வேத வனம் விருட்சம் 63

This entry is part [part not set] of 31 in the series 20091211_Issue

எஸ்ஸார்சி



யான் புரூரவ முனி
நீயோ அழகிய ஊர்வசி
புகழுக்காய்
அம்புவிறதூணி
வசமிருந்து ஒர் அம்பெடுத்து
வீசும் ஆற்றலுமிழ்ந்தேன்
வீரமும் தீரமும் விலகிப்போயின
புரூரவரனே கேள்
ஊர்வசி பேசுகிறேன்
தினம் மும்முறை என்னைத்
தழுவியவன் நீ
என் தேகத்து அரசன்
தேவர்கள் நின்னை
தச்யுக்களை ஒடுக்கத்தான்
வலுப்படுத்தினார்கள்
நீ என் உதிரத்துள்
வீர்யம் வைத்தவன்
ஊர்வசி விடைசொல்
புதல்வன் எவன்தான்
தந்தை தாயைப்பிரித்துவைப்பான்
அப்படி நிகழ் நாளில்
உன் மைந்தனை
உன்னிடம் அனுப்பிடுவேன் முனியே ( ரிக் 10/95)

விசுவேதேவர்கள் எழுக
அக்கினி ஒளிபெறுக
துதி இன்பம் தருக
துடுப்பெடுத்து இயங்கும்
கப்பல் கட்டுங்கள்
உழுகருவிகள் உடன் சீராகட்டும்
ஏர்கள் பிணைக
நுகத்தடிகள் இணைக
விதை தெளிப்பீர்
உணவு விளைவு காண
முற்றிய கதிர்கள் அறுபடுக
வற்றாக்கிணறு
வாளிக் கயிறு
இறைப்போம் நீர் நல்லபடி
குதிரைகள் சிறக்கட்டும்
மங்கலத்தேர் தயாராகட்டும்
பசுத்தொழுவம் காத்திடுக
இரும்புக்கோட்டைகள் எழுக
உங்கள் பாத்திரங்கள்
ஒழுகாதிருக்கட்டும் ( ரிக் 10/101)

எம் பகைவர் ஆரியரோ
தாசனோ
அவர்தம் ரகசிய
ஆயுதம் தூரம் போகட்டும் ( ரிக்10/102)

அக்கினி ஒரு பறவை
கதிரவனாய் வானில் வந்தது
அது உலகைப்பார்க்கிறது
ஆய மனத்தோடு
முனிவன் சத்திரி அது நோக்க
அக்கினியின் தாயுக்கும்
அக்கினிக்கும்
அதுவே ஒர் காட்சி விருந்தாகிறது

விடயம் அறிந்த கவிகள்
பேரான்மா எனும் ஒரு பறவையை
தத்தம் மொழிகளால்
வியாக்கினிக்கிறார்கள்
சந்தங்கள் ஏழு
அளவைகள் பன்னிரெண்டு
நிறையும்
பாத்திரங்களோ நாற்பது
பதினைந்து உணர்வுச்சாளரங்கள்
ஆயிரம் தானங்களில் தங்குகின்றன
உடல், ஆன்மா, புவி, விண்ணெங்கும்
வியாபித்து அவை
சந்தங்களின் பயன் தெரிந்தோன் யார்
போதும் வினையும் புரிந்தோன் யார்
ஏழு பிராணன்களுக்கு அப்பால்
எட்டாவது தாயாகும் சூரன் யார்
இந்திரக்குதிரைகள்
கபில நிறத்தன
அவை போகும் வழி தெரிவோன் யார்
சாமகானம் தெரிந்து
அது செம்மையாக்குவோன் யார்

குதிரைகளில் சில புவியின் எல்லைதொடுகின்றன
சாரதி அவனிருக்கை அமர்கிறான்
தேவர்களே குதிரைக்குப்புல்
வழங்கிப் பசியாற்றுகிறார்கள் ( ரிக் 10/ 114)
———————————————————–

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி