’ரிஷி’யின் கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

ரிஷி


காலநிலைக்கட்டமைப்பு

1 சூரியக்கதிர்வீச்சு

உம்மைச் சுற்றி அந்த ஒரு சொல்லைப்
காற்றில் பரவச் செய்
சிலந்திவலைப் பூச்சிகளாய் சிக்கும்
பல.
நாக்கை நீட்டிச் சுழற்றி
வேண்டியதை உள்ளிழுத்துக்கொள்.
உன் அடியாழ இருளுக்குள்
ஒளிபாய்ச்சித் துழாவும்
சூரியக்கதிர்வீச்சில்லா உலகில்
சிறிதும் கவலையெதற்கு?

2. ஆழிப்பேரலை

அந்த ஒரேயொரு சொல்லைச் சொன்னால் போதும்
முப்பதுக்கு மேலோ கீழோ_
தப்பாது கிடைப்பார்கள்
பத்தரைமாற்றுக்கன்னிகள்
எப்பவும்.
பாதுகாப்புறை தேவையில்லை.
பரிசுகளேதும் பெரிதாகத் தர வேண்டியதில்லை.
ஒரு புன்னகையைத் தங்கள் மனதின் அடியாழங்களில்
பத்திரப்படுத்திக்கொள்ளும் பேதையர்களுக்கு
என்றும் பஞ்சமேயில்லை.
வெப்பம் அதிகரித்து கடல்மட்டம் உயர்ந்து
ஆழிப்பேரலையாக உருவாகிக்கொண்டிருப்பதையறியாமல்
கடற்கரையில் அழகிய கிளிஞ்சல்களைப் பொறுக்கி
அழகுபார்த்துக்கொண்டிருக்கும் அறியாமை நிரம்பியவர்களை
அடையாளங்காணத் தெரிந்துகொள்ளக்
கொஞ்சம் பயின்றுவிட்டால் போதுமானது

3.கடலிடைப் பனிப்பாறைகள்

இரைதேட வாகாய்
நிற்பதற்கு
கடலிடைப் பனிப்பாறைகள் இல்லாதொழிய
அழியாமல் என்ன செய்யும்
பெங்குயின் இனம்?
அது மட்டுமா….

4. அழிக்கப்படும் விளைநிலங்கள்

அகமும் புறமுமாய்
தனது 10 சதவிகிதத்திற்கும் குறைவாகத் தருவதில்
கவனமாயிருந்து
பதிலுக்கு 210 சதவிகிதத்தைப்
பெறத் தெரிந்தவர்கள்
வெற்றியாளர்கள் பட்டியலில் இடம்பெறுகிறார்கள்
ஆறு வறண்ட்போனால் என்ன?
விளைநிலங்கள் அழிக்கப்பட்டால்தான் என்ன?
வர்த்தக சாம்ராஜ்ய உருவாக்கமும்
விரிவாக்கமுமே குறியாய்.

5. பசுமையில்ல வாயுக்களின் அடர்வு

வளிமண்டலத்தில் அதிகமாகிக்கொண்டே வருகிறது
பசுமையில்ல வாயுக்களின் அடர்வு
புதைபடிவ எரிபொருள்களின் வழி
மண்ணரிப்பின் வரி காடெரிப்பின் வழி
ரயில்பாதைகள், நெடுஞ்சாலைகள் வழி
சுழித்தோடும் ஆறு கடல் நீர் வழி
நீராவி வழி
புகை வழி மாசு வழி
ஆசையாசையாய்
மொழியும் மொழியாச்
சொல் வழி சைகை வழி
நில் வழி செல் வழி
கழியுங் காலம்
அழிவின் நிழலில்.
6. புவிமேலோடு

புவிமேலோட்டுத்தகடுகள்
ஒன்றோடொன்று இடைவிடாமல்
உராய்ந்துகொண்டேயிருக்கின்றன.
விளைவாய்
சில நேரங்களில்
மலைகள் உருவாகின்றன.
சில நேரங்களில்
கண்டம் புதையுண்டு போகிறது.
கடல் கரையாக, கரை கடலாக
உடல்கள் சடலங்களாகும்
எனில்
சடலங்கள் உயிர்தெழுமோ?

7. சூழல் மாசு

அடுக்குமாடி வீடுகளைத் தாண்டி
குடிசைப்பகுதிக்குச் செல்லும் வழியிலுள்ள
குப்பைக்கூளங்களில்
சாக்கடைகளில்
அப்பிக்கொண்டிருக்கும் கொசுக்களறியா
சாதி சமய
ஏழை பணக்காரப்
பாகுபாடுகள்.

8 வெப்பசுழற்சி

என் குழந்தையைக் கடத்திச் சென்றவரைக் கையுங்களவுமாகப் பிடித்துவிட்டேன்.
எல்லாம் தெரிந்தவர்தான்.
கழுத்தை நெரித்துக்கொல்லவேண்டும் என்ற கொந்தளிப்பை
யடக்கிக்கொண்டு நியாயம் கேட்டேன்.
’உன்னிலிருந்து வந்ததென்றாலும் உன் குழந்தை உன்னுடையதல்ல’
என்று தத்துவம் பேசினார்.
’உன் குழந்தைக்குப் புதுச்சட்டை வாங்கி அணிவித்திருக்கும் என் பெருந்தன்மை கண்ணில் படவில்லையா? ‘ என்றார்.
கதறிக் கன்ணீர் விட்டழுதபடி என்னிடம் ஓடோடிவந்து ஒண்டிக்கொண்ட
குழந்தையைப் பார்த்து
”தொட்டாற்சுருங்கி – தாயைப்பொலவே” என்று கேலிசெய்தார்.
அற்ப விஷயத்திற்கு ஆகாத்தியம் செய்கிறாயே என்றார்.
’மலிவான விளம்பரம் தேடும் முயற்சி இது’ என்றார்.
’நோஞ்சான் பிள்ளை, இதைப் போய் யாராவது கடத்துவார்களா?
போனால் போகிறது என்று தூக்கிக்கொண்டேன்’ என்றார்
’உன் அழகையும் உன் குழந்தையின் அழகையும் கண்ணாடியில் பார்த்துக்கொள்’ என்றார்.
’மனநோயின் அறிகுறி இது, மருத்துவரைப் பார்’ என்றார்.
குறுமதிக்காரி என்றார்
சிறுதுளியும் உன்மேல் மதிப்பில்லை என்றார்.
’மறந்தும் வருத்தம் தெரிவிக்கத் தெரியாத மனிதன்
இவன் கழுத்தைத் தொடுவதும் இழுக்கு’ என்று தோன்றியது.
குழந்தையை இடுப்பில் அப்பிக்கொண்டேன்.
”உன் மதிப்பை உன்னோடு வைத்துக்கொள்” என்று
வாயாரக் காறித்துப்பினேன்.
வழிநடந்தேன்.

9 காலநிலை

அதிகாரபீடத்திலிருக்கும்போதெல்லாம்
புலப்படாத ஆரிய-திராவிட பேதங்கள்
ஒரு நெருக்கடியின்போது
தவறாமல் தட்டுப்படும்.
கரியமிலவாயுவைப் பிராணவாயுவாய்
வெகுமக்களின் நாசிகளுக்குள் வலிந்து திணிக்கும்
வன்முறையின் எதிரில் மட்டும்
இந்தக் காரியக் காமாலைக்கண்கள்
மூடிய பூனைக்கண்களாகிவிடும்.
காலநிலை மாற்றத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.

10

காலநிலை மாற்றம்

உறையச் செய்யும் குளிர்காலம்.
சுட்டெரிக்கும் கோடை.
மழையற்றுப்போகும் அல்லது
வெள்ளக்காடாகும்.
ஒரு பக்கம் ஆயிரங்கோடிகள் விரயம்
மறுபக்கம் அன்றாடங்காய்ச்சிகளின் எண்ணிக்கை
அபரிமிதமாய்ப் பெருகும்.
எழுதுவதற்காய் எழுதப்படும் கவிதைகள் கைத்தட்டல் பெற
எழுதித்தீராமல் எழுதப்படுபவை கல்லடிக்காளாகும்.
முப்பது வருடங்களின் சராசரி வெப்பநிலை
ஒரு பகுதியின் வானிலையாக
எத்தனை வருடங்கள் வாழ வேண்டும்
அன்பு நிலையாக?
பருவமழை, வசந்தகாலம், புயல்-வெள்ளம்
குளிர்காலம் , பிரத்யேக வானிலை நிகழ்வுகள்
யாவும் உள்ளடங்கியது காலநிலையாக
இயற்கை ஒழுங்கமைவில் நேரும் மாற்றங்களால்
சேரும் பேரிடர்கள்.
மழைநீர் சேகரிப்புக்கு முதலில் மழை வேண்டும்
அதுவேயாகுமாம் மனமும்.

