ராஜா கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

ராஜா


______________________________________________________________
வட்டங்களால் ஆனவளுக்கு
______________________________________________________________
உயரம் போதவில்லை
மாடமேறியும் எட்டாக்கனி
எம்பிக் குதிக்கையில்
ஆடை தளர்ந்தது
விடுபட்டதொன்று
உயரப்பறந்து
கொத்தித் திரும்புவதற்குள்
புள்ளிட்ட துளையிலிருந்து
புறப்பட்டது ஓராயிரம்
ஒன்று குறையாமல்
கூடு சேர்ந்ததும்
வட்டங்களால் ஆனவள்
பறந்து போகிறாள்
ஏழ்கடல் மேலே.
_____________________________________
வீட்டிலிருந்து
______________________________________________________________
தெருமுனைவரை
சென்ற தடமொன்று
திரும்பிவிடும் தூரத்தில்தான்
இருக்கிறது
அங்காடித்தெரு ஆரவாரங்களில்
வண்ணமுமிழ் வெளிச்சங்களில்
சற்றே மயங்கும்
ஊரெல்லை தொட்டதும்
பெருமூச்சொன்று
வீடு நோக்கி நகரும்
நிலவொழுகும் ராத்திரியில்
ஓரிலையும் அசையாத மரத்தினடியில்
இளைப்பாறும் சாலை
நத்தைபோலும் பயணிக்கும்
அப்பொழுதுகளில்
தொடுவானம் தாண்டியும்
அது நீண்டிருக்கும்.
______________________________

Series Navigation

ராஜா

ராஜா

ராஜா கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

ராஜா


1.காலங் கடத்த காதல்

குறும்புப் பார்வைகளும்
சில்மிஷ தீண்டல்களும்
சின்ன சண்டைகளும்
தேனொழுகும் வார்த்தைகளுமாய்
நீ எழுதிய
பொழுதுபோக்குக் கவிதைகளுக்கு
காதல் என்று பெயரிட்டிருந்தேன்.

____________________________________________________________

2.ரஹசியம்

இரயில் கதவின் இருபுறக் கதவுகளை
இறுகப் பற்றியபடி
படியோரம் நின்று பயணித்திருந்தேன்
நழுவியோடிய இருட்டுப் பள்ளத்தில்
பெரும்புதிருக்கான தீர்வொன்று பொதிந்திருப்பதாய்
ஈரக்காற்று முகத்தில் அறைந்து அழைத்ததில்
குதித்துவிடலாம் என்றுதான் நினைத்தேன்.

__________________________________________________________

3.நண்பர்களைப் பிரிந்த இரவு

மூடிய புத்தகத்தின் மௌனம்
போர்த்திய அறையில்
சிநேஹித்திருந்த தருணங்களை
மீட்டிக் கொண்டிருக்கிறேன்
உச்சுக்கொட்டி கேட்கிறது சுவர்க் கடிகாரம்.

_______________________________________________________

4.சாகாவரம்

கண நேரத்தில்
நிகழ்ந்துவிட்டது அந்த மனஸ்தாபம்
இனி அடிக்கடி நிகழும்
நினைவு மீட்டல்களிலும்
தன்னிலை நியாயப்படுத்தலிலும்
இன்னும் சிலகாலம்
உயிரோடிருக்கக் கூடும்
இறந்துபோன அந்த கணம்.

_____________________________________________________________

நன்றி,

Series Navigation

ராஜா

ராஜா

ராஜா கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

ராஜா


1.யாமத்திரி எரிகிறது

திவலையென
சுருங்கிவிட்டது வெளிச்சம்
இருட்பெருங் கடலில் இட்ட சுடராய்
யாமத்திரி எரிகிறது.

இனி-
நிகழ்த்த ஏதுமில்லை
நினைவுகளென படிந்துவிட்டவை
விசிறியின் சுழற்சியில் மேலெழும் யாமத்திரி எரிகிறது
ஒற்றை நிகழ்வாய்

சிறு ஒத்திகையென
செத்துப் போகலாம்
உயிர்த்து மெழலாம்
யாமத்திரி எரிகிறது ஒற்றை கடவுளாய்.

நீர்தொட்டு
மனங்கிறுக்கும் கனவுகள்
வாசிப்பதற்குள் உலர்ந்துவிடும் யாமத்திரி எரிகிறது
ஒற்றை சாட்சியாய்

மற்றுமொரு விடியல் வரும்
இயக்கங்கள் தொடரும்
ஒற்றை நம்பிக்கையாய் யாமத்திரி எரிகிறது.

_______
2.தூதொடு வந்த மழை

மூச்சு முட்ட
நான் இயற்றிய காதலை
மூட்டை கட்டி அனுப்பி வைக்கிறேன்;

கப்பலாய் நனைந்தே
உன் கரை சேரட்டும்.

கப்பல்
கலைந்து போனாலும்
கவலை இல்லை;

மிதந்து சேரும் தாள்
சுமந்து வரும் என்காதல்.

கரை சேராது-
தாள் கரைந்தாலும்
துன்பம் இல்லை;

வழிந்தோடும் நீரில்
எழுந்தாடும் குமிழில்
என் சுவாசம் இருக்கும்.

நீர்
வடிந்து போனாலும்
விசனம் இல்லை;

காற்றசைக்க-
கிளை பெய்யும் மழையில்
துளியாய் உன்மேல் விழுவேன்.

______
3.புலவர் புலாசுளாகீ

எடைவாரியா புஸ்தகங்கள்
அலமாரியில் குந்தியிருக்கு
வரிவரியா படிச்சிடத்தான்
இழுபறியா இருந்திருக்கு.

கையளவு கற்றது
கைகழுவையில் நழுவியது
உலகளவு உருப்போட்டா
உருவந்தான் என்னாவது?

துக்கம் தொண்டை அடைக்க
புக்கொன்று எடுத்து வச்சேன்
தூக்கம் வந்து என்னை
தூக்கிட்டு போயிடுச்சே!

விளக்கில் நெய்யூத்தி
விழுந்தேன் கோவிலிலே
விசாழக்கிழமை எல்லாம்
விசனத்தில் கழிந்ததுவே.

ஆதியும் விளங்காமல்
அந்தமும் துலங்காமல்
சந்ததிகள் விழுந்தது
எங்கதியும் நொந்தது.

முடிதான் குறைஞ்சது
முடிவு யாருக்கு தெரிஞ்சுது?
முடிவா நான் எடுத்தது
முப்பாட்டன் சொன்னது.

எண்ணெய் தடவிக் கொண்டு
மண்மேலே உருள்வது;
ஓட்டும் மண் எனக்கானது
ஒட்டாதது எனக்கு ஒத்து வராது.

__________
4.புதியதாய் ஏதேனும் பற்ற…

இயற்றியவற்றில்
இறைந்து கிடக்கின்றன
இலக்கணப் பிழைகள்.

பிழை களைய
சில மாதங்கள் ஆகும்.

ஆக்கத்திற்கும்
ஊக்கத்திற்கும்
நன்றி நவில வேண்டும்.

வாங்கிய கடனை
வட்டியோடு செலுத்தவே
வருடங்கள் ஆகும்.

ஆயுளில் மிச்சமிருந்தால்
மீண்டு வருகிறேன்,
புதியதாய் ஏதேனும் எழுத.

5.காற்றொடு கலப்பேன்
இருட்புதர்
விரவிக் கிடக்கும்
வனம்.

தொங்கும் நாவும்
வளைந்த வாலுமாய்
வெறியோடு உலவுமொரு
விலங்கு.

மெல்லப் பதுங்கி
அங்கிங்கு நோட்டம் விட்டபடி
திருட்டு சுவை ருசிக்கும்
ஒரு பிராணி.

முன்னால் குட்டினால்
பின்னால் கொட்டும்
வன்மத்தோடு திரியும்
ஒரு பூச்சி.

ஏதோவொரு கணத்தில்
முடி உதிர்ந்து
இறகு முளைக்கும்.

சிறகு விரித்து
உயரப் பறப்பேன்.

என்
வனாந்தரத்தின்
ஆதி அந்தரங்களில்
வெளிச்சம் பரப்பி

வான அந்தரத்தில்
மிதந்தபடி
காற்றொடு கலப்பேன்.

____
manisson@gmail.com

Series Navigation

ராஜா

ராஜா