எனது மண்ணும் எனது வீடும்

This entry is part [part not set] of 31 in the series 20100312_Issue

நடராஜா முரளிதரன்-


என்னவர்களிடம் தோற்ற ஒருவனாக
எனது வீட்டுக்குச் செல்லும்
வாகனத்தை எதிர்நோக்கிக்
காத்திருக்கின்றேன்
எந்த வாகனங்களும் என்னை
ஏற்றிக் கொள்ளவில்லை

காலணியற்ற பாதத்தோடு
எவ்வளவு காத தூரம்
நடந்து விட்டேன்

எத்தனை கனவுகளோடு
எனது வீடு நோக்கிய
பயணத்தை ஆரம்பித்திருப்பேன்

வீட்டு வாசலிலே எனக்காக
வேம்புகளும் பூவரசுகளும்
இன்னும் காத்தபடியிருக்கின்றன
என்ற நம்பிக்கைகளை
என்னால் இழக்க முடிவதில்லை

ஆனாலும் எனது வீடு
அழிந்து தரை மட்டமாகி
மண்மேடாகி இருப்பதாகவும்
அதன் மீது பற்றைக் காடுகள்
செழித்து வளர்ந்திருப்பதாகவும்
சேதிகள் வருகின்றன

ஆயினும் நான்
அங்கு சென்றடைந்தால்
ஒரு சிறு குடிலையாவது
என்னால் அமைத்து விட முடியும்

அங்கு எனக்கான வானமும்
நட்சத்திரங்களும் காற்றும்
என்னோடு உரையாடுவதற்காக
எதிர்பார்த்தபடியிருக்கின்றன

எனது முன்னோர்கள்
எரியுண்ட புதையுண்ட
அந்த இடுகாட்டு மண்ணிலே
எஞ்சியிருக்கும் எலும்புத் துண்டுகளில்
ஒன்றையேனும் நான்
மாலையாக அணிந்து கொள்வேன்

ஆலமரத்துக் காளியிடம்
பகிர்ந்து கொள்வதற்காக
நான் பல கதைகளை
என்னுள்ளே வைத்திருக்கின்றேன்

அருகிலே சூலத்தோடு வீற்றிருக்கும்
வைரவர் முன்னே
சுடலைச் சாம்பரைப் பூசி
கலையொன்றை ஆடுவதற்கு
உடுக்கை அடிப்பவர் எங்கே

Series Navigation

நடராஜா முரளிதரன் (கனடா)

நடராஜா முரளிதரன் (கனடா)