இரவினில் பேசுகிறேன்

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

மன்னார் அமுதன்


ஒன்றாய் நூறாய்ப்
பல்கிப் பெருகி
புதிய கட்டுரையாய்
எனக்கே எதிரொலிக்கும்
பகலில் பேசிய
ஓரிரு வார்த்தைகளும்

மானிட அரிதார
மாக்களின் சர்ச்சையில்
மெளன விரதமாய்க்
கழியுமென் பகல்கள்

தோழிக்கும், தோழனுக்கும்
துரோகிக்கும், காதலிக்குமாய்
எத்தனைமுறை உரைத்துக் காட்டுவேன்
நான் அவனே தானென

பகல்களில் செத்து
உறக்கத்தில் உயிப்பதற்கே
இரவினை நாடுகின்றேன்

எண்ணச் சிதறல்கள்
ஒலியாய் வெடிக்க
விழித்துக் கொள்கின்றன
என் இரவுகள்

எங்கோ பார்த்த முகத்தோடும்
அதே கனிவோடும்
அதட்டல் தொனியோடும்

வெளிச்சத்தில் வீசிய
வார்த்தைகள் எல்லாம்
இருட்டில் மோதி
அவளிதழில் எதிரொலிக்க
ஏகாந்தத்தில் சுற்றித் திரிகிறேன்

உணர்ந்த ஸ்பரிசமாய்
அவளணைக்கையில்
இராக்கோழியை சேவல் எழுப்பும்

Series Navigation

மன்னார் அமுதன்

மன்னார் அமுதன்