவர்கள்
இரத்தம் கக்கப்போவதாய்
ஜக்கம்மா சொன்னதாய்
சொல்கின்றான்
பயந்து கொண்டு போட்டவர்கள்
பணத்தை இழந்து போனார்கள்
குறளி வித்தைக்காரனோ
கைப்பிடி திருநீற்றை
வைத்துக்கொண்டு
மாயாஜாலம் ஏதுமில்லாமல்
சில்லறைகளை குவித்துவிட்டான்
சற்றும் தாமதிக்காமல்
இன்னொரு ஊர்நோக்கி விரைகின்றான்
ஏமாறும் கூட்டம்
எல்லா ஊர்களிலும் இருக்கும்
என்றறிந்தவனாய்
உடுக்கை அடித்து
ஜக்கம்மாவை கூவி அழைத்துக் கொண்டே
தன் பயணத்தை தொடர்கின்றான்.
ப.மதியழகன்,

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

ப.மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

ப.மதியழகன்


சபிக்கப்பட்டவனின் வாழ்க்கை

மனிதர்கள் வேட்டையாடி பயி்ற்சி பெற
விலங்காய்ப் பயன்படுவான்
குருதியை யாரும் கண்டதில்லையா
அவனை கிழியுங்கள் இரத்தத்தை ருசியுங்கள்-
என அறிவிப்புப்பலகை தொங்கும் அவன் கழுத்தில்
கண்கள் மூடியே இருக்கும்
காணச்சகிக்காது இவ்வுலக நடப்பு ஒவ்வொன்றும்
வாய் இறைவனின் நாமத்தை
மறந்தும் உச்சரிக்காது
தப்பித்தவறி வந்து காப்பாற்றிவிடப் போகின்றானோ
என்ற அச்சத்தில்
காதுகள் எப்போதும்
துரோகச் செயலின் திட்டங்களை கேட்டே
நரக அவஸ்தை அனுபவித்துச் சாகும்
வாழ்க்கை துக்கமாகும்
மரணம் தாசியாகும்
எப்பொழுதும் அதைத் தேடியே
மனம் ஓடும்
உலக இயந்திரம் அவனை
கரும்புச் சக்கையாய்ப் பிழியும்
பெருங்கூட்டமொன்று அந்தச் சாறு போதையென
தண்ணீரில் கலந்து குடிக்கும்
இப்பூலகில் கொடிய வேதனையை
அனுபவித்தவன் மரணித்தால்
சொர்க்கத்தில் வாயிலை தெய்வம்
வந்தா திறக்கும்
அப்படி திறந்தால்
அவன் கடவுளல்ல
விழிப்புணர்வு பெற்று
தட்டுபவனே கடவுள்
திறப்பவன் அல்ல
கைவிடப்பட்ட இவ்வுலகில்
உன் மீது அறையப்படும்
ஒவ்வொரு ஆணியும்
உன்னை புனிதப்படுத்தும்
உயிர்த்தெழுதல் அன்றல்ல
இன்றும் நடைபெறலாம்
இன்னொரு யுக புருஷன்
அவனாகலாம்
அவன் உங்கள் எதிரிலேயே
நடமாடலாம்.

உறக்கமற்றவனின் விடியல்

அவனது கிழக்கில்
கதிரவன் உதிக்காது
சந்தன மரக்கட்டில் கூட
முள்படுக்கையாக மாறும்
அவனது உடலே
அவனுக்குப் பாரமாகும்
அந்த நாளில்
நரகத்தின் நிழல் வீட்டினுள் கவிந்து
அங்கிருந்த வெளிச்சத்தை விரட்டியடிக்கும்
கண்கள் ஜீவ ஒளியிழந்து
தூக்கத்திற்குத் தூண்டில் போடும்
தாயோ, தாரமோ எவரேனும்
தனது தலையை மடியில் வைத்து
கேசத்தை வருடமாட்டார்களா – என
அவன் மனம் மானிட ஸ்பரிசத்துக்கு
ஏங்கித் தவிக்கும்
மரணம்-கடவுளின் அன்புப் பரிசாகவும்
வாழ்வு-கருணையற்ற கடவுள்
தனது கொடிய கரங்களால் எழுதிய
தீர்ப்பாகவும் படும்
நிமிடங்கள் யுகமாகும்
போகங்களில் எந்நேரமும் திளைக்கத் தோன்றும்
விரக்தியின் விளிம்பில்,
றெக்கை முளைக்காத கூட்டுப்புழுவாய்
உயிர்வாழ்வதை விட
மடிந்து மக்கிப்போவதே மேலெனத் தோன்றும்
கனவுலோகத்தால் கைவிடப்பட்டவனின்
கற்பனை இப்படிப்போகும் –
வங்கியில் கணக்கு வைத்திருப்பவருக்கு
மட்டும் தான் இரவுப்பொழுதில் உறக்கம்
அப்பணத்திற்கு வட்டியாக அளிக்கப்படும்
என சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக நேற்று
செய்தித்தாள்களில் படித்தது போன்ற
ஞாபகம் எழும்
தூக்கம் ஒன்றே துக்கம் குறைக்கும்
இலவச நிவாரணி
அது கண்களைத் தேடி வந்து
தழுவாதபோது
வாழ்வு மகள் பூமாலையுடனும்,
புன்சிரிப்புடனும் எதிரில் நின்றாலும்…
அவன் கரங்கள்
மரண தேவதையை ஆரத்தழுவிக்கொள்ளும்.

பாதை மாறிய பயணம்

கைநீட்டி யாசிப்பவனுக்கு
மிட்டாய்களை கொடுக்காது குழந்தைகள்
வீதியல் போகும் வழிப்போக்கனை
தேடிச் சென்று கொடுக்கும்
தன்னுயிரை கெட்டியாக பிடித்துக்கொள்பவர்களுக்கே
ஆபத்து பரீட்சைகள் நடக்கும்
உயிர்க்கு அஞ்சாதவனிடத்தில்
தேவதைகள் வழியச் சென்று சிரிக்கும்
கோவில் வாசலில்
சில்லரை இருக்கும் திருவோட்டை
தேடிச் சென்று நிரப்பும்
பெருங்கூட்டம் இங்குண்டு
திகட்ட திகட்ட சுகங்களை
மன்மதனுக்கு அளிக்கும்
பல ரதிகள் இங்குண்டு
மண்தரையில் கால்பதிக்காமலேயே
மாடமாளிகைகளிலேயே வாழ்ந்து மறைந்த
பல கனவான்கள் இங்கு வாழ்ந்ததுண்டு
பிறந்தது முதல் பசி என்றால் என்னவென்று
அறியாத பல மாமனிதர்களைக் கொண்டது
எங்களின் ஏழ்மை நிறைந்த
இந்தியத்திருநாடு
என்றோ பட்டுப்பூச்சியாகலாம் என்ற கனவில்
கூட்டுப்புழுக்களாய் உழழும் ஜனத்திரள்
இன்னும் நம்புகிறது
தங்களுக்கு சிறகு முளைக்குமென்று.

ப.மதியழகன்,

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

ப.மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

ப.மதியழகன்


வனம்

வனத்தில் அடியெடுத்து வைத்த
சில் நிமிடங்களில்
மனிதர்களின் ஆரவாரம் மறைந்து
அந்தகாரம் கவிய
நிசப்தம் சர்ப்பமாய் கண்முன்னே
படமெடுத்துப் பயமுறுத்தியது
பலநூறு கிளைகள் பரப்பி
விசித்திரமாய் அமைந்த
அரசமரத்தின் ஆகிருதி
கானகத்தை எங்கு நோக்கினும்
கண்ணைவிட்டு அகலாமல்
நீக்கமற நிறைந்திருந்தது
விலங்குகளின் கால் தடங்கள்
அழியாமல் பல நாட்களாய்
அப்படியே நிலைத்திருப்பது
கடற்கரை மணலில்
கலைந்துபோய் கிடக்கும்
எண்ணற்ற காலடிச்சுவடுகளை
ஞாபகப்படுத்தியது
மூங்கில்களின் உரசலினால்
உண்டான சப்தம்
வனம் முழுவதும் எதிரொலித்தது
அடர்ந்த அந்த வனாந்திரத்தில்
பாதையைத் தேடித் தேடி
கானகத்தின் இதயப் பகுதியை நோக்கி
கால்கள் செல்லச் செல்ல
மனம் தான் மனிதன் என்பதையே
ஆதாம் நிலையை அடைந்திருந்தது!

காளி

அன்றிருந்த
அதே கடல்
அதே வானம்
அதே நிலவு
அதே நட்சத்திரக்கூட்டங்கள்
அதே சுண்டல்காரன்
அன்று கடற்கரை மணலில்
எனதருகில் நீ
இன்று அவ்விடத்தில் காரிருள்
தனிமையெனும நஞ்சுதனை
மெல்ல மெல்ல அருந்திச்சாகும்
பித்தனாய் நான்
எனதுயிரை களப்பலியாக
எடுத்துக்கொண்ட
காளியாய் நீ.

mathi2k9@gmail.com

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

ப.மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

ப.மதியழகன்,


புன்னகைப் புதையல்

மெல்லிய சோகம்
கண்களில் கசிய
இதழ் மட்டும்
சிறுபுன்னகை புரிய
பெண்மையின் நளினம்
தோற்றத்தில் தெரிய
தாய்மையின் நீரூற்று
அன்பினால் வழிய
மணவாளனின் ஸ்பரிசத்தை
தேகம் தான் தேடிட
வாழ்வில் கடந்து வந்த பாதையை
எண்ணி எண்ணி
உள்ளம் தான் வாடிட
என்று விடியுமோ?
எனது ஏக்கம்
என்று தணியுமோ?
எனது காரிருள் வாழ்க்கையில்
ஆதவன் தோன்றிடக் கூடுமோ? –
என்று ஆயிரம் கேள்விக்கணைகளை
அந்தப் புகைப்படம் தொடுக்க
கண்காட்சியிலிருந்து
அவன் வெளியேறினான்
கேள்விக்குறியாக வளைந்து நெளிந்த
தனது உடலோடும்,
எண்ணிலடங்கா
பதில்களற்ற வினாக்களோடும்….

சொர்க்கத்தில் சிறைவாசம்

தென்றல் தீண்டிடினும்;
கடலலை வந்து காலடியில் மோதிடினும்;
அருவிநீர் ஹோவென ஸ்படிகமாய்
கொட்டிடினும்;
பூக்களெல்லாம் வைகறைப் பொழுதில்
மலர்ந்து மணம் வீசிடினும்;
இயற்கை தன் வனப்பையெல்லாம் காட்டி
என்னை மயக்க நினைத்திடினும்;
அவ்விடத்தில்
உன் அருகாமை இல்லையெனில்
சொர்க்கம் கூட சிறைவாசம் தான் எனக்கு!

mathi2k9@gmail.com

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்