Series Navigation

ரிஷி

ரிஷி

ரிஷியின் கவிதைகள்.

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

ரிஷி


ரிஷியின் கவிதைகள்.

1) மாறும் மதிப்பீடுகள்

6 போடக் கற்றுத்தரப்பட்டது குழந்தைக்கு
ஆகச் சிறிய நூலின் முனையில் ஒரு பூஜ்யத்தைக் கட்டித்
தொங்கவிட்டது குழந்தை.
8 போடக் கற்றுத்தரப்பட்டது.
சம அளவு அல்லது சற்றே சிறியதும் பெரியதுமான
இரண்டு பூஜ்யங்களை ஒன்றன்மீது ஒன்றாக
அடுக்கிவைத்து
கைதட்டிக் குதூகலித்தது குழந்தை.
10 போடக் கற்றுத்தரப்பட்டது.
ஒரு சிறிய தடுப்புச்சுவர் எழுப்பி
பூஜ்யம் உருண்டோடிவிடாமல் பாதுகாத்தது குழந்தை.
பெரியவர்களின் கணக்கில் பூஜ்யம்
அதனளவில் மதிப்பற்றது.
பிள்ளைகளுக்கோ விலைமதிப்பற்றது!

*
2) கண்டதே காட்சி-கொண்டதே கோலம்

இறுக்கமாகக் கண்களை மூடிக்கொண்டிருந்த பூனை
இருள் பொறுக்க மாடாமல்
திடீரென ஒரு நாள் விழித்துப் பார்த்தது.
கண்பறிக்கும் வெளிச்சங்களில் தெரிந்த
எண்ணுலகங்களில்
சின்னஞ்சிறு குருவிகள், சிற்றெறும்புக்கூட்டங்கள்
தொடங்கி
பென்னம்பெரிய யானை, டினோசார் எல்லாமும்
அதனதன் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தன.
தன்னைத் தாண்டி உலகம் இயங்குவதைக் கண்டு
செயலிழந்துபோன பூனை
மதில் மீது தாவியேறிக்கொண்டது.
போய்வந்தவாறு
இப்போதும்
அங்கேயே
அங்குமிங்கும்.

3) அரைக்கண காலவெளிகளும்
உன் அறைகூவல்களும்

கொஞ்சம் பொறு
தட்டாமாலை சுற்றிக்கொண்டிருக்கிறேன்
இன்னமும் நிலா வரவில்லை.
அழைத்தபடியிருக்கிறேன்.
விண்மீனின் கண்சிமிட்டலைக் கண்டு ரசித்தபடி
அண்ணாந்திருக்கிறேன்….

கண்ணீர் பாதையை மறைக்கிறது.
தத்தளித்துக்கொண்டிருக்கிறேன்.
கடும்புயல்-வெள்ளத்தில்
கலகலத்துச் சரிந்தவண்ணமிருக்கிறேன்
காலன் எதிரில் கையறுநிலையில்
மண்டியிட்டவாறு….

’கிட்டாதாயின் வெட்டென மற’வின் உட்பொருளைத்
துருவிக்கொண்டிருக்கிறேன்.
எட்டாக்கனி எதற்கெல்லாம் குறியீடாகும் என்பதையும்.

உடனடியாக எதிர்வினையாற்றவில்லையென்பதால்
உன் அறைகூவலைக்கேட்டு பயந்துவிட்டதாக அர்த்தமல்ல.

4) விம்மல்களும் தும்மல்களும் வேறுநூறும்…

அணில் வால் ஆணா? பெண்ணா?
மணலின் மென்மை அல்லது மொரமொரப்பு?
காற்றின் உயிர்ப்பு? கால நீட்சி? கவின் நிலக்காட்சி?
கல் யானை? கல்லுக்குள் தேரை?
வலக்கைக்கும் இடக்கைக்குமுள்ள தொடுபுள்ளிகளும்,
தொலைவுகளும்?
தருணங்கள்?
பரிவு? புரிதல்? நிறைவு? விரைவு?
சிட்டுக்குருவியின் குட்டிமூக்கு?
தொட்டிநீருக்குள் மூழ்கிய மூச்சுத்திணறல்?
நோய்? நோயின் வலி? வலியோலம்? காலம்? மேலும்_
பாசம்? மோசம்? நாசம்? வேஷம்? ரோஷம்? சந்தோஷம்?
உம் எம் நம் தம்
விம்மல்களும் தும்மல்களும், வேறுநூறும்….
(இம்மென்றால் இருக்குமோ சிறைவாசம்?)

வேண்டும்போது உமையொருபாகன்;
வேண்டாதபோது காலைத்தூக்கியாடி
தாட்சாயிணியை அவமானப்படுத்திய துக்கிரித்தாண்டவக்கோன்.
சிவனேயென்றிருக்க வழியில்லை
சிவனுக்கும்!

*

Series Navigation

ரிஷி

ரிஷி

‘ரிஷி’யின் கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

ரிஷி


நடப்பு

(1)

பலவீனம்

என்னால் உருவாக்கவியலாத
ஒரு தாமரைப்பூ
தன்னால் பல்கிப் பெருகியவாறு.

நீரின் ஒரு துளியை
உள்ளங்கையில் திரட்டியெடுக்கலாகாமல்
திணறிக் கொன்டிருக்கிறோம்
இன்னமும்.

ஐந்து விரல்களை ஒரேயளவாய்
இயல்பாய் நீட்டிக் கொள்ள
முடியுமா உன்னால்…?

இத்தனை கையாலாகாத்தனத்தை ஒளிக்கவோ
வன்முறையைக் கைக்கொண்டு களிக்கிறோம்?

(2)

எழுதப்படா விதிகள்

தொழிலதிபர்களே ஆட்சியாளர்களாய்
ஆட்சியாளர்களே தொழிலதிபர்களாய்
வழிவழியாய் வந்த வண்ணம்…
முன்னமிருந்திருப்பார்களோ
காட்சிக்கு எளியர்கள்,
குடிசைவாழ் தலைவர்கள்…

இன்னமும்
நாள் குறித்து, ஆள் திரட்டி,
காரணங்கற்பித்து
ஆயிரக்கணக்காய் குடிகளை
காவுகொடுத்து
கெக்கலித்து வக்கரித்து
போரைப் பரவி வரும்
பெருந்தகையாளர்கள் பலர்
மெத்தப் படித்த மேற்குடியாளர்களாய்.

சாதிகளின் மேற்கவிந்த சாதிகளாய்
நிதியும் அதிகாரமும்
நலிந்தோரை மிதித்தபடி…

(3)

முழங்கப் பழகுவோம்

பேசத் தெரிய வேண்டும்
திருத்தமாக.
பொய்யென்றாலும் பரவாயில்லை-
கையிலடித்து சத்தியம் செய்யாத குறையாய்
உரைக்கப் பழக வேண்டும்.
கரைக்கக் கரைக்கக் கல்லும் கரையும்.
கரைத்தால் மட்டும் போதாது,
காணாமல் போய்விட வேண்டும்.
வையத்துள் ஆனானப்பட்ட வாழ்வு வாழ
கட்டாயமாய் கையகப்படுத்திக் கொள்வோம்
மேடைகளையும், ஒலிவாங்கிகளையும்,
மறவாமல் மசியையும், மின்னஞ்சல்
முகவரிகளையும்.
கூட்டிக் கழித்துப் பெருக்கிப் போட்டால்
வந்து விழ வேண்டும் நாம் விரும்பிய விடை.
காய் நகர்த்த வேண்டும் அதற்காய்
அயராது;
காலம் கனியும்.
கவைக்குதவாது-
வலிக்குமோ பிறர்க்கு என்ற கரிசனம்.
அவைநாயகர் நாமாதலே அவசரமும்
அவசியமும்.

