யாதும் நலம்

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

வருணன்



பண்டிகை காலங்களின்
இரவல் கூதூகலங்களுக்குப்
பிறகு திருப்பிச் செலுத்திட வேண்டிய
கடன்களின் கணக்கீடுகளால்
சாய்வு நாற்காலியில் அயர்ந்தமரும்
நடுத்தர குடும்பத் தலைவர்களுள்
ஒருவனாய் நானும்;
இவ்வமயம் எனதிந்த அமர்வும்.

காமப் பாற்கடலில்
கடைந்தெடுத்த அமிழ்தங்களாய்
மழலைகள் இல்லாதிருந்திருந்தால் நலம்.

கடைவதற்கு அசுரர் போல நானிருக்கையில்
துணைக்கு தேவர் போல இல்லாள்
இல்லாதிருந்திருந்தால் இன்னும் நலம்.

இதற்கும் மேலே
இருப்பின் பிரக்ஞையும்
வாழ்வு குறித்த அவதானங்களும் அவசியப்படும்
நரனாய் ஜனிக்காதிருந்திருந்தால்
இன்னும் இன்னும் நலம்.

’கப்பல்கள் கரைகளில் பாதுக்காப்பாய் இருக்கும்
ஆனால் அதற்காய் அவை கட்டப்படுவதில்லை’
எனும் ஜான் ஷீடின்
மேற்கோளை மடிக்கணிணியின்
முகப்புப் படமாய் வைத்து
“அப்பா எப்படி?” என்கிறாள்
மலர்ச்சியாய் மகள்.

“ம்…
மிக நன்று”, நான்.
ஓய்தல் மீண்டு
எழுப்பப் பட்டேன் மீண்டும்.
jolaphysis@gmail.com

– வருணன்

Series Navigation

வருணன்

வருணன்