மவுனவெளி

This entry is part [part not set] of 25 in the series 20091002_Issue

புதிய மாதவி


பளிச்சிடும் காமிராவெளிச்சத்தில்
நிரம்பி வழியும்
புன்னகை விசாரிப்புகள் வரிசையில்
ஆடை அணி உறவுகள் களைந்து
நிர்வாணமாய் பேசியது
நம் மவுனம்.

தொட்டுப்பார்த்தக்
காற்று களைத்துப்போனது
கருவறைக் கதவுகள்
மூடிக்கொண்டன.
யுகம் யுகமாய்
சிற்பியின் உளிகளுக்காய்
காத்திருக்கிறது
கடலடியில் கரும்பாறை
*
உடைந்த சிலை
சிதைந்த ஓவியம்
எரிந்த கரித்துண்டு
என்னைப் போலவே
எதையும் சொல்வதில்லை என
பூக்கள் வாடலாம்
பூமி வாடுவதில்லை.

*

செத்தப்பின்
உயிர்த்தெழுந்த
பரமப்பிதாவின்
கல்லறைச் சத்தியமாய்
வாசிக்கிறேன்.
‘புதைந்து போன
கனவுகள் உயிர்த்தெழுவதில்லை”
ஆமென்.’

*

காத்திருந்ததாய்
கனவுக்கண்டதாய்
கவலைக் கொண்டதாய்
கண்ணீர்விட்டதாய்
கவிதை எழுதியதாய்
காணத்துடித்ததாய்
அன்று போலவே
இன்றும்
சொற்குப்பைகளுக்கு நடுவில்
தொலைந்து போன
வாழ்க்கையைத் தேடுகிறாய்
வார்த்தைகள் எட்டாத
பிரபஞ்சவீதியில்
காலத்தைத் தின்று செரித்த
நெருப்பாய்
எரிந்து கொண்டிருக்கிறது
நீ தூக்கிவீசிய
மவுனவெளி.

————-

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை