தற்கொலைப் பறவைகளின் வானம்

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

லதாமகன்


ஒன்பதினாயிரம் கடல்களின்
காலத்தின் நீந்துகிறேன்
ஒரு சிறிய
நீர்ப்பறவையென

காலங்கள் அழியும் நாட்காட்டி
தின்று மீள்கிறது
இடையற்ற பெரும்பசியில்

இருத்தலைத் தக்கவைப்பதற்கென
தலை நுழைத்துக்கொள்கிறேன்
அலமாரியின் காகித மலர்களில்

நினைவுகள் அழியத்தொடங்கும்
காலமொன்றில்
முடிவிலியாய்
வளர்கிறது
நீ தந்த வானம்.

o
முத்தங்களைப்பகிர்ந்து கொள்வதென்பது
ஒரு சம்பிரதாயம்

என் உடலை ஒப்படைக்கிறேன்
உயிர் வளர் பாதையை
உன்னுடையதெனச் சொல்கிறேன்

வார்த்தைகள் அற்றுப்போகும்
நிலைக்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.

முத்தங்கள் முடிந்தபின்
திருப்தியா எனக் கேட்கும்போது
சொல்லத்தயக்கமாய் இருக்கிறது
இதையெல்லாம்.

o

கழிவேறிய உடல் நாறத்தொடங்குகிறது
மலக்கிடங்கென

குப்பைகள் சேர்ந்த பாலைவனமென
மணல் அலைகிறது உடலெங்கும்

ஒரு மழை எல்லாவற்றையும்
சரிசெய்யும் என்றாலும் கூட

வானம் பார்த்துக்கொண்டிருக்கிறது
எதையும் செய்ய விருப்பமற்று.

o

யாருமற்ற புல்வெளியில்
உடைப்பவனுக்காகத்தான்
காத்துக்கொண்டிருக்கிறது
பனி.

o
தற்கொலை செய்துகொள்வதற்கு
சில
எளிய வழிகள் இருக்கின்றன

அரளிவிதை
மையாய் அரைத்து நீரில் கரைத்து
குடித்துவிடலாம்

கொஞ்சம் கசக்கும்.
பிறகு குடல் எரியும்

சையனடு வாங்குவதிலேயே
சிக்கல் வரும்

தூக்குப்போட்டுக்கொண்டால்
நாக்கு வெளித்தள்ளி
முகம் கோரமாகும்

தூக்கமாத்திரைதான்
எல்லாவற்றிலும் எளிது

யாராவது பார்த்துவிட்டால்
கண்டதையும் கரைத்து
வாயில் ஊற்றுவார்கள்
என்பதுமட்டுமே பயம்.

தற்கொலைக்கு எளியவழி என்பது
தற்கொலை எண்ணத்தை கொன்றுவிட்டு
சமரசம் செய்துகொள்வதுதான்.

நான் செய்து கொன்றதைப்போல

oOo

Series Navigation

லதாமகன்

லதாமகன்