வேத வனம் –விருட்சம் 49

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

எஸ்ஸார்சி


வருணன் சூரியனுக்கு
பாதை தந்தவன்
நதி நீரை
வானிலிருந்து விடுவித்தவன்
பெட்டைக்குதிரைகள்
மந்தைபார்த்து
விரையும் ஆண்குதிரையென
இரவிலிருந்து
பகலை வேறாக்கியோன்

வருணன் பிரேமிக்கும்
வாயுவே ஆன்மாவாகிரது
புல்லை புசிக்கும்
பசு போல் வருணன்
வேள்வியின் அவி உண்கிறான்
பசுவுக்கு மூவேழு நாமங்கள்
வருணனே சொன்ன விஷயமிது

விண்ணகம் மூன்று
மண்ணகம் மூன்று
வருணன் வசம்

பொன்னூஞ்சல் வதி சூரியனை
ஒளி பரப்ப க்கற்பித்த
குருவன்றோ வருணன்

நீரை ப்படைத்து
கடலை நிலைப்படுத்தியோன் அவன்
ஆதரவற்றோருக்கு பாலனமாய்
நிற்கும் யாம்
பாவிகளுக்குக்காருண்யனாம் வருணன்
முன் பாவம் தொலைப்போமாக
தெய்வங்களே
எங்களை அருளோடு காத்திடுக. ( ரிக் 7/88)

விசுவ ரூபம் அனாயசம் ஆக்கிய
விஷ்ணுவே
மானிடர் நின் பெருமை தெரியார்
மண்ணும் கண் முன்னே காட்சியாகும்
வானும் தெரிகிறது எமக்கு
ஆயின் பரமபதம் அறிந்தோன் நீ
நின் மா மகத்துவம்
கிட்டியது யாருக்குமில்லை
எப்போதுமில்லை
மானிடச்சேவை செய்வோர்க்கு
உணவுண்டு பசுவுண்டு
பசுவுக்குத்தீனியுண்டு
விஷ்ணுவே பூமியோடு
பெருவானைத்தாங்குபவன்

நிலத்தை மாமலைகள்
நிலைப்படுத்துகின்றன

சூரியன் அக்கினி உஷை மூவரை
விஷ்ணுவே பிறப்பித்தான்

சம்பரன் கோ5ட்டைகள்
தொண்ணூற்று ஒன்பதும் தூளாயின
வர்ச்சினன் சேனையதில்
லட்சம் வீரர்கள்
பொடிந்தேபோயினர்

ஆகத்தான் விஷ்ணுவே உனக்கு என் நா
வஷடு சொல்கிறது
எமது கவிதைகள் நின்னைப்
போற்றுகின்றன
வளம் தாரும் எமக்கு
வேள்வி கொள் அவி உம்மை இன்புறுத்தட்டும். ( ரிக் 7/99)
——————————————————

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி