பழகிய துருவங்கள்

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

ப.திருநாவுக்கரசு


வேண்டாத வெளிச்சத்தால்
இருள் வேண்டுவேன்;
வேண்டிய இருளுக்குள்
ஒளிப் பொறி தேடும் கண்கள்.

நாடிய திசை சென்று
நடுக்கம் எய்துவேன்;
நாற்றிசையும் சென்றதையே
கவிதையாக்குவேன்.

ஓடிமுடித்த நதிமணலில்
ஓடியாடி அயரும்போது
ஒட்டிவிட்ட சட்டை மணலை
முதலில் உதறுவேன்!

விதைபோட மண்தோண்டி
அறுபட்ட மண்புழுவின்
உயிர்போகும் துடிப்பாலே
பயிர்நோக்கம் தொலைத்திடுவேன்.

எனைப் பார்க்கும் கண்களுக்காய்
நான் விழித்துக் காத்திருக்க
என்கண்கள் தூங்கும் வரை
கண்ணுழைய கனவுமில்லை!
…………..

Series Navigation

ப.திருநாவுக்கரசு

ப.திருநாவுக்கரசு