ஓயாத காற்று

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

வருணன்



நெடி நிரந்தரமாய் தங்கிவிட்டது காற்றில்
படைகள் வெல்ல ஆயுதம் தேவை
படைக்கலன்களோ பழுது நிலையில்
நம்பிக்கை முனை மழுக்கிய
மனித வாட்கள்
காத்துக் கிடக்கின்றன- துரிதமாய்,
லாவகமாய் இயக்கும் கைகளுக்காய்
எதிரியின் கைகளில் யந்திரத் துப்பாக்கி
பெரும் குடிகார சிறு ரவைகள்
தனியாத் தாகத்துடன் பருகுகின்றன
வெதுவெதுப்பான இளரத்தத்தை
பால்கட்டிய தாய்மாரின் தனங்கள்
இறந்த குழந்தைகளுக்காய் கனக்கின்றன
உயிர் செய்யும் சூட்சுமங்கள்
தடம் மாறி சமாதியாக்குகின்றது
உயிருடன்
வடிவான மகளிரை
கொன்றவனின் குறியறுக்கச்
சபதமேற்றுப் புறப்படும்
யுவனின் வெஞ்சினத்தில் உருவெடுத்த
பெருந்தனலில் உருகிக் கிடக்கும்
மலட்டுக் காட்டில்
அவநம்பிக்கையின் சாம்பல் மேட்டினின்று
துளிர்க்கிறது நம்பிக்கையின் தளிரொன்று.

– வருணன்

Series Navigation

வருணன்

வருணன்