(4)

மாஜிகளாகாத நாஜிகள்

யாருமே மனிதர்களில்லை
அவர்களைத் தவிர;
எதுவுமே உண்மையல்ல
அவர்கள் மொழிவதைத் தவிர.
மாஜிகளாகாத நாஜிகள்
நாள் முழுக்க நகர்வலம்
வந்துகொண்டிருக்கிறார்கள்.
மக்களை நலம் விசாரித்தவாறு.
வறுமைக்கோட்டை வரையும் நேரம்
துக்கம் தொண்டையை அடைத்ததாக
ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளின்
அதி ஆடம்பர அரங்குகளில்
அவர்கள் சொல்வதை
நாம் நம்பித்தானாக வேண்டும்.
பார்த்து பதவிசாக நடந்து கொண்டால்
பதவிகள், பரிசுகள் தேடி வரலாம்.
எதிர்த்துக் கேள்வி கேட்டால்
எவருக்கோ அடிவருடிகளாக்கப்பட்டு விடுவீர்கள்.
சுவரில்லாமல் வரைய முடியாதா என்ன?
அது தான் இருக்கவே இருக்கிறதே
ஏமாந்த சோணகிரிகளின் வெற்று முதுகுகள்…
“பத்திரம், கவனமாயிருங்கள்”, என்று கூறியவாறே
கத்தியால் அழுத்திக் கீறி,
பீறிடும் அவருடைய ரத்தத்தைக் கொண்டே
பதமாய் சித்திரம் தீட்டிவிட
சொல்லியா தர வேண்டும்?

(5)

பாவம் குடிமக்கள்

உம்மை மேய்ப்பராகவும்
எம்மை வழி தவறிய வெள்ளாடாகவும்
அல்பகலாய் உருவேற்றியவாறு…
எமது சிந்திக்கும் திறனை எமக்கே எதிரியாக்கி
எம் சுயம் தன்வயமிழந்துபோய்
உன் தலையாட்டி பொம்மையாகிவிட்டதும்
நாங்கள் முழுமனிதராகி விட்டதாய்
முன்மொழியப்படுகிறது; வழிமொழியப்படுகிறது.
திட்டவட்டமாய்
வட்டத்துள் எம்மை முடக்கிவிடும் திட்டம்
வெகு எளிதாய் பூர்த்தியாகி விட
வேர்த்து விறுவிறுத்து வகையறியாது
காலத்திற்கும் எம் மீதான எமதன்பை
நட்பை, மதிப்பை, மரியாதையை
கரிசனத்தை, நல்லெண்ணத்தை
வேறெதையெதையெல்லாமோ
பிரிந்து விட்டவனாய், துறந்து விட்டவளாய்
உமது வாயிலிருந்து உதிரும் சொல்முத்துக்களை
அதிகதிகமாய் திரட்டத் தொடங்கி இன்று
கதிகெட்டு நிற்கிறோம்.
‘பாவம் குடிமக்கள்’ என்று பாவனையாய்
கண்ணில் நீர்மின்ன,
எழுதித் தரப்பட்டதை மனனம் செய்து ஒப்பித்தவாறு
மளமளவென்று மேலேறிச் சென்றவண்ணம்,
அடிவாரத்தில் தளர்ந்து நின்றுகொண்டிருக்கும்
எம்மைப் பார்த்து
அவ்வப்போது எப்படி அத்தனை அன்போடு
புன்னகைக்கிறீர்கள்?!

(6)

எப்பொருள் மெய்ப்பொருள்

“பத்து நிறங்களைக் கொண்டது வானவில்!”, என்றனர்.
“இருக்கலாம்” என்றேன்.
“பறவைகள் பேசுவதை எங்களால் புரிந்து கொள்ள முடியும்!” என்றனர்.
“நல்லது”. என்றேன்.
‘இல்லை என்ற சொல் எங்கள் அகராதியிலேயே இல்லை” என்றனர்.
“புண்ணியாத்மாக்கள் நீங்கள்!”, என்றேன்.
“எண்ணியது எண்ணியாங்கு முடிப்போம்!” என்றனர்.
“என் கண்ணே பட்டுவிடப் போகிறது!” என்றேன்.
பழி நீங்க வாழ்வதே எங்கள் லட்சியம்” என்றுரைக்க
வழிகாட்டியாய் உம்மைக் கொள்வோம் நிச்சயம்”, என்றேன்.

“அப்படியெனில், நாங்கள் சொல்வதையெல்லாம்
நம்புகிறாய் தானே?”
“எப்படியும் மாட்டேனே!”

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

ரிஷி

ரிஷி