மீளல்

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

வருணன்



தூரத்து தொழற்சாலையின் சங்கொலி
நேர மாற்றத்தை ஊதுகின்றது.
வெளிவரும் ஊழியனின் களைப்பும்
உள்வருபவனின் மலைப்பும்
ஒரு கவிதை புத்தகத்தின்
முதல்,கடைசி பக்கங்களாய்
அருகிருந்தும் மிக தூரமாய்.
பாராட்டப் படாத அவனது
உழைப்பிற்கான ஊதியம் கூட
முறையாய் கிடைக்காத அவலம்
பூசுகிறது சிவப்பின் வண்ணங்களை
சிந்தைக்கு
தொடர்ந்து ஊற்றெடுக்குமந்த
சீவ நதியின் ஊடே கரைதனில்
கேட்கிறது துணைவியின் குரல்
திருப்பித் தர வேண்டிய கடன்களைப்
பற்றிய புகாராய்
மீளல் மிக எளிதாகிறது.
வரள ஆரம்பிக்கிறதொரு சீவ நதி.

-வருணன்.

Series Navigation

வருணன்

வருணன்