பயணம் சொல்லிப் போனவள்…

This entry is part [part not set] of 27 in the series 20091113_Issue

நாவிஷ் செந்தில்குமார்


கழுத்துக் கீழே ஒரு முத்தம்
இடுப்பினிரு பக்கமும்
இரு முத்தம்
முகத்தில் மொத்தம் மூன்றென
முத்தம் வாங்கிப் போனாயடி…
மொத்தமாய்ப் போகத்தானடி?

பயணம் போவதாய்ச்
சொன்னாயடி – சொல்லாமல்
மயானம் போயிப்
படுத்தாயடி

பூக்கின்ற பூக்களெல்லாம்
கேட்குதடி – அதைச்
சூடும் கூந்தல் போன கதை
எப்படிச் சொல்வேனடி?

இடிக்கு அணைகின்ற
நீயின்றி
இரவில் கட்டில்
நனையுதடி…

கடந்தமுறை செய்தது
கடைசியென்றே தெரிந்திருந்தால்
கடித்து உன்னை
நானே தின்றிருப்பேன்

புழங்கிய வீட்டை
விற்றாலும்
போவேனா என்கிறது
உன் நினைப்படி….

உன்னுடன் வந்துவிடலாம்
என்றாலும்
உடன் விட்டுப்போனாயொரு
பரிசடி….

வாழ்ந்தாக வேண்டும்
நம் பிள்ளைக்காகவென
நினைக்கும் போதடி
உன் மார்பு குத்திய நெஞ்சு
இன்னும் வலிக்குதடி!

கணவனை இழந்தவள்
கைம்பெண் என்றால்
பெண்டிர் இழந்தவன்
பேரென்னடி?
என் வாழ்வானது மண்ணடி…

Series Navigation

நாவிஷ் செந்தில்குமார்

நாவிஷ் செந்தில்குமார்