அம்மா

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


ஒவ்வொரு அசைவிலும்
உன்னைப் போலவே நான்
வண்ணமாய் என்மேல்
அப்பிக் கொண்டாயம்மா
அதனால்தான் இரும்பு நான்
துருவாகவில்லை

கேப்பைக்கூழில் மோர் சேர்த்து
கழியைக் காட்டி ஊட்டினாய் அன்று
அறுபது தாண்டியும்
இரும்பாய்க் கிடக்க
அந்தக் கூழ்தான் காரணமாம்
நாடியைப் பாரத்துவிட்டு
நாட்டு வைத்தியர் சொல்கிறார்

நான் கருவான கதையை
முதன்முதலில் கடவுள்
உன்னிடம்தான் சொன்னார்
நான் உருவான கதையை இன்று
கடவுளிடமே சொல்கிறேன்

அன்னை இருப்போர்க்கு
அன்னையர் தினம்
அன்னை இழந்தோர்க்கு?

பறவையாய்ப் பிறந்திருந்தால்
சிறகு பெற்றதும் மறந்து வாழலாம்
மகன் நான் மறப்பதென்பது
மரணத்தில்தானம்மா

சுமையாக இருந்தேன் அன்று
சுமைதாங்கி யானேன் இன்று
அழுதழுது மாய்கிறேன்
எப்படிச் சுமப்பே னென்றல்ல- நீ
எப்படிச் சுமந்தா யென்று

Series Navigationவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று >>

யூசுப் ராவுத்தர் ரஜித்

யூசுப் ராவுத்தர் ரஜித்

அம்மா

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

வ.ஐ.ச. ஜெயபாலன்



வரமுடியவில்லை அம்மா
தீயினை முந்தி உந்தன்
திரு உடலில் முத்தமிட…

சிங்கமும் நரிகளும் பங்கும்
நீர்சுனையின் வழி அஞ்சி
உயிர் வற்றும் மானானேன்.
சென்னைச் சுவர்பாலை
துடிக்கும் பல்லி வாலானேன்.

தோப்பாகும் கனவோடு நீ சுமந்த
நறுங் கனிகள தின்றதே
ஈழத் தமிழன் விதி என்ற
பேர் அறியா தேசத்துப் பறவை.
துருவக் கரை ஒன்றில்
அதன் பீயாய் விழுந்தேனே
என் கனிகளச் சுமந்தபடி

இறால் பண்ணை நஞ்சில்
நெய்தல் சிதைந்தழியும்
சேதுக் கரையோரம்
படகுகளும் இல்லை.

கண்ணீரால் உன்மீது
எழுதாத கவிதைகளைக்
காலத்தில் எழுகிறேன்…


visjayapalan@gmail.com

Series Navigation

அம்மா

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


போர் நாட்களிலும் கதவடையா நம்
காட்டுவழி வீட்டின் வனதேவதையே
வாழிய அம்மா.
உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து
அன்றுநான் நாட்டிய விதைகள்
வானளாவத் தோகை விரித்த
முன்றிலில் நின்று எனை நினைத்தாயா
தும்மினேன் அம்மா.
அன்றி என்னை வடதுருவத்தில்
மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ?

இருளர் சிறுமிகள்
மேற்ககுத் தொடர்ச்சி மலையே அதிர
நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில்
கன்னிமாங்கனி வாடையில் வந்த
கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற
கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே
எங்கள் ஆற்றை எங்கள் காட்டை
உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா.

என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை
உன்னை வந்து பார்க்கலையாமே.
போகட்டும் விடம்மா.
அவனும் அவனது
பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல
உன்னைக் காக்க
யானையின் மதநீர் உண்டு செளித்த நம்
காடும் உளதே

*கொடுங்கரை ஆறு தமிழகம் கோயம்புத்தூர் மாவட்டதில் உள்ள சிற்றாறு.


visjayapalan@gmail.com

Series Navigation

அம்மா

This entry is part [part not set] of 23 in the series 20050609_Issue

எஸ்ஸார்சி.


ஹாஸ்பெட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட முருங்கை விதைபோட்டு முளைத்த மரம். அங்கு அவனின் சித்தி குடும்பம் இருந்தது. துங்கபத்ரா அ.ணையில் தண்ணீர் தேக்கும் நிர்வாக ஐன சமுகத்தில் சித்தியின் கணவருக்கு லஸ்கர் உத்தியோகம் . கோடை விடுமுறையில் அ.வனின் தருமங்குடி கிராமத்திற்கு அவர்கள் வரும்போதெல்லாம் வீடு ஏக அ.மர்க்களப்படும். சித்தி வீட்டில் நான்கும் அவனது வீட்டில் ஏழும் ஆக பதினொரு உருப்படிகள் . பெரியவர்கள் அ.ப்படி இப்படி கூட்டினால் நிச்சயம் பதினைந்து தாண்டிவிடும். இந்தப்படிக்கு குடும்பத்தில் ஒருமாத்ததைக் கூட தள்ளிவிடுவது என்பது சர்வசாதாரணம. இப்போதெல்லாம் அதனை விளங்கிக்; கொள்வது; முடியாத காரியம். விடுமுறை முடிந்து அவரவர் பிரிகின்ற போது கண்கள் குளமாகிநிற்கும். ம.னம் நேராகி சீர்பட நாட்கள் சிலபிடிக்கும்.

அவனின் வீட்டுத்தோட்டத்தில் ஒரு தொண்டி இருந்தது. தொண்டி என்பதனை விளக்கி விடுவது நல்லதுதான். வீட்டுத் தோட்டத்து விஸ்தீரணம் வாயில் வரைக்கும் வந்து ஒரு துண்டுபோல தெருவுக்கு காட்சித்தரும். தொண்டியின் இலக்கணம் அது. ஆதனில்தான் அந்த ஹாஸ்பெட் முருங்கைமரம் வளர்ந்து கொண்டிருந்தது. அதன் கீரைகளுக்கு அலாதி ருசி. வருடங்கள் பலாகியும் மரம் காய்ப்பு பிடிக்காமல் காலம் கடத்திக் கொண்டிருந்தது. அதனில் அரை பழசில் விளக்கமாறும் பிய்ந்த செருப்பும் கட்டித் தொங்கவிட்டும் பார்த்தாயிற்று.. மரத்திற்கு மனம் இரங்காமலே காய்ப்பேனா பார். ஏன்று அடம் பிடித்தது.

வெறும் கீரைக்கு மாத்திரமேனும் அந்த ஹாஸ்பெட் மரம் இருந்து போட்டும் என முடிவாகி தெருவில் வசி;பபோர் ஊரில் அங்கும் இங்கும் கீரை என்றுஅலைவோர் அய்யா வீட்டு ஹாஸ்பெட் மரத்துக்கு வந்து கீரை ஒடித்துபோவார்கள் அவனின் அப்பாதான் அய்யா என்பது.

சில சமயங்க.ளில் மரத்தின் பட்டைகளில் முருங்கை க்கோந்து.கலர் கலராக ஓழுகிக்கொண்டு நிற்கும். எப்போதேனும் இலைகளை க் கபளீகரம் செய்ய .கம்பளிப்பூச்சிகள் மரத்தை முற்றுகையிடும்.

.மரம் உற்பத்தியானதிலிருந்து ஒரு பதினைந்து ஆண்டுகள் முடிந்து போயின. காய்ப்பு எபபோதுதான் என்று அவனின் தாயும் தந்தையும் யோகனையிலிருந்தபோதுதான் முருங்கை மரம் பூத்துக் குலுங்கியது;. .அந்தப்படிக்கு மரம் இதுவரை அலட்டிக் .கொண்டதில்லை. ஆக வீட்டில் எல்லோருக்கும் மகிழச்சி. .தருமங்குடிகாரர்கள் முருங்கை மரத்தின் கீரையை விட்டுவிட்டு இப்போது காய்க்கு படை எடுத்தார்கள் .முங்கிலால் ஆன ஒரு நெட்டை சுரடு வைத்து அவன் வீட்டில் காய்களை பறிப்பார்கள். .ஆங்கில சுருக்கெழுத்து. வி உருவத்தில் இருக்கும். அந்த சுரடு மூங்கில் கொம்போடு சண்டை பிடித்து கழட்டிக் கொண்டுவிடும். .அந்தப்படிக்கு அது எங்கோ மரத்தின் உச்சிக்கிளையில் பலமாக தொற்றிக்கொண்டது.

.வளவபுரி தருமங்குடிக்கு அண்டையூர். அங்கு பிரசித்தி பெற்ற வேதநாராயணர் கோயில் இருந்தது. வைகாசி வசந்த உற்சவத்தில் ஏழாவது நாளன்று வேதநாராயணர் வெண்ணைத்தாழியை அணைத்துக்கொண்டு அருள் பாலிப்பார். .அதுமுடிந்தகையோடு மறுநாள் காலை புறப்பட்ட உபயதாரர் சீத்தாராம செட்டியாரின் திருச்செல்வன் தருமங்குடி. அவன் வீட்டைதாண்டிச்,சென்று கொண்டிருந்தான். ஹாஸ்பெட் முருங்கை மரம் திருச்செல்வனை ஈர்த்துவிட காய்கள் சிலது வேண்டுமென்று .அவனின் வீட்டின் வாயிலில் நின்றபடி குரல் கொடுத்தான்.

என்ன திருச்செல்வம் என்ன சேதி. ஏன்றார் அவனின் அப்பா.

நாலுமுருங்கைக்காய் வேணும் சாமி.

பதில் சொன்னார் அப்பா.

.காய்ப்பறிக்க சுரடு இருக்குதுங்களா

இருக்குது. ஆனா வெறுங்கழிதான் இப்ப கிடக்கு. சுரடு மரத்திலேயே தொத்திக்கிட்டு நிக்குது..

காய் வேணும் சாமி.

.அவனின் அம்மா வீட்டின் உள்ளிருந்து எட்டிப்பார்த்தார்.

என்ன

முருங்கைக்காய் நாலு வேணும்..அதான்.

ராமு அவனைத்தான் அழைத்தாள் அம்மா.

.அவன் வந்து என்ன வேண்டுமென்றான்.

செட்டியார் வந்திருக்கார். ஏப்பவும் இப்படி வந்து கேட்டதில்லே.

சொல்லும்மா.

முருங்கைக்காய் நாலு பறிச்சி கொடுத்துடு ராமு.

சரி .அம்மா அப்படியே. .என்றான் அவன்

.திருச்செல்வன் ஹாஸ்பெட் முருங்கை மரத்திற்கு கீழ் நிற்க மரத்தின்மீது அவன் ஏறினான். .காய்களை ப் பறித்துக்கொண்டே போனான். கீழே விழும் காய்களை செட்டியார் அடுக்கி அடுக்கிவைத்துக்கொண்டே இருந்தார். .அவன் சுரடு தொற்றி இருக்கும் உச்சிக் கிளையை நெருங்கினான். .அவனின் அம்மா தெருப்பக்கமாய் .வந்தாள்.

.என்னடா ராமு மரத்துல இவ்வளவு உயரம் ஏறியிருக்கே. .பலமாய் கத்தினாள். .அவ்வளவுதான் . மரக்கிளை முடிந்து தொப்பென்று அவன் கீழே விழுந்தான். .கையில் அகப்பட்ட காய்களோடு மறைந்துவிட்டிருந்தார் .செட்டியார். .அன்றுதான். .அவனுக்கு இடக்கை எலும்பு முறிந்துபோனது.

.அந்த தருமங்குடியிலேயே வளவபுரியின் சுளுக்கு வழிக்கும் தொள்ளார்பிள்ளை கோழி முட்டைகள் இருபதுக்கு குறையாமல் பத்துபோட்டு பத்துப்போட்டு கையை அரைகுறையாய் மீட்டு எடுக்கவே அவனை பள்ளிக்கூடத்திற்கு அப்பா அனுப்பிவைத்தார்.

.கை எலும்பு முறிவு கட்டுக்கு கீரைத் தழை மட்டுமே அவ்வப்போது கூலியாய் பெற்றுக்கொண்ட தொள்ளார் பிள்ளையோடு அநத வைத்தியம் முடிந்துபோனது, தென்னமரக்குடி பச்சை எண்ணெய் வாங்கி கைமேல் தடவுவதும் முடியாமல் போனது அவன் அப்பாவுக்கு அம்மா ஆடிப்போனாள். பின் எப்படியோ மீண்டு கொண்டாள் அவன் கைஒடிந்தது சற்று திருகிக்கொண்டும் தான் இருந்தது. அப்போதைக்கப்போது லேசாய் வலி எடுக்கும். வலி இ;லலாமலும் போகும். .கனம் கூடியவைகளை அவன் தூக்குவதே இல்லை. .அவனின் அம்மாவுக்கு தானே தன்பிள்ளையை .அனுப்பி இப்படி ஆகிவிட்டதே என்கிற மனரணம் இருந்துகொண்டே இருந்தது.

காலங்கள் உருண்டு உருண்டு அவன் ஐம்பதையும் அவனின் தாய் எண்பதையும் தொட்டார்கள். இன்னும் அவனது கை திருகிக்கொண்டுதான் காட்சியளிக்கிறது. .அவனை பார்ப்பவர்கள் சிலர் கையில் கோணல் இருப்பதை அநுமானித்து விடுகிறார்கள்தான்

அவனின் தாய். தூன் முடிந்து போவதற்கு முன்பாக இப்படிக்கேட்டாள். ஏண்டா ராமு அப்போ நான்தானே திருச்செல்வன் செட்டியாருக்கு காய்பபறிக்க .உன்னை மரம் ஏறச்சொன்னேன். நீ ஏன் கோபமாய் ஒருவார்த்தைககூட இதுவரைக்கும் சொல்லாமல் இருக்கிறாய். .உன் கை ஒடிந்துபோனதிலிருந்து என் ஆழ் மனதில் இப்படி ஒரு கேள்வி ஜனித்து துளைத்துக்கொண்டுதானப்பா இருக்கிறது

அவனின் அப்பா அவன் கை ஒடிந்ததன்றே அந்த ஹாஸ்பெட் முருங்கை மரத்தை வேரோடு வெட்ட அது வெந்நீர் அடுப்புக்கு இரையாகியது. தருமங்குடி வீட்டில் அன்றிலிருந்து முருங்கை மரமே இல்லாமல் போனது. ஓருப்பிடி கீரைக்கும் தெருவில் அலைவேண்டி நேரிடுகிறதுதான்.

நீ ஏனம்மா ஆண்டுக்கணக்காய் இதனை நினைவில் சுமந்துகொண்டு என்றான் அவன். .என்னால் தானே உனக்கு இப்படி ஒரு ஊனம் நீ கேட்டுவிடேன். ஏன்றாள் அவனின்தாய்.

.அம்மா நான் உன் பிள்ளை என்று மட்டுமே அவன் பதில் சொன்னான். இந்த கோணல் கைதானே தாயை நினைவுப்படுத்துகிறது என்று அதனை அன்போடு வருடிப்பார்த்தான். .அம்மாதான் எப்போதோ மண்ணாகிப்போனாளே.

**

essarci@yஹாoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

அம்மா

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

மதியழகன் சுப்பையா


—-

அம்மா
—-
*
அம்மாவைப் பற்றி
ஆயிரம் பேர்
கோடி எழுதியாச்சு
‘ ‘ ஆயிரந்தான் தேவடியாளா
இருந்தாலும் அம்மா அம்மாதாண்டா ‘ ‘
என்ற அம்மாவின்
கூற்றுக்கு
அப்புறம்தான்
அத்தனையும்.

—-
*
மனைவி
அம்மாவாகி விடுகிறாள்

அம்மா
பாட்டியாகி விடுகிறாள்

பாட்டி
முப்பாட்டியாகி விடுகிறாள்

பிறப்பு நிகழ
பெயர் மாறிப் போகிறார்கள்
அம்மாக்கள்

மனைவியும்
அம்மாவும்
பாட்டியும்
முப்பாட்டியும்
அம்மாவாகவே இருக்கிறார்கள்
அவரவர் பிள்ளைகளுக்கு.

—-
*
குறுக்கு மிதிக்கச்
சொன்ன போது

சேத்துப் புண்ணுக்கு
பத்துப்போட கேட்டபோது
முகம் சுழித்து மறுக்கப் பட்டிருக்கிறாய்.

மலம் துடைத்து
மூத்திரம் கழுவி
எச்சில் ஏந்தி
ஏவல் செய்கிறாய்
எழும்புருக்கி நோய்
முற்றிய நிலையில்
இருக்கும் உன்
இருபத்தேழு வயது பிள்ளைக்கு.

—-

மதியழகன் சுப்பையா

மும்பை

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா

அம்மா…

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

ஆ. மணவழகன்


மாதம் ஐந்து வருமானம் என்றால்
பத்து மாதம் போதுமே…
தொழில் முறைத் தோழனாய் அப்பா!

எனக்குச் செய்யாமல்
யாருக்குச் செய்யப் போகிறான் …
கணக்குப் போடும் கணினியாய் சகோதரி!

கூடப் பிறந்தவன் இருக்கும்போது என்ன ?
விட்டுக் கொடுக்கும் கெட்டிக்காரனாய் சகோதரன்!

‘விழமாட்டேன் என்கிறானே ‘
வெட்டிய குழியுடன்
வேட்டை நாய்களாய் உறவுகள்!

‘ஏதோ நல்லா இருந்தா சரி ‘
சமுதாய நோக்குடன் சாதி-சனம்!

இருந்தும்,
இரண்டு முறை புரண்டு படுத்தாலே
எழுந்து வந்து நெற்றி தொட்டுப் பார்க்கும் அம்மா…

நீ மட்டும் எப்படி இன்னும்
அம்மாவாகவே…!

a_manavazhahan@hotmail.com

Series Navigation

ஆ. மணவழகன்

ஆ. மணவழகன்

அம்மா

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

புஹாரி, கனடா


அம்மா…
இந்த உலகம் சிறியது…
உன் பாசம் மட்டுமே
பெரியது…

என்
நாவசையும் முன்பே
நீயொரு
பாஷை கற்றுத்தந்தாய்…
அதுதான்
அன்பு என்னும்
இந்த உலக பாஷை…

உன்
கைகளுக்குள் புதைந்து
இந்த
உலகத்தை நான்
எட்டிப் பார்த்தபோது…
எல்லாமே எனக்கு
இனிப்பாய்த்தான் இருந்தது…

O

பொழுதெல்லாம்
உன்
முத்த மழையில்
என்
உயிரை நனைத்தப்
பாச அருவியே…

நீ
என்றென்றும்
எனக்காகவே
கறுத்துக் கிடக்கும்
மழைமேகம் என்று
சொன்னாலும்
என்
எண்ணம் குறுகியது…

என்
கண்களில்
வெளிச்சத்தை ஏற்றவே
உன்
மேனியைத்
தீயில் உருக்கும்
மெழுகுவர்த்திப் பிறவியே…

நான் வசித்த
முதல் வீடு
உன்
கருவறையல்லவா…!

நான் உண்ட
முதல் உணவு
உன்
இரத்தத்தில் ஊறிய
புனிதப் பாலல்லவா…!

நான் கேட்ட
முதல் பாடல்
உன்
ஆத்மா பாடிய
ஆராரோ
ஆரிரரோ வல்லவா…!

நான் கண்ட
முதல் முகம்…
பாசத்தில் பூரித்த
உன்
அழகு முகமல்லவா…!

நான் பேசிய
முதல் வார்த்தை
என்
ஜீவனில் கலந்த
‘அம்மா ‘ வல்லவா…!

நான் சுவாசித்த
முதல் மூச்சு
நீ இட்ட
தேவ பிச்சையல்லவா…!

O

வாய்க்குள் உணவு வைத்து
நான்
வரும்வரைக் காத்திருக்கும்
பாச உள்ளமே…

என்
பாதங்கள்
பாதை மாறியபோதெல்லாம்
உன்
கண்ணீர் மணிகள்தாமே
எனக்கு
வழி சொல்லித்தந்தன…

உனக்காக நான்
என்
உயிரையே தருகிறேன்
என்றாலும்
அது நீ
எனக்காகத் தந்த
கோடானு கோடி
பொக்கிஷங்களில்
ஒரே ஒரு
துளியை மட்டுமே
திருப்பித் தருகிறேன்
என்னும்
நன்றி மறந்த
வார்த்தைகளல்லவா…!

——————————
buhari2000@hotmail.com

Series Navigation

புஹாரி, கனடா

புஹாரி, கனடா